valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 26 December 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

இயற்கையாகவே மன்னிப்பளிப்பதில்  மிகச் சிறந்தவர்களாகவும், எந்நிலையிலும் பதட்டப்படாத அமைதியுடனும் கபடமற்றும் பொறுமையுடனும் இந்த ஞானிகள் ஒப்பற்ற திருப்தியுடன் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரே பாபா. 

மனித உருவில் காணப்பட்டாலும் பிரபஞ்சத்தில் உலவி வந்தாலும் அவர் நிர்குணமானவர்; நிர்விகாரமானவர்; சங்கம் தேவைப் படாதவர். அகமுகமாக முக்தியடைந்தவர். 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, "ஞானிகள் என்னுடைய ஆத்மா; ஞானிகள் என்னுடைய உயிருள்ள பிம்பங்கள்; அன்பும் கருணையும் உள்ள ஞானிகள் எல்லாரும் நானே" என்று கூறினார். -

"அவர்களை என்னுடைய பிம்பங்கள் என்று சொல்வதுகூடச் சரியாகாது; ஏனெனில், ஞானிகள் என்னுடைய நிச்சலமான, என்றும் மாறாத சொரூபங்கள். என் பக்தர்களின் சுமைகளை நான் ஞானிகளின் பொருட்டே சுமக்கிறேன். -

"வேறொன்று ஏதுமின்றி  ஞானிகளை சரணடைந்த பக்தர்களின் பாதங்களை நான் வணங்குகிறேன்" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஞானிகளுடைய பெருமையை உத்தவருக்கு உபதேசம் செய்தார். 

எல்லா ஆவல்களிலும் திருப்திஅடைந்தவர்.  தன்னிறைவு பெற்றவர். யதேச்சையாக கிடைத்ததில் சந்தோஷமடைவார். சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்டவர். 

சொற்களால் விவரிக்க முடியாத அந்த சக்தியே கண்ணால் காணும்படியான ரூபத்தில் பூமிக்கு வந்தது. சச்சிதானந்தமே அவர், என்று அறிந்துகொள்வதுதான் முழுமையான ஞானம். 


Thursday 19 December 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

ஒருவரை ஷிர்டியிலிருந்து தேசாந்திரியாக வெகுதூரம் அனுப்பி விடுவார். மற்றவரை ஷிர்டியிலேயே தனிமையில் வாழச் செய்வார். மற்றொருவரை வாடாவை விட்டு வெளிவராமலேயே இருக்கச் செய்து, தாம் நியமித்தவாறு புராணங்களை பாராயணம் செய்யச் சொல்வார். 

பல ஆண்டுகள் இம்மாதிரி அப்பியாசங்களில்  ஈடுபட்டால், பாபாவின் உருவமற்ற இருப்பின்மேல் ஏக்கம் அதிகமாகி, உட்கார்ந்துகொண்டிருக்கும் போதும் உறங்கும்போதும் உணவருந்தும் போதும் எந்நேரமும் பாபா அண்மையில் இருப்பதை பக்தர்கள் உணர்வார்கள். இச் செயல்பாடுகளின் நோக்கம் இதுவே. 

நசித்துப் போகும் தன்மையையுடைய இவ்வுடல் என்றோ ஒருநாள் மரணத்தை சந்திக்கப் போகிறது. ஆகவே, பக்தர்கள் மரணத்தை நினைத்து சோகமடையாமல், ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனிடமே மனதை நிலைக்கச் செய்ய வேண்டும். 

பலவிதமான செழிப்புகளுடன் நம்முன் தோன்றும் காட்சிகள், தோன்றா நிலையில் இருக்கும் இறைவனிடமிருந்து  தோன்றியவை அனைத்தும் அவனிடமே திரும்பிச் சென்று  விடும். 

பிரம்மாவிலிருந்து புல் பூண்டு வரை, சிருஷ்டி அனைத்தையும் நாம் நோக்கினும் தோன்றா நிலையில் இருக்கும் இறைவனிடமிருந்து தோன்றியதால், மறுபடியும் அவை தோன்றா நிலையிலேயே சென்றடைய வேண்டும். 

ஆகவே, யாரும் எப்பொழுதும் மரணமடைவதில்லை. பாபா விஷயத்தில் மரணம் எப்படி உண்மையாக இருக்க முடியும்? ஸ்ரீ சாயி நித்திய சுத்தர்; புத்தர்;  மரணமற்றவர். 

சிலர் அவரை இறைவனுடைய அடியார் என்று சொல்லலாம்; சிலர் அவரை மகா பாஹவதர் என்று சொல்லலாம். ஆனால், நமக்கு அவர் சாக்ஷாத் கடவுளின் அவதாரமே!

அவதார புருஷர்களின் நிலையும் இதுவே. அவர்கள் தோன்றுகின்றனர். மறைகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை நெறிமுறைகளால் உலகத்தை தூய்மையாக்குகின்றனர். 



Thursday 12 December 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

சிலை, யாக குண்டம், அக்கினி, ஒளி, சூரிய மண்டலம், நீர், பிராமணர் ஆகிய வழிபாட்டுக்குரிய புனிதமான ஏழு பொருள்களுக்கும் இயற்கை சக்திகளுக்கும் மனிதர்களுக்கும் மேலானவர் குருராஜர். வேறெதிலும் மனதைச் சிதறவிடாது ஒருமுகமாக அவரை வழிபடுவோம். 

அனந்நியபாவத்துடன் (பதிவிரதையை ஒப்ப) குருவினுடைய பாதங்களில் சரணடைந்துவிட்டால், குருமாத்திரம்  அல்லர், இறைவனும் பிரீதி அடைவான். குரு வழிபாட்டின் அற்புதம் இதுவே! குருபக்தர்கள் இதை சுயமாக அனுபவிக்க வேண்டும். 

குருபக்தருக்கு 'உடல்தான் நான்' என்னும் உணர்விருக்கும்வரைதான் அவருக்கு மனித வடிவில் ஒரு குரு தேவைப்படுகிறார். 'நான் கேவலம் இவ்வுடல் அல்லேன்' என்னும் விழிப்பை பெற்றவருக்கு நிராகாரமான (உருவமே இல்லாத) குருவே தேவையை நிறைவேற்றுகிறது. இது சாஸ்திரங்களின் கூற்று. 

தியானம் செய்வதற்கு ஓர் உருவம் கிடைக்காதபோது, பக்தி பாவம் வெளிப்பட இயலாது. அவ்விதமாக பக்தி வெளிப்படாதபோது, அரும்பாக இருக்கும் மணமலர் விகசிப்பதில்லை. 

மலராத இவ்வரும்பால் மணம் கொடுக்க முடியாது; தேனும் அளிக்க முடியாது. தேன்வண்டும் இவ்வரும்பை ஒருபோதும் வட்டமிடுவதில்லை. 

குணங்களுடன் கூடிய இறைவனுக்கு உருவம் உண்டு. நிற்குணமான இறைவனுக்கு உருவமேதும் இல்லை. உருவமுடைய இறைவனும் உருவமில்லாத இறைவனும் ஒன்றே; இங்கு வேறுபாடு ஏதும் இல்லை. 

நெய் கெட்டியாக இருந்தாலும், உருகிய நிலையில் ஓடும் திரவமாக இருந்தாலும், நெய், நெய்தான்.  உருவமற்ற இறையும் உருவமுள்ள இறையும் ஒன்றுடன் ஒன்று இசைபட்டு இப் பிரபஞ்சத்தையே வியாபிக்கிறது. 

கண்கள் திருப்தியடையும் வரை தரிசனம் செய்யவும், எங்கிருந்து ஞானம் மடைதிறந்தார் போலவும் நேரிடையாகவும் பாய்கிறதோ அப்பொற் பாதங்களின் மேல் சிரத்தை தாழ்த்தவுமே மனம் விரும்புகிறது. 

