valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 29 December 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

சாயி ஏதோ பரிஹாசமாக பேசினார் என்று மக்கள் நினைத்தாலும், அவ்வார்த்தைகளால் விளையக் கூடிய லீலையை ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்!

வார்த்தைகள் கேலியாகச் சொல்லப்பட்டாலும், அவ்வாறு இல்லாவிட்டாலும் பாபா கூறிய வார்த்தைகள் வீண் போகா.

பாபாவின் திருவாய் மொழி வெறும் சொற்களல்ல; அவை பிரம்ம லிபியாகும். (பிரம்மாவால் ஜீவனின் தலையில் எழுதப்படும் விதி). அதில் ஒரு சொல்லும் வீண் போகாது; தக்க சமயத்தில் நடந்தேறிவிடும்.

இது தாஸ்கணுவின் திடமான நம்பிக்கை; மற்றவர்களுக்கு எப்படியாயினும் சரி. நம்பிக்கை எப்படியோ அப்படியே பலனும் விளையும்.

விசுவாசம் எப்படியோ அப்படியே அதனுடைய பலம். நம்பிக்கை எப்படியோ அப்படியே அதனுடைய பலன். உள்மனதில் எவ்வளவு பிரேமையோ அவ்வளவு தூய்மையான ஞானம் கிடைக்கும்.

ஞானிகளின் சிரோமணியாகிய சாயியின் வார்த்தைகள் எக்காலத்தும் பயனில்லாமல் போகா. 'பக்கதர்களுடைய விருப்பங்களை பூர்த்தி செய்வேன்' என்பது அவருடைய உறுதிமொழி.

குருவினுடைய வார்த்தைகள் என்னும் வீண்போகா. இக்காதையை மனா ஈடுபாட்டுடன் கேளுங்கள். பிறவிப்பிணிகள் அனைத்தும் ஒழியும்; ஆன்மீக சாதனை மார்க்கத்தில் முன்னேறுவீர்கள்.

தாசகணு விலேபார்லேவில் இருந்த காகா சாஹேப் தீக்ஷிதரின் வீட்டிற்குத் திரும்பினார். காகா வின் வீட்டு வேலைக்காரி எவ்வாறு காரியத்தை நிறைவேற்றப் போகிறாள் என்ற ஆர்வத்துடன் இருந்தார்.

அடுத்த நாள் விடியற்காலையில், தாசகணு ஆனந்தமான அரைத்தூக்க நிலையை அனுபவித்துக்கொண்டு படுக்கையில் படுத்திருந்தபோதே ஓர் அற்புதம் நிகழ்ந்தது.

ஒரு குணபிச் சிறுமி (விவசாயம் செய்யும் இனம்) , காதுக்கினிய குரலில் பாடுவதைக் கேட்டார். பாட்டின் இனிமை தாசகணுவின் இதயத்தை கவர்ந்தது.

அந்தப் பாட்டின் நீண்ட ஆலாபனையும் சாஹித்யத்தின் (கவிதையின்) சொற்கட்டும் தாசகணுவின் இதயத்தை சுண்டியிழுத்தன. மனதை பறிகொடுத்து அப்பாட்டை கவனமாகக் கேட்டார்.

அப்பாட்டினுடைய அர்த்தம் அவருடைய மனதை ஈர்த்ததால், படுக்கையிலிருந்து சட்டென்று எழுந்துவிட்டார். ஒருமுகமான மனதுடன் அப்பாட்டைக் கேட்டபின் அவருள் மகிழ்ச்சி பொங்கியது.

"யார் மகள் இவள்? நல்ல ஸ்வரத்துடனும் கம்பீரமாகவும் பாடும் இந்தச் சிறுமி யார்? ஈசாவாஸ்யத்தின் புதிரை வாஸ்தவமாகவே விடுவித்துவிட்டாளே! இவள் யார்?" என்று தம்மைத்தாமே கேட்டுக்கொண்டார்.   


Thursday 22 December 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"என்னய்யா! இதில் என்ன பெரிய கடினம் இருக்கிறது? நீர் எங்கிருந்து வந்தீரோ அங்கே திரும்பிப் போகும்போது , காகாவின் வீட்டு வேலைக்காரி உம்முடைய சந்தேகத்தை நிவாரணமும் செய்துவிடுவாள்!"

காகாவென்று இங்கே குறிப்பிடப்பட்டவர் பாவூசாஹெப் தீக்ஷிதர், பாபாவினுடைய அத்யந்தமான(மிக நெருக்கமான) பக்தர்; மனதாலும் வாக்காலும் உடலாலும் பாபாவுக்கு சேவை செய்துவந்தவர்.

இந்த ஹரிபாவூ பம்பாய் நகரத்தின் புறநகர்ப்பகுதியான விலேபார்லேவில் வசித்து வந்தார்.

அவருக்குப் பெற்றோர்கள் இட்ட பெயர் ஹரி; மக்கள் அவரைப் பாவூசாஹெப் என்றழைத்தாலும், பாபா அவருக்கு முற்றிலும் வித்தியாசமான வேறொரு பெயரையே அளித்தார்.

காகா மஹாஜனியை 'பெரிய காகா' என்றும் நானா சாஹேப் நிமோன்கரை 'கிழவர் காகா' என்றும், பாவூசாஹெப்பை  சில சமயங்களில் 'நொண்டிக் காகா' என்றும் சில சமயங்களில் 'பம்பாய் காகா' என்றும் அழைத்தார்.

பெற்றோர் குழந்தைகளுக்கு ஒரு பெயரிடுகின்றனர்; ஜாதகத்தில் வேறொரு பெயர் காணப்படுகிறது. சில மனிதர்கள் பரிஹாஸப் பெயரால் அழைக்கப்படுகின்றனர். பெயரிடுவதில் விதவிதமான முறைகள் வழங்குகின்றன.

எப்பொழுது சாயி மஹராஜ் ஒரு பக்தருக்குப் பெயரிட்டாலும், அந்தப் பெயரே நிலைத்து விட்டது. பக்தர்களும் அதை அன்புடன் ஏற்றுக் கொண்டனர். பாபா அளித்த பெயரை ஒரு விருதாகவும் பட்டமாகவும் கருதினர்.

சில சமயங்களில் பிட்சு என்றும் சில சமயங்களில் காகா என்றும் தீக்ஷிதருக்கு பாபா முத்திரை அளித்தார். ஷிர்டியில் வாழ்ந்த மக்களிடையே காகா என்ற பெயரே பிரசித்தியாகிவிட்டது.

தாசகணு ஆச்சரியம் அடைந்தார். எல்லாருமே ஆச்சரியமடைந்தனர். என்ன! இதனை நபர்கள் இருக்க, காகாவின் வேலைக்காரியா! அவள் எப்படி புதிருக்கு விடையளிக்கப் போகிறாள்?

வேலைக்காரி, வேலைக்காரிதானே! அவளுக்கென்ன படிப்பிருக்கும்? அவளுக்கென்ன பொது அறிவும் ஞானமும் இருக்கும்? இதொன்றும் சரியாகத் தோன்றவில்லையே!

வேதங்களின் சூக்குமமான தாத்பரியங்களை விளக்குவதற்கு தேவையான பாண்டித்தியம் எங்கே? ஒரு வீட்டு வேலைக்காரியின் அறிவுறுத்திறம் எங்கே? சாயி மஹராஜ் ஏதோ பரிகாசம் செய்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.

பாபா ஏதோ பரிகாசம் செய்கிறார் என்றுதான் எல்லாருமே நினைத்தனர். ஆனால், தாசகணுவோ தமாஷாக சொன்னதையும் சத்தியமாகவே எடுத்துக் கொண்டார்.

மேலெழுந்த வாரியாக பார்த்த மக்களுக்கு பாபாவின் திருவாய் மொழி நையாண்டி வார்த்தைகளாகவே தோன்றியது. தாசகணு அவ்வாறு கருதவில்லை; அதை சத்திய வாக்காகவே எடுத்துக் கொண்டார். 


Thursday 15 December 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

அதை பண்டிதர்களின் முன்பு வைத்தார். ஆஹா, ஊஹூ என்று விவாதம் நடந்தது. ஆயினும் சந்தேகத்தை யாராலும் நிவிர்த்தி செய்ய முடியவில்லை.

இதன் நடுவே தாசகணு ஏதோ வேலையாக ஷீர்டி செல்ல நேர்ந்தது. அவருடைய சந்தேகம் சுலபமாக நிவாரணமடைந்தது.

அவர் சாயி தரிசனம் செய்யச் சென்றார்; பாபாவின் பாதங்களில் நெற்றியை வைத்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்; மனமகிழ்ச்சி அடைந்தார்.

ஞானிகளின் கிருபை கனிந்த பார்வை, திருவாய்மொழி, மலர்ந்த முகம் - இவையே பக்தகோடிகளுக்கு சகல மங்களங்களையும் கொண்டுவரும்.

தரிசனமாத்திரத்திலேயே சகல தோஷங்களும் அழியும். அவ்வாறிருக்க, ஞானிகளுடைய சந்நிதியிலேயே இருப்பவர்களின் புண்ணியத்தை யாரால் வர்ணிக்க முடியும்?

"ஓ, தாசகணுவா! எங்கிருந்து திடீரென்று வந்தீர்? சௌக்கியமாக இருக்கிறீரா? எப்பொழுதும் திருப்தியுடனும் மனமகிழ்ச்சியுடனும் இருக்கீறீரா?" என்று பாபா குசலம் விசாரித்தார்.

தாஸ்கணு பதிலுரைத்தார், "உங்களுடைய கிருபையென்னும் குடையின்கீழ் வாழும்எனக்கு என்ன குறை இருக்க முடியும்? ஆனந்தம் நிரம்பியவனாக இருக்கிறேன்.-

"ஆயினும் உங்களுக்கு அனைத்தும் தெரிந்திருந்தும், உலகியல் உபசாரத்திற்காக இக் கேள்விகளை கேட்கிறீர், நீங்கள் ஏன் குசலம் விசாரிக்கிறீர்கள் என்று என் மனதுக்கும் தெரிந்திருக்கிறது-

"நீங்களே என்னை ஒரு வேலையை ஆரம்பிக்க வைக்கிறீர்கள். வேலை ஓர் அளவிற்க்கு உருவெடுக்கும்போது திடீரென்று ஒரு தடங்கலை ஏற்படுத்துகிறீர்கள். யார், எவ்வளவு முயன்றாலும் தடங்கலை விலக்க முடியவில்லை!"

இவ்வாறாக சம்பாஷணை தொடர்ந்தது. தாசகணு பாபாவின் பாதங்களை பிடித்து விட்டுக்கொண்டே மெதுவாக, 'ஈசாவாஸ்ய பாவார்த்த போதினி' சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்டார்.

"பாபா, ஈசாவாஸ்ய பாவார்த்த போதினியை நான் உட்கார்ந்து எழுதத் தொடங்கும்போது, என்னுடைய எழுதுகோல் ஸந்தேஹங்களாலும் குழப்பங்களாலும் தடைபடுகிறது. பாபா, என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கமளியுங்கள் !"

பிறகு, என்ன நடந்ததென்பதை தாசகணு பாபாவுக்கு விவரமாக பயபக்தியுடன் விளக்கினார். நிவாரணமடையாத தம்முடைய சந்தேத்தையும் பாபாவின் பாதங்களில் வைத்தார்.

தாஸ்கணு சாயிநாதரை கெஞ்சினார், " பாபா, நான் இந்நூலை எழுத எடுத்த முயற்சிகளெல்லாம் வீணாகப் போய்க்கொண்டிருக்கின்றன. என்னுடைய ஈசாவாஸ்ய கதை உட்பட சகலமும் நீங்கள் அறிந்ததே.-

"இந்த சந்தேகம் நிவிர்த்தியாகாவிட்டால் இந்த கிரந்தத்தின் (நூலின்) சூக்குமமான அர்த்தம் விளங்காது". மஹராஜ் அவரை ஆசீர்வதித்தார், "நீர் பிரசன்னமான (மலர்ந்த) மனமுடையவராக இரும்"- 


Thursday 8 December 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

'நான் மெத்தப் படித்தவன்; பண்டிதன்; என்னுடைய சுய முயற்சியாலேயே உபநிஷதங்களை படித்துப் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் விளக்குவேன்" என்று ஒருவர் நினைத்தால்-

அது முடியவே முடியாது; யுக முடிவு வரை முயன்றாலும் சாத்தியமாகாது. குருவின் அருளின்றி, வழியில் அடிக்கு ஆதி இடைஞ்சல்கள் தோன்றும்; கடைசிவரை ரகசியமான அர்த்தம் கைக்குப் பிடிபடாது.

ஆனால், குருபாதங்களில் சரணடைந்தவர்க்கு அனுமாத்திரமும் சங்கடம் ஏற்படாது. தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்ளும் கூடமான அர்த்தம் அவருடைய கண்களுக்குத் தெரியும். புத்திக்கு விளங்கும்.

ஆத்மஞானமென்னும் சாஸ்திரம் அவ்வாறே; ஜனன மரண சுழலை வெட்டியெறிய உதவும் ஆயுதம். தேகாபிமானம் இல்லாது உலகபந்தங்களில் இருந்து முற்றும் விடுபட்டவரே அதை அளிக்கக்கூடிய சத்பாத்திரம் (நல்ல தகுதியுள்ளவர்).

அம்மாதிரியானவரைச் சார்ந்தால், ஒரு கணத்தில் உண்மையான அர்த்தம் தென்படுகிறது; புத்தியும் தடங்கல்களிலிருந்து விடுபடுகிறது; கூடமான அர்த்தமும் வெளிப்படுகிறது.

ஈசாவாஸ்ய உபநிஷதத்தை மராத்தியில் மொழிபெயர்த்தபோது , தாஸ்கணுவும் அந்நிலையில் இருந்தார். சாயிநாதர் கிருபை புரிந்தவுடன் அவருடைய எழுத்து வேளையில் இருந்த இடைஞ்சல்கள்  தகர்ந்தன

தாசகணுவுக்கு சம்ஸ்கிருத ஞானம் போதுமான அளவு இல்லை. எனினும் அவர் ஆச்சாரிய வித்யாரண்யர். சாயிபாபா, இவர்களின் பாதங்களைத் தொழுதுவிட்டு ஓவி எழுத ஆரம்பித்தார்.

தாசகணுவின் எழுத்து பால் தாரை. அதில் பாபாவின் அருள் என்னும் சர்க்கரை கரைக்கப் பட்டிருக்கிறது. செவிமடுப்பவர்கள் அந்த மாதுரியமான (மிக இனிமையான) தாரையை அனுபவிப்பீர்களாக.

உங்களுக்கு பாவார்த்த போதினியை அறிமுகப்படுத்தவர்காகவே இதைச் சொன்னேன். அதனுடைய இதயத்தைப் பார்க்கவேண்டுமென்றால், மூலத்தைப் படிக்க வேண்டும். என்னுடைய கதையின் நோக்கமே வேறு; அதை இப்பொழுது கேளீர்!

ஒரு வார்த்தையும் பேசாமல், தம் பக்தர் படித்துக்கொண்டிருந்த உபநிஷத்தின் சிக்கலானதும் புரிந்துகொள்ள இயலாததுமான பகுதிகளை பாபா எப்படிப் புரிய வைத்தார் என்பதை பார்ப்போம்.

