valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 12 May 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா அப் பெண்மணியைக் கேட்டார், "என்ன? தேங்காய்கள் குழந்தைகளை உண்டுபண்ணுமா? இம்மாதிரியான மூடநம்பிக்கைகளை நீங்கள் எப்படி வளர்க்கலாம்? ஓ, ஜனங்களுக்கு புத்தி பேதலித்துவிட்டதுபோல் இருக்கிறது!"

சாமா சொன்னார், "ஓ, உங்களுடைய வாக்கின் அற்புதமான சக்தி உங்களுக்குத் தெரியும். இப் பெண்மணிக்கு வரிசையாகப் பல குழந்தைகள் சுகமாகப் பிறக்குமளவிற்கு உங்களுடைய வாக்குக்கு சக்தி இருக்கிறது. -

"ஆனால், நீங்கள் இப்பொழுது விதண்டை செய்கிறீர்களே தவிர, மனப்பூர்வமாக ஆசீர்வாதம் செய்யவில்லை. தேவையில்லாமல் வாதம் செய்கிறீர்கள். கொடுங்கள்; ஓ, அந்தத் தேங்காயை இப் பெண்மணிக்குப் பிரசாதமாகக் கொடுங்கள்".

பாபா சொன்னார், "சரி, சரி, தேங்காயை உடை". சாமா சொன்னார், "ஓ, அதை இவருடைய முந்தானையில் இடுங்கள்". இவ்விதமாக இந்த வாக்குவாதம் சிறிது நேரம் தொடர்ந்தது. கடைசியில் பாபா விட்டுக்கொடுத்தார்.

பாபா சொன்னார், "போ, போ, இவருக்கு குழந்தை பிறக்கும்". சாமா விடுவதாக இல்லை. "எப்பொழுது பிறக்கும்? அதை அறுதியிட்டு பதில் சொல்லுங்கள்". "பன்னிரண்டு மாதங்களில்" என்று சொல்லிவிட்டு பாபா தேங்காயை பட்டென்று உடைத்தார்.

ஒரு மூடியைப் பெண்மணியிடம் கொடுத்துவிட்டு மற்றொரு மூடியை அவர்கள் இருவரும் உண்டனர். மாதவ்ராவ் அப் பெண்மணியிடம் சொன்னார். "நீர் இதை சாட்சியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்.-

"இன்றிலிந்து பன்னிரண்டு மாதங்கள் முடிவதற்குமுன், நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்காவிட்டால், நான் என்ன செய்வேன் என்பதை கேளுங்கள்!-

"நான் இதேபோன்ற ஒரு தேங்காயை இவருடைய தலையில் உடைத்து, இந்தத் தெய்வத்தை மசூதியிலிருந்து விரட்டாவிட்டால், என்னுடைய பெயர் மாதவராவ் இல்லை!-

"அதுமாதிரி தெய்வத்தை இந்த மசூதியில் தங்கும்படி விட்டுவைக்கமாட்டேன். உமக்குச் சரியான நேரத்தில் நிரூபணம் தெரியும். இதை என்னுடைய சர்வநிச்சயமான பிரகடனம் என்று அறிவீராக!"

இவ்வகையாக உறுதிமொழி அளிக்கப்பட்ட பெண்மணி பெருமகிழ்ச்சியடைந்தார். பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, திருப்தியடைந்தவராக தம்முடைய கிராமத்திற்குத் திரும்பினார்.

பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவரும் பிரேமபாசத்தால் பக்தர்களிடம் கட்டுண்டவரும் சாமாவைத் தம் அணுக்கத் தொண்டராக ஏற்றுக்கொண்டவருமான சாயி, சாமாவின்மேல் எள்ளளவும் கோபப்படவில்லை!

அண்டியவர்களை காக்கும் கருணைக்கடலும் தம்மிடம் சரணடைந்தவர்களுக்கு அடைக்கலமுள்ள தயாளர் சாயி, தம் பக்தனின் வாக்கைத் தவறாது நிறைவேற்றினார்.