பக்தர்கள் அன்புடன் சம்பாஷனை செய்வதற்காகவும் சந்தனம் மற்றும் அக்ஷதை போன்ற பொருள்களை உபயோகித்து பூஜை செய்வதற்காகவும் இறைவன் உருவம் எடுக்க வேண்டியிருக்கிறது. 

உருவமற்ற இறைவனை மனத்தால் கற்பனை செய்வதைவிட உருவமுள்ள இறைவனைப் பார்ப்பது மிக எளிது.  உருவமுள்ள, குணமுள்ள, இறைவனிடம் அன்பும் பக்தியும் திடமாக வேரூன்றிய பிறகு, உருவமற்ற இறைவனை அறிந்துகொள்வது தானாகவே பின்தொடர்கிறது. 

நிர்க்குணமான, நிராகாரமான, இறைவனை பக்தர்களுக்குப் புரிய வைப்பதற்கு பாபா கையாண்ட உபாயங்கள் எதனை எத்தைனையோ! அவரவர்களுடைய ஆன்மீகத் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப பக்தர்களைத் தனித்தனியாக நிர்வகித்தார். பல சந்தர்ப்பங்களில் தரிசனம் தரவும் மறுத்தார். 



Thursday 5 December 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

கதையை விட்ட இடத்தில்  தொடர்வோம். பாபா ஒரு மரப்பலகையின் மீது உறங்கினார். அவர் ஏறியதையும் இறங்கியதையும் எவருமே கண்டதில்லை. அவருடைய வழிமுறைகள் புரிந்து கொள்ள முடியாதவை என்னும் உண்மையே இதிலிருந்து வெளிப்படுகிறது. 

ஹிந்துவோ, முஸ்லீமோ அவருக்கு இருவரும் சரிசமானம். நாம் இதுவரை ஷீரடியின் தெய்வமாகிய பாபாவின் வாழ்க்கை முறைகளை மேலோட்டமாக பார்த்தோம். 

இப்பொழுது குருவைப் பற்றிய இனிமையான நிகழ்சிகளால் அலங்கரிக்கப் பட்ட பதினொன்றாம் அத்தியாயத்தை ஆரம்பிப்போம். திடமான பக்தி பாவத்துடன் அதை சாயியின் சரண கமலங்களில் சமர்ப்பணம் செய்வோம். 

இதைச் செய்வதால் நாம் பாபாவின் சகுன (குணங்களோடு கூடிய) உருவத்தை தியாநித்தவர்களாவோம். இது ருத்ர ஏகாதசினி  ஜபம் செய்வதற்கு சமானமாகும். இந்த அத்தியாயம் பஞ்ச பூதங்களின்மேல் பாபாவுக்கு இருந்த ஆதிபத்தியத்திற்கு நிரூபனமளிது, பாபாவினுடைய  மகிமையை வெளிப்படுத்துகிறது. 

இந்திரனும் அக்கினியும் வருணனும் பாபாவினுடைய  சொல்லுக்கு எவ்விதம் கட்டுப்பட்டனர் என்பதை எடுத்து இயம்புகிறேன். கதை கேட்பவர்களே! கவனத்தை என்னிடம் திருப்புங்கள். 

பூரண விரக்தியின் வடிவமான, குணங்களோடு கூடிய, சாயியின் அவதார ரூபமே வேறெவரையும் நாடாத விசுவாசமான பக்தர்களின் நிஜமான விச்ராந்தி. அன்புடனும் பாசத்துடனும் அவருடைய உருவத்தை மனக்கண்முன் நிறுத்துவோமாக!

குரு வாக்கியத்தின் மீது அசைக்க முடியாத விசுவாசத்தை அவருக்கு ஆசனமாக அளிப்போம். எல்லா சங்கல்பங்களிலிருந்தும் துற வேற்கிறேன்  என்னும் சங்கல்பத்துடன் பூஜையை ஆரம்பிப்போம்!


Thursday 28 November 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

இறைவனை வணங்காதவர்களையும் நாமத்தைச் சொல்லாதவர்களையும் நம்பிக்கையும், பக்தியும் இல்லாதவர்களையும் பஜனை பாடாதவர்களையும் இறைநாட்ட முடையவர்களாக செய்வதற்கே ஞானிகள் இப்பூவலகில் அவதாரம் செய்கிறார்கள். 

கங்கை, பாகீரதி, கோதாவரி, கிருஷ்ணா, வடபெண்ணை, காவிரி, நர்மதை ஆகிய புண்ணிய நதிகள் சாதுக்களுடைய பாதங்களைத் தொடவேண்டுமென்று ஆவல் கொண்டு, அவர்கள் ஸ்நானம் செய்வதற்கு வருவார்களா என்று எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. 

இப்புண்ணிய நதிகள் உலகத்து மக்களுடைய பாவங்களைஎல்லாம் அடித்துச் சென்றாலும், தங்களுடைய பாவங்களை நிவிர்த்தி செய்து கொள்ள சாதுக்களின் பாதங்களையே நாடுகின்றன. 

பல ஜன்மங்களில் எய்த பாக்கியங்களாலேயே நாம் சாயியின் புனிதமான பொன்னடிகளை கண்டுபிடித்திருக்கிறோம். ஜனன மரண சுழல் நிறுத்தப் பட்டு விட்டது. பிறவிபயம் அறவே ஒழிக்கப் பட்டுவிட்டது. 

நன்மக்களான வாசகர்களே! சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு ஏற்கெனவே கேட்ட கதைகளை அசை போடுவோம். மேற்கொண்டு பிரவசனம் பிறகு தொடரும். 

ஹேமாட் சாயியிடம் சரணடைகிறேன். நான் அவருடைய பாத ரக்ஷைகளே. மேலும் மேலும் அவருடைய காதைகளைச் சொல்லி கொண்டே போவேன்; அதுவே, எனக்கு மேலும் மேலும் சுகத்தை அளிக்கும். 

ஆஹா! என்ன கவர்ச்சியான உருவம் சாயி மஹாராஜுக்கு! மசூதியின் விளிம்பில் நின்றுகொண்டு, பக்தர்களுடைய நல்வாழ்வையே மனதிற்கொண்டு அவர்களுக்கு உதீ பிரசாதம் விநியோகிப்பார். 

எவர் 'இந்த உலகமே ஒரு மாயை' என்றரிந்தவரோ, எவர் பிரம்மானந்தத்திலிடைவிடாது  லயிப்பவரோ, எவர் முழுமையாக விகசித்த (மலர்ந்த) மலர் போன்ற மனம் படைத்தவரோ, அவர் முன்னே நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். 

எவர் ஞானமென்னும் மையைக் கண்களில் தடவி பிரம்ம ஞானத்தை வழங்குகிறாரோ, அந்த மகிமை வாய்ந்த சாயியை நான் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். 

அடுத்த அத்தியாயம் இதைவிட மேன்மையாக இருக்கும். செவிகளின் வழியே உங்களுடைய இதயத்தில் புகுந்து எல்லா மலங்களையும் போக்கி, இதயத்தைப் புனிதமாகச் செய்துவிடும். 

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும்  சான்றோர்களாலும் உணர்வூட்டப் பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப் பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், ' சமர்த்த ஸ்ரீ சாயியின் மகிமை' என்னும் பத்தாவது அத்தியாயம் முற்றும். 



                       ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                        சுபம் உண்டாகட்டும். 


Thursday 21 November 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

துர்ச்சங்கம் என்றும் கெடுதலையே விளைவிக்கும்; நீங்கள் அறியாமலேயே உங்களைத் தடம் புரளச் செய்யும். மஹா துக்கங்களின் இருப்பிடம்; எல்லா சுகங்களையும் விரட்டிவிடும். 

