ஷீர்டி சாயி சத்சரிதம்
இந்த சுலோகத்தின் முதல் அடியில் ஐந்து ஒழுங்கு நெறிமுறைகளும், இரண்டாவது அடியில் நான்கு ஒழுங்கு நெறிமுறைகளும், பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றன. பாபாவும் அதே நோக்கத்துடன் அந்தக் கிரமத்தையே அனுசரித்தார் என்று என் உள்மனம் சொல்கிறது.
சிஷ்யன், 1 கர்வமில்லாதவனாகவும் 2 பொறாமை இல்லாதவனாகவும் 3 சாமர்த்தியம் உள்ளவனாவாகவும் 4 மமதை இல்லாதவனாகவும் 5 திடமான அன்புள்ளவனாவாகவும் ,-
6 அவசரப்படாதவனாகவும் 7 அர்த்தத்தை அறிய ஆவலுள்ளவனாகவும் 8 அசூயை (குறைபடும் இயல்பு - பிறர் செழிப்பு கண்டு ஏக்கம்/வெறுப்பு ) இல்லாதவனாகவும் 9 வீண்பேச்சுப் பேசாதவனாகவும் இருந்துகொண்டு குருவை உபாசிக்கவேண்டும்.
சாயிநாதரின் நோக்கமும் இதுவாகவே இருந்திருக்க வேண்டும்; அதை இந்த ரூபத்தில் வெளிப்படுத்தினார். ஞானிகள் தங்களுடைய பக்தர்களின் நல்வாழ்வுக்காக எந்நேரமும் கருணை பொங்கும் இயல்புடையவர்கள் அல்லரோ!
லக்ஷ்மீ பாயீ, உணவுக்கும் உடைக்கும் நல்ல வசதி படைத்த பெண்மணி. அவருக்கு ஒன்பது ரூபாய் ஒரு பெரிய தொகை அன்று. தாமே அந்த அளவிற்கு தருமம் செய்ய கூடியவர் அவர். ஆயினும், அவருக்கு அளிக்கப்பட்ட இந்த தானம் அபூர்வமானதன்றோ!
அவருடைய பாக்கியம் மிகச் சிறந்தது. அதனால்தான் அவருக்கு இவ்விதமான அற்புதம் நிகழ்ந்தது. சாயியின் கரகமலங்களில் இருந்து நவரத்தினங்களுக்கு இணையான, ரூபாய் நாணயங்கள் ஒன்பதை பெற்றுக்கொண்டார்.
ஒன்பது ரூபாய் பணம் அவர் கைவழியாக எத்தனையோ தடவைகள் செலவாகியிருக்கும்; இனியும் பல தடவைகள் செலவாகும். ஆனால், இந்த ஒன்பது ரூபாய் இமாலயச் சிறப்புடையது; அவருடைய வாழ்நாள் முழுவதும் சாயியை நினைவூட்டப்போகும் தானம் அன்றோ!
தேகத்தை விடுக்கும் நேரம் வந்துவிட்டது. ஆயினும், தம்முடைய நினைவு லக்ஷ்மீ பாயீக்கு மரணப்பரியந்தம் இருக்கவேண்டுமென்பதை மனத்தில் கொண்டு, முதலில் ஐந்து ரூபாயும் பின்னர் நான்கு ரூபாயும் பாபா தானமாகக் கொடுத்தார்.
தமதருகில் இருந்தவர்களைச் சாப்பிடப் போகச் சொல்லி, மனத்தளவில் தாம் தெளிவாகவும் உஷாராகவும் இருந்ததை பாபா வெளிப்படுத்தினார். ஆனாலும், ஓரிரு கிராமவாசிகள் அங்கேயே இருக்க விரும்பினர்.
நெருக்கமான நேரம் என்பதை அறிந்து, பிரேமை மிகுந்த கிராமவாசிகள் சிலர், தங்களை பாபாவிடம் இருந்து அகன்று போகச் சொல்லக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தனர்.
ஆனால், உயிர் பிரியும் நேரத்தில் மோஹத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று பயந்தவர்போல் பாபா விரைவாக அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டார்.