இக் கதையின் முக்கியமான உத்தேசம் இதுவே. இதையே கேட்பவர்களுக்குத் தாத்பரியம் (உட்பொருள்)புரியும்படியாக, சாராம்சமாகச் சொல்லவேண்டும் என்பதே என்னுடைய மனா ஓட்டம். ஆகவே, மனம் கொடுத்துக் கேளுங்கள்!

தாசகணு தம்முடைய வியாக்கியானத்தை ஓவி வடிவில் இயற்றினார்; பண்டிதர்கள் பாராட்டினர். தாசகணுவின் விருப்பம் நிறைவேறியது. ஆயினும் ஒரு சந்தேகம் இருந்தது. 


Thursday 1 December 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா தம்முடைய கட்டை விரலால் அவர்களுடைய நெற்றியில் சிறிது ஊதி இட்டுவிட்டு, ஏந்திய கைகளிலும் கைநிறைய உதீயை வழங்குவார். பக்தர்களின் மேல் அவருக்கிருந்த அடக்கமுடியாத அன்பு அத்தகையது.

"போம், பாவூ, போய்ச் சாப்பிடும்! அண்ணா, போய் இனிமையான சாப்பாட்டை சுவைத்து உண்ணும்! போங்கள், எல்லாரும் அவரவர் இல்லத்திற்குச் செல்லுங்கள்." இவ்வாறு பாபா மக்களிடம் சொல்லுவார்.

இவ்வானந்தம் இப்பொழுது அனுபவிக்கக் கிடைக்காதெனினும், ஷிர்டியின் குறிப்பிட்ட இடங்களையும் குறிப்பிட்ட நேரங்களையும் அவ்வானந்தமான நாள்களையும் திடமான தியான பலத்தினால் இன்றும் மனக்கண்முன் கொணர்ந்து அனுபவிக்க முடியும்.

ஆகவே, நாம் அவ்வாறு தியானம் செய்வோமாக. பாபாவினுடைய கால் கட்டை விரலில் இருந்து முகம் வரை மனக்கண்முன் கொணர்ந்து, பிரேமையுடன் நமஸ்காரம் செய்துவிட்டுக் கதையை மேலும் தொடர்வோம்.

சென்ற அத்தியாயத்தின் முடிவில், வேதத்தின் ஒரு பகுதிக்கு விளக்கத்தை ஒரு வேலைக்கார சிறுமியின் பண்பால் பாபா மலர்ச்சி செய்தார் என்று கதை கேட்பவர்களுக்கு சொல்லப்பட்டது.

'ஈசாவாஸ்ய பாவார்த்த போதினியை' தாசகணு எழுத ஆரம்பித்து விட்டாரெனினும், அதை எழுதும்போது சில சந்தேகங்கள் எழுந்ததால், அவற்றை ஷிர்டியிலிருந்த சத்தகுருவின் பாதங்களுக்கு கொண்டுவந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் பாபா சொன்னதாவது, 'நீர் திரும்பி போகும்போது, 'காகா'  வீட்டு வேலைக்காரி உம்முடைய சந்தேகங்களை நிவிர்த்தி செய்வாள்.'

அவ்வார்த்தைகளே இக்கதையின் பின்னணியாக அமைகின்றன. அங்கிருந்து நாம் தொடர்வோமாக! கேள்விக்கு குறைவேற்படாத வகையில், செவிமடுப்பவர்கள் கவனத்தை கொடுப்பீர்களாக!

சம்ஸ்கிருதபாஷை தெரியாத மக்களுக்கு, ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் அர்த்தத்தை பதம் பதமாக மராட்டி மொழியில் ஓவி வடிவில் கொடுக்க வேண்டும்.

ஈசாவாஸ்ய பாவார்த்த போதினியை சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் மராத்தியில் எழுத ஆரம்பித்தபோது, இதுவே தாசகணுவின் விருப்பமாக இருந்தது.

இந்த உபநிஷதம் சுலபமாகப் புரிந்து கொள்ளமுடியாதது; கூடமான அர்த்தம் (மறைபொருள்) நிரம்பியது. பதம் பதமாக பிரித்து உரை எழுதி விட்டாரே தவிர, தாசகணுவிற்கு உபநிஷதத்தின் முழுமையான அர்த்தம் பிடிபட்டுவிட்டது எனது திருப்தியுற முடியவில்லை.

நான்கு வேதங்களின் முடிவான சிகரங்களே உபநிஷதங்கள். குருவினுடைய கிருபையும் ஹரியுனுடைய கிருபையும் இல்லாது உபநிஷதங்களையும் புரிந்து கொள்ள முடியாது. 


Thursday 24 November 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

20 . ஈசாவாஸ்ய உபநிஷதமும் ஏழைச்சிறுமியின் பண்பு தந்த விளக்கமும்  

ஓம் நமோ குருராயா! வாக்கு முத்துக்களை பிரசாதமாக வழங்கும் மானசரோவர்! நீர்நிலை நீரே! அன்னன்னிய (வேறொன்றிலும் நாட்டமில்லாத ) பக்தர்களாகிய அன்னங்கள் தேவரீர் திருவடிகளை புகலிடமாக நாடுகின்றன.

மஹா உதாரணம் படைத்த நீர், உம்மைப் புகலிடமாக கொண்டவர்களுக்கு உமதருளென்னும் முத்தைத் தின்னக் கொடுத்து நிஜமான விச்ராந்தி (இளைப்பாறுதல்) அளித்து, ஜனன மரணச் சூழலில் இருந்து விடுதலை அளிக்கிறீர்.

ஓ! எத்தனை அற்புதமான சித்தாசிரமம் (சித்தர்கள் வாசம் செய்யும் இடம்) இந்த சாயி! வாழ்க்கையின் சிரமங்கள் அவரை தரிசனம் செய்த் மாத்திரத்திலேயே நிவிர்த்தியாகிவிடுகின்றன. அவருடன் ஸஹவாசமாக (கூடவே வசித்தல்) இருப்பவர்கள் பிறவியால் ஏற்பட்ட பிரமைகளில் இருந்து விடுதலை அடைகின்றனர்.

மூல நிலையில் சாயி உருவமற்றவர். பக்தர்களின் மங்களத்திற்காகவே உருவமெடுத்துக் கொண்டார். மாயை என்னும் மாபெரும் நடிகையின் சவாலை ஏற்றுக்கொண்டு, நடிகர் திலகமாக தம்முடைய பங்கையும் நன்கு நிறைவேற்றி விட்டார்.

இவ்வாறான சாயியை நமது மனதுக்குள் கொணர்வோம். மத்தியான ஆராதிக்குப் பின்பு அங்கு என்ன நடக்கிறது என்பதை கவனத்துடன் காண்பதற்கு ஒரு கண நேரம் ஷிர்டிக்கு போவோம், வாரீர்!

மத்தியான ஆரத்தி முடித்த பிறகு, பாபா மசூதியின் கைப்பிடிச் சுவரின் மூலைக்கு வந்து நிற்பார். கிருபை கனிந்த பார்வையுடன் பக்தர்களுக்கு உதி விநியோகம் செய்வார்.

பக்தர்களும் பிரேமையின் எழுச்சியால் பாபாவின் பாதங்களை கட்டியணைத்துக்கொள்வர். அங்கேயே நின்றுகொண்டு உதீமழையை அனுபவித்துக் கொண்டு பாபாவின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருப்பர்.



ஷீர்டி சாயி சத்சரிதம்

ஓம் நமோ குருராயா! வாக்கு முத்துக்களை பிரசாதமாக வழங்கும் மானசரோவர்! நீர்நிலை நீரே! அன்னன்னிய (வேறொன்றிலும் நாட்டமில்லாத ) பக்தர்களாகிய அன்னங்கள் தேவரீர் திருவடிகளை புகலிடமாக நாடுகின்றன.

மஹா உதாரணம் படைத்த நீர், உம்மைப் புகலிடமாக கொண்டவர்களுக்கு உமதருளென்னும் முத்தைத் தின்னக் கொடுத்து நிஜமான விச்ராந்தி (இளைப்பாறுதல்) அளித்து, ஜனன மரணச் சூழலில் இருந்து விடுதலை அளிக்கிறீர்.

ஓ! எத்தனை அற்புதமான சித்தாசிரமம் (சித்தர்கள் வாசம் செய்யும் இடம்) இந்த சாயி! வாழ்க்கையின் சிரமங்கள் அவரை தரிசனம் செய்த் மாத்திரத்திலேயே நிவிர்த்தியாகிவிடுகின்றன. அவருடன் ஸஹவாசமாக (கூடவே வசித்தல்) இருப்பவர்கள் பிறவியால் ஏற்பட்ட பிரமைகளில் இருந்து விடுதலை அடைகின்றனர்.

மூல நிலையில் சாயி உருவமற்றவர். பக்தர்களின் மங்களத்திற்காகவே உருவமெடுத்துக் கொண்டார். மாயை என்னும் மாபெரும் நடிகையின் சவாலை ஏற்றுக்கொண்டு, நடிகர் திலகமாக தம்முடைய பங்கையும் நன்கு நிறைவேற்றி விட்டார்.

இவ்வாறான சாயியை நமது மனதுக்குள் கொணர்வோம். மத்தியான ஆராதிக்குப் பின்பு அங்கு என்ன நடக்கிறது என்பதை கவனத்துடன் காண்பதற்கு ஒரு கண நேரம் ஷிர்டிக்கு போவோம், வாரீர்!

மத்தியான ஆரத்தி முடித்த பிறகு, பாபா மசூதியின் கைப்பிடிச் சுவரின் மூலைக்கு வந்து நிற்பார். கிருபை கனிந்த பார்வையுடன் பக்தர்களுக்கு உதி விநியோகம் செய்வார்.

பக்தர்களும் பிரேமையின் எழுச்சியால் பாபாவின் பாதங்களை கட்டியணைத்துக்கொள்வர். அங்கேயே நின்றுகொண்டு உதீமழையை அனுபவித்துக் கொண்டு பாபாவின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருப்பர்.



Thursday 17 November 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஈசாவாஸ்ய உபநிஷதம் என்னும் தாமரையின் மீது, வாக்தேவதையாகிய சரஸ்வதி என்னும் வந்து ரீங்காரமிட்டுக்கொண்டு சுற்றிவரும். அது தாமரையின் நறுமணத்தை நுகர்ந்து அனுபவிப்பதற்கு, செவிமடுப்பவர்கள் தங்களுடைய சாமர்த்தியத்தை எல்லாம் உபயோகிக்க வேண்டியிருக்கும்.

ஆகவே, அது அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும். எப்பொழுது சொல்லப்படுகிறதோ அப்பொழுது கேளுங்கள். அது மங்களத்தை அளிக்கும். கருணாமூர்த்தியான சாயியே எல்லாச் செயல்களுக்கும் காரணகர்த்தா.

பந்த் ஹேமாட் சாயியை சரணடைந்து அவருடைய பாதங்களை நமஸ்கரிக்கிறேன். அவர் உறையும் எல்லா ஜீவராசிகளுக்கும் வணக்கம் செலுத்துகிறேன். கதை கேட்பவர்கள் சாயிக்கு நிவேதனம் செய்யப்படும் இப் பிரசங்கத்திற்குத் தங்களுடைய மேலான கவனத்தை தானமாக அளிக்குமாறு வேண்டுகிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'எனக்கு அனுக்கிரஹம்' என்னும் பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்.

                            ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                                         சுபம் உண்டாகட்டும்.  


Thursday 10 November 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

உடனே பாபா கூரையின் மறுபக்கச் சார்பில் இறங்கி, விளிம்பிற்கு வந்து, அதே ஏணியை அங்கே கொண்டுவரும்படி செய்தார். ஏணியை உபயோகித்துக் கீழே இறங்கிவிட்டார்.

கால் பூமியில் பட்டவுடனே ஏணியின் சொந்தக்காரருக்கு கணநேரமும் தாமதியாமல் இரண்டு ரூபாய் உடனடியாகக் கொடுத்தார்.

அவர் செய்த வேலை இரண்டு இடங்களில் ஏணியைச் சார்த்தியதை தவிர வேறெதுவுமில்லை. அதற்கென்ன பாபா அவருக்கு அவ்வளவு தாராளமாகப் பணம் கொடுத்தார்?

இயல்பாகவே மக்கள் ஆவலுற்றனர். ஒருவர் சொன்னார், "ஏணியின் சொந்தக்காரருக்கு இவ்வளவு பணம் ஏன் கொடுத்தீர்கள் என்று பாபாவைக் கேளுங்கள்."

அவர்களில் ஒருவர் தைரியம் கொண்டு கேட்டார். பாபா பதிலுரைத்தார். "சிறிதளவாயினும், யாருடைய உழைப்பையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளாதே."-

"யாருடைய உழைப்பையும் எப்பொழுதும் இலவசமாகப் பெறக்கூடாது என்னும் விதியைக் கடைப்பிடி. மற்றவர்களிடம் வேலை வாங்கி கொள். ஆனால், அவர்களுடைய உழைப்பு எவ்வளவு என்பதை அறிந்துகொள்".

இவ்வாறு பாபா செய்ததன் நோக்கமென்ன எனப்து யாருக்குத் தெரியும்? அது அவர் ஒருவருக்குத்தான் தெரியும். ஞானிகளுடைய மனம் திறக்க முடியாத பெட்டியன்றோ!

அவருடைய திருவாய்மொழியே நமக்கு சகல ஆதாரமும். அவர் சொன்னபடி நடந்தால், தடங்கல்கள் ஏதுமின்றி வாழ்க்கை சுமுகமாக நடக்கிறது.

அடுத்த அத்தியாயம் இதைவிட இனிமையானது. வீட்டு வேலை செய்யும் ஒன்றுமறியாத சிறுமி ஒருத்தி, வேதத்திலிருந்து எழுந்த, திகைக்க வைக்கும் சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கப்போகிறாள்!

தாசகனு ஒரு தெய்வ அருள் பெற்ற ஹரிதாஸர் (கதாகீர்த்தனம் செய்பவர்), சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், ஈசாவாஸ்ய உபநிஷதத்தை மராத்தியில் மொழிபெயர்த்து வழங்க அவர் விரும்பினார்.

சாயியினுடைய அருளால் அந்நூலை எழுதிமுடித்தார். ஆயினும், உபநிஷத்தின் ரகசியமான அர்த்தம் தமக்குப் பிடிபடவில்லையோ  என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. பாபா அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்த்துவைத்தார்?

ஷிர்டியில் உட்கார்ந்துகொண்டே பாபா கூறினார், "நீர் விலேபார்லேவுக்கு செல்லும்போது, காகாவின் (ஹரிசீத்தாராம் தீக்ஷிதரின்) வீட்டு வேலைக்காரி உம்முடைய ஸந்தேஹத்தைத் தீர்த்துவைப்பாள்".


Thursday 3 November 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

யாராவது யோகாசனங்களையோ அல்லது ஹடயோகத்தின் மற்றப் பயிற்சிகளையோ திருட்டுத்தனமாகப் பழகினால், பாபாவுக்கு அது உள்ளுணர்வால் தெரிந்துவிடும்; சொல்லம்பினால் அதை அவருக்குத் தப்பாது தெரிவித்து விடுவார்.

