ஷீர்டி சாயி சத்சரிதம்
ஆனாலும்,
ஆரம்பநிலையில் தினப்படி விவகாரங்களில் ஏதாவதொரு அற்புதம் காட்டி ஆன்மீக
பாதையில் ஏற்படச் செய்து பக்தர்களை வழிநடத்தினார் பாபா.
மேகாவைப்பற்றி இதேமாதிரியாக இன்னொரு கதையும் உண்டு. கேட்பவர்கள், பக்தர்கள்மீது பாபா செலுத்திய பிரேமையை கண்டு ஆனந்தமடைவார்கள்.
நானாசாஹேப்
சாந்தோர்கர் அன்பளிப்பாக அளித்த, புதியதும் பெரியதுமான படம் ஒன்று
மேகாவிடம் இருந்தது. அதை வாடாவில் வைத்து பக்தியுடன் பூஜை செய்துவந்தார்.
மசூதியில்
பாபா பிரத்யக்ஷ்மாக இருந்தார். வாடாவிலோ உருவத்தின் அச்சாக முழு உயரப்படம்
பெரியதாக இருந்தது. இரண்டு இடங்களிலும் மேகா பூஜையும் ஆரதியும்
செய்துவந்தார்.
இம்மாதிரியான சேவை பன்னிரண்டு
மாதங்கள் தொடர்ந்து சகஜமாக நடந்தது. பின்னர் ஒருநாள் விடியற்காலை
நேரத்தில், மேகா படுக்கையில் விழித்து கொண்டிருந்தபோது ஒரு தெய்வீக காட்சி
கண்டார்.
படுக்கையில் இருந்தபோதே கண்கள் மூடியிருந்தாலும் விழிப்புடனிருந்த நிலையில் பாபாவின் உருவத்தைத் தெளிவாகப் பார்த்தார்.
மேகா
விழித்துக்கொண்டிருந்தார் என்பது நன்கு தெரிந்து, பாபா அவர்மீது
அக்ஷதையைத் தெளித்து, "மேகா, திரிசூலம் வரையுமய்யா!" என்று சொல்லிவிட்டு
மறைந்துவிட்டார்.
பாபாவின் வார்த்தைகளை
செவியுற்ற மேகா கண்களைத் திறந்து பார்த்தார். பாபாவின் உருவம் மறைந்து
கொண்டிருந்ததைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்தார்.
மேகா
சுற்றுமுற்றும் பார்த்தார். படுக்கை முழுவதும் அக்ஷதை இறைந்து கிடந்தது.
வாடாவின் கதவுகளோ முன்போலவே சாத்தப்பட்டிருந்தன. அவருக்கு ஒன்றுமே
விளங்கவில்லை.
உடனே மசூதிக்குச் சென்று பாபாவை
தரிசனம் செய்தார். தாம் கண்ட காட்சியை விவரித்தபின், திரிசூலம் வரைவதற்கு
பாபாவின் அனுமதி வேண்டினார்.
மேகா தாம் கண்ட
காட்சியை விரிவாக எடுத்துச் சொன்னார். பாபா அப்பொழுது வினவினார். "என்ன
காட்சி? நான் உம்மைத் திரிசூலம் வரையும்படி சொன்னது உமது காதுகளில்
விழவில்லையா?"-
"காட்சி என்று அதற்குப் பெயர்
கொடுத்து என்னுடைய வார்த்தைகளை எடைபோடப் பார்க்கிறீரா? என்னுடைய
வார்த்தைகள் அர்த்தம் நிரம்பியவை. அவற்றில் ஓர் எழுத்துக்கூட
அர்த்தமில்லாமற்போகாது."
மேகா பதிலுரைத்தார்,
"நானும் முதலில் நீங்கள் என்னை எழுப்பினீர்கள் என்றே நினைத்தேன். ஆனால்,
ஒரு கதவும் திறந்திருக்கவில்லை. ஆகவே, நான் கண்டது ஒரு காட்சியே என்று
அனுமானித்தேன்".
பாபா இதற்கு என்ன விடையிறுத்தார்
என்று கேளுங்கள், "நான் நுழைவதற்கு கதவேதும் தேவையில்லை. எனக்கு வடிவமோ
விஸ்தீரணமோ கிடையாது. நான் எங்கும் எப்பொழுதும் நிறைந்திருக்கிறேன் .-