ஷீர்டி சாயி சத்சரிதம்
"எவர்களுடைய கூட்டுறவில் சாயி விளையாடினாரோ சிரித்தாரோ பேசினாரோ அமர்ந்துகொண்டாரோ நடந்துசென்றாரோ சாப்பிட்டாரோ படுத்துக்கொண்டாரோ கோபம் கொண்டாரோ, அவர்கள் அனைவரும் சிரேஷ்டமான பாக்கியசாலிகள். -
"எங்களுடைய கைகளால் அவருக்கு ஒரு சேவையும் செய்தோம் இல்லை. ஆயினும், அவர் எங்களுக்கு பெரும் கருணை காட்டினார். அவருடைய சங்கத்திலேயே எப்பொழுதும் இருக்கும் உங்களுடைய பாக்கியத்தை நான் என் சொல்வேன்!. -
"ஷீர்டிவாழ் மக்கள் புண்ணியம் செய்து சம்பாதித்த நற்பலன்களையெல்லாம் ஒன்று சேர்த்து உருக்கி ஒரு மனித உருவத்தை வார்த்து எடுத்தீர்கள் போலும்!- பரம பாக்யசாலிகளாகிய நீங்கள் இவ்வுருவத்தை ஷிர்டிக்கு கொண்டுவந்து விட்டீர்கள்.-
"அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் நாங்கள் ஷிர்டிக்கு வந்திருக்கிறோம். ஸ்ரீ சாயியின் புனிதமான தரிசனத்திற்கான எங்களிடம் இருப்பதனைத்தையும் அவருக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டுமென்று நினைக்கிறோம்.-
"தர்மநெறி வாழும் சாயி ஓர் அவதாரம்; ஆயினும், அவர் ஒரு விஷ்ணு பக்தரைப் போல் வாழ்கிறார்; அவர் ஒரு ஞானவிருக்ஷம்; சோபையில் ஆகாயத்தில் ஒளிரும் சூரியன். -
"பெரும் புண்ணியம் செய்ததால் இந்த மஸூதி மாயீயைக் கண்டோம். எங்களுடைய நேர்த்திக்கடனையும் நிறைவேற்றி வைத்து தரிசனம் தந்தார். -
"இவர்தான் எங்களுடைய தத்தாத்திரேயர். இவர்தான் எங்களை நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ள வைத்தவர். இவர்தான் கப்பலில் இடம் வாங்கி கொடுத்தவர். இவரே எங்களை தரிசனத்திற்காக ஷிர்டிக்கு இழுத்தவர்.
"இவ்வழியாக, சாயீ, தாம் எங்கும் நிறைந்தவர் என்பதையும் எல்லார் மனதிலும் உறைபவர் என்பதையும் எங்கு நடப்பதையும் சாட்சியாக அறிபவர் என்பதையும் எங்களுக்கு உணர்த்தினார். -
"அவருடைய புன்னகை தவழும் முகத்தைப் பார்த்து நாங்கள் பரமானந்தம் அடைந்தோம். உலக வாழ்வின் பிடுங்கல்களையும் துக்கங்களையும் மறந்தோம்; பொங்கும் மகிழ்ச்சியை எங்களால் அடக்க முடியவில்லை.-
"கர்ம வினைகளின் விளைவாக வாழ்க்கையில் நடப்பது நடக்கட்டும். அதை எங்களுடைய மனம் உறுதியாக எதிர்கொள்ளட்டும். ஆனால், சாயி பாதங்களின் மீது அகண்ட பிரேமை என்றென்றும் நிலவட்டும். அவருடைய புனிதமான உருவம் எங்கள் கண்களின் எதிரில் எப்பொழுதும் இருக்கட்டும். -
"சாயியின் லீலை ஆழம் காணமுடியாதது; கற்பனைக்கு எட்டாதது; அவர் செய்யும் உபகாரத்திற்கு எல்லையே இல்லை!. தயாநிதியே! என்னுடைய தேகத்தை உங்களுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டுமென்பதை உணர்கிறேன். "
இப்பொழுது இன்னொரு கதையை சிறிது நேரம் கவனமாக கேளுங்கள். சாயியின் திருவாய் மொழி பிரம்ம தேவரால் எழுதப்படும் தலைவிதிபோல் பலித்தது.
சோலாப்பூர் நகரில் வாழ்ந்துவந்த சகாராம் ஒளவ்ரங்காபாத்கர் என்பவர் புத்திரசந்தானம் வேண்டுமென்று விரும்பினார். ஆகவே, அவர் மனைவி ஷிர்டிக்கு வந்தார்.