முன்பின் தெரியாத ஒருவருடைய கையை பிடித்துக்கொண்டு, 'நீ சோளரொட்டியை தின்று விட்டு சும்மா இருக்கமாட்டாயா? பொறுமையை  கடைப்பிடி! என்று கண்டனச் செய்தி சொல்லுவார்.

யாரோ ஒருவருக்கு நேரிடையாக அதிகார தோரணையில் சொன்னார், "நாங்கள் கண்டிப்பு மிகுந்த, இரக்கமில்லாத ஜாதி, ஓரிருமுறை சொல்லிப்பார்ப்போம். திருந்தாவிட்டால் கடுமையான தண்டனை கொடுப்போம்.-

"எம்முடைய சொல்லக் கேட்காதவனை இரண்டாகத் துண்டித்து தூக்கியெறிந்து விடுவோம்; எம் குழந்தையாக இருப்பினும் சரி." (பிறந்தவுடனே சிசுவின் தொப்புள் கொடியை அறுத்துவிடும் செய்கை இங்கு உபமான படுத்தப்படுகிறது. )


சாயிபாபா பேரறிவு படைத்த மஹானுபவர்; அவருடைய சாமர்த்தியமான செயல்களை பாமரனாகிய நான் எவ்வாறு வர்ணிக்க முடியும்? சிலருக்கு அவர் ஞானத்தையும் துறவு மனப்பான்மையும் அளித்தார்; சிலருக்கு நன்னெறியையும் பக்தியையும் அளித்தார்.

சிலரை, பிறர் போற்றும் வகையில் உலக வாழ்க்கையை மங்களமாக நடத்துமாறு ஒழுங்குபடுத்தினார். இது விஷயமாக கதை கேட்பவர்களுக்கு ஒரு சுவையான நிகழ்ச்சியை உதாரணமாக சொல்லுகிறேன்.

ஒருநாள் உச்சிவேளையில், எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணமாயியின் வீட்டுக்கருகில் பாபா வந்தார். பாபா மனதுள் என்ன வைத்திருந்தாரோ தெரியவில்லை.

அங்கே சிலர் அவருடன் இருந்தனர்; பாபா அவர்களை ஏவினார், "கொண்டுவா, உடனே ஓர் ஏணி கொண்டு வா!" அவர்களில் ஒருவர் உடனே சென்று ஓர் ஏணியைக் கொண்டுவந்து அங்கு வைத்தார்.

பாபா அந்த ஏணியை வீட்டின்மீது சார்த்திக் தாமே கூரையின் மீது ஏறினார். அவர் மனதில் என்ன திட்டம் வைத்திருந்தார் என்பது எவருக்கும் தெரியாது.

அந்த நேரத்தில் ஏணியானது வாமன் கோந்தக்கருடைய வீட்டின்மேல் சார்த்தப்பட்டிருந்தது. ஸ்ரீ சாயி கிடுகிடுவென்று ஏணியில் ஏறிக் கூரையை அடைந்தார்.

அங்கிருத்து, அவர் கோன்தகரின் பக்கத்து வீடான ராதா கிருஷ்ணா பாயியின் வீட்டுக் கூரைக்கு சென்றார். அந்த கூரையையும் சடுதியில் கடந்தார். யாருக்கும் இந்த மர்மம் என்னெவென்று  புரியவில்லை.

ஆனால், அந்த நாளில் ராதா கிருஷ்ணபாயி குளிர்காய்ச்சலில் நடுங்கி கொண்டு அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தாள்.

பக்கத்துக்கொருவராக, இருவர் தங்கினால் பாபாவால் நடக்க முடியும். அவ்வளவு பலஹீனமானவருக்கு இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது? 


Thursday 27 October 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"என்னுடைய நாமத்தை தியானம் செய்; என்னிடம் சரணடைந்து விடு" என்று பாபா எல்லாரிடமும் திரும்பச் திரும்பச் சொன்னார். தம்மை யாரென்று தெரிந்து கொள்வதற்காக தம்முடைய கதைகளை கேட்டு அவற்றின் மீது சிந்திக்கச் சொன்னார்.

சிலரை பகவன் நாமஸ்மரணம்  செய்யச் சொன்னார். சிலரை பகவானுடைய லீலைகளைக் கேட்கச் சொன்னார். சிலரை பகவானுடைய பாதங்களுக்குப் பூஜை செய்யச் சொன்னார். இவ்வாறு அவர் பக்தரின் ஆன்மீகத் தகுதிக்கேற்றவாறு வெவ்வேறு விதிகளையும்  வழிமுறைகளையும் நியமனம் செய்தார்.

ஒருவரை அத்யாத்ம இராமாயணம் படிக்கச் சொன்னார். மற்றொருவரை சடங்கை முன்வைத்து ஞானேச்வரி படிக்கச் சொன்னார். வேறொருவரை ஹரிவ்ரதம் படிக்கச் சொன்னார். இன்னொருவரை குரு சரித்திரம் படிக்கச் சொன்னார்.

ஒருவரைத் தம்முடைய காலடியிலேயே கிடக்கச் சொன்னார். அச்சமயத்திலேயே அடுத்தவரை கண்டோபா கோயிலுக்கு அனுப்பினார். வேறொருவர் மீதிருந்த அளப்பரிய அன்பினாலும் அக்கறையாலும் அவரை ஸ்ரீ விஷ்ணு  சஹஸ்ர நாம பாராயணம் செய்ய வைத்தார்.

ஒருவர் 'ராம விஜயம்' படிக்கும்படி உபதேசம் செய்யப்பட்டார். மற்றொருவருக்கு நாமத்தினுடைய மஹாத்மியமும் தியானத்தினுடைய முக்கியத்துவமும் விளக்கப்பட்டது. வேறொருவர் சாந்தோக்கிய உபநிஷத்தையும் கீதா ரஹஸ்யத்தையும் விசுவாசத்துடன்  படித்து சுவாரசியத்தை அனுபவிக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டார்.

ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. தீக்ஷை அளிக்கும் வலிகள் எண்ணிலடங்கா. சிலருக்குப் பிரத்யஷக்ஹமாகவே (நேருக்கு நேர்) உபதேசம். சிலருக்கு திருஷ்டாந்தமாக (உருவக கதைகள் மூலமாக) உபதேசம். அவருடைய உபதேசப் புதினம் அபூர்வமானது!

அனைத்து இனத்தினரும் ஜாதியினரும் அவரை தரிசனம் செய்ய ஓடிவந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் ஆர் தோன்றினார்.

அவருடைய மார்பின் அமர்ந்துகொண்டு கைகளாலும் கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளைக் காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவை தொடமாட்டேனென்றும் அறவே விட்டு விடுவேனென்றும் பிரமாணம் செய்த் பின்னரே அவரை விடுதலை செய்தார்.

கலியாண வீட்டுச் சுவரில் ஜோதிடர்கள் விஷ்ணு, சிவன், ஆகிய தெய்வங்களின் ஓவியங்களை வரைவதுபோல 'குரு பிரம்மா' போன்ற மந்திரங்களை பக்தருக்காக அவருடைய கனவில் பாபா எழுதுவார். 


Thursday 20 October 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

'இறைவனின் அருள் இருந்தால் உட்கார்ந்த இடத்திலேயே சுண்டுவிரலைக்கூட அசைக்காமல் நான் அனைத்தையும் பெறுவேன்" என்னும் பழமொழி சந்தேகமில்லாமல் உண்மையே. ஆனால், அது உணவுக்கும் உடைக்கும் மட்டும்தான் பொருந்தும்.

ஆன்மீக சம்பந்தமான விஷயங்களில் இந்த விதியைப் பொறுத்த முயல்பவன் எவ்வித முன்னேற்றமும் இன்றி ஏமாற்றி போவான். 'தினை விதைத்தவன் தினை அறுப்பான்'; வினை விதைத்தவன் வினை அறுப்பான்.' இது பாபாவின் விலைமதிக்க முஐடியாத உபதேசம்.

பாபாவின் திருவாய் மொழியைக் கேட்கக் கேட்க, கேட்பவரை அது மேலும் மேலும் ஆனந்தத்தால் ஊஞ்சலாட செய்கிறது. பக்தியுடன் விசுவாசத்துடனும், மண் செழுமையாகவும் தளர்வாகவும் இருப்பின் வேர்கள் ஆழமாக சென்று பாய்கின்றன.

"நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும் நிலத்திலும் காய்ந்துபோன கொம்பிலும் மனிதர்களிடையேயும் வனத்திலும் இந்த தேசத்திலும் வெளிதேசங்களிலும் - எங்கும் இருக்கிறேன். நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் உட்பட்டவன் அல்லேன். ஒளியுடைய ஆகாயத்திலும் நான் வியாபித்திருக்கிறேன்.

"மூன்றரை முழம் உயரமுள்ள இம் மினதக் கூட்டில்தான் நான் வியாபித்திருக்கிறேன் என்ற தவறான அபிப்பிராயத்தை அகற்றுவர்தக்காகவே நான் இப்புவியில் அவதரித்திருக்கிறேன். -

"என்னை வேறொன்றிலும் நாட்டமில்லாமல் பிரதிபலன் ஏதும் எதிர்பாராமலும் இரவுபகலாக தொழுபவன் இரண்டென்னும் மாயையை  வென்று என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறான். -

"வெல்லத்தை விட்டு இனிப்பு வெளியே சென்றுவிடலாம். கடல், அலைகளை பிரிந்துவிடலாம். கண், கருமணியைப் பிரியலாம். என் கபடமற்ற, விசுவாசமுள்ள பக்தன் என்னிலிருத்து வேறுபட மாட்டான். -

"ஜனன மரணச் சுழலிலிருந்து நிச்சயமாக விடுபடவேண்டுமென்று உறுதியாக நினைப்பவன். தர்ம சாஸ்திர விதிகளின்படி வாழ்க்கை நடத்தப் பிரயத்தனம் செய்யவேண்டும். எப்பொழுதும் தனக்குள் அடங்கிய மனத்தினனாக இருக்கவேண்டும். -

"பிறர் மனதை புண்படுத்தவோ தாக்கவோகூடிய சொற்களைப் பேசக் கூடாது. எவரையும் மர்மஸ்தானத்தில் அடிக்கக் கூடாது. தன்னுடைய கடமையையே கருத்தாக கொண்டு, சுத்தமாக சுயதர்மத்தை கடைபிடிக்க வேண்டும். -

"உன்னுடைய மனதையும் புத்தியையும் என்னிடம் சமர்ப்பணம் செய்து விட்டு என்னையே எப்பொழுதும் நினைத்துக்கொண்டிரு. அவ்வாறான மனிதன், தனது தேகத்திற்கு எப்பொழுது என்ன நடந்தாலும் அதுபற்றிக் கவலைப்ப பட மாட்டான். அவனுக்கு எந்த விதமான பயமும் இல்லை.-

"எவனொருவன் வேறொன்றிலும் நாட்டமில்லாது என்னையே வரித்து, என்னுடைய புண்ணிய கதைகளைக் கேட்டுக்கொண்டு, என்னில் அன்னியமான எதிலும் ஈடுபாடு கொள்ளாதிருக்கிறானோ, அவன் இறைவனுடன் ஒன்றிவிடுகிறான். "


Thursday 13 October 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

நிந்தை செய்பவர்கள் நிச்சயமாக வணக்கத்துக்குரியவர்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காகத் தங்களுடைய மனதை வீழ்ச்சியடைய செய்துகொள்கிறார்கள். அவர்களுடைய பரோபகாரத்தை வர்ணிக்க இயலாது!

நிந்தையென்ற பெயரில் ஒவ்வொரு பிடியிலும் நம்முடைய தோஷங்களை தெரிவித்து எதிர்காலத்தில் விளையக்கூடிய அனேக அனர்த்தங்களை (கெடுதல்களை) வராமல் தடுத்துவிடுகின்றனர். அவர்கள் செய்யும் உபகாரத்தை நான் எவ்விதம் போற்றுவேன்;

ஞானிகளாலும் சாதுக்களாலும் பலவிதமாகப் போற்றப்பட்ட நிந்தை செய்யும் கோஷ்டியை நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன்.

இந்த நிந்தையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் வெறுப்படைந்தனர். நிந்தை செய்தவர் காளைக்கு கடன்களை கழிப்பதற்காக ஓடைக்கு சென்றார். பக்தர்களின் கூட்டம் பாபாவை தரிசிக்க மசூதிக்கு சென்றுவிட்டது.

பாபா பரிபூரணமான அந்தர் ஞானியானதால் தம் பக்தர்களுக்கு சரியான நேரத்தில் போதனை செய்வார். சிறிதுநேரம் கழித்து, அவர் விளைவித்த சம்வத்தைப் பற்றிக் கேளுங்கள்.

லெண்டிக்கு பக்தகோஷ்டியுடன் சென்றபோது, பாபா நிந்தை செய்த பக்தரைப்பற்றி விசாரித்தார். அவர் காலைக்கடன்களை முடிப்பதற்கு ஓடைக்குச் சென்றிருப்பதாக மற்றவர்கள் சொன்னார்கள்.

தம்முடைய காரியாக்கிரமங்களை முடித்துக்கொண்டு பாபா திரும்பினார். நிந்தை செய்த பக்தரும் ஓடையிலிருந்து வீடு நோக்கி கிளம்பினார்.

இருவரும் சந்தித்தபோது என்ன நடந்தது என்பதை பயபக்தியடன் நீங்கள் கேட்கும்படி நான் கைகூப்பி வேண்டுகிறேன்.

அவ்விடத்திலேயே ஒரு காம்ப்பவுண்டு வேலிக்கருகில் கிராமத்தின் பன்றியொன்று யதேஷ்டமாக மலத்தை சுவைத்துத் தின்று கொண்டிருந்தது. பாபா தம்முடைய கையால் அப்பன்றியைச் சுட்டிக் காட்டினார்.

"அந்த நாக்கு எவ்விதமாக பொதுஜனங்கள் கழித்த மலத்தைச் சுவைத்தும் ரசித்தும் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது  என்று பார். தன் பந்துக்களையும் உறுமலால் விரட்டிவிட்டு தன் பெரும்பசியைத் தனித்துக் கொண்டிருக்கிறது.-

"பல சுகிர்தங்களைச் (நற்செயல்களை) செய்ததால் தனக்கு கிடைத்த மனிதப் பிறவியை வீணடித்துவிட்டு, தன்னுடைய நாசத்திற்கே வழிகோலும் மனிதனுக்கு இந்த ஷீர்டி என்ன சந்தோஷத்தையும் சாந்தியையும் அளிக்க முடியும்?"

பாபா இந்த தொனியிலேயே பிரசங்கம் செய்து கொண்டுபோனார். நீந்த செய்த மனிதருக்குள்ளே தேள் கொட்டியது. காலையில் நடந்ததெல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. பாபாவின் வார்த்தைகள் அவருடைய இதயத்தைப் பிளந்தன!

இவ்வாறாக, பாபா தம் பக்தர்களுக்கு சமயத்திற்கேற்றவாறு பிரசங்கரூபமாக போதனையளித்தார். இந்த போதனையின் சாரத்தை மனதில் கவனத்துடன் ஏற்றிக்கொண்டால், ஆன்மீக முன்னேற்றம் தூரத்திலா இருக்கிறது? 


