ஷீர்டி சாயி சத்சரிதம்
சுட்டுவிரலைத் தூக்கி, "இங்கே ஒரு கதவைப் பொருத்து; அங்கே ஒரு ஜன்னல் வை. இங்கே கிழக்குப் பக்கமாக ஒரு நீளமான கூடத்தைக் கட்டு. அது கட்டடத்தின் அழகை மேம்படுத்தும்" என்று யோசனைகள் கூறினார்.
பின்னர், காரிய காரண நிமித்தமாக, பாபுசாஹெப் ஜோக் கின் கைகளால் செய்யப்படவேண்டிய நிர்மாண வேலை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேலை இவ்வாறு நடந்துகொண்டிருந்தபோது புட்டியின் சித்தத்தில் ஓர் எண்ணம் ஸ்புரித்தது (உதித்தது). "இக் கட்டடத்தில் ஒரு கர்ப்பகிருஹம் (கருவறை) சேர்க்கப்பட்டால், முரளீதரனின் சிலை ஒன்றை அங்கு ஸ்தாபனம் செய்யலாம்."
எண்ணம் உதித்ததே தவிர, பாபாவின் விருப்பம் என்னவென்று தெரிந்துகொள்ளாமலும் அவருடைய தெளிவான ஆணையைப் பெறாமலும் புட்டி எந்த வேலையையும் ஆரம்பிக்கமாட்டார்.
இதுவே அவருடைய நித்திய நியமமாக இருந்தது. பாபாவின் அனுமதியே முக்கியம். அது இல்லாமல் எக் காரியத்திலும் புட்டி இறங்கமாட்டார்.
"கூடத்தின் மத்தியில் தடுப்புச்சுவர் எதற்கு? அதனால் என்ன பிரயோஜனம்? இருபுறங்களிலும் சுவர்களை எடுத்துவிட்டு முரளீதரனை அங்கு ஸ்தாபனம் செய்துவிடலாம்." (புட்டியின் சிந்தனை)
தடுப்பு உள்ள கூடத்திற்குப் பதிலாக ஒரு தேவாலயத்தை அமைத்துவிடலாம் என்பதே புட்டியின் விருப்பம். ஆயினும், பாபாவின் விருப்பம் என்னவென்று தெரிந்துகொண்டு அவர் அனுமதியளித்தால் சந்தேகமில்லாமல் அவ்வாறே கட்டவேண்டும்!
ஆகவே அவர் மாதவராவிடம் சொன்னார், "பாபாவை இதுபற்றிக் கேட்போம். பிறகு, தேவனின் (பாபாவின்) விருப்பம் எப்படியோ அப்படியே மேற்கொண்டு திட்டம் போடுவோம்."
பாபா தம்முடைய தினசரி உலாவில் வாடாவுக்கு வந்து கதவருகில் நின்றபோது, சாமா அவரை என்ன வினவினார் என்பதைக் கேளுங்கள்.
"தேவா! கூடத்தின் தடுப்புச் சுவர்கள் இரண்டையும் இடித்துவிட்டு குழலூதும் கண்ணனை அங்கு ஸ்தாபனம் செய்யவேண்டுமென்று பாபுசாஹெப் சொல்கிறார்.-
"மத்தியபாகத்தில் ஒரு மண்டபம் வரும்படியாக அமைத்து, அதில் ஒரு சிம்மாசனம் கட்டி, அதன்மேல் முரளீதரனை ஸ்தாபனம் செய்யலாம். பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். -
"இவ்வாறு பாபுசாஹெப் யோசிக்கிறார். ஆயினும் தங்களுடைய அனுமதி தேவை. இந்த ரீதியில், கோயிலும் வாடாவும் இரண்டுமே கிடுகிடுவென்று முடிந்துவிடும்."
சாமாவின் இவ்வார்தைகளைக் கேட்ட பாபா ஆனந்தம் நிரம்பியவராக சொன்னார், "கோயில் வேலை பூரணமாக முடிந்தவுடன் நாமும் அங்கு வந்து வசிப்போம்".
வாடாவின் சுவர்களையே பார்த்துக்கொண்டு பாபா மதுரமான வார்த்தைகளைப் பேசுவார், 'வாடாவின் வேலை பூராவும் முடிந்தபிறகு அதை நாமே உபயோகிப்போம்.-