valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 June 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

புலன்கள் கட்டவிழ்ந்து ஓடி துராசாரத்தில் (கெட்ட நடத்தையில்) கொண்டுபோய் விடுகின்றன. காட்டாற்றைத் தடுத்து அணைகட்டிப் புலன்களை திரும்பி பார்க்கச் செய்யுங்கள்.

புலன்கள் கட்டுப்பாட்டுக்குள் அடங்கி உள்முகமாகத் திரும்பவில்லையென்றால், ஆத்மதரிசனம் பெறமுடியாது. ஆத்மாவை அறிந்துகொள்ளாமல் உன்னத சுகம் ஏது? பிறவியே அர்த்தமில்லாததாக ஆகிவிடும் அன்றோ?

மனைவி, மக்கள், நண்பர்கள் கூட்டம் -கடைசிக் காலத்தில் இவர்களில் யாராலும் எந்தப் பயனும் கிடைக்காது. நீர் மாத்திரமே கடைசிவரை கூடவரும் துணைவர். உம்மால்தான் சுகத்தையும் முக்தியையும் அளிக்க இயலும்.

மஹாராஜரே! உம்முடைய கிருபையின் பலத்தால் நாங்கள் செய்த வினைகளாலும் செய்யத் தவறிய வினைகளாலும் பின்னிக்கொண்ட வலையை அறுத்தெறியுங்கள். தீனர்களையும் பலவீனங்களையும், துக்கத்தில் இருந்தும் வேதனையில் இருந்தும் விடுவித்தருளுங்கள்.

நிர்மலமான சாயிராயரே! தீங்கு விளைவிக்கும் வாக்குவாதங்களையும் சர்ச்சைகளையும் உம்முடைய கருணையால் நிர்மூலமாக்கிவிடுங்கள். நாக்கு நாமஜபம் செய்வதிலேயே இனிமை காணட்டும்.

சங்கற்பங்களும் விகற்பங்களும் என் மனதில் இருந்து அழிந்து போகுமாறும், உடல், உற்றார், உறவினர், சொத்து, சுகம் இவையனைத்தையும் நான் அறவே மறந்து போகுமாறும் என்னுடைய இதயத்தில் இறையன்பை பொங்கச் செய்வீராக.

மற்ற விஷயங்கள் அனைத்தும் மறந்துபோகுமாறு உம்முடைய நாமஸ் மரணமே எந்நேரமே மனதில் ஓடட்டும். என்னுடய மனம் அலைபாய்வதையும்  சபலத்தையும் தொலைத்து விட்டு சாந்தமாக  ஒருமுகப்படட்டும்.

உங்களுடைய நிழலில் எங்களுக்கு இடம் கிடைத்தால் அஞ்ஞானமாகிய இரவு மறைந்து போகும். உம்முடைய பிரகாசமான ஒளியில் சுகமாக வாழ்வதைவிட வேறென்ன எங்களுக்கு தேவைப்படும்?

எங்களை முதுகில் தட்டியெழுப்பி தேவரீர் ஊட்டிய சரித்திரமாகிய அமிருதம் சாமானியான சுகிருதமா (நற்செயலா) என்ன?

அடுத்த அத்தியாயம் இதைவிட இனிமையானது! செவிமடுப்பவர்களின் ஆவலை திருப்தி செய்யும். சாயியின் மீதிருக்கும் அன்பு பெருகும்; சிரத்தை திடப்படும்.

தம் குருவின் பாதங்களை கைவிட்டுவிட்டு ஒருவர் சாயி தரிசனத்திற்கு வந்தார். ஆயினும், அவர் தம்முடைய பாதங்களில் வணங்கிய பிறகு, வந்தவரின் குருவின் ஸ்தானத்தை (உயர்வை) நிலைப்படுத்தியும் உறுதிப்படுத்தியும் ஆசீர்வதித்தார் சாயி.

அதுபோலவே, செல்வம் மிகுந்திருந்தும் வருத்தத்திலாழ்ந்த இல்லறத்தார் ஒருவர் மனைவியுடனும் மகனுடனும் சாயி தரிசனத்திற்கு  வந்தார்.