Thursday 6 October 2016

ஷீர்டி சாய் சத்சரிதம்

ராமநாமம் ஒழுக்கம் தவறியவர்களையும் கரையேற்றுகிறது. ராமநாமம் அபரிதமான நன்மைகளை அளிக்கிறது. ராமநாமம் பேதமில்லாத வழிபாடு, ராமநாமம் பிரம்மத்தையடையும் வழி.

ராமநாமத்தை இடைவிடாது ஜபிப்பதால், ஜனனமரணச் சூழலில் இருந்து விடுதலை கிடைக்கிறது. ராமநாமத்தை அடிக்கடி உச்சரித்துவந்தால், கோடிவகையில் நன்மை ஏற்படுகிறது.

ராமநாமத்தை கர்ஜனை செய்தால், மஹாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் தோன்றி, கோடி விக்கினங்களை அழிக்கிறது. இதுவே தீனர்களை சம்ரக்ஷணம் (நன்கு ரட்சித்தல்) செய்யும் நாமம்.

போதனை செய்வதற்கு சாயிநாதருக்குக் குறிப்பிட்ட இடமோ காலமோ தேவைப்படவில்லை. அமர்ந்திருக்கும்போதும் நடக்கும்போதும் உபதேசங்கள் சஹஜமாகவே வெளிவந்தன.

செவிமடுப்பவர்களே! இது சம்பந்தமாக ஒரு சுவாரஸ்யமான காதையைக் கவனத்துடன் கேளுங்கள். இக் காதை, சாயி எங்கும் நிறைந்திருப்பதையும் அவருடைய தயையும் வெளிக்காட்டும்.

ஒருமுறை, சிரேஷ்டமான (சிறந்த) பக்தரொருவர் வேறொரு மனிதரைப் பற்றி பேசும்போது குதர்க்கமான எண்ணங்களால் கவரப்பட்டு, அவரைக் கடுமையாக விமரிசித்து நிந்தை செய்தார்.

மூன்றாமவருடைய நற்குணங்கள் மறந்து போயின; நிந்தையே பிரவாகமாக பக்தருடைய வாயிலிருந்து வெளிவந்தது. சம்பாஷணையின் முக்கிய விஷயம் அழிந்துபோய், வசையும் நிந்தையுமே கொந்தளித்தன.

தக்க காரணத்தால் ஒருவருடைய நடத்தை இழிவானதாக கருதப்பட்டால், அவரைப் பார்த்து பரிதாபப்பட வேண்டியதே நியாயம்; திருந்துவதற்கான அறிவுரை நேரடியாகவும் அவருடைய முகத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட வேண்டும். புறங்கூறல் செய்யலாகாது.

'எவரையும் நிந்தனை செய்யக்கூடாது' என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. ஆயினும் அந்த மனப்போக்கை முளையிலேயே கிள்ளாவிடின் அதை உள்ளடக்கி வைக்கமுடியாது.

உள்ளேயிருந்து தொண்டைக்கு வந்து, அங்கிருந்து மெதுவாக நாக்கின் நுனிக்கு வரும். அங்கிருந்து சந்தோஷமாக உதடுகள் வழியாகப் பெருகும்.

மூவலகங்களிலும் தேடினாலும் நம்மை நிந்தை செய்பவனைப் போல ஓர் உபகாரியைக் காணமுடியாது. நிந்தை செய்யப்படுவனுக்கு அவன் பரம மங்களத்தை செய்கிறான்.

சிலர் அழுக்கை நீக்குவதற்கு புங்க கொட்டையை உபயோகிக்கின்றனர். சிலர் சவர்க்காரம் (சோப்பு) போன்ற பொருள்களை உபயோகிக்கின்றனர். நிந்தை செய்பவன் தன்னுடைய நாக்கை உபயோகிக்கிறான். !


Thursday 29 September 2016

ஷீர்டி சாய் சத்சரிதம் 

தூங்கினாலும் விளித்தாலும் ராமனே 
எங்கு நோக்கினும் பூர்ணகாமன் ராமனே தெரிகிறான் (2)
ஜனார்த்தருடைய சிஷ்யன் ஏகநாதன் 
எங்கும் எப்பொழுதும் ராமனையே காணும்
உன்னதமும் புனிதமும் அடைகிறான் ." (3)

மனம் ஏற்கெனவே ராமநாமத்தின் மீது ஒருமுகப்படவேண்டும் என்று நிச்சயம் செய்து விட்டது. இந்த நிச்சயத்தைச் செயல்படுத்திய உடனே, இப் பாட்டிலிருந்து ஊர்ஜிதமும் கிடைத்தது. 

இதன் விளைவாக, கருணாமூர்த்தியான சமர்த்த சாயி என்னுடைய தீர்மானம் என்னும் நாற்றின்மீது இப்பாட்டு என்னும் நீரைத் தெளிக்கிறாரோ என்று தோன்றியது. 

தம்பூராவை ஏந்தி, மசூதியின் முற்றத்தில் சாயிநாதருக்கு எதிராக நின்று கொண்டு ஒளரங்காபாத்கர் உச்சஸ்தாயியில் பயாடிக் கொண்டிருந்தபோது கேட்டேன். 

ஒளரங்காபாத் பாபா பக்தர்; என்னைப் போலவே பாபாவிடம் அனுரக்தி (மிகுந்த அன்பு) கொண்டவர். எவ்வளவோ பாட்டுகள் பாடாந்தரமாகத் தெரிந்த இவர், இந்த நேரத்தில் இந்தப் பாட்டைப் பாட வேண்டுமென்று எவ்வாறு உணர்வூட்டப் பட்டார்?

என்னுடைய மனதில் நான் என்ன தீர்மானம் செய்துகொண்டேன் என்பது  யாருக்குமே தெரியாத நிலையில், அவர் இந்த நேரத்தில் இக்குறிப்பிட்ட பாட்டை ஏன் பாட வேண்டும்? பாபா எவ்வாறு நூலை இழுக்கிறாரோ, அவ்வாறே நாம் உள்ளுணர்வு பெறுகிறோம்!

நாமெல்லாரும் பொம்மைகளே; சாயிமாதாவே பொம்மலாட்டத்தின் சூத்ரதாரி. ஒரு வார்த்தையும் பேசாமலேயே, உபாசனை செய்ய வேண்டிய முறையை என் கைகளில் அளித்துவிட்டார். 

என்னுடைய மனத்தின் ஆழமான எண்ணங்கள் பாபாவின் மனதில் பிரதிபலித்தன போலும்! இந்த வழியில் எனக்குப் பிரத்யக்ஷமாகவும் நிச்சயமாகவும் ஓர் அனுபவத்தை அளித்துவிட்டார். 

ஞானிகளும் மதகுருமார்களும் விளக்கியவாறு, நாமத்தின் மஹிமைதான் என்னே! என்னைப் போன்ற ஒரு பாமரன் மேற்கொண்டு என்ன விளக்க முடியும்? நாமத்தின் மூலமாகத்தான் ஒரு மனிதன் தன்னுடைய உண்மையான சொரூபத்தை அறிந்துகொள்ள முடியும். 

'ராம' என்னும் இரண்டெழுத்து சொல் தலைகீழாக திருப்பப்பட்டு (மரா) ஜபம் செய்யப்பட்டதாலேயே , வேடனும் வழிப்பறிக் கொள்ளைக்காரனும் ஆகியவன், வால்மீகி என்று பெயர் பெற்ற ரிஷி நிலைக்கு உயர்த்தப்பட்டான். தான் பாடியதெல்லாம் உண்மையாக நிகழும் வாக்கு சித்தியையும் பெற்றான். 

'மரா' 'மரா' என்று 'ராம' என்னும் நாமத்தைத் தலைகீழாக ஜபித்த அவருடைய  நாவை ஸ்ரீ ராமர் ஆசிர்வதித்தார். ஸ்ரீராமர் பிறப்பதற்கு முன்னமேயே அவருடைய வாழ்க்கை வரலாற்றை வால்மீகி எழுதிவிட்டார்!


Thursday 22 September 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர்கள் நியமமாக செய்யும் நற்செயல்கள் அவர்கள் கேட்காமலேயே எவ்வாறு உற்சாகப்படுத்தி, மஹராஜ் அனுக்கிரஹம் செய்கிறார் என்பது பற்றிக் கேளுங்கள்.

இருந்தாலும், பக்தர் வேறொன்றிலும் நாட்டமில்லாது சரணாகதி செய்துவிட்டு பக்தியின் அற்புதத்தை அனுபவிக்க வேண்டும். அப்பொழுது ஆர், பாபாவினுடைய விநோதமானதும் புதிது புதிதானதுமான வழிமுறைகளை காணலாம். பயனுறலாம்.

காலையில் தூக்கத்தில் இருந்து கண்விழிக்கும்போதே ஒருவருக்கு நற்செயல் பற்றிய எண்ணமொன்று தோன்றினால், அதை அன்று நிர்த்தாரணம் செய்ய வேண்டும்.

அம்மாதிரியான எண்ணங்கள் போஷிக்கப்பட்டால், பெரும் சந்தோசம் விளையும். புத்தியும் விகாசமடையும் (மலரும்); மனம் உவகையுறும்.

இது ஒரு ஞானியின் திருவாய் மொழி. இவ்வுண்மையை நாமும் அனுபவிப்போமே என்று நான் நினைத்தேன். நான் எதிர்பாராமலேயே இவ்வனுபவம் என்னுடைய மனத்திற்குப் பெரும் சாந்தியைக் கொணர்ந்தது.

ஷிர்டியைப் போன்ற ஷேத்திரம், வியாழக்கிழமையைப் போன்ற மங்கள நாள்! திடீரென்று, எனக்கு ராமநாமத்தை இடைவிடாது ஜபிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

புதன்கிழமை இரவு படுக்கையில் படுத்தவாறே நான் ஸ்ரீ ராமனைப் பற்றிய சிந்தனையிலேயே என் மனதை மூழ்கடித்தேன். தூக்கம் வரும்வரை மௌனமாகவே ஜபம் ஓடியது.

காலையில் கண் விழித்தவுடனே, என் மனத்தில் ராமநாமம் உதித்தது. நாக்கு படைத்த பயனைப் பெற்றதை உணர்ந்தேன்.

மனதில் ராமநாம ஜபம் நிலைக்க வேண்டும் என்று நிச்சயம் செய்துகொண்டு, காலைக்கடன்களை முடித்தபின் கையில் அகப்பட்ட பூக்களை எடுத்துக்கொண்டு சாயியை காலை தரிசனம் செய்யச் சென்றேன்.

தீக்ஷித் வாடாவை (சத்திரம்) விட்டுக் கிளம்பி புட்டிவாடா அருகில் (இன்றைய சமாதி மந்திர்) வரும்போது, ஒளரங்காபாத்கர் என்பவர் பாடிக்கொண்டிருந்த இனிமையும் அழகும் வாய்ந்த பதம் ஒன்றைக் கேட்டேன்.

அதையே நான் ஓவி வடிவத்தில் (சுலோகம்) இங்கு அளித்தால் மூலத்தின் சுவையும் சூழ்நிலைப் பொருத்தமும் காணாமற் போய்விடும். கேட்பவர்கள் ஏமாறிப் போவார்கள்.

ஆகவே, நான் மூலத்தையே அக்ஷரம் அக்ஷரமாக மேற்கோளாக வடிக்கிறேன். கேட்பவர்களும் மூலத்தின் தூய்மையான உபதேசத்தை அறிந்துகொண்டு மனம் மகிழலாம்.

"புண்ணியம் செய்தேன் சகோதரா! குருவருள் ஈந்த அஞ்சனத்தால்
ராமனை தவிர வேறெவரையும் நினைப்பேனில்லை  -  பல்லவி
உள்ளிலும் ராமன், வெளியிலும் ராமன்
கனவிலும் சீதா ராமனையே காண்கிறேன் (1)

 

Thursday 15 September 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"யார் இங்கு சாகாவரம் பெற்றவர்? ஆன்மீக முன்னேற்றம் எய்தியவன் கிருதார்த்தனாகிறான் (பேரு பெற்றவனாகிறான்). மற்ற ஜீவன்கள், மூச்சு விட்டுக்கொண்டிருக்கும்வரை, உயிருள்ளவனாய் இருக்கின்றன." (திருவாய் மொழி இங்கு முடிகிறது).

அருள்மொழியான இவ்வார்த்தைகள் என் செவிகளில் விழுந்தபோது, என்னுடைய நோய்கண்ட இதயம் சூதமடைந்தது; என் ஜீவனுடைய தாக்கம் அடங்கியது. நான் ஆனந்தம் நிரம்பியவனானேன்.

ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப் போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும்.

இந்த உபதேசத்தின் சாரத்தை கவனிக்கும்போது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் 'யார் என்னை எப்படி' என்று அருளியது முக்காலத்தும் உண்மை! மனிதனுடைய மொத்த பாரமும் அவனுடைய கர்மாவின்மீதே.

உன்னுடைய கர்மா எப்படியோ , அப்படியே நீ அடையும் ஞானம்; அப்படியே உன்னுடைய ஆன்மீக சாதனைகள். எப்படி அப்பியாசமோ அப்படியே பலன்கள். இதுதான் இந்த அத்தியாயத்தின் இங்கிதகவி (பாட்டுடை தலைவன் கருத்தை விளக்கும் கவி). இதுவே போதனமிருதம்.

'வேறொன்றிலும் நாட்டமில்லாமல்' என்ற கோவிந்தனின் முக்கிய உறுதிமொழி இங்கும் பிரயோகிக்க தக்கது.

இவ்வினிமையான வார்த்தைகளைக் கேட்டபொழுது, "யாகத்தால் தேவர்களை பேணுங்கள். தேவர்கள் உங்களை பேணட்டும். பரஸ்பரம் பேணிப் பெருநன்மை எய்துவீர்" என்றும் பகவத் கீதையின் சுலோகமே எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

"நீ தண்டால் (கடுமையான ஆன்மீகப் பயிற்சி) எடுக்க ஆரம்பி, பாலைப் பற்றிய (பயிச்சிக்கு பலன்)கவலை ஏதும் வேண்டா. ஏனெனில், உனக்கு பின்னாலேயே நான் தயாராக ஒரு வட்டிலில் பாலை வைத்துக்கொண்டு  நிற்கிறேன்.-

"ஆனால், 'நான் தண்டால் எடுக்கிறேன், நீர் எனக்கு வட்டில் வட்டிலாக பாலைத் திருப்தியுறும் வரை கொடும்' என்று நீ கேட்டால், ஆ!  அதெல்லாம் எனக்கு தெரியாது. செயல் ஆற்றுபவன் துடிப்புள்ளவனாக இருக்க வேண்டும்." (பாபா)

பாபாவின் இவ்வாக்குறுதியை சத்தியமென்று எடுத்துக்கொண்டு எவர் செயல்படுகிறாரோ அவர் இந்த உலகத்திலும் மேலுலகத்திலும் சந்தோசம் என்னும் சுரங்கத்தை கண்டுபிடித்தவராவார்.