சத்குரு சாயிநாதரைத்  தவிர வேறு யாரால் அம்மாதிரியான துர்ச்சங்கதினால் நமக்கு விளையக்கூடிய கெடுதல்களை விளக்க முடியும்? 

கருணையால் விளைந்து, ஆதங்கத்தினால் வெளிவந்த, சாயியின் திருவாய் மொழிகளை சிரத்தையுடன் பத்திரப் paduthungal. பக்தர்களே! இது துர்ச்சங்கதால் விளையக்கூடிய இன்னல்கள் வராது தடுக்கும். 

சிருஷ்டி செய்யப் பட்ட இவ்வுலகத்தை கண்களால் பார்த்தவுடனேயே, மனம் சௌந்தரியத்தினால் ஈர்க்கப் பட்டு ரமித்துப் போகிறது. அதே கண்களை அகமுகமாகச் செலுத்தினாலோ, மனம் ஞானிகளின் சத்சங்கத்தில் ஈடுபடுகிறது. 

நம்முடைய அஹங்காரத்தை நிர்மூலமாக அழிக்குமளவுக்கு சத்சங்கம் மகிமையுடயது. வேறு எந்த மார்க்கத்திற்கும் சத்சங்கதைப் போல ஆதனை புரியும் திறமை கிடையாது. 

ஞானிகளின் சங்கத்தையே எப்பொழுதும் நாடுங்கள்; மற்ற சங்கங்கள் அனைத்துமே குறையுடவை. சத்சங்கமே மருவில்லாதது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தூய்மையானது. 

சத்சங்கம் கிடைக்கும் பாக்கியம் இருந்தால், உபதேசங்கள் சஹஜமாக  வந்து சேரும். அந்தக் கணமே துர்ச்சங்கம் மறைந்தோடிவிடும் . மனம் சத்சங்கத்தில் மூழ்கி விடும். 

உலக விஷயங்களில் விரக்தி ஏற்படுவதே ஆன்மீக வாழ்வில் நுழைவதற்கு உபாயமாகும். சத் சங்க நாட்ட மெனும்  பலமான உந்துதல் இன்றி, 'நான் யார்' என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. 

சுகத்திற்குப் பிறகு துக்கம் விளைகிறது; துக்கத்திற்குப் பிறகுதான் சுகம் விளைகிறது; ஆனால், மானிடன் எப்பொழுதும் சுகத்திற்கு இன்முகம் காட்டுகிறான். துக்கத்திற்கு கடுமுகம் காட்டுகிறான். 

வரவேற்றாலும், முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், நடப்பது நடந்தே தீரும்; ஞானிகளுடைய சங்கம்தான் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அப்பால் கொண்டு செல்ல முடியும். 

சத் சங்கம் தேஹாபிமானத்தை நாசம் செய்கிறது. சத் சங்கம் ஜனன மரணச் சுழலை உடைக்கும். சத் சங்கம் உலக பந்தங்களை பட்டென்று அறுத்து, இறைவனை அடைய வழிவகுக்கிறது. 

உத்தமமான கதியை அடைவதற்கு சத்சங்கமே புனிதத்தை அளிக்கக் கூடியது. வேறெதிலும் கவனம் செலுத்தாது ஞானிகளை சரணடைந்துவிட்டால், நிஜமான விச்ராந்தி கிடைக்கிறது. 


Thursday 14 November 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

அக்காதைகளை கேட்பதாலும் சிந்திப்பதாலும் மனமொன்றிப் படிப்பதாலும் பரிசீலனை செய்வதாலும் தியானிப்பதாலும்  அனைவரும் தூய்மை அடைவர்.

பிரேமை சிறிதும் இல்லாத மனிதனே இல்லை. ஒருவருக்கு ஒன்றின் மேல் பிரேமை. எதைப் பிரேமை செய்கிறார்கள் என்பதில்தான் மக்கள் வேறுபடுகிறார்கள்!

சிலருக்கு சந்ததியின் மேல் பிரேமை. மற்றவர்களுடைய பிரேமை செல்வத்தின்மேல், புகழின் மேல், சம்பத்துகளின் மேல், உடலின் மேல், வீட்டின் மேல், உலகியல் கீர்த்தியின்  மேல் இருக்கலாம். சிலருக்கு அறிவை விருத்தி செய்துகொள்வதில் பிரேமை. 

ஒருவர் விஷய சுகங்களில் தாம் செலுத்தும் பிரேமை அனைத்தையும் ஒன்றுசேர்ந்து வடித்து, இறைவனின் பாதங்கள் என்னும் அச்சில் ஊற்றிவிட்டால், அது பக்தியாக மலரும். 

ஆகவே, உம்மிடம் இருக்கும் உலகியல் பொருள்கள் அனைத்தையும் சமர்ப்பித்துவிட்டு, உம்மையே சாயிபாதங்களுக்கு சரணமாக்கி விடுங்கள். அவர் உம்மிடம் கிருபை காட்டுவார்; இது ஒரு சுலபமான உபாயம். 

மக்கள் இம்மாதிரியான சொல்பமான சாதனைகளால் பெருலாபத்தை அடையலாம். நிலைமை இவ்வாறிருக்க, ஏன் இந்த உதாசீனம்?

'மிகப் பெரிய லாபங்களை அல்பமான சாதனைகளால் பெறமுடியுமென்றால், பொதுவாக ஏன் மக்கள் இதில் ஈர்ப்பு இல்லாமல் அசிரத்தையாக இருக்கிறார்கள்?" என்று கதை கேட்பவர்களுக்கு சந்தேகம் வருவது இயற்கையே. 


அதற்கு ஒரே காரணம்தான் உண்டு. இறைவனுடைய அருள் இல்லாது இந்த ஆவல் எழாது. இறைவன் அருள்செய்ய விரும்பி முகம் மலர்ந்துவிட்டால், கதை கேட்க வேண்டும் என்னும் விருப்பமும் ஆவலும் உடனே எழும். 

ஆகவே சாயியை சரணடையுங்கள். இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். இக்கதையை கேட்கவேண்டுமென்ற விருப்பமும் ஆவலும் எழும்; சுலபமான ஆன்மீக சாதனையை அடைந்தவர்கள் ஆவீர்கள். 

குரு சரித்திரத்தின் சத் சங்கத்தை நாடுங்கள்; உலகியல் சங்கிலிகளிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். இதில்தான் உங்களுடைய ஆன்மீக முன்னேற்றமே இருக்கிறது. இதைப் பற்றி யாதொருவிதமான சந்தேகமே வேண்டா. 

உங்களுடைய சாதுரியமான வாதங்களைஎல்லாம் விட்டு விடுங்கள். அதற்குப் பதிலாக, சாயி சாயி என்று ஸ்மரணம் (நினைத்தல் ) செய்யுங்கள். அக்கறைக்கு எவ்வளவு சுலபமாக நீந்திச் செல்கிறீர்கள் என்று பாருங்கள்! இதைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டா. 

இவை என்னுடைய வார்த்தைகளல்ல; சாயியினுடைய திருவாய் மொழியாகும். இவை வெறும் வார்த்தைகள்ள; எடை போடவும் முயற்சி செய்ய வேண்டா.  


Thursday 7 November 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

மேலெழுந்தவாறு பார்க்கும்போது அவர்  மற்றவர்களைப் போலவே பழக்க வழக்கங்கள் கொண்டவர் போன்று தெரிந்தார்; ஆனால், அகமுகமாக அவர் முற்றிலும் வேறுபட்டிருந்தார். உலகியல் செயல்பாடுகளில் அவர் மிக்க கவனமுடையவராகவும் கறாராகவும் இருந்தார். இது விஷயத்தில் அவருடைய திறமைக்கு ஈடு எவரிடமும் கிடையாது. 

