ஷீர்டி சாயி சத்சரிதம்
சாயியே அவருடைய பார்க்கும் விஷயமாக அமைந்துவிட்ட பிறகு அவர் வேறெதையும் நோக்குவாரா? பார்க்குமிடங்களிலெல்லாம் அவருக்கு சாயியே தெரிவார். அவருக்கு இவ்வுலகில் சாயி இல்லாத இடமே இல்லாமல் போய்விடும்.
சாயியின் நாமத்தை வாயிலும், பிரேமையை இதயத்திலும் தரித்து, அவர் எப்பொழுதும் சாந்தமாகவும் க்ஷேமமாகவும் இருப்பார். ஏனெனில், சாயியே அவரை ரட்சிப்பார்.
செவிச்செல்வ விஷயத்திலும் இதுவே கதி. காதுகளுக்கு சாயியைத் தவிர வேறு கேள்வியே இல்லை. மூக்கும் சாயியின் பரிமளத்தால் நிறையும்; நாக்கிலும் சாயி நாமத்தின் இனிமையான சுவையே ஊறும்.
சாயியின் புன்னகை தவழும் முகம் எவ்வளவு அற்புதமானது! அப் புன்னகை அளித்த சுகம் எவ்வளவு தூய்மையானது! சாயியின் திருமுகத்தை நேரில் பார்த்தவர்களும் அமிருதத்தை ஒத்த அவருடைய திருவாய்மொழியைக் கேட்டவர்களும் மஹாபாக்யம் பெற்றவர்கள்!
மங்களங்களின் உறைவிடமும், சுகத்திற்கும் சாந்திக்கும் பிறப்பிடமும், விவேகமும் வைராக்கியமும் நிறைந்தவருமான சாயி எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்தார்.
வயிறு நிரம்பப் பாலைக் குடித்தபிறகும் கன்று தாயிடமிருந்து பிரிவதற்கு விரும்பாது. கன்றைத் தாயிடமிருந்து பிரிக்கக் கயிறு கொண்டுதான் கட்டவேண்டும். அதுபோலவே, நம்முடைய மனத்தை உலக இன்பங்களிலிருந்து பிரித்து, குருபாதங்களில் கட்டிவிடவேண்டும்.
குருவின் கிருபையையும் காதலையும் பெறுவதற்கு அவருடைய பாதகமலங்களை வழிபடுங்கள். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அருளும் நலந்தரும் போதனையை ஏற்பதற்கு இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள்.
இந்திரிய சுகங்களை யதேச்சையாக அனுபவிக்கும் போதுங்கூட உள்ளுக்குள்ளே எப்பொழுதும் சாயிபிரீதி இருக்கட்டும். ஏனெனில், அதுவே உலகியல் விஷயங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் அபயமளிக்கும்.
கால்கள் முதலாக வெளிவந்து பிறந்தவரின் கண்களில், சித்திகள் பெற்ற மந்திரவாதியின் மையைப் பூசினால், அவருக்கு மறைந்திருக்கும் புதையல்களும் கண்ணுக்குப் புலப்படும். அதுபோலவே, குருவின் பாதத்துளிகள் கண்களில் பட்டவருக்கு ஞானமும் விஞ்ஞானமும் மலரும்.
சித்தர்களுக்கு எந்தெந்த லக்ஷ்ணங்கள் (சிறப்பியல்புகள்) உண்டோ, அவையே சாதகர்களின் பயிற்சிமுறையாக அமைய வேண்டும். கடுமையான பயிற்சியும் நீண்டகாலப் பிரயத்தனமும் செய்பவரே வெற்றியடைகிறார்.
நெய் பாலுக்குள் இருக்கத்தான் செய்கிறது. ஆயினும், பாலைக் காய்ச்சி அது ஆறிய பின், புளித்த மோரை உறையாக ஊற்றாவிட்டால் மோரும் கிடைக்காது; வெண்ணையும் கிடைக்காது. முறையாகச் செயலாற்றி மோர் கிடைத்த பின்பும், நெய் கிடைப்பதற்கு மேலும் செயல்பட வேண்டும்.
மோரைக் கடையாமல் வெண்ணெய் கிடைக்காது. வெண்ணெயையும் அடுப்பிலேற்றி பதமாகக் காய்ச்சினால்தான் சுவை மிகுந்த நெய் கிடைக்கும்.