இப்பொழுது, என்னுடைய அனுபவ பூர்வமான கதை ஒன்றை அசையாத  மனதுடன் கவனமாக கேட்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பக்தருடைய நல்ல தீர்மானங்களை பாபா எவ்வாறு நிச்சயமாகப் போஷிக்கப் போகிறார் என்பது தெளிவாகும். 


Thursday 8 September 2016

ஷீர்டி சாயி சரித்திரம்
இப்பொழுது, பாபா அவ்வப்பொழுது  திருவாய் மொழிந்ததைக் கேளுங்கள். சர்வ சாதாரணமாகத் தோன்றினும் அவை விலைமதிப்பற்றவை. இவ்விஷயங்களை மனதில் எப்பொழுதும் வைத்திருந்தால், உங்களுக்கு நன்மையையும் நற்பலன்களையும் அளிக்கும்.

"முன்ஜன்ம சம்பந்தில்லாமல் எவரும் எங்கும் போவதில்லை. ஆகவே, மனிதராயினும், மிருகமாயினும், பறவையாயினும், அவமதிப்பு செய்து விரட்டி விடாதே.-

"யார் உன்னிடம் வந்தாலும் தகுந்த மரியாதை கொடு. தாகத்தால் தவிப்பவர்களுக்கு நீரும், பசியால் வாடியவர்களுக்கு உணவும், ஆடையில்லாதவர்களுக்கு துணியும், திக்கற்றவர்களுக்கு இருப்பிடமும் அளிப்பாயாக. இவ்வாறு செய்தால் ஸ்ரீ ஹரி சந்தோஷமடைவார்.-

"யாராவது உன்னிடம் பைசா கேட்டால், உனக்கு கொடுப்பதற்கு இஷ்டமில்லை என்றால் கொடுக்க வேண்டா. ஆனால், பைசா கேட்ட நபர் மீது நாயைப் போல குரைக்கவும் வேண்டா.-

"மற்றவர்கள் உன்னை எதனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்து கசப்பாகவோ மனம் புண்படும்படியாகவோ பேசாதே. அதை பொறுமையுடன் சகித்துக் கொள்வாயாக; அதனால், உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும். -

"இந்த உலகமே தலைகீழாக மாறலாம். ஆயினும், நாம் வழிதவறி விடக் கூடாது. நம்முடைய நிலையிலேயே உறுதியாக நின்றுகொண்டு அமைதியாக இவ்வுலகை வேடிக்கை பார்க்கவேண்டும்.-

"உனக்கும் எனக்கும் நடுவேயுள்ள மதிற்சுவரை உடைத்து, முழுக்க நாசம் செய்வாயாக. அப்பொழுது நமக்குத் போகவும் வரவும் பயமில்லாத ஒரு பிரசத்தமான(மங்களமான) பாதை கிடைத்துவிடும்.

"குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே உள்ள தடுப்பு சுவர், 'நீங்கள், நான்' என்னும் மனோபாவமே. அதை உடைத்தெறியாவிட்டால் இருவரும் ஒன்றே என்னும் நிலையை அடைய முடியாது.-

"அல்லாவே யஜமானார்; அல்லாவே யஜமானார்! அவரைத் தவிர ரட்சகர் வேறு எவரும் இல்லை. அவருடைய செய்கைகள் உலகியலுக்கு அப்பாற்பட்டவை; விலைமதிப்பற்றவை; கற்பனை செய்து பார்க்கமுடியாதவை!-

"அவர் நினைப்பதே நடக்கும்; அவரே வழியைக் காட்டுவார். நம்முடைய மனதின் இனிய விருப்பங்கள் ஒரு கணமும் தாமதமின்றி நிறைவேறும் நேரம் வரும்.-

"பூர்வஜென்மங்களின் சம்பந்தத்தினால் நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் பாக்கியம் பெற்றோம். இதயத்தின் அடித்தளத்தில் இருந்து பொங்கும் அனுப்புடன் நாம் ஒருவரையொருவர் தழுவுவோம். சுகத்தையும் சந்துஷ்டியையும் (பூரணமான திருப்தியையும்)அனுபவிப்போம். -

Thursday 1 September 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"பிறகு அஞ்ஞானத்தால் விளைந்த கர்மபந்தங்கள் ஒவ்வொன்றாக அறுந்து விழும். இக் காரியத்தை செய்யலாம். இக் காரியத்தை செய்யக் கூடாது, என்பது போன்ற நிர்பந்தங்களும் விலகிவிடும். முக்தியின் ஆனந்தம் அனுபவிக்கப்படும். -

"முதலில், 1. ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா, இல்லையா? 2. ஓர் உயிரினுள் உறையும் ஆத்மாவும் மற்றொரு உயிரினுள் உறையும் ஆத்மாவும் ஒன்றேயா, வெவ்வேறா? 3. ஆத்மா 'செயல்புரிபவனா', 'செயல்புரியாதவனா'? என்ற கேள்விகளுக்குப் பதிலை ஆறு சாஸ்திரங்களையும் அலசித் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.-

"எல்லா உயிர்களிலும் உறையும் ஆத்மாவும் ஒன்றே என்று உணர்வதே ஆத்ம விஞ்ஞானத்தின் எல்லை. மோக்ஷமும் பரமானந்தமும் இந்த உணர்விலிருந்துதான் பிறக்கின்றன. -

"பிருஹஸ்பதியை (தேவகுரு) போன்று சொல்வன்மை படைத்த அறிஞரை நீர் கொண்டு வந்தாலும், அவருடைய நாவன்மை குருடனுக்கு யானை எப்படி இருக்கும் என்பதை விளக்கி அவன் மனதில் ஏற்ற முடியாது. சொல்லுக்கு அப்பாற்பட்டதைச் சொல்லால் விளக்க முடியாது! -

"பேசுபவர்களின் நாக்கும் கேட்பவர்களின் செவியும், இல்லாத பார்வையைக் கொண்டுவர முடியுமா என்ன? யானையின் உருவத்தை பார்ப்பதற்கு கண்களே தேவை.-

"கண்பார்வையின்றி, யானையைக் கண்ட அனுபவத்தை ஒரு குருடன் எவ்வாறு பெறமுடியும்? அது போலவே, திவ்வியமான பார்வையை குரு அளித்த பிறகுதான், ஞானப் பொக்கிஷம் கைக்கு எட்டும்." (பாபாவின் திருவாய் மொழி இங்கு முடிவதாக எடுத்துக் கொள்ளலாம்).

"சாயியின் சொரூபமே உண்மையான, பரிபூரணமான ஞானமும் விஞ்ஞானமும் ஆகும். அவருடைய நிஜமான சொரூபத்தை உண்மையாகவும் முழுமையாகவும் அறிந்துகொள்வதே தியானமாகும். அதுவே அவருடைய தரிசனம். -

"அஞ்ஞானத்தில் இருந்தும் காமத்தில் இருந்தும் கர்மவினைகளில் இருந்தும் முற்றும் விடுபட, வேறு சாதனை எதுவுமே இல்லை. இதை உங்களுடைய மனதில் உறுதியாக நிலைப்படுத்துங்கள். -

"சாயி கேவலம் உம்முடையவரோ அல்லது நம்முடையவரோ அல்லர். எல்லா உயிர்களிலும் உறைகின்றார். சூரியன் எவ்வாறு இவ்வுலகம் முழுமைக்கும் சொந்தமோ, அவ்வாறே அவரும்"  - தபோல்கருடைய கூற்றாகக் கருதலாம். 

Thursday 25 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

பிறகு  நான் பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டு, அவருடைய அருளை வேண்டினேன். நான் சொன்னேன், "உங்களுடைய இந்தக் கிருபைதானமே எனக்குப் போதுமானது! என்னை மன்னித்துவிடுங்கள்."

பாபா கூறினார், "கதையைக் கேட்டுக்கொள்ளும்; அதைபற்றிச் சிந்தனை செய்யும். பிறகு அதையே மறுபடியும் தியானம் செய்யும். அவ்வாறு ஞாபகப்படுத்திக் கொண்டு சிந்தனை செய்தால், மிகுந்த ஆனந்தம் விளையும்.-

"இம்முறையில் உம்முடைய காதுகளால் கேட்டதை நீர் இதயத்தில் சேமித்து வைத்தால், உம்முடைய மங்களம் என்னும் சுரங்கத்தை நீரே திறந்து வைத்தவராவீர். உம்முடைய பாவங்களும் அழிந்துவிடும்.-

"புயற்காற்று அடிக்கும்போது, சமுத்திரத்தின் தண்ணீர் பேரலைகளாக எழும்பிக் கரையை அடைந்து மோதிக் கணக்கற்ற நீர்த்திவலைகளாக பிரிந்து நுரை போன்று தோன்றுகிறது.-

"அலை, நீர்க்குமிழி, நுரை, சுழல்கள், இவையனைத்தும் தண்ணீரின் பல உருவங்களே; நம் கண்ணுக்குத் தெரியும் பிரமைகளே. காற்று தணிந்துவிட்டால், இவையனைத்தும் மறைந்துவிடும்.-

"நீருக்குப் பலவிதமான உருவங்கள் இருந்தன, பிறகு அவை அழிக்கப்பட்டன என்று சொல்லமுடியுமா? அவற்றின் இருப்பும் அழிவும் மாயையினுடைய கைவண்ணம் என்று தெரிந்து கொண்டு அவ்வாறே கருதவேண்டும்.-

"சிருஷ்டியின் மற்ற இயக்கங்களும் இவ்வாறே. விவேகிகள் ஈதனைத்தையும் பொருட்படுத்துவதில்லை. நசித்துப் போகக்கூடிய பொருள்களின்மீது அவர்கள் நாட்டம் வைப்பதில்லை. அதனால், நித்தியமான வஸ்துவை (பொருளை) அடைகிறார்கள். -

"ஞானத்தை விட தியானமே பெரிது; ஆனால், எதை தியானம் செய்யவேண்டும் என்ற தெளிவு இருக்கவேண்டும். இவ்விதமாக, பிரம்மத்தை பற்றி (முழுமுதற் பொருள்) முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் பயனுள்ள தியானம் செய்ய இயலாது.-

"அனுபவத்தால் ஆத்மாவைச் சரியாகப் புரிந்துகொள்வதே தியானத்தின் ஆதாரம். எல்லா விஞ்ஞானங்களுக்கும் மூலம் தியானமே. தனிமனிதனுடைய ஆத்ம அனுஷ்டானம் (தன்னையறியும் வழிமுறை) தியானமே. ஆனால், சிறப்பான குணாதிசியங்கள் ஏதுமில்லாத ஒரு பொருளை எப்படி மனதிற்குள் கொணர்ந்து அதன்மீது தியானம் செய்ய முடியும்?

"இறைவன் சுலபமாக அகப்படுவதில்லை. ஆகவே ஆத்மாவே இறைவன்; யார் இறைவனோ அவரே குரு; இம்மூன்றிற்குள் அணுவளவு பேதமும் இல்லை.-

"திரும்பத் திரும்ப செய்யப்படும் தியானம் பரிபூரணமாகி , தியானத்திற்கும் தியானம் செய்பவருக்கும் இடையே உள்ள வேறுபாடு மறைந்துவிடுகிறது. காற்றடிக்காத இரவில் எரியும் விளைக்கைப் போல மனம் அமைதியாகவும் நிலைபெற்றதாகவும் ஆகிவிடுகிறது. இதுவே சமாதி நிலை.-

"ஆசைகளில் இருந்து விடுபட்டு, எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகின்றான் என்பதும் இவ்வுலகத்தில் தன்னைத் தவிர வேறெதுவுமே இல்லை என்பதும் தெளிவானபிறகு, பயமென்பதே இல்லாத நிலையை அடையும்போது, தியானத்தின் மூலமாக தன்னைத்தானே ஆத்மா வெளிப்படுத்திக் காட்டுகிறது.-

Thursday 18 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"சத்தும் சித்தும் ஆனந்தமும் என்னுடைய சொரூபமென்றே அறிவீராக. ஆகவே, அதன்மீதே தினமும் தியானம் செய்வீராக.-

"இவ்வாறு தியானம் செய்ய உம்மால் இயலவில்லையென்றால், என்னுடைய அவதார உருவத்தின் மீது தியானம் செய்யும். இரவுபகலாக என்னுடைய உருவத்தை நகத்தில் இருந்து சிகை வரை எல்லா குணாதிசயங்களுடன் தியானம் செய்வீராக.-

"என்மீது இவ்வாறு தியானம் செய்துகொண்டு வந்தால், உம்முடைய மனம் படிப்படியாக ஒருமுகப்பட்டு தியானம், தியானம் செய்பவர், தியானம் செய்யப்படும் பொருள், இவற்றினிடையே இருக்கும் வேற்றுமை மறைந்துவிடும். -

"இம்முறையில் திரிபுடி (காண்பான், காட்சிப்பொருள், காட்சி) மறைந்து விடும்போது, தியானம் செய்பவர்  தூய உன்னதமான உணர்வை அடைவார். இதுவே எல்லா தியானங்களின் முடிவான இலக்காகும். ஏன் எனில், நீர் பிரம்மத்துடன் ஐக்கியமாகி விடுவீர். -

"தாய் ஆமை இந்தக் கரையில் இருக்கிறது; குட்டிகள் அந்தக் கரையில் பாலும் அரவணைப்பில் கதகதப்புமின்றி இருக்கின்றன. தாயினுடைய அன்பான கடைக்கண் பார்வையே குட்டிகளுக்குப் போஷாக்கை அளித்து வளர்ச்சியடைய செய்கிறது.

"குட்டி ஆமைகள் எப்பொழுதும் தாயைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றன. குட்டிகள் வேறெதையும் செய்யத் தேவையில்லை. அவற்றுக்குப் பாலும் வேண்டா; புல்லும் வேண்டா; வேறெந்த உணவும் தேவையில்லை. தாயை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதே அவற்றுக்குப் போஷாக்கு.-

"தாய் ஆமையினுடைய கனிந்த பார்வை குட்டிகளுக்கு சுயானந்த புஷ்டியை கொண்டுவரும் அமிர்த மழையாகும். இதுவே குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே உண்டாகும் ஐக்கிய அனுபவமாகும். "

இவ்வமுத மொழிகள் பாபாவினுடைய வாயில் இருந்து வெளிப்பட்டு முடிந்தபோது, ஆரத்தி பாட்டும் முடிந்துவிட்டது. பக்தர்கள் அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் உரக்க "ஜெய் ஸ்ரீ சச்சிதானந்த சத் குரு சாயிநாத் மஹாராஜ் கி ஜெய்" என்று கோஷித்தனர்.

தீபங்களை சுழற்றிக் காண்பிக்கும் சடங்குபூர்வமானான ஆர்த்தியும் முடிந்துவிட்டது! ஜோக் பாபாவுக்கு கற்கண்டு சமர்ப்பித்தார். பாபா அதை ஏற்றுக்கொள்ள தமது உள்ளங்கையை நீட்டினார்.

நீட்டிய கரத்தில் தம்முடைய நித்திய பழக்கத்தின்படி அன்புடன் கைநிறைய கற்கண்டுகளை வைத்தார் ஜோக்.