பக்தர்களின் நன்மைக்காகவே ஞானிகள் அவதரிக்கின்றனர். அவர்களுடைய உணர்வுகள், உணர்ச்சி வெளிப்பாடுகள், உலகியல் செயல்பாடுகள் அனைத்துமே பக்தர்களுக்காகத்தான்; இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். 

சாயி மகாராஜ் சாந்தியின் இருப்பிடம்; சுத்தமான பரமானந்தம் வாசம் செய்யும் இடம். களங்கமில்லாத தூய இதயத்துடன் அவரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்கிறேன். 

மகாராஜ் தன்னிஷ்டமாக எவ்விடத்திற்கு நடந்து வந்தாரோ, அது மகா புண்ணியம் செய்த புனிதமான இடம். பூர்வ ஜன்மங்களில் ஏகமாக புண்ணியம் சேர்த்திரா விட்டால் இப்பொக்கிஷம்  கிடைப்பதரிது. 

சுத்தமானதும் பலமானதுமான கொட்டை, ரசமுள்ள ருசியான பழங்களைக் கொடுக்கும் என்பது பழமொழி. இது ஷிர்டி வாழ் மக்களால் பரீக்ஷை செய்து பார்க்கப்பட்டு விட்டது. 

பாபா ஹிந்துவமல்லர் . முஸ்லீமுமல்லர்; வர்ணத்திற்கும் ஆசிரமத்திற்கும் அப்பாற்பட்டவர் அவர். ஆனால், அவரால் உலகியல் துன்பங்களை நிர்மூலமாக அழிக்க முடியும். 

எல்லையற்ற, முடிவே இல்லாத, பரந்த வானத்தைப் போன்ற பாபாவினுடைய வாழ்கை சரித்திரம் எவருக்கும்  புரியாதது. அவரை தவிர வேறு யாரால் அதைப் புரிந்து கொள்ள முடியும்?

மனத்தினுடைய வேலை சிந்தனை செய்வது, ஆலோசிப்பது. அதைச் செய்யாமல் மனம் ஒரு கணமும் சும்மா இராது. புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பன்களைப் பற்றியே  சிந்திக்கும்; குருவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால் குருவைப் பற்றியே சிந்திக்கும்.  

எல்லா இந்திரியங்களையும் செவிப்புலனில் ஒன்றுசேர்த்து குருவினுடைய மகிமையை நீங்கள் கேட்ட போது , அதுவே குருவைப் பற்றிய சஹஜமான சிந்தனையாகவும் சஹஜமான கீர்த்தனையாகவும்  சஹஜமான பஜனையாகவும் அமைந்துவிட்டது. 

பஞ்சாக்னி தவம், யாகம், மந்திரம், தந்திரம், அஷ்டாங்க யோகம் - இந்த வழிபாட்டு முறைகள் அனைத்தும் உயர்குலத்து ஆண்களுக்கே உரியது. மற்றவர்களுக்கு இவற்றால் என்ன பிரயோஜனம்?

ஞானிகளின் காதைகள் அவ்வாறு அல்ல; அவை சகல ஜனங்களையும் நல்வழிப்படுத்தும். உலக வாழ்வின் பயங்களையும் இன்னல்களையும் அழித்துவிடும். உயர்ந்த ஆன்மீக வாழ்க்கைக்கு வழிகாட்டும். 



Thursday 31 October 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

பற்றற்றரவராகவும் தூய ஞானத்தின் உருவமாகவும் தம்மிலேயே லயித்தவராகவும் இருந்தார். காமமும் குரோதமும் அவருடைய காலடிகளில் ஓய்வெடுத்தன. அவர் ஆசையற்றவராகவும் எல்லா விருப்பங்களும் பூரணமாக நிறைவேறியவராகவும் இருந்தார். 

உலகவிவகாரங்களே பிரம்மமாக தெரியும் முத்திநிலையில் அவர் இருந்தார். பாவ புண்ணியங்களுக்கு அப்பாற்பட்ட, பூரணமான நிவிர்த்தி நிலை இது. 

தேஹாபிமானமே இல்லாத பாபா, மக்களுக்குள்ளே வித்தியாசம் பாராட்டுவதைக் கனவிலும் கருதவில்லை. நானாவல்லீ ஆசனத்திலிருந்து எழுந்துருக்கச் சொன்னபோது, உடனே அவருக்கு இடம் கொடுத்துவிட்டு நகர்ந்து விட்டார். 

இவ்வுலகத்தில் அவருக்கு அடைய வேண்டியது ஏதுமில்லை. பரவுலகத்தில் அடையவேண்டியதும் மீதி ஏதும் இல்லை. பக்தர்களுக்கு அருள்புரிவதர்கேன்றே அவதாரம் செய்த இந்த ஞானியின் மகிமை இவ்வாறே. 

கருணாமூர்த்தியான ஞானிகள் மக்களுக்கு அருள்புரிவதர்காகவே இப்பூவுலகில் அவதாரம் செய்கின்றனர். பிறருக்கு நன்மை செய்வதற்காகவே பூரண கிருபையுடன் செயல்படுகின்றனர். 

சிலர் ஞானிகளுடைய மனம் வெண்ணையைப் போல் இளகியது என்று கூறுகிறார்கள். வெண்ணை சூடுபடுத்தினால்தான் உருகுகிறது. ஞானிகளுடைய மனமோ, மற்றவர்கள் துன்பத்தினால் தாபமடைவதைக் கண்டே உருகிவிடுகிறது. 

நூறு இடங்களில் தையல் போட்ட கப்ணியை அணிந்து கொண்டும், கரடுமுரடான கோணிப்பையை ஆசனமாகவும் படுக்கையாகவும் உபயோகித்துகொண்டும், இதயத்தில் எந்தவிதமான ஆசையும் இல்லாமல் வாழ்பவருக்கு வெள்ளி சிம்மாசனம் எதற்கு?

அம்மாதிரியான சிம்மாசனம் அவருக்கு ஒரு தொந்தரவாகத்தான் இருக்க முடியும். இருப்பினும், அதை பக்தர்கள் பின்னாலிருந்து அவருக்கடியில் திணிக்க முயன்டால், அவர்களுடைய அன்பையும் பக்தியையும் மதிக்கும் வகையில், அதை எதிர்த்து அவர் போராடப் போவதில்லை. 

நிர்மலமான ஷிர்டி என்னும் நீர்நிலையில் ஓர் அழகான தாமரை பாபாவின் ரூபத்தில் பூத்தது. விசுவாசமுள்ளவர்கள் அதன் மணத்தை  மூக்கால் நுகர்ந்து ஆனந்தமடைந்தனர். நம்பிக்கையும் பாக்கியமுமற்ற தவளைகள் சேற்றிலும் சகதியுலுமே உழன்று கொண்டிருந்தன. 

பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்த்ரியங்களை பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ, யந்திர பூசையையோ, யாருக்கும் போதிக்கவோ விதிக்கவோ இல்லை. பக்தர்கள் காதில் மந்திரங்கூட ஓதவில்லை. 


Thursday 24 October 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

ஓ, பாபா எவ்வளவு அடக்க முதியவராக இருந்தார்! எளிமையாக இருப்பதற்கு எவ்வளவு ஆவல்! எவ்வளவு தூய்மையான, அஹங்காரமற்ற நிலை! எவ்வளவு மரியாதை!

பாபா மேற்கண்டவாறு கூறிய நிகழ்ச்சி பரிசுத்தமான உண்மை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. இதைச் சொன்னது பாபாவுக்கு இழிவு என்று யாராவது நினைத்தால், அவர் என்னை மன்னித்துவிட வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன். 

