ஷீர்டி சாயி சத்சரிதம்
"கற்பத்திலிருக்கும் சிசுவைப் பனிக்குடமும், முகம் பார்க்கும் கண்ணாடியைத் தூசியும், நெருப்பைச் சாம்பலும் மூடியிருக்கின்றன அல்லவோ? அதுபோலவே ஞானத்தை அஞ்ஞானம் மூடியிருக்கிறது.-
"பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கீதையிலேயே வேறிடங்களில் ஞானத்தை அஞ்ஞானம் மூடியிருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார். ஆகவே, அஞ்ஞானத்தை எடுத்துவிட்டால், ஞானம் இயல்பாகவே பிரகாசிக்கும்.-
"ஞானம் சுயமாகவே நிறைவுபெற்றதாயினும், பாசி மூடிய சுத்தமான நீர் போன்று இருக்கிறது. பாசியை அகற்றும் விழிப்புணர்வு பெற்றவனே சுத்தநீரைப் பெறுகிறான். -
"இது சூரிய, சந்திர கிரஹணங்களைப் போன்றது. அவையென்னவோ எப்பொழுதும் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன. ராகுவும் கேதுவும் அவற்றின் பாதையில் குறுக்கிட்டு நம்முடைய பார்வையை மறைக்கின்றன.-
"சூரியனுக்கும் சந்திரனுக்கும் எக் கெடுதலும் ஏற்படுவதில்லை. கெடுவது நம்முடைய பார்க்கும் சக்தியே. அதுபோலவே, ஞானமும் எந்த உபாதையும் இன்றித் தானிருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு ஒளிர்கிறது.-
"கண்களின் பார்க்கும் சக்தி ஞானம். கண்களில் வளரும் புரை அஞ்ஞானம். அதை அவசியம் எடுத்துவிடவேண்டும். -
"கையின் திறமையால் புரையையோ திரையையோ விலக்கித் தூர எறிந்து, பார்க்கும் சக்தியைத் திரும்பப் பெற வேண்டும். அஞ்ஞான இருளை விலக்கவேண்டும்.-
"இவ்வுலகில் கண்களால் பார்த்தறிவதனைத்தும் விவரிக்கமுடியாத மாயையால் நிரம்பியிருக்கிறது. மாயை அனாதி; அவித்யை; வெளிப்படாதது. இது, இதுவே அஞ்ஞானத்தின் விளையாட்டு!-
"ஞானம் உணர்வுபூர்வமானது; உபதேசிக்கக்கூடிய விஷயம் அன்று. குருவைத் தொழுவதும் அவருக்கு சேவை செய்வதும் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டு விளக்கம் பெறுவதும் குருவின் கிருபையைப் பெரும் சாதனங்கள். -
"உலகை சத்தியம் என்று நினைப்பது பெரிய பிரமை. இதுவே, முதலாவதாக எடுத்தெறியப்படவேண்டிய, ஞானத்தை மூடியிருக்கும் இருள். அப்பொழுதுதான் பேரறிவாகிய முழுமுதற்பொருள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். -
"உலகவாழ்வின் விதை அஞ்ஞானம். குருவின் கிருபையாகிய மையைக் கண்களில் இட்டுகொண்டால் கண்களை மூடியிருக்கும் மாயையாகிய திரை விலகும். சுபாவமான ஞானம் எஞ்சி நிற்கும். -
"ஞானம் என்பது அடைய வேண்டிய பொருளன்று. அது ஏற்கெனவே அடையப்படும் பிரகாசித்துக்கொண்டு விளங்குகிறது. வழியிலிருக்கும் தடங்கல் அஞ்ஞானமே.-
"இறைவனையும் பக்தர்களையும் வெவ்வேறாகக் கருதுவது அஞ்ஞானத்தின் மூலம், இந்த அஞ்ஞானத்தை எடுத்தெறிந்துவிட்டால் எஞ்சியிருப்பது பூரண ஞானம். -
"பழுதையில் பாம்பு தெரிவது அஞ்ஞானத்தின் தூய உதாரணம். உண்மையில் அப் பொருள் என்னவென்று அறிந்துகொள்வது அஞ்ஞானத்தை விலக்கிவிடுகிறது. எஞ்சி நிற்பது அப் பொருள் பழுதையென்று ஞானமே.-