அந்தக் கற்கண்டுகள் அனைத்தையும் என் கைகளில் நிரப்பிவிட்டு பாபா கூறினார். "நான் இப்பொழுது கூறியதை உமது மனதில் நன்கு நிலைப் பெறச் செய்து விட்டீரானால், உமது வாழ்க்கை இக்கற்கண்டைபோலவே இனிக்கும். -

"இக் கற்கண்டுகள் இனிப்பாக இருப்பது போலவே உம்முடைய மனதின் ஆசைகளும் நிறைவேறும். உமக்கு சகல மங்களங்களும் உண்டாகும். மனதின் ஆழமான ஏக்கங்களும் திருப்தியுறும். "


Thursday 11 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்
திண்டின்மேல் சாய்ந்துகொண்டு இருந்த பாபா, அப்பொழுது நான் சொன்னதைக் கேட்பதற்காக முன்னோக்கிச் சாய்ந்தார். நானும் என்னுடைய முகத்தை நீட்டி விவரிக்க ஆரம்பித்தேன்.

"பாபா, அங்கு நாங்கள் பேசியதெல்லாம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவற்றில் எல்லாவற்றிலும் அம் மூதாட்டி பற்றிய கதை உண்மையிலேயே அற்புதமானது.-

"சாம்ராவ் இக்கதையைச் சொல்லச்சொல்ல, கற்பனை செய்யமுடியாத உம்முடைய வழிமுறைகளை நான் கண்டேன். அந்தக் கதையை சாக்காக வைத்துக்கொண்டு நீங்கள் வாஸ்தவமாக (உண்மையில்) எனக்கு அனுக்கிரஹம் செய்துவிட்டதாகத் தோன்றுகிறது. (தாபோல்கர்)

இதைக்கேட்ட பாபா ஆர்வத்துடன் வினவினார். "சொல்லும்; எனக்கு முழுக்கதையையும் சொல்வீராக. அது எவ்விதத்தில் ஓர் அற்புதமான கதை என்பதையும் அதன் மூலம் உமக்கு எப்படி அனுக்கிரஹம் செய்தேன் என்பதையும் காண்போம்?"

நான் அப்பொழுதுதான் அக்கதையைக் கேட்டிருந்தால் அது என் மனதில் பசுமையாக இருந்தது. மேலும் அக்கதை என்மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நான் அதை உடனே பாபாவுக்கு தங்குதடையின்றி விவரித்தேன். பாபா அதைக் கேட்கும்போதே மகிழ்ச்சியுற்றார் என்று எனக்கு தோன்றியது.

இவ்வாறாக, நான் நடந்ததையெல்லாம் சொன்னேன். பாபாவும் அதை மிக கவனமாக கேட்டார். உடனே என்னிடம் சொன்னார், "இதை உமது மனதில் ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளும்."

மறுபடியும் பாபா உற்சாகத்துடன் கேட்டார், "நீர் இப்பொழுது கேட்ட கதை எவ்வளவு இனிமையானது! ஆனால், அது உம்முடைய மனதில் பதிந்ததா? அது வாஸ்தவமாகவே உமக்குப் பொருள்பொதிந்ததாக தெரிந்ததா?"

"பாபா, அந்தக் கதையைக் கேட்டபிறகு நான் சாந்தியடைந்தேன். என்னுடைய சந்தேங்களுக்கும் மன உளைச்சலும் பறந்து போயின. நான் ஒரு நிச்சயமான மார்க்கத்தை கண்டுகொண்டேன்".

பாபா கூறினார், "நம்முடைய வழிமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவை அல்லவோ! இது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இது உமக்கு மிக உபகாரமாக இருக்கும்.-

"ஒருமுனைச் சித்தமாக தியானம் செய்வதாலேயே ஆத்மாவைப் பற்றிய விஞ்ஞானம் அடைப்படுகிறது. அந்த தியானமே அனுஷ்டானம் (ஆன்மீக ஒழுக்கம்) ஆகும். அதுவே மனதிருப்தியையும் நிறைவையும் அளிக்கும்.-

"முதல் காரியமாக, ஆசைகளில் இருந்து விடுபட வேண்டும். எல்லா உயிர்களிலும் உறையும் இறைவனை மனதிற்குள் கொண்டுவர வேண்டும். அப்பொழுது தியானம் ஒரு வரையறைக்குள் நிற்கும்; கிடைக்க வேண்டியது கிடைக்கும். -


Thursday 4 August 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆரத்தி ஆரம்பிக்கப் போகிறது என்பதற்கு அறிகுறியாக, பெரிய மணி 'டாங் ', 'டாங்' என்று முழங்கியது.

மத்திய நேரத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே இந்த ஆரத்தியை செய்தனர். பெண்கள் மசூதியின் தளத்தையும் ஆண்கள் சபா மண்டபத்தையும் அடைத்து நிறைத்துக் கொள்வர்.

பிறகு மங்களவாத்தியங்களும் முரசும் முழங்க, மிகுந்த மகிழ்ச்சியுடன் உச்சஸ்தாயியில் (உரத்த குரலில்) ஆரதிப் பாட்டை பாடுவர்.

நாங்கள் சபாமண்டபத்தை நெருங்கியபோது , ஆரதிப் பாட்டு உரக்க முழங்கி கொண்டிருந்தது. படிகளில் எல்லாம் அங்கு வந்து குழுமியிருந்த  ஆண்கள் நின்று கொண்டிருந்தனர். மசூதியின் உள்ளே செல்வதற்கு வழியே இல்லை.

ஆரத்தி முடியும் வரை சபாமண்டபத்திலேயே இருந்துவிட்டு, பிறகு மற்ற பக்தர்களுடன் சேர்ந்துகொண்டு பாபாவிடம் செல்லலாம் என்று நான் நினைத்தேன்.

இவ்வாறு நான் எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டிருந்தபோதே , படிகளில் ஏறிவிட்ட மாதவராவ், என் கையைப் பிடித்து மேலே இழுத்து நேராக பாபாவிடம் அழைத்து சென்றார்.

பாபா சாவகாசமாக சில்லிம் (புகை பிடிக்கும் மண் குழாய்) பிடித்துக்கொண்டு, தம்முடைய வழக்கமான ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கெதிரே ஜோக் நின்று கொண்டு  இடக்கையால் மணியாட்டிக் கொண்டே பஞ்சாரத்தி எடுத்துக் கொண்டிருந்தார்.

ஆரத்தி எழுப்பிய குதூகலத்தின் நடுவே, மாதவராவ் பாபாவுக்கு எதிரில் வலப்பக்கம் உட்கார்ந்துகொண்டு, என்னையும் பாபாவை நோக்கியவாறு உட்காரவைத்தார்.

சாந்தமூர்த்தியும் மஹான்களில் இரத்தினமுமாகிய பாபா இனிமையான குரலில் அப்போது கேட்டார். "சாம்ராவ் (மாதவராவ்) எனக்காகக் கொடுத்த தக்ஷிணையை இங்கே கொண்டு வாரும்."

"பாபா, சாம்ராவே இங்கு இருக்கிறார்; அவர் தக்ஷிணைக்குப் பதிலாக நமஸ்காரங்கள் கொடுத்திருக்கிறார். நமஸ்காரங்கள்தான் பதினைந்து ரூபாய் என்றும் அதையே பாபாவுக்குப் பிரீதியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்." (தபோல்கரின் பதில்)

"சரி, சரி, நீங்கள் இருவரும் பேசிக்கொண்டீர்களா? சம்பாஷணை செய்தீர்களா? நீங்கள் என்ன பேசிக்கொண்டீர்கள் என்பதை எனக்கு இப்பொழுது விரிவாக சொல்லுங்கள்.-

"நமஸ்காரங்களை பற்றிய கதை ஒருபுறமிருக்கட்டும். நீர் அவரிடம் பேசினீரா? எதை பற்றி பேசினீர்? எப்படி பேசினீர்? எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுங்கள்". (பாபா)

எனக்கு கதையை சொல்லவேண்டுமென்ற ஆர்வம். ஆனால், ஆரத்தியோ உரக்க முழங்கி கொண்டிருந்தது. இருப்பினும் என்னுள் பொங்கி கொண்டிருந்த மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. தங்குகடையின்றி  என் உதடுகளின் வழியாக கதை பிரவாகமாகப் பாய்ந்தது. 


Thursday 28 July 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"தாய் ஆமை ஆற்றின் ஒரு கரையில் இருக்கிறது. குட்டிகளோ மறுகரையில் மணற்பரப்பில் இருக்கின்றன; அவை பார்வையாலேயே போஷிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. ஆகவே நான் கேட்கிறேன், மந்திரத்துக்காக வியர்த்தமாக எதற்குப் பிடிவாதம் பிடிக்கவேண்டும்?-

"நீங்கள் இப்பொழுது போய் ஏதாவது ஆகாரம் சாப்பிடுங்கள். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி கொள்ளாதீர்கள். என்னிடம் உறுதியான விசுவாசம் வைத்தால் ஆன்மீக முன்னேற்றம் தானே கைக்கு எட்டும்.-

"நீங்கள் என்னிடம் அனன்னியமான (வேறொன்றிலும் நாட்டமில்லாத) அன்பு செலுத்துங்கள். நானும் உங்களை அவ்வாறே பாதுகாக்கிறேன். என் குரு எனக்கு வேறெதையும் கற்றுத்தரவில்லை.-

"யோக சாதனைகள் ஏதும் தேவையில்லை; ஆறு சாஸ்திரங்களை அறியவேண்டிய அவசியமும் இல்லை. காப்பவரும் அழிப்பவரும் குருவே என்னும் ஒரே உறுதியான நம்பிக்கையும் விசுவாசமும் இருந்தால் போதும்.-

"இதுவே குருவின் மகத்தான பெருமை. அவரே பிரம்மாவும் விஷ்ணுவும் மஹேச்வரனும் ஆவார். குருவின் முக்கியமான ஸ்தானத்தை உணர்ந்து கொண்டவன் மூவுலகங்களிலும் தண்ணியவன் ஆவான். (பேரு பெற்றவன் ஆவான்.)

இவ்வாறாக, அம் மூதாட்டி போதனை அளிக்கப்பட்டார்; அறிவுறுத்தப்பட்டார்; இக்கதை அவருடைய மனதில் ஆழமாகப் பதிக்கப்பட்டது. தம்முடைய தலையை சாயி பாதங்களில் தாழ்த்தி விட்டு, மூதாட்டி உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார்.

இக்கதையை ஆரம்பித்தில் இருந்து கேட்டு, என்னுடைய அன்றைய நிலைமைக்கு அது எவ்வளவு பொருத்தமாக இருந்தது என்பதையும் தெளிவாக அறிந்துகொண்ட பின், என்னுடைய மனம் ஆச்சரியத்தாலும் மகிழ்ச்சியாலும் பொங்கி வழிந்தது. ஓ, எவ்வளவு பொருத்தமான கதை!

பாபாவினுடைய லீலையைக் கண்டு ஆனந்தத்தால் என் தொண்டை அடைத்தது. அபரிமிதமான உணர்ச்சிப் பெருக்கால் நான் திணறிப் போனேன். உன்னதமான இப் படிப்பினை என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

நான் உணர்ச்சிவசப்பட்டு திக்குமுக்காடிப் போனதை கண்ட மாதவராவ் என்னிடம் கேட்டார். "அண்ணா சாஹேப்! ஏன் இவ்வாறு உணர்ச்சிவசப்படுகிறீர்?  ஏன் திடீரென்று மௌனமாகிவிட்டீர்?-

"இம்மாதிரியான பாபாவின் லீலைக் கதைகள் எண்ணற்றவை. நான் எதனை கதைகளைத்தான் சொல்லமுடியும்?" மாதவராவ் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே மணியோசை கேட்டது.

தினந்தோறும் மதிய உணவிற்கு முன்பு, பக்தர்கள் மசூதிக்குச் சென்று அமர்வர். பாபாவினுடைய கைகளையும் பாதங்களையும் அலம்பி, சந்தானம் இட்டு, அக்ஷதையை தூவி, சடங்கு பூர்வமானதும் விஸ்தாரமானதுமான பூஜையை செய்வர்.

பிறகு பாபு சாஹேப் ஜோக் பக்தியுடனும் பிரேமையுடனும் பஞ்சாரதி (ஐந்து தீபங்கள் கொண்ட ஆரத்தி) எடுப்பார். பக்தர்கள் எல்லாரும் சேர்ந்து ஆரதிப் பாட்டைப் பாடுவர்.


Thursday 21 July 2016

ஷீர்டி சாயி சத் சரிதம்

"வெறும் கல் , மணி இவை  இரண்டுமே மெருகேற்றுவதற்காக தேய்க்கப் படலாம். எவ்வளவு தேய்ந்தாலும், கல் கல்லாகத்தான் இருக்கும். மணியோ ஒளிவிடும்.-

"இரண்டுமே மெருகேற்றுவதற்காக ஒரே செய்முறையில் தேய்க்கப்படலாம். ஆயினும், வெறும் கல், மணி போன்று ஒளிவிட முடியுமா என்ன?

"ஆகவே நான் பன்னிரண்டு வருடங்கள் குருபாதங்களில் இருந்தேன். நான் வளரும் வரை அவர் என்னை ஒரு குழந்தைபோல் பாவித்தார். உணவுக்கும் உடைக்கும் எவ்விதமான பற்றாற்குறையும் இல்லை. அவருடைய இதயம் என்மீது அன்பால் பொங்கி வழிந்தது. -

"அவர் பக்தியும் பிரேமையுமே உருவானவர். சிஷ்யனிடம் நிஜமான அன்பு கொண்டவர். என் குருவைப்போல குரு கிடைப்பதரிது. அவருடைய சங்கத்தில் நான் அனுபவித்த சந்தோஷத்தை விவரிக்க முடியாது. -

"ஓ, அந்த அன்பை என்னால் எவ்வாறு விவரிக்க முடியும்! அவருடைய முகத்தைப் பார்த்தவுடனே என்னுடைய கண்கள் தியானத்தில் மூழ்கி விடும். இருவருமே ஆனந்த மயமாகி விடுவோம். வேறெதையும் எனக்குப் பார்க்காத தோன்றாது. -

"இரவுபகலாக அவருடைய முகத்தை உற்றுநோக்கவே விரும்பினேன். எனக்குப் பசியோ தாகமோ தெரியவில்லை. அவர் இல்லாவிட்டால், மனம் அவஸ்தைப்பட்டது.-

"அவரைத் தவிர வேறெதென் மேலும் என்னால் தியானம் செய்யமுடியவில்லை. அவரைத் தவிர எனக்கு லட்சியம் ஏதும் இல்லை. அவரே நான் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டிய குறிக்கோள். குருவினுடைய திறமை அதியற்புதமானது.-

"என் குருவும் இதையே எதிர்பார்த்தார். இதற்குமேல் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் என்னை எப்பொழுதும் அலட்சியம் செய்ததில்லை; கவனிக்காமல் விட்டதுமில்லை; சங்கடங்களில் இருந்து என்னை எப்பொழுதும் ரக்ஷித்தார்.-

"சில சமயங்களில் நான் அவருடைய காலடிகளில் இருக்க அனுமதிக்கப்பட்டேன். சில சமயங்களில் கடல் கடந்து இருந்தேன்". ஆயினும் எப்பொழுதும் அவருடைய சங்கம கூடுகை சுகத்தை அனுபவித்தேன். அவர் என்னைக் கிருபையுடன் கவனித்துக் கொண்டார்.-