என்னுடைய பேச்சு அசிங்கப்பட்டு விட்டது எனில், அதைக் காது  கொடுத்து கேட்ட பாவத்தை நீங்கள் நிவிர்த்தி செய்து கொள்ள வேண்டுமெனில், சாயி நாமத்தை ஜபம் செய்வோம்; சகல தோஷங்களும் அகன்று விடும்.

சாயியினுடைய அருள் பல ஜன்மங்களில் செய்த தவத்தால் கிடைத்த பயன், தாகத்தால் தவிக்கும் பயணி தண்ணீர் பந்தலைக் கண்டவுடன் மகிழ்ச்சியடைவது போல் நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

சுவையுணர்வு பலவித ருசிகளையும் வாசனைகளையும் விரும்பியது போல் பார்வையாளர்களுக்கு தெரிந்த போதிலும், அவருடைய நாக்கு சுவையே அறியாததால் அவருக்கு அந்த உணர்வே கிடையாது. 

புலன்களுக்கு ஆசையே இல்லாதபோது அவற்றிலிருந்து வரும் இன்பங்களை ஆர் எவ்வாறு அனுபவிக்க முடியும்? அவ்வின்பங்களுக்குப் புலன்களை உசுப்பிவிடக் கூடிய சக்தியே இல்லாதபோது அவர் எப்படி அத்தளைகளில் மாட்டிகொள்வார்?

கண்கள் எதிரில் வந்ததைப் பார்த்தன; ஆனால், அவருக்கு எதையும் பார்த்த உணர்வு ஏற்படவில்லை. ஏனெனில், அவருக்கு எதையும் பார்த்து என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இல்லை. 

ஹனுமார் லங்கோடுடன் பிறந்தார் என்பதும் (பிரமச்சரியத்தின் அடையாளம்) அவருடைய தாயாரையும் ஸ்ரீராமரையும்  தவிர வேறு எவருமே அதைப் பார்தத்தில்லை என்பதும் புராண வரலாறு. பிரம்மச்சரியத்தில் ஹனுமாருக்கு ஈடாக வேறேவரைச் சொல்ல முடியும்?

தாயே பிறவி உறுப்புகளை பார்த்ததில்லை என்று சொல்லும்போது மற்றவர்களைப் பற்றி என் சொல்வது? பாபாவினுடைய பிரமச்சரியமும் அவ்வாறானதே ; பூரணமானது; அபூர்வமானது. 

அவர் எப்பொழுதும் இடுப்பில் ஒரு லங்கோடு உடுத்திக் கொண்டிருந்தார். சிறுநீர் கழிப்பதை தவிர பிறவி உறுப்புக்கு வேறு வேலையே இல்லை. ஆடுகளின் தொண்டைக்கருகில் தொங்கும் இரண்டு சதைக் கோளங்களை போல, இருக்க வேண்டும் என்பதற்காகவே இருக்கும் உறுப்பைப் போன்ற நிலைமை. 

பாபாவினுடைய பௌதிக உடலைப் பொறுத்தவரை இதுதான் நிலைமை. உடல் உறுப்புகள் அனைத்தும் அவற்றின் வேலைகளைச் செய்தாலும், புலனின்பங்களை நாடும் எந்த விதமான ஆசையும் இல்லை; ஆசைகள் பற்றிய விழிப்புணர்வே இல்லை!

சத்துவம், இராஜசம், தாமசம், ஆகிய மூன்று குணங்களும் அவருடைய உடலுறுப்புகளில் இருப்பது போல் வெளிப்பார்வைக்கு தெரிந்தது; 'செயல் புரிபவரைப் போலக் கூடத் தென்பட்டார். ஆனால் , உண்மையில் அவர் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டு, உடலின்மீது  எவ்விதமான பற்றும் இல்லாமல் இருந்தார். 



Thursday 10 October 2013

ஷிர்டி சாயி சத் சரிதம் 

மொழி சரளமாகவும் கருத்து வெளிப்பாடு நேரிடையாகவும் புலமையின் சாயல் ஏதுமில்லாமலும் இருந்தபோதிலும், சொற்களின் மூலமாக வெளிப்பட்ட கவிநயம், பண்டிதர்களும் தலையாட்டி ரசிக்கும்படி இருந்தது! 

உயர்ந்த கவிதை பரிசுத்தமான அன்பின் நேர்மையான வெளிப்பாடு அன்றோ? கேட்பவர்கள் இதை இம் மகளிரின் சொற்களில் உணர முடியும். 

சாயிபாபா விரும்பினால், ஷீரடியின் மகளிர் பாடிய எல்லாப் பாட்டுக்களையும் ஒன்று சேர்த்து ஒரு தனி அத்தியாயமாகவே என்னால் செய்ய முடியும். உங்களுக்கும் இப்பாட்டுகளைக் கேட்கவேண்டுமென்ற ஆசை நிறைவேறும். 

உருவமில்லாத இறைவன் பக்தர்களின் மேல் கொண்ட கிருபையினால், சாயியுனைடைய உருவத்தில் ஷீரடியில் தோன்றினான். அவனை அறிந்து கொள்வதற்கு, முதலில், அஹங்காரத்தையும் எல்லா ஆசைகளையும் பாசங்களையும் விட்டு விட வேண்டும். பக்தியாலும் பிரேமையாலும்தான் அவனை அறியமுடியும். 

ஷிர்டி மக்களின் கூட்டுப் புண்ணியம் பூரணமாக நிறைந்த பிறகு, பிராப்த காலத்தில்  பழுத்து, சாயி என்னும் மூளை விட்டிருக்கலாம். இது சில காலம் கழித்து ஷீரடிக்கு வந்து மக்களுக்குப் பலன் அளித்தது. 

விவரிக்கமுடியாத சக்தி தன்னை வெளிப்படுத்திக் கொண்டது; ஜன்மமில்லாதது ஜென்மத்தை ஏற்றுக் கொண்டது. உருவமில்லாதது உருவெடுத்தது. கருணையின் ரசம் மனித உருவெடுத்தது. 

புகழ், செல்வம், வைராக்கியம், ஞானம், பேராற்றல், கோடை - இந்த ஆறு மகோன்னதமான குணங்கள் அவரை அலங்கரித்தன. 

பாபாவினுடைய நிக்ரஹம் (வேண்டாமென்று ஒதுக்குதல்) அசாதாரணமானது; தோன்றா நிலையில் எதையும் தம்முடையதாக வைத்துக் கொள்ளாதவர், பக்தர்களுக்கு அருள் செய்வதற்காக உடலை ஏற்றுக் கொண்டார். 

ஆஹா ! அவருடைய கிருபைதான் என்னே! பக்தர்கள் அவரிடம் நம்பிக்கையும் அன்பும் செலுத்தினர். ஆனால், அவருடைய அலங்கரித்தன. 

வாக்கின் தேவதையாகிய சரஸ்வதியும் சொல்லத் துணியாத அவருடைய வார்த்தைகள், கேட்டவர்களை லஜ்ஜையால் தலை குனியச் செய்தன. சாயி இவ்வார்த்தைகளை பக்தர்களின் நல்வாழ்வை மனத்திற்கொண்டே  பேசினார். 

இந்த வார்த்தைகளை நான் தெரிவிப்பதைவிட மௌனமே சிறந்தது. இருப்பினும் கடமை தவறக் கூடாது என்னும் காரணத்தால் சொல்லியே தீர வேண்டியிருக்கிறது.

பக்தர்களின்மீது கருணை கொண்ட சாயி, மிக்க பணிவடக்கத்துடன் கூறினார்; "அடிமைகளுக்கு அடிமையாகிய நான் உங்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறே; உங்களுடைய தரிசனத்தை நாடுகிறேன். -

"உங்களுடைய மஹா கருணையினால்தான் நான் உங்களை சந்திக்க நேர்ந்தது. உங்களுடைய மலத்தில் இருக்கும் புழு நான். இந்த அந்தஸ்த்தினால்  நான் சிருஷ்டியிலேயே மிக்க பாக்கியசாலி".


