ஷீர்டி சாயி சத்சரிதம்
காகா தம்முடனேயே திரும்பிவிடவேண்டுமென்று அவர் விரும்பினார். பாபா இருவருக்கும் அனுமதியளித்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்றினார்.
இதுவும் சேட்ஜீயின் மனத்தில் இன்னுமொரு பணயம். ஆனால், பாபாவுக்கு இது எப்படித் தெரிந்தது? அவர் ஒரு சாதுவென்பதற்கு இது ஒரு முக்கியமான லக்ஷணம் (சிறப்பியல்பு). இதை தரம்சீ இப்பொழுது முழுமனத்துடன் ஒப்புக் கொண்டார்.
சந்தேகங்கள், அனைத்தும் நிவிர்த்தியாகிவிட்டன. சாயி ஒரு சாதுவென்பது மிகத் தெளிவாகிவிட்டது. அவருடைய மனத்தின் ஓட்டம் எப்படியிருந்ததோ அதற்கேற்றவாறே பாபா அளித்த அனுபவமும் இருந்தது.
எந்த எந்த மார்க்கத்தை எவரெவர் கடைபிடிக்க விரும்பினார்களோ, அந்த அந்த மார்க்கத்தில் அவரவரை பாபா வழி நடத்தினார். எல்லாருடைய ஆன்மீகத் தகுதிகளும் பாபாவுக்குத் தெரிந்திருந்தது. அதற்கேற்றவாறு அவரவருக்கு சாயியிடமிருந்து ஆன்மீக லாபம் கிடைத்தது.
வருபவன் விசுவாசமுள்ளவனாக இருக்கலாம்; குற்றம் கண்டுபிடிப்பவனாகவும் இருக்கலாம். சாயி இருவருக்கும் கிருபை செய்வதில் சமத்துவம் கண்டார். கருணை மிகுந்த சாயி மாதா ஒருவரை அணைத்தும் மற்றவரைப் புறக்கணித்தும் செயல்பட்டதில்லை.
ஆகவே அவர்கள் இருவரும் புறப்படும் சமயத்தில் பாபா காகாவைப் பதினைந்து ரூபாய் தக்ஷிணை கேட்டார். மேலும் அவரிடம் சொன்னார், -
"எனக்கு யார் ஒரு ரூபாய் தக்ஷிணையாகக் கொடுக்கிறாரோ, அவருக்கு நான் பாத்து மடங்காகத் திருப்பிக் கொடுக்கவேண்டும். -
"நான் யாரிடமாவது எப்பொழுதாவது இனாம் வாங்கிக்கொள்வேனா என்ன? நான் எல்லாரிடமும் தக்ஷிணை வாங்கிக்கொள்வதில்லை. பக்கீர் யாரைச் சுட்டிக்காட்டுகிறாரோ, அவரிடம்தான் தக்ஷிணை என்ற பேச்சே எழுகிறது.-
"பக்கீரும் யாருக்குக் கடன்பட்டிருக்கிறாரோ, அவரைத்தான் கேட்பார். அதுமாதிரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தக்ஷிணை கொடுப்பவர், பின்னர் அறுவடை செய்ய இப்பொழுது விதை விதைக்கிறார்.-
"அறவழியில் நடந்து தான தருமங்களைச் செய்யும் பணக்காரனுக்கே செல்வம் நலன் பயக்கிறது. ஏனெனில், இவ்விரண்டும்தான் உண்மையான ஞானத்தை அளிக்கின்றன. -
"கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இஷ்டம்போல் போகங்களுக்காகவும் வீண் செலவுகளாகவும் நாசம் செய்து, தருமம் செய்வதில் நாட்டமில்லாது வாழ்பவர்கள் ஏராளம், ஏராளம்!-
"கஷ்டப்பட்டுப் பைசா பைசாவாக அற்புதமான சேலம் சேர்த்து, அதை புலனின்ப நாட்டவழியில் செலவழிக்காத மனிதனே சந்தோஷமாக வாழ்கிறான்".
"கொடுக்காதவன் உயர்வதில்லை" என்னும் மறைமொழியை எல்லாரும் அறிவர். முன்பு கொடுத்தது பாபாவின் எதிரில் நிற்கிறது; ஆகவே அவர் தக்ஷிணை கேட்கிறார்.