"தாய் ஆமை தன் குட்டிகளுக்கு எப்படி அன்பான பார்வையாலேயே உணவூட்டுகிறேன். அவ்வழிதான் என் குருவினுடையதும், அன்பான பார்வையாலேயே தம் குழந்தைகளை பாதுகாத்தார்.-

"தாயே, இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் சொல்வதை பிரமாணமாக எடுத்துக் கொள்ளுங்கள். குரு என்னுடைய காதுகளில் மந்திரம் ஏதும் ஓதவில்லை. அப்படியிருக்க, நான் எப்படி உங்களுடைய காதுகளில் எதையும் ஓதமுடியும்?-

"தாய் ஆமையின் அன்பான கடைக்கண் பார்வையே குட்டி ஆமைகளுக்கு திருப்தியும் சந்தோஷமும் கொடுக்கும். அம்மா! ஏன் உங்களை நீங்களே வருத்திக் கொள்கிறீர்கள்? எனக்கு வாஸ்தவமாகவே வேறெந்த உபதேசமும் செய்யத் தெறியாது.- 

Thursday 14 July 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

"என் குரு ஒரு புகழ் பெற்ற அவ்லியா (முஸ்லீம் ரிஷி), கருணைக் கடல். நான் அவருக்கு சேவை செய்து செய்து, களைத்து போனேன். அப்பொழுதும் அவர் எனது காதில் மந்திரம் ஓதினாரில்லை.-

"அவருடைய தஞ்சத்தை விட்டுவிடாமல் எப்பாடுபட்டாவது அவருடைய திருவாய் மொழியாக ஒரு மந்திரத்தை பெற்றுவிட வேண்டுமென்ற பேராவல் எனக்கும் இருந்தது.-

"ஆரம்பித்தில் அவர் என்னை இரண்டு பைசா மாத்திரம் கொடுக்ககச் சொல்லி ஏய்த்து விட்டார். உடனே நான் இரண்டு பைசாக்களைக் கொடுத்து மந்திரம் வேண்டிக் கெஞ்சினேன்; பிரார்த்தனை செய்தேன்-

"என் குருவோ பூர்ணகாமர் (எல்லா விருப்பங்களும் நிறை வேறியவர்). அவர் எதற்காக இந்த இரண்டு பைசா கேட்டார்? சிஷ்யனிடம் காசு கேட்பவரை நான் எவ்வாறு ஆசையற்றவர் என்று சொல்ல முடியும்?

"ஆனால், இம்மாதிரியான சந்தேகங்கள் ஏதும் உம்முடைய மனத்தை துளைக்க வேண்டா. உலகியல் ரீதியில் அவர் பணத்தை விரும்பவில்லை. பொன்னும் பணமும் அவருக்கு எதற்கு?

"விசுவாசமும் பொறுமையுமே அவ்விரண்டு பைசாக்கள்; வேறெதுவும் இல்லை! நான் உடனே அவையிரண்டையும் கொடுத்தவுடன், என் குருவான தாய் என்னிடம் சந்தோஷம் அடைந்தார். -

"தாயே, பொறுமையும் சகிப்புத்தன்மையுமே தைரியம். அதைத் தொலைத்துவிடாதீர்கள். எப்பொழுது பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அது உங்களை கரைசேர்க்கும். -

"இந்த சகிப்புத்தன்மைதான், ஒரு மனிதனிடம் இருக்கும் ஆண்மை. இதுவே பாவங்களையும் துன்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெல்கிறது. இதுவே விபரீத சம்வங்களையும் சாமர்த்தியாமாக தடுக்கிறது; எல்லா பயங்களையும் விரட்டி விடுகிறது.-

"பொறுமையும் சகிப்புத்தன்மையுமே வெல்லும்; விபத்துக்களை பல திசைகளிலும் பயந்து ஓடிப்போகச் செய்யும். முன்யோசனை இல்லா விவேகமின்மை என்னும் முள் குத்தாது.-

"சகிப்புத்தன்மை நற்குணங்களின் சுரங்கம்; நல்லெண்ணங்களின் ராணி. உறுதியான நம்பிக்கை இந்த ராணியின் சகோதரி. இவை இரண்டும் உயிருக்குயிரான சகோதரிகள்.-

"சகிப்புத்தன்மை இல்லாத மனிதனின் நிலைமை பரிதாபகரமானது. பண்டிதராக இருந்தாலும் சரி, நற்குணம் படைத்தவராக இருந்தாலும் சரி, சகிப்புத்தன்மை இல்லாவிடில் வாழ்க்கை வீணாகிவிடும்.-

"குரு மஹா பலம் படைத்தவராக இருக்கலாம். ஆயினும், ஆழமாக பாயும் நுண்ணறிவையும் தம்மிடம் அசையாத நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையின் துணிவான பலத்தையும் தம் சிஷ்யனிடமிருந்து எதிர்பார்க்கிறார். 


Thursday 7 July 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

கதை கேட்பவர்களுக்கு இப்பொழுது இது சம்பந்தமாக, சென்ற அத்தியாயத்தில் முற்றுப்பெறாத காதையை சொல்கிறேன்; கேளுங்கள்.

ஆண்டுகளால் முதிர்ந்து, உடல் பலவீனமுற்ற மூதாட்டி ஒருவர், சாயியின் இடமிருந்து மந்திர உபதேசம் பெறுவதற்காக உண்ணாவிரதம் இருப்பதென்னும் தீர்மானத்தை பிடிவாதமாக மேற்கொண்டார்.

அவருடைய தேகநிலையை பார்த்து பயந்துபோன மாதவராவ், மத்தியஸ்தம் (சமரசம்) செய்து வைப்பதற்காக பாபாவிடம் சென்றார். இதுதான் ஏற்கனவே சொல்லப்பட்ட காதையின் இணைப்பு.

சாயி சத்சரித்திரம் என்னும் விளக்கு இங்கே தூண்டப்பட்டு விட்டது. சாயியினுடைய எண்ணங்கள் இங்கு வெளிப்பட்டு, இவ்வொளியினால் விசுவாசமுள்ள அநேக பக்தர்கள் தங்களுடைய பாதையைத் தெரிந்துகொள்வர்.

பாபாவினுடைய ஆணையின்படி மாதவராவ் எனக்கு ஒரு சுவாரசியமான கதை சொன்னார். அதை இப்பொழுது மேற்கொண்டு சொல்கிறேன்.

அவர் சொன்னார், "அம்மூதாட்டியின் வைராக்கியத்தை கண்ட பாபா, மூதாட்டிக்கு அருள்செய்து, அவருடைய சிந்தனையில் ஒரு நல்மாற்றத்தை ஏற்படுத்தினார். கதையில் இங்குச் சுவையான திருப்பம் ஏற்பட்டது!"-

"பிறகு, பாபா அவரை அழைத்துவரச் செய்து பிரேமையுடன் சொன்னார், "தாயே! எதற்காக நீர் அடம் செய்துகொண்டு பட்டினி கிடக்கிறீர்? ஏன் உபவாசம் இருந்து உயிரை விடவேண்டும் என்று நினைக்கிறீர்?"

வயது முதிர்ந்த பெண்மணி யாராக இருந்தாலும் சரி, பாபா அவரைத்  'தாயே' என்றுதான் அழைத்தார். வயது முதிர்ந்த ஆண்களை, காகாவென்றும் பாபூவென்றும் பாயியென்றும் அழைத்தார். அவர் கூப்பிடும் அழகு அவ்வாறு!

அந்தரங்கத்தில் பிரேமை இருந்ததால், அவருடைய வார்த்தைகளும் இனிமையாயாக இருந்தன. துன்பப்படுபவர்களுக்கும் இன்னல்படுபவர்களுக்கும் கருணை காட்டும் தீனதயாளர் அல்லரோ சாயிநாதர்!

ஆகவே, அவர் அம் மூதாட்டியை அழைத்து, தம்மெதிரில் உட்காரவைத்துக் கொண்டு, நிஜமான குருத்துவத்தின் இரகசியத்தை ஆருக்குப் பிரேமையுடன் எடுத்துச் சொன்னார்.

ஞானமே ஆகிய பாபா, தம் பக்தர்களாகிய சகோதர பட்சிகளின் தாகம் தீர்க்கும் வகையில் பொழிந்த மழையில் இருந்து சுயானந்தம் அளிக்கும் நீரை இப்பொழுது நன்றாக பருகுங்கள். பக்தர்களுடைய உலகவாழ்வின் துக்கங்களும் இன்னல்களும் சாந்தமடையும்.

அவர் கூறினார், "தாயே விவரமாக சொல்லுங்கள்! எதற்காக இவ்வளவு துன்பத்தை உங்களின்மேல் சுமத்திக் கொள்கிறீர்கள்? நானோ, கவளங்கவளமாக பிச்சை தேடியலையும் ஒரு பக்கீர். என்னிடத்தில் அன்புகாட்டுங்கள்!

"வாஸ்தவத்தில் நான் உம் மகன்; நீர் என் தாயார். இப்பொழுது நான் சொல்வதைக் கேளுங்கள். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய கதையொன்று சொல்கிறேன்.-

Thursday 30 June 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

இப் பிரபஞ்சம் என்னும் மாயை இதுவே . இதை மாயையென்றும் இறைவனின் விளையாட்டென்றும் முடிவில்லா பிரஞை(உணர்வு) என்றும் விவரிக்கலாம். இவ்வுலக வாழ்வே கனவில் தோன்றும் ஒரு காட்சி. இக் கனவுக்காகவா இதனை வீண் பிரயத்தனங்கள்?

விழிப்பேற்பட்டவுடன் கனவு கலைந்து விடுகிறது. ஆகவே, தன்னுடைய நிஜஸ்வரூபத்தை அறிந்துகொண்டவன் உலக விவகாரங்களை பற்றிச் சிந்தனை செய்வதில்லை.

ஆத்மாவின் விஞ்ஞானத்தை அனுபவத்தால் அறியாதவரையில், ஆத்மாவின் உண்மையான சொரூபத்தை அறியாதவரையில், சோகமும் மோகமுமாகிய பந்தங்களை அறுத்தெறிய வேண்டும் என்னும் விழிப்புணர்வைப் பெறுவதற்கு வழி ஏதுமில்லை.

ஞானத்தினுடைய பெருமையை பாபா இரவுபகலாக விளக்கம் செய்தாரெனினும், பொதுவாக அவர் பக்திமார்க்கத்தை அனுசரிக்கும்படியாகவே அடியவர்களுக்கு உபதேசித்தார்.

ஞானமார்கத்தினுடைய மஹிமையை விளக்குவதற்கு பாபா அதை ராமர் பழத்திற்கு சாப்பிடுவார். சுலபமாக கிடைக்கும் இனிய ரசமுள்ள சீதாப்பழத்திற்கு பக்தி மார்க்கத்திற்கு ஒப்பிடுவார்.

பக்திமார்க்கம், ஜொலிக்கும் சீத்தாப்பழம்; ஞானமார்க்கம், நன்கு பழுத்த ராமர்பழம். முன்னதை விட பின்னது ரசம் நிறைந்தது; மதுரமான வாசனையுடையது.

முற்றிய காயாகப் பறித்துச் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும்போது, ராமர் பழத்தின் கதுப்பு, சுவைத்துச் சாப்பிட முடியாதவாறு பலமாக நெடியடிக்கிறது. மரத்திலேயே பழுக்கட்டும் என்று விட்டு விடும் மனிதனால்தான் அதனுடைய உண்மையான சுவையை அனுபவிக்கமுடியும்.

ராமர் பழம் மரத்திலேயே நன்கு பழுத்திவிட்டால், காம்புவரை தித்திக்கிறது. பூமியில் விழுந்துவிட்ட பழத்திற்கு நெடி அதிகம். மரத்திலேயே பழுத்த பலத்திற்கு சுவை அதிகம்.

மரத்திலேயே முழுமையாக பழுக்கவிடுபவன்தான் அதனுடைய சுவையை அனுபவிக்கமுடியும். ஆனால், சீதாப்பழத்திற்கு இம் முயற்சியெல்லாம் தேவையே இல்லை. ராமர்ப்பழத்திற்கு இணையான உன்னதங்கள் இல்லை எனினும், சீத்தாப்பழம் மிக்க மதிப்புள்ளது.

ராமர் பழம் கீழே விழுந்துவிடக்கூடிய அபாயம் உண்டு. ஞானிக்கும் தம்முடைய சித்திகளின் மேல் பூரணமான ஆளுமை இல்லையென்றால், வீழ்ச்சியடையும் அபாயம் உண்டு. அலட்சியத்திற்கு இங்கு இடமேயில்லை.

ஆகவே, தயை மிகுந்த சாயீ, தம் பக்தர்களுக்கு பக்தி மார்க்கத்தின் பெருமையையும் நாமஸ்மரணத்தின் மகிமையையும் விவரணம் செய்தார்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஞானத்தை விட தியானமே சிறந்தது என்று அர்ஜுனனுக்கு போதித்தார். சாயியும் தம் பக்தர்களுக்கு உலக பந்தங்களில் இருந்து விடுபடும் சாதனையாக அதை நியமித்தார். 

  




Thursday 23 June 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

இதையெல்லாம் விட சூக்குமமானது புருஷன் (இறைவன்); புலன் அங்கங்கள் ஓய்வு பெரும் இடம். அதுவே எல்லாரும் கடைமுடிவாகச் சென்றடைய வேண்டிய இடம்; தூய பிரம்மம்.

இந்த ஆத்மா, தன்னைப் பொறுத்தவரை ஸ்படிகம் போன்று மாசுமறுவற்றதாயினும், இவ்வுலக வாழ்க்கையில் மாயையாலும் கர்ம வினையாலும் பந்தப்பட்டது பொல்லாத தோன்றுகிறது.

சிவப்போ கறுப்போ மஞ்சளோ, தன்முன் இருக்கும் வண்ணம் எதுவாக இருந்தாலும் ஒரு ஸ்படிகம் அதை பிரதிபலித்துவிடும். ஆனால், ஸ்படிகம் தூய்மையானது; மாறுதலில்லாதது; பிரதிபலிக்கும் வண்ணங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் ஏதுமில்லை;

தொலைதூரத்தில் இருக்கும் கானல் நீர் தண்ணீரைப் பொல்லாத தெரிகிறது; சிப்பி பளபளவென்று வெள்ளியைப் பொல்லாத தெரிகிறது. சுற்றிவைக்கப் பட்ட கயிறு சுருட்டிக்கொண்டு படுத்திருக்கும் பாம்பை போன்று தேவையில்லாதது தெரிகிறது.

கயிற்றைப் பார்த்து பாம்பென்று மிரளுவது எப்படி அடிப்படையே இல்லாத ஒரு தோற்றமோ, அதுபோன்றே, விடுதலையடைந்த ஆத்மாவுக்கு "நான்தான் உடல் என்னும் அஹங்காரம் ஒரு மாயா பந்தத்தை உற்பத்தி செய்கிறது.

உடல், புலனுறுப்புகள், மனம், பிராணன் இவற்றிலிருந்து வேறுபட்ட லக்ஷணங்களை உடையது ஆத்மா. அது சுயஞ்சோதியான சுத்த தத்துவ ஞானம், உருவமில்லாதது, மாறுபடாதது.