Thursday 3 October 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

சாயி நியத பிரிவை சேர்ந்தவர். அவருடைய லீலைகளை நான் எவ்வாறு முழுமையாக விவரிக்க முடியும்? அவர் என்னுடைய புத்திசக்தியை  எப்படித் தூண்டுகிறாரோ, அப்படியே இப்பிரவசனம் உருவெடுக்கும். 

உலகியல் கலைகளுக்கும் வித்தைகளுக்கும் அநேக குருமார்கள் உண்டு. ஆனால், யார் நமக்கு ஆத்மா ஞானத்தை அளிக்கிறாரோ, அவரே சத்குரு. சத்குருவே சம்சாரக் கடலின் மறுகரையை காட்ட முடியும்; அவருடைய மகிமை எண்ணத்திர்கப்பார் பட்டது. 

யார் பாபாவை தரிசனம் செய்யச் சென்றாலும், அவருடைய இறந்த கால, நிகழ்  கால, எதிர்கால ரகசியங்கள் அனைத்தும் அவர் கேட்காமலேயேஅவருக்குச் சொல்லப் படும். 

இறைவனின் படைப்புகள் எல்லாவற்றிலும் அவனைக் கண்ட சாயி, நண்பனையும் விரோதியையும் சரிசமமாகவே பார்த்தார்; எள்ளளவும் வித்தியாசம் காட்ட வில்லை. 

அவர் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்கவில்லை. எல்லாரையும் ஒன்றுபோலவே சமமாகப் பார்த்தார். அபகாரம் செய்தவர்களுக்கும் அமுதத்தைப் பொழிந்தார். அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ அவருடைய சமநிலையைப் பாதிக்கவில்லை. விகற்பம் (மனக் கோணல்) அவரைத் தொடவேயில்லை. 

அழியக் கூடிய மனித உடலை ஏற்றுக் கொண்ட நிலையிலும், அவருக்கு உடல், வீடு, வாசல் போன்ற உலகியல் பொருள்களின் மேல் பற்றற்றே இருந்தார். அவ்வாறு யாராலாவது இருக்க முடிந்தால், அவருக்கு அந்த ஜென்மத்திலேயே முக்தி கிடைத்துவிடும். 

உணவு உண்ணும்போதும் நீரரந்தும் போதும் தூங்குமுபோதும் சாயியையே இடைவிடாது ஞாபகப் படுத்திக்கொண்டு , சாயி வழிபாட்டையே தெய்வ வழிபாடாகக் கொண்டவர்களான ஷிர்டி மக்கள் புண்ணியசாலிகள். 

கொட்டிலிலும் முற்றத்திலும் வேலை செய்யும்போதும் தானியத்தைக் குற்றும்போதும் எந்திரத்தில் மாவு அரைக்கும் போதும் தயிர் கடையும்போதும் அவர்களை பாபாவின் மகிமையைப் பாடச் செய்யும் பக்தியும் பிரேமையும் புனிதமானவை; புனிதமானவை. 

சாவகாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தபோதும் சாப்பிடும்போதும்  தூங்கும்போதுங்கூட, பாபாவினுடைய திருநாமம் அவர்களுடைய உதடுகளில் தவழ்ந்தது. பாபாவைத் தவிர வேறெந்த தெய்வத்தையும்  அவர்கள் வழிபடவில்லை. 

ஓ, ஷீரடியின் மகளிர் பாபவின்மேல் எவ்வளவு அன்பு பாராட்டினார்கள்! அவர்களுடைய அன்பார்ந்த பக்தி எவ்வளவு இனிமையானது! இம்மாதிரியான தோய அன்புதான், மகிழ்ச்சி தரும் பாட்டுகளை கவனம் செய்வதற்குண்டான உணர்வை ஊட்டுகிறது. பாண்டித்தியம் இங்கே செல்லாது. 


Thursday 26 September 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

ஒருவருடைய உலகியல் முன்னேற்றத்திற்கும் ஆன்மீக முன்னேற்றத்திற்கும் இந்த உபதேசம் நன்மையளிக்க கூடியது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், மகளிர் , பிற்படுத்தப்பட்டோர், அனைவருமே இந்த நேர்வழிப் பாதையில் நடக்கலாம். 

கனவில் கண்ட ராஜ்ய  வைபவங்கள் விழித்துக் கொண்டவுடனே மறைந்துவிடுவது போலவே, இவ்வுலக வாழ்க்கை ஒரு மாயத்தோற்றம் என்று பாபா கூறுவார். 

எவர் 'இவ்வுலக வாழ்வின் சுகமும் துக்கமும் மாயை' என்னும் பிரபஞ்ச தத்துவத்தை ஏற்றுக் கொண்டு வாழ்கிறாரோ, அவர் சுகதுக்க பிரமையைத் தம்முடைய வாழ்நெறியால் வென்று முக்தியடைகிறார். 

சிஷ்யர்களின் உலக பந்தங்களை கண்டு அவருடைய இதயம் கருணையால் துடித்தது. அவர்களை எப்படி தேஹாபிமானத்தை விட்டு விட வைப்பது என்பது பற்றியே பாபா இரவு பகலாக சிந்தித்தார். 

'யானும் இறைவனும் ondre' என்னும் பாவமும் அகண்டமான ஆனந்த நிலையும் உருவெடுத்து வந்து, எந்நேரமும் நிர்விகல்ப சமாதியில் திளைத்தது. அவரிடம் பற்றற்ற நிலையும்  துறவும் அடைக்கலம் புகுந்தன. 

வீணையையும் தாளத்தையும் கையிலேந்தி, பரிதாபமான தோற்றத்துடன் வீடு வீடாக அலைந்து கை நீட்டுவது என்பது பாபாவுக்கு என்றுமே தெரியாது. 

மக்களைப் பிடித்து, அவர்களுடைய காதில் பலவந்தமாக ஏதோ ஒரு மந்திரத்தை ஓதி, அவர்களை சிஷ்யர்களாக மாற்றி, பணத்திற்காக அவர்களை ஏமாற்றும் குருமார்கள் எத்தனை  எத்தனையோ !

தாங்களே அதர்ம நெறியில் வாழ்ந்துகொண்டு, சிஷ்யர்களுக்கு தருமா நெறியை போதனை செய்வர். எப்படி இந்த குருமார்கள் தங்கள் சிஷ்யர்களை சம்சாரக் கடலைத் தாண்ட வைத்து, ஜனன மரண சுழலிலிருந்து  விடுதலை பெற்றுத் தர முடியும்?

தம்முடைய தருமா நெறிப் பெருமையை விளம்பரம் செய்து கொள்ள வேண்டும், உலகத்தை அதை ஏற்றுக்கொள்ளச் செய்வதில் வெற்றி பெற வேண்டும், என்ற எண்ணமே இல்லாத தனித்தன்மை கொண்ட மூர்த்தியாக சாயி விளங்கினார். 

தேஹாபிமானதிற்கு இடமே அளிக்காமல், அதே நேரத்தில் பக்தர்களின் மீது அத்தியந்தமான பிரீத்தியை செலுத்தும் மாண்புடையவர் இந்த சாயி. 

குருமார்களில் இரண்டு வகையுண்டு. 'நியத' (இறைவனால் நியமிக்கப்பட்டவர்), 'அநி யத ' (இறைவனால் அவ்வாறு நியமிக்கப்படாதவர்) . இவ்விருவகை குருமார்களின் செயல்பாட்டு  முறைகளைக் கதை கேட்பவர்களுக்கு விளக்கம் செய்கிறேன். 

நற்பண்புகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்து மனத்தைத் தூய்மைப் படுத்தி, சிஷ்யனை மோக்ஷமார்கத்தில்  வழிநடத்துவதற்கு உண்டான வரபிரசாதத்தை மாத்திரம் உடையவர் 'அனியத ' குரு. 

