valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 15 March 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆன்மீக சாதகன் எப்பொழுது வேண்டுமானாலும் புலன்களின்மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தயார்நிலைக்கு உயர்கிறான். இதற்கான விதிகள் வேதங்களில் இருந்து வெளிப்பட்டிருக்கின்றன; இந்நிலையில் சாதகன் உலக விஷயங்களை நியமத்துடன் அனுசரிக்கிறான்; இஷ்டம் போல் நடப்பதில்லை.

மனம் இவ்விதமாகத் தன்வயப்பட்டுவிட்டால், விஷயசுகங்கள் நசித்து போகின்றன. மாறாக, குரு வழிபாட்டில் மனம் காதல் கொள்கிறது; அதிலிருந்து சுத்த ஞானம் பிறக்கிறது.

சுத்த ஞானம் வளர வளர, 'உடலே நான்' என்னும் எண்ணம் அறுந்துபோகிறது. அதே புத்தி இப்பொழுது, 'நானே ப்ரம்மம் (முழு முதற்பொருள்)' என்னும் உணர்வில் ஆழ்ந்துவிடுகிறது. அந்நிலையில் எல்லையற்ற ஆனந்தம் துய்க்கப்படுகிறது.

மனித உடல் கணநேரத்தில் அழியக் கூடியதாக இருப்பினும், அதை வைத்துதான் பரம் புருஷார்த்தத்தை (மோட்சம்) அடைய வேண்டும். மோட்சத்தைவிட சிறந்ததான பக்தியோகத்தை அனுசரிக்க உடல் தேவைப்படுகிறது.

மனிதன் அடையவேண்டிய நான்கு பேறுகளையும் (அறம், பொருள், இன்பம், வீடு) கடந்த ஐந்தாவது பேறு பக்தி யோகம். பக்தியோகம் ஒப்பற்றது; மற்றெதுவும் அதற்கு ஈடாகாது.

குருசேவை செய்து வாழ்க்கையில் திருப்தியடைந்தவன் பக்தியும் ஞானமும் வைராக்கியமுமே தனக்கு நன்மையளிக்கும் என்ற யதார்த்தமான உண்மையை நன்கு உணர்ந்துகொள்கிறான். அவனே ஆன்மீக பாதையில் முன்னேற்றம் காண்பான்.

பாகவதத்தை (ஸ்ரீ கிருஷ்ணனின் கதையைத்) தலைகீழாகப் படித்தவனாக இருந்தாலும், குருவிற்கும் இறைவனுக்கும் இடையே வித்தியாசம் காண்பவன் இறைவனை அறிந்தவனல்லன்.

இது, இராமாயணத்தை முழுக்கப் முழுக்கப் படித்த பின்பும் சீதைக்கு இராமன் என்ன உறவு என்று கேட்பது போலாகும். 'இரண்டுண்டு' என்னும் எண்ணத்தை அழித்துவிட்டு குருவும் இறைவனும் ஒன்றே என அறிந்துகொள்ள வேண்டும்.

குருவிற்கு நிர்மலமான மனத்துடன் சேவை செய்வதன் மூலம் உலகவிஷய வாசனைகள் நிர்மூலமாகிவிடும். சித்தம் சுத்தமாகி சுயவொளியுடன் பிரகாசிக்கும். மனிதனின் நிஜமான சொரூபம் தன்னை வெளிக்காட்டும்.

ஆகவே, தாம் விரும்பியபோது, விரல்களால் சொடக்குப்போடுவது போல சுலபமாக அவரால் உடைத்த கடலைப் பருப்புகளை அங்கே தோன்ற செய்ய முடிந்தது. பார்க்கப்போனால், இதை விட அற்புதமான லீலைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

கேவலம் இந்தஜாலம் செய்பவன் தன வசீகர சக்தியால் ஓர் எலும்பை அசைத்துப் பொருள்களை சிருஷ்டி செய்வதுபோல நமக்கு காட்டி வயிறு வளர்க்கிறான்.

ஆனால், சாயிநாதரோ தனித்தன்மை வாய்ந்த விசேஷமான ஜாலவித்தைக்காரர்! ஆஹா! அவருடைய லீலைதான் எவ்வளவு அழகானது! அவர் விரும்பினால் கண்ணிமைக்கும் நேரத்தில் எண்ணிலடங்காத உடைத்த கடலைப் பருப்புகளை உற்பத்தி செய்வார்.