தேகம், புத்தி, மனம், பிராணன் இவற்றைப் பற்றிய அபிமானம் இருக்கும்வரை, செயல்பாடுகளும் இன்பத்துன்ப அனுபவங்களும் இருந்துதான் தீரும். ஏனெனில், இவற்றின் பிரஞை (உணர்வு) இருந்துதான் தீரும்.

ஆலம் விதை மிகச் சிறியதாக இருப்பினும், தன்னுடைய கர்ப்பத்தினுள் ஒரு பெரிய ஆலமரத்தின் சக்தியையும் வலிமையையும் வைத்திருக்கிறது. ஆலமரங்களும் கோடிக்கணக்கான  மரங்களை உற்பத்தி செய்யக்கூடிய கணக்கற்ற விதைகளை உற்பத்தி செய்கின்றன.

இவ்வாறாக, ஒவ்வொரு விதையும் ஒரு மரத்தைத் தன்னுள் வைத்திருக்கிறது. பிரளய காலம் (ஊழிக்காலம்) வரை, இவ்வதிசயச் சம்பவம் தொடரும்! இதுவே இவ்வுலகின் விஷயத்திலும் பிரத்யக்ஷம் (கண்கூடு) கவனத்துடன் நோக்குங்கள்.

என்றும் நிலைத்து நிற்றல், பயமின்மை, விடுதலை பெறுதல், சுதந்திரம், பரமாத்மாவை அடைதல் - இவைதான் ஒரு ஜீவன் செய்யவேண்டியதும் அடையவேண்டியதும் ஆகும்.

ஞானமின்றி மோக்ஷமில்லை. பற்றறுக்காமல் ஞானம் கிடைக்காது. இவ்வுலக வாழ்வு ஒரு நீர்க்குமிழி என்பது மனத்திற்குப் புரியாதவரையில், துறவு பற்றிய எண்ணமே எழாது.

இவ்வுலக வாழ்வு அநித்யமானது (நிலையில்லாதது ) என்ற தெளிவு பிறக்கும்போது, சுற்றியிருக்கும் மாயா உலகம் மனிதனை எதிர்க்கிறது. யாத்திரீகன் எவ்வழி செல்வது என்றறியாது தடுமாறுகிறான். 

Thursday 16 June 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயி நாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பிரம்மாவில் இருந்து புல் பூண்டு வரை, சிருஷ்டி அனைத்திலும் சாயி சூக்குமத்தை விட சூக்குமமானவர்; மிகப் பெரியதைவிடப் பெரியவர்.

அம்மாதிரியான பர பிரம்மத்திற்கு, ஓர் உருவமும் வடிவமும் வண்ணமும் அளித்து ஊனக் கண்களாலும் பார்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. (மனிதனின் மனதில்).

சூரியவழிபாடு செய்பவர்கள் ஹாரதி காட்டுவதற்காக விளக்குகளில் இருக்கும் திரிகளை பக்தியுடன் தூண்டிவிடுகிறார்கள். பிள்ளையார் பக்தர்கள் வெல்லத்தில் அவருடைய உருவத்தை செய்து, வெல்லத்தையெ நைவேத்தியம் ஆகவும் படைக்கிறார்கள்!

சிலர் தங்களுடைய கைகளில் சமுத்திர நீரை ஏந்தி, சமுத்திரத்திற்கே அர்கியமக அர்ப்பணம் செய்கிறார்கள். மேல் எழுந்த வாரியாக பார்த்தால், இதெல்லாம் அனுசிதம் (மேன்மையல்ல) என்றே தோன்றுகிறது.

ஆயினும், மகாபிரபாவம் வாய்ந்த சூரியனும் சமுத்திரமும் பக்தர்களுடைய நம்பிக்கையை மட்டுமே எடுத்துக் கொள்கின்றன. பக்தியை கௌரவிக்க வேண்டுமென்பதே நோக்கமாக இருக்கும்போது, உசிதம் (மேன்மை) எது, அனுசிதம் எது?

சிந்தனையிலும் ஆர்வங்களிலும் ஒத்துப்போகும் மனிதர்கள் நட்பை நாடுவார்கள் என்பது பொதுவான விதி. ஆனால், உடலுக்கும் ஆத்மாவுக்கும் ஏற்படும் சங்கமம், இந்த விதிக்கு ஒரு பெரிய, தவிர்க்க முடியாத விலக்கு.

சுபாவத்தில் பரஸ்பரம் வேறுபட்டாலும், இவை இரண்டின் சேர்கை, ஒன்றில்லை என்றால் மற்றதுமில்லை என்னும் அளவுக்கு அசாதரமானது. இவை இரண்டும் ஒருகணங்கூட பிரிந்திருக்க முடியாது.

இவ்வுடல் அழியக் கூடியது; ஆத்மாவோ மாறுபாடற்றது; அழிவல்லாதது. இரண்டிற்குமுள்ள பரஸ்பரப் பிரேமை அபாரமானது. இதனால்தான் சம்சாரச் சக்கரம் மேலும் மேலும் சுழல்கிறது!

ஆத்மா மகத்தான சக்தியை உடையது. அதை விட சூக்குமமானது ஆகாயம். அதுவே தோன்றா நிலையில் உள்ள பிரகிருதி (இயற்கை). அதையே மாயையென்றும் கூறுவர். 


Thursday 9 June 2016

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"ஏற்கனெவே அம் மூதாட்டி உலர்ந்துபோன கட்டையைபோல் இருக்கிறார். பிடிவாதியாகவும் அட வாதியாகவும் முரடாகவும் இருக்கிறார். உபவாசம் தொடர்ந்ததால் உயிர் போய்விடும்போலத் தோன்றுகிறது. -

"அவ்வாறு நேர்ந்துவிட்டால், 'அந்த மூதாட்டி உபதேசம் பெறவேண்டுமென்ற தீவிர ஆவலுடன் பாபாவை தரிசனம் செய்யச் சென்றார்; ஆனால், சாயி கருணை காட்டாமல் அவரை இறந்துபோகும்படி விட்டுவிட்டார்" என்று மக்கள் பேசுவர். -

"பாபா! மக்கள் இவ்வாறாக அவதூறு பேசும்படி விட்டுவிடாதீர்கள். ஏன் அவருக்கு நீங்கள் பயனளிக்கும்படியான உபதேசம் அளிக்கமாட்டேன் என்கிறீர்? அவதூறு வாராதவாறு செய்துவிடுங்கள்.-

"அவருக்கு போராடத் திராணியில்லாமல் போய்விட்டது. துன்பப்பட்டே இறந்து போகப் போகிறார் அம்மூதாட்டி. உங்களுக்குக் கெட்ட பெயர் வரும். -

"அவருடைய தொல்லைப் பிடித்த உபவாசம் எங்களுக்கெல்லாம் கவலையைத் தருகிறது. துரதிருஷ்டவசமாக, அம்மூதாட்டி இறந்துபோனால் பெரிய அசம்பாவிதம் விளையும். -

"நீங்கள் கிருபை செய்யவில்லையெனில் உயிரை விட்டுவிட்டதாக அம மூதாட்டி அடம் பிடிக்கிறார். அவர் ஒன்றும் தேறுவார் என்று எனக்குத் தோன்றவில்லை ! நீங்களே அவருக்கு ஏதாவது சொல்லுங்கள்!"

இந்த அத்தியாயத்தின் எல்லைக்கு இங்கு வந்துவிட்டோம். கேட்பவர்களுக்கு  மேற்கொண்டு என்ன நிகழ்ந்தது என்று அறிந்துகொள்வதில் இருக்கும் ஆவல், பிரேமை பொங்கும் அடுத்த அத்தியாயத்தில் நிறைவரும். 

பாபா அம் மூதாட்டிக்கு அளித்த பிரேமை மிகுந்த உபதேசமும் பரிந்துரையும் பயபக்தியுடன் செவிமடுக்கப்பட்டால், அஞ்ஞானமனைத்தையும் போக்கிவிடும். 

ஹெமாத் சாயியின் பொற்கமல பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். சம்சார சாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெரும் வகையாக இக் காதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், 'எனக்கு அனுக்கிரஹம்' என்னும் பதினெட்டாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீ சத்குரு சாயினாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.  


Thursday 2 June 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

வயது முதிர்ந்த அவ்வம்மையார், உபதேச மந்திரம் பெறுவதில் இருந்த சிரத்தையால் எள்ளளவும் உணவு உட்கொள்ளாமலும் ஒரு மிடறு நீரும் அருந்தாமலும் இருந்தார்.

'பாபா மந்திர உபதேசம் தரும்வரை உணவோ நீரோ அருந்துவதில்லை' என்னும் விரதமேற்று மூன்று நாள்கள் இரவு பகலாக உபவாசம் இருந்தார்.

மந்திர உபதேசம் பெறாமல் ஷீரடிக்கு வருவதும் போவதுமாக இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஆகவே, தாம் தங்கியிருந்த இடத்திலேயே, 'என்ன ஆனாலும் சரி! என்னுடைய விரதத்தை கைவிட மாட்டேன்; முடித்தே தீருவேன்' என்ற உறுதியுடன் விரதமிருந்தார்.

மூன்று நாள்களுக்கு அன்னபானம் இல்லாமல் தவமிருந்து அவர் களைப்புற்றார்; மனமுடைந்து போனார்.

மாதவராவ் விசனமுற்றார். 'நடப்பது நல்லதற்கில்லை; மூதாட்டி மரணத்தைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்த அசம்பாவிதம் (நேரக் கூடாதது) நிகழாமல் தடுப்பதெப்படி?' என்று யோசித்தார்.

ஆகவே, அவர் மசூதிக்குச் சென்று பாபாவுக்கு எதிரில் அமர்ந்தார். வழக்கபோல் மக்களுடைய நல்வாழ்வு பற்றி பாபா ஆதங்கத்துடன் விசாரித்தார், -

"ஆக, சாமா, இன்று என்ன செய்தி? எல்லாம் நலமாக இருக்கின்றதோ? அந்த எண்ணெய் வியாபாரி நாராயணன் தடம் புரண்டு என்னை மிகவும் தொந்தரவு செய்கிறான்".

மூதாட்டியின் விரதத்தைப் பற்றி அறிந்திருந்த சாமா கவலையுற்றிருந்தார். ஆகவே அவர் உடனே பாபாவைக் கேட்டார், "இப்பொழுது என்னதான் செய்வது?-

"மேலும், உம்முடைய இந்த மர்மந்தான் என்னவோ, ஓ இறைவா! உம்முடைய லீலையை அறிந்தவர் யாருமில்லை. இந்த கிராமத்திற்கு ஒவ்வொரு மனிதராக வர செய்பவர் நீரன்றோ? என்னைப் போய் செய்தியென்ன என்று வினவுகிறீர்!-

"அந்த வயதான மூதாட்டி ராதாபாய் தேச்முக், மூன்று நாள்களாக அன்னபானம் இன்றி வாடுகிறார்; உம்முடைய அருள்வேண்டி உபவாசம் இருக்கிறார்.

"அந்த மூதாட்டி மகா அடம் பிடித்தவராக இருக்கிறார். ஆனால் உம்முடைய பாதங்களின் மீது இருக்கும் நிஷ்டையோ அசைக்க முடியாததாக இருக்கிறது. ஆனால் நீங்களோ, அவர் பக்கமே திரும்ப மாட்டேன் என்கிறீர்! ஏன் இவ்வாறு அவரைக் கஷ்டப்படுத்துகிறீர்?- 


Thursday 26 May 2016


ஷிர்டி சாயி சத்சரிதம் 


சாமாவிடம் என்னை அனுப்பி இந்த யோசனை,  மசூதியில் இருந்தபோது சஞ்சலம் அடைந்திருந்த என் மனத்தை அமைதிப்படுத்துவதற்காகவோ? பாபாவினுடைய வழிமுறைகள் விசித்திரமானவை!



அப்படி இருப்பினும், என் மனத்தே உதித்த இந்த எண்னத்தை நான் அமுக்கிவிட்டேன். ஏனெனில், கதையைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் அதிகாமாக இருந்தது. அதை சீக்கிரமாக தணித்துகொள்ள வேண்டுமென்று விரும்பினேன். 



பிறகு லீலைகள் பற்றிய கதைகள் ஆரம்பிக்கப்பட்டபோதே, பாபாவின் பக்தவத்சல அருள்  வெளிப் போந்து , என் மனம் ஆனந்தமடைந்தது. 



பிறகு, அவர் இன்னுமொரு கதை சொன்னார். தேச்முக் என்னும் குடும்பப் பெயர் கொண்ட பெண்மணி ஒருவர் இருந்ததாகச் சொன்னார். அப் பெண்மணி, திடீரென்று சாதுக்களின் சங்கத்தில் வாழ வேண்டும் என்று உணர்ந்தார். 



பாபாவினுடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டு அவரை தரிசனம் செய்ய வேண்டுமென்ற தீவிரமான ஆவலுடன், சங்கம்னெரிலிந்து வந்த மக்களுடன் ஷீரடிக்கு வந்தார். 



அப்பெண்மணி காசாபா தேச்முக் என்பவரின் தாயார்; ராதாபாய் என்று பெயர். சாயி பாதங்களின்மேல் நிஷ்டை (பக்தியும் விசுவாசமும்) கொண்டு பாபாவை தரிசனம் செய்தார். 



அவருக்கு அருமையான தரிசனம் கிடைத்ததால் பயணம் செய்த சோர்வெல்லாம் மறைந்து விட்டது; மனதில் சாயியின் மீது அன்பு மலர்ந்தது. 'எதற்காக இங்கு வந்தோம்' என்பதும் ஞாபகம் வந்தது!



அவருடைய மனத்தில் சமர்த்த சாயியை குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அவரிடம் உபதேசம் பெற்றுப் பரமார்த்த மார்க்கத்தில் முன்னேற்றமடைய வேண்டும் என்றும் தீவிரமான ஆவல் இருந்தது. 



அப்பெண்மணி மிக வயது முதிர்ந்தவர். பாபாவினிடம் அளவுகடந்த விசுவாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தார். பாபாவிடம் இருந்து உபதேசம் பெறவேண்டி, மனதுள்ளே ஓர் உறுதி செய்துகொண்டார். 



"பாபாவிடம் இருந்து பிரத்யேகமாக காதில் மந்திர உபதேசம் பெற்று அவருடைய அருளுக்குப் பாத்திரமாகாமல் ஷிரிடியில் இருந்து நகரமாட்டேன்.-



"அந்த மந்திரம் சாயியினுடைய திருவாய் மொழியாகத்தான் வரவேண்டும். வேறு எவரிடம் இருந்தாவது பெற்றால் அது பவித்திரமானது ஆகாது. புனிதர்களில் புனிதரும் ஞானிகளில் சிறந்தவருமான சாயி, அவருடைய அருளுக்கு என்னைப் பாத்திரமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்."



இவ்வாறு திடமாக மனத்தில் நிச்சயம் செய்துகொண்டு, அம் மூதாட்டி அன்னத்தையும் பானத்தையும் நீத்துத் தம்முடைய உறுதிமொழியை கெட்டியாகப் பிடித்துகொண்டு  அமர்ந்துவிட்டார்.