ஷீர்டி சாயி சத்சரிதம்
காலப்போக்கில் வீரபத்ரப்பா மரணமடைந்தான். பின்னர் சர்ப்பயோனியில் (பாம்பின் வயிற்றில்) பிறந்தான். இவ்விதமாக அவன் வேறு உடலுக்கு மாறினான்.
சனபசப்பா பயந்துகொண்டே வாழ்ந்தான்; அதுவே அவனுடைய முடிவுக்குக் காரணமாகியது. அவன் மறுபிறவியில் தவளையோனியில் பிறந்தான். அவனுடைய கதை அவ்வாறு.
பூர்வஜென்ம விரோதத்தால் வீரபத்ரப்பா பாம்பாக பிறந்தான். தவளையாகப் பிறந்த சனபசப்பாவை பின்தொடர்ந்தான். கடைசியில் பிடித்துவிட்டான்.
தவளையாகப் பிறந்த தீனன் சனபசப்பா, வீரபத்ரப்பாவின் (பாம்பின்) வாயில் மாட்டிக்கொண்டான். அவனுடைய பரிதாபகரமான கதறலைக் கேட்டு என் மனம் இரங்கியது.
முன்னம் அளித்த வாக்குறுதி ஞாபகத்திற்கு வந்தது. சனபசப்பாவை விடுவித்து என்னுடைய வாக்கை நான் பாலித்தேன் (காப்பாற்றினேன்).
பக்தனுக்கு ஆபத்து நேரும்போது அவனைக் காப்பாற்றுவதற்கு அல்லா ஓடிவருகிறார் அல்லரோ! அவர்தான் என்னை இங்கு அனுப்பி பக்தனை ரக்ஷித்தார்?
அதுவே இங்கு பிரதக்ஷ்யமான (கண்கூடான) அனுபவமாக மலர்ந்தது. வீரபத்ரப்பா எங்கோ ஓடிவிட்டான். சனபசப்பா ஆபத்திலிருந்து தப்பித்துக்கொண்டான். ஈத்தனைத்தும் இறைவனின் லீலை!
சரி, இப்பொழுது சிலீமை நிரப்பும். புகைக்குடித்த பிறகு நான் என் இருப்பிடத்திற்குச் செல்கிறேன். நீரும் உமது கிராமத்திற்கு திரும்பிச் செல்வீராக. ஆயினும், என்னுடைய நாமத்தைக் குறியாகக் கொள்வீராக!
இவ்வாறு பேசிய பிறகு நாங்கள் இருவரும் சிலீம் பிடித்தோம். சத்சங்கத்தின் சௌக்கியம் எனக்குக் கிடைத்தது. அதன்பிறகு, நான் மெதுவாக வழி நடந்து திரும்பி வந்தேன். என் உள்ளத்தில் பரம திருப்தி நிலவியது.
(சாயி சொன்ன கதை இங்கு முடிகிறது)
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரித்திரம்' என்னும் காவியத்தில், 'பாம்பும் தவளையும்' என்னும் நாற்பத்தேழாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.