ஷீர்டி சாயி சத்சரிதம்
33 . உதீயின்பிரபாவம் (பகுதி 1 )
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
எந்த ஞானிகளின் கிருபைமிகுந்த கடைக்கண்பார்வை மலைபோன்ற பாவங்களை அக்கணமே எரித்துவிடுமோ, கலியுகத்தின் மலங்களைக் கழுவி அடித்துக்கொண்டு போகுமோ, அவர்களை வணங்குவமாக.
அவர்களை செய்யும் உபகாரங்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் போதாது. அவர்கள் இயல்பாக பேசுவதே நமக்கு நலந்தரும் உபதேசம்; அதுவே முடிவில்லாத பரம சுகத்தைக் கொடுக்கும்.
'இது என்னுடையது, அது அவருடையது' என்னும் எண்ணமே அவர்களுடைய சித்தத்தில் எழுவதில்லை. உலகியல் வாழ்வுக்கே உரித்தான பேதங்காட்டும் எண்ணங்களுக்கு அவர்களுடைய இதயத்தில் இடமில்லை.
கடந்த அத்தியாயத்தில் குரு மகிமையின் ஓர் அம்சத்தை கேட்டீர்கள். கதை கேட்பவர்களே! இந்த அத்தியாயத்தில் உதீயின் சக்தியைப் பற்றிக் கேளுங்கள்.
பாபா கேட்டு கேட்டு தக்ஷிணை வாங்கினார். அதை ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் தருமம் செய்தார். மீதமிருந்த பணத்திற்கு விறகுகட்டைகளை வாங்கி குவியலாக சேமித்துவைத்தார்.
இவ்விதம் சேமித்த காய்ந்த விறகுகளை தமக்கெதிரில் இருந்த துனீயில் ஹோமம் செய்தார். அதிலிருந்து கிடைத்த அபரிதமான உதீ (சாம்பல்) பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது.
ஷிர்டியிலிருந்து வீடு திரும்பும் பக்தர்கள் பாபாவிடம் அனுமதி பெற வந்தபோது, அவர்களுக்கு உதீ அளிப்பது பாபாவின் பழக்கம். இது அனைவர்க்கும் தெரிந்திருந்தது.
வேறுவிதமாகச் சொன்னால், பாபா 'உதீ கொண்டு வா' என்று சொன்னாலே, வீடு திரும்ப அனுமதி கிடைத்துவிட்டதென்று அறிந்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் , பக்தர்கள் ஷிர்டியில் தங்கும்வரை, காலையோ நண்பகலோ மாலையோ எந்த நேரத்திலும் பாபா உதீ கொடுத்ததில்லை; வெறுங்கையுடன் தங்குமிடத்திற்கு திருப்பியனுப்பினார்.
இதுவே நித்திய கிரமமாக இருந்தது. இந்த உதீயின் தருமநெறிதான் என்ன? மசூதியில் எதற்காக எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும் அக்கினி? ஏன் இது ஒரு தினப்படி வழிமுறையாக இருந்தது?