ஷீர்டி சாயி சத்சரிதம்
எந்த நல்ல காரியத்திற்கும் இதுவே ரீதி. ஆரம்பத்திலேயே கெடுமதியாளர்கள் சில தடங்கல்களை உண்டாக்குவர். அவர்கள் சொல்வதை லட்சியம் செய்யாதவர்களே கடைசியில் நல்ல பாதையில் சென்று நன்மையடைவர்.
டாக்டர், ஞானியை தரிசனம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு நேராக பம்பாய்க்கு சென்றார். மீதியிருந்த விடுப்பை அலிபாக்கில் கழிக்கலாம் என முடிவெடுத்தார்.
இவ்வாறு அவர் முடிவு செய்தபின், தொடர்ச்சியாக மூன்று இரவுகளில், "இன்னும் என்மேல் அவநம்பிக்கையை?" என்ற குரல் அவருக்குத் தூக்கத்தில் கேட்டது.
தொடர்ச்சியாக மூன்று இரவுகளில் தோன்றிய அந்த அசரீரிச் செய்தியைக் கேட்டு டாக்டர் வியப்படைந்தார். அந்தச் செய்தியைப் பொருள் செறிந்ததாக ஏற்றுக்கொண்டு அவர் ஷீர்டி பிரயாணத்தை நிச்சயம் செய்துகொண்டார்.
ஆயினும், அவர் அந்த சமயத்தில், டைபாய்டு ஜுர நோயாளி ஒருவருக்குச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அவருக்குச் சிறிது குணமேற்பட்டவுடனே ஷீர்டி செல்லலாம் என நினைத்தார்.
நோயாளிக்கோ ஜுரம் அதிகமாக இருந்தது; எந்த மருந்தும் வேலை செய்யவில்லை. நோயாளி லவலேசமும் (சிறிதளவும்) குணமடையவில்லை. ஆகவே, ஷீர்டி செல்வதற்கு முடியவில்லை.
டாக்டர் தமது மனத்தில் தீர்மானம் செய்துகொண்டார், "இந்த நோயாளியின் நிலைமையில் இன்று ஏதாவது முன்னேற்றம் தெரிந்தால், மேலும் ஒரு கணமும் தாமதியாது நாளை நான் ஷீர்டி செல்வேன்".
இந்த திடமான சங்கேதத்தை (குறிப்பை) ஏற்றுக்கொண்டபின், ஆறு மணி நேரத்திற்குள்ளாக ஜுரம் கொஞ்சங்கொஞ்சமாக இறங்கியது. அவருடைய வேண்டுதல் நிறைவேறியதால் டாக்டர் உடனே ஷிர்டிக்கு கிளம்பினார்.
சங்கற்பம் செய்துகொண்டவாறே டாக்டர் ஷிர்டிக்குச் சென்றார். பக்தியுடன் பாபாவின் பாதங்களை வணங்கினார். இவ்விதமாக, பாபா அவருக்கு அகமுகமான அனுபவத்தின் மூலம் விசுவாசம் ஏற்படச் செய்து, அவரை குருசேவைக்கு இழுத்தார்.
டாக்டரின் தலைமேல் அருட்கரத்தை வைத்து உதீ பிரசாதமும் அளித்தார். சாயியின் அளப்பரிய சக்தியைக் கண்டு டாக்டர் பிரமித்துப் போனார்.
டாக்டர் ஷிர்டியில் நான்கு நாள்கள் தங்கியபின் ஆனந்தமான மனத்துடன் வீடு திரும்பினார். பதினைந்து நாள்கள் கூட முடியவில்லை. விஜாப்பூருக்குப் பதவி உயர்வில் அனுப்பப்பட்டார்!
வேதனை மிகுந்த ஹாட்யாவரணம் சாயிதரிசனத்திற்கு வழிவகுத்தது. தரிசனம் ஞானியின் பாதங்களின்மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவ்வீர்ப்பு என்றும் குறையாத ஆனந்தத்தை அளித்தது.
இவ்வாறே டாக்டர் பிள்ளை ஒரு சமயத்தில் நரம்புச்சிலந்தி நோய் கண்டு வருந்தினார். ஒன்றன்பின் ஒன்றாக ஏழு சிலந்திகள் தோன்றின. டாக்டர் மிகவும் கஷ்டப்பட்டார்.