ஆனால், 'நியத' குருவினுடைய சம்பந்தமோ, துவைத பாவத்தை அழித்து, 'தத்வமசி' (நீயே அதுவுமாக இருக்கிறாய்) என்னும் சாமவேத மகாவாக்கியத்தின் பொருளை நேரிடையாக உள்ளுக்குள்ளே மலரச் செய்கிறது. 

இம்மாதிரியான 'நியத' குருமார்கள் தோன்றா நிலையில் பிரபஞ்சமெங்கும் வியாபிதிருக்கின்றனர். பக்தர்களுடைய நன்மைக்காக உருவமெடுத்துக் கொண்டு அவதரிக்கின்றனர். தங்களுடைய வேலை முடிந்துவிட்டது என்று தெரியும் பொது உடலை உகுத்துவிடுகின்றனர். 





Thursday 19 September 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

அப்போது அவருக்கு 20 வயது; அடுத்த 60 ஆண்டுகள் அவர் ஷிர்டியிலேயே தங்கிவிட்டது எல்லாருக்கும் தெரிந்ததே!

சக வருஷம் 1840ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் விஜயதசமியன்று (கி.பி.1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி) பாபா மகாசமாதி அடைந்தார். 

பாபாவினுடைய  வாழ்நாள் 80 ஆண்டுகள். இதிலிருந்து பாபா பிறந்த ஆண்டு, சக வருஷம் 1760 (கி.பி. 1838) ஆக இருக்க வேண்டும் என்று அனுமானிக்கலாம். 

மரணத்தை வென்ற ஞானிகளின் ஜீவித காலத்தை நிர்ணயிக்க முடியுமா? அது செயற்கரிய செயலாகுமன்றொ !

சூரியன் உதிக்காமலும் அஸ்தமிக்காமலும்  நிலையாக ஓரிடத்திலேயே இருக்கும் உலகத்தில், பிறப்பும் இறப்பும் அற்ற நிலையில், மகான்கள் அவர்களுடைய இடத்திலேயே இருக்கின்றனர். 

கி.பி. 1681 ஆம் ஆண்டு ஞானி ராமதாசர் சமாதியடைந்தார். அதிலிருந்து இருநூறு ஆண்டுகள் முடிவதற்கு முன்பே இந்த மூர்த்தி அவதரித்தார். 

பாரத பூமி மொகலாயர்களின் படைகளால் தாக்கப்பட்டது. ஹிந்து அரசர்கள் தோற்கடிக்கப் பட்டனர். பக்தி மார்க்கம் படிப்படியாக நசித்துப் போயிற்று; மக்கள் அறவழியில் இருந்து புரண்டனர். 

அந்த சமயத்தில் ஞானி ராமதாசர் அவதரித்தார். சிவாஜி மஹாராஜின் உதவியுடன் ராஜ்யத்தையும் பிராமணர்களையும் பசுக்களையும் முஸ்லீம்களின் தாக்குதல்களிலிருந்து அவர் காப்பற்றினார் . 

இது நடந்து இரு நூற்றாண்டுகள் முடிவதற்குள்ளாகவே  மறுபடியும் அதர்மம் தலை தூக்கியது; ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது; பாபா இப்பிளவை சரிக்கட்ட முயன்றார். 

ராமனும் ரஹீமும் ஒன்றே. அவர்கள் இருவருக்குள் ஒரு வித்தியாசமும் இல்லை. இவ்வாறிருக்கும்போது அவர்களைப் பின்பற்றுபவர்கள் ஏன், ராமன் வேறு, ரஹீம் வேறு என வற்புறுத்த வேண்டும்? ஒருவரை ஒருவர் ஏன் வெறுக்க வேண்டும்?

ஓ! என்ன மூடத்தனமான குழந்தைகள் நீங்கள்.! நட்புறவின் பந்தங்கள் ஹிந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒன்று சேர்க்கட்டும். பரந்த மனப்பான்மையும் தர்ம சிந்தனையும் உங்களுடைய மனதில் ஆழமாக வேர்விடட்டும். 

வாதப் பிரதிவாதங்களும் சண்டையும் சச்சரவும் நமக்கு வேண்டா; ஒருவரோடொருவர் போட்டி போடுவதும் வேண்டா. அவரவர் அவரவருடைய ஷேமத்தை பற்றியோ விசாரம் செய்யட்டும். ஸ்ரீ ஹரி நம்மைக் காப்பார். 

யோகமும் யாகமும் தவமும் ஞானமும் ஸ்ரீ ஹரியை அடைவதற்குண்டான வழிகள். இவையனைத்தும் ஒருவரிடமும் இருந்தாலும், இதயத்தில் இறைவன் இல்லாவிட்டால் அவருடைய பக்தியும் வீண்; வாழ்க்கையும் வீண். 

"யாராவது உனக்கு அபகாரம் (கெடுதல்) செய்தாலும், அவர்களுக்குப் பிரதிகாரம் செய்ய வேண்டா; உபகாரமே செய்ய வேண்டும்."  இதுதான் பாபாவின் உபதேச சாரம். 


Thursday 12 September 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

செல்வத்தையோ  புகழையோ சிறிதும் விரும்பாமல் பிச்சை எடுப்பதையே பிழைப்பாக ஏற்றுக்கொண்டு , புலன்கள் அனைத்தையும் உள்ளே இழுத்துக் கொண்ட யோக நிலையில் அவர் வாழ்நாளை கழித்தார். 

ஒரு யதி  சந்நியாசியைப் போல உடை உடுத்திக்கொண்டு, தம்முடைய சட்காவை  சந்யாசிகள் எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டிய தண்டமாக கொண்டார். 'அல்லா மாலிக்' என்னும் வார்த்தைகளே அவருடைய இடைவிடாத ஜபம்; பக்தர்களிடம் அவர் காட்டிய பிரீத்தி அகண்டம். 

மானிட உருவத்தில் அவதரித்த சாயியின் உருவ லக்ஷணங்கள் இவ்வாறே; பூர்வ ஜன்மத்தில் சம்பாதித்த புண்ணியத்தில்தான் இப்புதையல் நமது கைகளுக்கு எதிர்பாராமலேயே கிடைத்திருக்கிறது. 

சாயி ஒரு சாதாரண மனிதரே என்று நினைப்பவர்கள் மந்தமதி படைத்தவர்கள்; துரதிர்ஷ்டசாலிகள். அவர்களுடைய விதி விசித்திரமானது! அரிதாகக் கிடைக்கும் இவ்வதிர்ஷ்டத்தை அவர்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும்?

சாயி ஆத்மபோததின் சுரங்கம்; பூரணமான ஆனந்தத்தை அனுபவிக்கும் விக்கிரஹம். சம்சார சாகரத்தை முழுமையாகவும் பாதுகாப்புடனும் கடப்பதற்கு அவரைச் சட்டென்று பற்றிக் கொள்வோமாக!

படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவிலிருந்து புல்பூண்டு வரை இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிலவியிருக்கும், அளவற்றதும் முடிவற்றதும் பின்னமில்லாததுமான முழு முதற்பொருளே பாபாவாக உருவெடுத்திருக்கிறது. 

கலியுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து இரண்டாயிரம் ஆண்டுகள்; இதில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு பாபா  அவதாரம் செய்திருக்கிறார். 

பாபாவினுடைய பிறந்த தேதி தெரியாமல், இந்தக் காலத்தை எவ்வாறு நிர்ணயம் செய்யமுடியுமென்று  கதை கேட்பவர்கள் இங்கு ஒரு சந்தேகத்தை எழுப்பலாம். ஆகவே, இப்பொழுது கவனமாகக் கேளுங்கள். 

