ஷீர்டி சாயி சத்சரிதம்
"கண்விழித்து என்ன நடந்ததென்று தெரிந்துகொண்டபோது நான் கண்ணீர் விட்டு அழுதேன். நான் முப்பதாயிரம் ரூபாயை இழந்துவிட்டேன். என்னுடைய மனம் வருத்தம் நிறைந்து கலங்கியது. -
"பணம் பூராவும் வங்கி நோட்டுகள். இந்த திடீர் இழப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி என்னுடைய இதயத்தைத் தாக்கியது. மாளிகையின் யஜமானராகிய பிராமணர் எனக்கு ஆறுதல் சொன்னார். -
"எனக்கு அன்னமும் பானமும் ஏற்கவில்லை. பதினைந்து நாள்கள் நான் வராந்தாவில் ஒரே இடத்தில பித்துபிடித்ததுபோல பரிதாபகரமாக உட்கார்ந்திருந்தேன். -
"பதினைந்தாவது நாள் முடியும்போது, எதிர்பாராமல் ஒரு பக்கீர் மறைபொருள் கொண்ட சித்தர் பாடல்களை பாடிக்கொண்டு தெருவழியே சென்றார். நான் அழுதுகொண்டிருந்ததை பார்த்தார். -
"என்னுடைய துக்கத்திற்குக் காரணமென்ன என்று கேட்டார். நான் நடந்ததையெல்லாம் விவரமாகச் சொன்னேன். பக்கீர் சொன்னார், 'நான் சொல்கிறபடி நீர் செய்தால் நிவாரணம் கிடைக்கும்.-
"நான் ஒரு பக்கீரைப்பற்றியும் அவர் இருக்குமிடம் ஆகிய விவரங்களையும் சொல்கிறேன். நீர் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடும். அவர் உம்முடைய செல்வம் திரும்பிவந்துசேரும்படி செய்வார்.-
"ஆனால், வேண்டுதல் நிறைவேறும்வரை நான் சொல்லும் விரதமொன்றை நீர் அனுஷ்டிக்கவேண்டும். உமக்கு மிகவும் பிடித்தமான உணவுப்பண்டத்தை விட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்தல் உமக்கு காரியசித்தி ஆகும்.-
"அவருடைய அறிவுரையைக் கேட்டு நான் அவர் குறிப்பிட்ட பக்கீரைச் சந்தித்தேன். இழந்த என் செல்வத்தைத் திரும்பப் பெற்றேன். பின்னர் நான் அந்த மாளிகையை விடுத்து, முன்போலவே சமுத்திரக்கரையோடு சென்றேன். -
"அலைந்து தெரிந்துகொண்டே சென்று கடைசியில் ஒரு கப்பலை அடைந்தேன். ஆனால், உள்ளே புக முடியவில்லை. ஆயினும், நல்ல சுபாவமுள்ள சிப்பாய் ஒருவர் எனக்கு எப்படியோ கப்பலில் ஓர் இடம் பிடித்துக்கொடுத்தார்.-
"தெய்வபலத்தால் காற்று அனுகூலமாக வீசியது; கப்பல் நேரத்தோடு அக்கறை சேர்ந்தது. பின்னர் நான் ஒரு குதிரைவண்டி பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். இந்தக் கண்களால் மசூதிமாயியைப் பார்த்தேன்".
பாபா சொன்ன கதை இங்கு முடிந்தது. கோவா விருந்தாளிகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று உணவளிக்கும்படி சாமாவுக்கு பாபா ஆணையிட்டார்.
தட்டுகள் வைக்கப்பட்டன. சாப்பிட உட்காரும்போது மாதவராவுக்கு ஆர்வம் எழும்பியது. விருந்தாளிகளை அவர் கேட்டார், "பாபா பாபா சொன்ன கதைகள் உங்களுக்குப் பாடம் ஆயிற்றா?-
"உண்மையைச் சொல்லப்போனால், சாயி பாபா இந்த இடத்தில பல வருடங்களாக நிலைபெற்றவர். அவர் சமுத்திரத்தையோ கப்பலையோ சிப்பாயையோ அறிய மாட்டார்.