ஷீர்டி சாயி சத்சரிதம்
"உலகவிஷய பாசங்களால் பிணைக்கப்பட்டிருக்கிறேனே; எப்பொழுது நான் அவற்றிலிருந்து விடுதலை பெறுவேன்?" என்று சொல்லித் துடிக்கும் முமுக்ஷுக்களைக் கரையேற்றுவதற்காகவே சாஸ்திரங்கள் ஏற்பட்டன.
அவ்வகையான உண்மையான பக்தரைக் கண்டதும் ஞானியர் இரக்கத்தால் உந்தப்பட்டு ஏதாவதொரு சாக்குபோக்கைக் கண்டுபிடித்து அவருக்கு சுலபமாக உபதேசம் செய்வர்.
இறைவனும் குருவும் பக்தனுடைய ஆளுமையில் இருக்கின்றனர். பக்தனுடைய மங்களைத்தையே சிந்தையிர்கொண்டு அவனுடைய சங்கடங்களையெல்லாம் தம் தலைமேல் ஏற்றுக்கொள்கின்றனர்.
சாயியின் விசித்திரமான செயல்முறைப்பற்றிய கதை இன்னொன்றை இப்பொழுது சுருக்கமாகச் சொல்கிறேன். எவரும் அறியாதவாறு ஒரு பெரிய நிர்மாணத் திட்டத்தை ஆரம்பித்துவைத்தார் சாயி!
வேலை சிறியதோ, பெரியதோ, காரணம் எப்பொழுதுமே சொல்லப்படவில்லை. வேலை மாத்திரம் கொஞ்சங்கொஞ்சமாக முன்னேறும். ஒரு வார்த்தையும் யாருக்கும் சொல்லப்படவில்லை.
திட்டம் இயல்பாக நேர்ந்ததுபோல் ஆரம்பிக்கப்படும். திட்டத்தின் மூலகாரணமோ பெயரோ எவருக்கும் தெரியாது. அதற்கு நேர்மாறாக , எல்லார் மனத்திலும் சம்பந்தமேயில்லாத காரணம் பதியவைக்கப்படும்.
"வாய்ப்பேச்சு வீரன் இதைச் சாதிப்பான்? வெறும் கர்ஜனை செய்யும் மேகம் என்ன மழையைக் கொடுக்கும்"? இப் பழமொழிக்கு நேரிடை அனுபவத்தை அளிப்பதுபோலவே பாபா செயல்பட்டார் என்பதில் சந்தேகமேயில்லை.
பாபாவைப் போன்ற அவதார புருஷர்கள் மக்களுக்கு நன்மை விளைவிக்கவே தோன்றுகிறார்கள். அவர்கள் விரும்பிய காரியம் முடிந்தவுடன் கடைசியில் உருவமில்லாத நிலையில் ஒன்றிவிடுகின்றனர்.
ஆனால், நாமோ, ஏன் பிறந்தோம்? - எங்கிருந்து வந்தோம்? - எங்கே செல்கிறோம்?- பிறவிக்கு மூலகாரணம் என்ன? - பிறவியின் பிரயோஜனம் என்ன? என்பதையெல்லாம் அறியமாட்டோம்.
விரும்பியதுபோல் வாழ்க்கை நடத்துகிறோம். இத்திரியங்களெல்லாம் சக்தியிழந்து போகின்றன. அந்நிலையிலும் ஒரு நல்ல எண்ணம் தோன்றுவதில்லை. என்றோ ஒருநாள் மரணம் வருகிறது.
அன்னை, தந்தை, மனைவி, மக்கள், உடன் பிறந்தவர்கள், இஷ்டமித்திர பந்துக்கள் ஆகியவர்கள் இறந்துபோவதை கண்களால் பார்த்தபிறகும் நமக்கு மனத்தில் நல்ல சிந்தனைகள் தோன்றுவதில்லை.
ஆனால், சாதுக்களும் ஞானிகளும் இவ்வாறல்லர். அவர்கள் தங்களுடைய அந்திமகாலம் எப்பொழுது என்பதை நன்கு அறிந்தவர்கள். கடைசிவரை ஒருமுக மனம் பெற்றவர்கள். நிர்வாண (முக்தி) நேரத்தையும் அறிந்தவர்கள்.