valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 6 April 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


மாதவராவை, "நீர் என் அழுதீர்?" என்று புட்டி கேட்டபோது, அவர் பதில் கூறினார். "ஸ்ரீ சாயியின் அன்பு ததும்பிய வார்த்தைகளைக் கேட்டவுடன் நான் பிரமாவேசம் கொண்டேன்.-

"எனக்குத் தொண்டையை அடைத்தது.  கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருகியது. என்னுடைய இதயத்தில் பொங்கிய அன்பு எனக்கு கட்டுப்படாமல் அழுகையாக வெடித்தது. -

"பாபா என்னருகில் வந்து தெளிவாக ஆணையிட்டார், "வாடாவும் தேவாலயமும் திடமான உருவம் பெறட்டும். நான் எல்லோருடைய தீவிரமான விருப்பங்களையும் நிறைவேற்றுகிறேன்."

இருவரும் ஒரேவிதமான கனவுக்காட்சி பெற்றது பற்றி பாபுசாஹெப் மனம் வியந்தார். மனத்திலிருந்த சந்தேகம் விலகியது. வேலையை ஆரம்பித்துவிடுவது என்று தீர்மானம் செய்தார்.

புட்டி, தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பணக்காரர்! கோயிலுடன் வாடா கட்டுவதற்குண்டான வசதி படைத்திருந்தார். மாதவராவுக்கு நடுத்தர வசதிதான் இருந்தது. ஆயினும் இருவருக்கும் ஒரேவிதமான காட்சி கிடைத்தது.

பரஸ்பரம் கனவுக் காட்சிகள் ஒத்துப்போயின. இருவருமே பரமானந்தத்தால் நிறைந்தனர். கட்டடத்திற்கு ஒரு வரை படம் தயாரித்தனர். இந்த வரைபடத்தைக் காகா (ஹரி சீதாராம் தீக்ஷிதர்) ஆமோதித்தார்.

அடுத்த நாள் காலையில் இம் மூவரும் பாபாவுடன் இருந்தபோது எப்பொழுதும்போல் பாபா சாமாவின் முகத்தைப் பிரேமையுடன் உற்றுப்பார்த்தார்.

அப்பொழுது சாமா கேட்டார், "ஓ, தேவா! இதென்ன உம்முடைய புரிந்துகொள்ளமுடியாத விளையாட்டு! எங்களை நிம்மதியாக தூங்கவும் விடமாட்டேன் என்கிறீர்கள். தூக்கத்திலும் எங்களை உணர்ச்சிவசப்படுத்தி அழவைக்கிறீர்கள்."

இதைக் கேட்டவுடனே பாபா தம் காதுகளைக் கைகளால் மூடிக்கொண்டு, "யார் என்ன சொன்னாலும் சரி, நாம் உம்மிடத்திற்கு வந்திருந்தோம்" என்று சொன்னார்.

பிறகு, ஏற்கெனவே விவரிக்கப்பட்ட யோசனை-வரைபடம் பாபாவின் முன்னால் வைக்கப்பட்டது. கோயிலை உள்ளடக்கி வீட்டைக் காட்டும் யோசனைக்கு பாபா உடனே அனுமதியளித்தார்.

மாதவராவ் வரிந்துகட்டிக்கொண்டு செயலில் இறங்கினார். நிலவறையும் முதல் தளமும் அவருடைய நேரடி மேற்பார்வையில் கட்டப்பட்டன கிணறும் அவருடைய கைகளால் கட்டப்பட்டது! கட்டுமான வேலை இதுவரை முன்னேற்றியது.

லெண்டிக்குப் போகும்போதும் திரும்பிவரும்போதும் கதவுகளும், ஜன்னல்களும் பொருத்தப்படும்போதும் பாபா ஆர்வத்துடன் கட்டுமான வேலையின் முன்னேற்றத்தை கவனிப்பார்.