ஷீர்டி சாயி சத்சரிதம்
"உடனே விலேபார்லேவிற்கு சென்று, தீக்ஷிதரை உதீ வேண்டும் என்று கேளுங்கள். அவர் எப்பொழுதும் தம்மிடம் உதீ வைத்திருப்பவர்; மிகுந்த உற்சாகத்துடன் உதீ அளிப்பார்.-
"சாயியை மனத்தில் நினைத்து, அவர்மேல் முழுநம்பிக்கை வைத்து உதீயை நீருடன் கலந்து தினமும் குழந்தைக்கு கொடுத்தால் காக்காய் வலிப்பு மறைந்துவிடும். நீங்கள் எல்லாருமே சந்தோஷமடைவீர்கள்."
இதைக் கேட்ட பார்சி கனவான் (இரானியர்) தீக்ஷிதரிடமிருந்து உதீ பெற்றுக்கொண்டு வந்தார். தினமும் தம் பெண்குழந்தைக்கு நீருடன் கலந்து குடிக்கக் கொடுத்தார். குழந்தை ஆரோக்கியம் அடைந்தது.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் கலவரம் அடையும் குழந்தைக்கு உதீயால் உடனே நிவாரணம் கிடைத்தது. அடுத்தடுத்த வலிப்புகளின் இடைவெளி படிப்படியாக ஏழு மணிகளாக உயர்ந்தது.
இவ்வாறாக, மணிக்கொருதரம் ஏற்பட்ட வலிப்பு ஏழு மணி நேரத்திற்கு ஒருதரம் ஏற்பட்டது. காலக்கிரமத்தில் சுவடேயில்லாமல் வலிப்பு மறைந்துவிட்டது!
ஹர்த்தாவுக்கருகில் இருந்த கிராமமொன்றில் ஒரு முதிய இல்லறவாசி வாழ்ந்துவந்தார். 'சிறுநீரக கற்கள்' வியாதியால் பீடிக்கப்பட்டு வலியும் வேதனையும் அடைந்தார்.
இந்த வியாதிக்கு அறுவை மருத்துவத்தை தவிர வேறு வழி ஏதும் இல்லாததால், திறமை வாய்ந்த அறுவை மருத்துவ நிபுணர் யாரையாவது அணுகும்படி சிலர் அவருக்கு அறிவுரை கூறினர்.
நோயாளி மிகுந்த விசாரமுற்றார்; என்ன செய்வதென்று தெரியாது தவித்தார். மரணத்தின் வாயிலிலிருப்பவர் போல் மெலிந்து போனார். வேதனையளிக்கும் வலியைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.
அறுவை மருத்துவம் செய்துகொள்வதற்கு தைரியம் தேவை. முதியவருக்கு அந்த தைரியம் இல்லை. தெய்வாதீனமாக அவருடைய துரதிஷ்டம் ஒரு முடிவுக்கு வந்தது. அற்புதம் என்ன நடந்ததென்று கேளுங்கள்!
நோயாளியின் நிலைமை இவ்வாறு இருந்தபோது, அந்த கிராமத்தின் இனாம்தார் கிராமத்திற்கு வரப்போகிறார் என்ற செய்தி வந்தது. இனாம்தார் சாயி பாபாவின் சிறந்த பக்தர்.
அவர் எப்பொழுதும் தம்மிடம் பாபாவின் உதீயை வைத்திருந்தார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். உதியீயைப் பிரார்த்தித்து வாங்குவதற்கு நோயாளியின் உறவினர்களும் நண்பர்களும் இனாம்தாரிடம் வந்தனர்.
இனாம்தார் உதீ கொடுத்தார். மகன் அதை நீருடன் கலந்து தந்தைக்கு (நோயாளி முதியவருக்கு) குடிப்பதற்கு கொடுத்தான். குடித்து ஐந்து நிமிடங்கூட ஆகவில்லை; ஓர் அற்புதம் நிகழ்ந்தது!
உதீ பிரசாதம் உள்ளே சென்றவுடன், சிறுநீரகக் கல் இடத்திலிருந்து நகர்ந்து சிறுநீரோடு சேர்ந்து வெளியே வந்துவிட்டது.