புனிதமான ஷிர்டி கிராமவாசியாக இருக்க வேண்டுமென்று சங்கல்பம் செய்து கொண்டு ஒரு ஷேத்திர சந்நியாசியாக பாபா தமது கடைசி நாள் வரை 60 ஆண்டுகள் ஷீரடியில் வாழ்ந்தார். 

முதன்முதலாக, பாபா 16 வயது பாலகனாக ஷீரடியில் தோன்றினார்; அச்சமயத்தில் அங்கு 3 ஆண்டுகள் தங்கினார். 

பிறகு, அவர் ஷிர்டியிலிருந்து மறைந்து விட்டார்; மறுபடியும் தூர தேசமான நிஜாம் ராஜ்யத்தில் கண்டுபிடிக்கப் பட்டார். அதன்பிறகு அவர் கல்யாண கோஷ்டியுடன் ஷிரிடிக்கு வந்தார்; வந்தவர் ஷிர்டியிலேயே தங்கிவிட்டார். 


Thursday 5 September 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

அணிமா, மகிமா, லகிமா என்னும் அஷ்டமா சித்திகளும் நவநிதிகளும்  அவருடைய சன்னிதியில் கை கட்டி சேவகம் செய்தன. மரப்பலகை அவருக்கு ஒரு விளையாட்டு பொம்மையே!

புழு, எறும்பு, நாய், பறவை, மனிதர்கள், பெரியோர், சிறியோர், அரசன், ஆண்டி - அனைத்தையும் அவர் சரிசமமாகப் பார்த்தார். 

பார்வைக்கு அவர் ஷிர்டிவாசியைப் போலத் தெரிந்தார். மூன்றரை முழம் உயரமுள்ள உடலைத் தவிர வேறதையும் பெற்றிருக்க வில்லை. ஆயினும், புண்ணியங்களின் இருப்பிடமான அவர் எல்லாருடைய மனதிலும் வசிக்கிறார். 

அந்தரங்கத்தில் அவர் சங்கத்தை நாடாதவராகவும் பற்றற்றவராகவும் இருந்தார். வெளியுலகில் மக்களை நற்பாதையில்  செலுத்த வேண்டும் என்ற பலமான உந்துதல் இருந்தது. மனதுள்ளே நிராசையாக இருந்தார்; ஆனால், வெளிமுகமாக பக்தர்களின் மேல் பாசம் இருந்தது. 

அந்தரங்கத்தில் செயல்களுக்குப் பலனேதும் எதிர்பார்க்கவில்லை; பஹிரங்கத்தில் தெரிந்த, பக்தர்களின் நல்வாழ்வு பற்றிய அக்கறை பரிசுத்தமானது. அந்தரங்கத்தில் பரமசாந்தியின் இருப்பிடமான அவர், எப்பொழுதாவது கோபத்தையும் காட்டினார். 

அந்தரங்கத்தில் பர பிரம்மத்துடன் லயித்த நிலையில் இருந்தவர், பஹிரங்கத்தில் சில சமயம் பிசாசைப் போல் நடந்துகொண்டார். உள்ளே அத்வைத ஆனந்தத்தில் திளைத்த அவர், வெளியே உலகியல்  செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். 

சில சமயங்களில் மக்களின் மீது பிரேமை காட்டினார். சில சமயங்களில் கல்லெறிந்து அவர்களை விரட்டினார். சில சமயங்களில் சாபங்களையும் திட்டுகளையும் மழையாக பொழிவார். சில சமயங்களில் ஆனந்தமாக அணைத்துக்  கொள்வார். 

ஆனால், உண்மையில் அவர் சாந்தமுள்ளவராகவும் தம்மையே கட்டுப்படுத்திக் கொண்டவராகவும் பற்றற்றும் பொறுமையாகவும், எந்நேரமும் தியானத்தில் இருந்தவாறு தம்மிலேயே ரமித்து, பக்தர்களுக்கு இனிய மனமும் முகமும் காட்டினார். 

எப்பொழுது உள்முகமாகத் திருப்பப்பட்ட மனதுடன் ஆடாது அசையாது ஒரே தோரணையில் உட்கார்ந்து கொண்டு, இங்குமங்கும் அலைய வேண்டிய தொந்தரவு யாதுமில்லாமல், தம்முடைய சட்காவை  சன்னியாசியின் தண்டமாக கொண்டு அவருடைய வாழ்வு எந்தவிதமான கவலையுமின்றி சாந்தமாக இருந்தது. 



Thursday 29 August 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஜன்மத்தில் செய்த பாவங்களையும் அழிக்குமோ, அவருடைய பெருமையை பாடுவோமாக.

எட்டாவது அத்தியாயத்தில் மனித ஜன்மம் கிடைத்ததன் பயன் என்ன என்பது சொல்லப்பட்டது. ஒன்பதாவது அத்தியாயத்தில் பாபா பிச்சை எடுத்துப் பிழைத்ததன் சூக்குமமான காரணம் சொல்லப் பட்டது.

பாயஜாபாயி மதியத்தில் சோள ரொட்டியும் பாஜியும்  அளித்தது, குசால்சந்தின்  நல்வாழ்வுபற்றி பாபா கொண்ட அக்கறை, தாத்யா , மகால்சாபதி இவர்களுடன் பாபா உறங்கியது பற்றியும்கூட பிரவசனம் செய்யப் பட்டது. பக்தர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

கதை கேட்பவர்களே! பாபா எப்படி வாழ்ந்தார், எங்கு உறங்கினார், எவ்வளவு அலட்சியமாக சுற்றி வந்தார் (சூக்கும சரீரப் பயணங்கள்), என்பன சம்பத்தப் பட்ட சரித்திரப் பகுதியை இப்போது சொல்கிறேன்; கவனமாக கேளுங்கள்.

பாபாவினுடைய உலகியல் வாழ்க்கை எவ்வளவு போற்றுதற்குரியது! ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அவர் அன்னை; புலியும் ஆடும் பயமின்றிப் பிரேமையுடன் உலவி வந்த சூழ்நிலையை அளித்த, நம்பிக்கைகுந்த புகலிடம் அவர்.

செவிமடுப்பவர்களே! சாயி எப்படி வாழ்ந்தார்? எங்கு உறங்கினார்? என்பன பற்றியெல்லாம் இப்பொழுது சிரத்தையுடன் கேளுங்கள். பாபா வாழ்க்கை நடத்திய முறை இதுவே!

நான்கு முழம் நீளமும் ஒரு சாண்  அகலமுள்ள ஒரு மரப்பலகை இரண்டு பக்கங்களிலிருந்தும் கந்தைத் துணிகளால பிணைக்கப் பட்டு தூலத்தில் இருந்து ஓர் ஊஞ்சலைப் போல் தொங்கவிடப் பட்டிருந்தது.

அந்தப் பலகையின் மேல் பாபா தூங்கினார். அவருடைய படுக்கையின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் அகல் விளக்குகள் எரிந்தன. எப்பொழுது ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பது ஒருவருக்கும் தெரியாது.

அப்பலகையின் மேல் அவர் தலையைக் கவிழ்ந்துகொண்டு உட்கார்ந்திருப்பார். அல்லது உறங்கிகொண்டிருப்பார். ஆனால், அவர் எப்பொழுது பலகையின் மேல் ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பதை எவரும் பார்த்ததில்லை.

பலகை கந்தல் துணிப்பட்டைகளால் பிணைக்கபட்டிருந்தது; அது எப்படி பாபாவின் பளுவை தாங்கியது ? அஷ்டமஹா சித்திகள் ஒருவரிடம் உறைந்திருந்தால் பலகை எல்லாம் பெயரளவுக்கு தானே !

அணிமா  சித்தியைப் பெற்றவர், கண்ணில் விழும் தூசியலவிலுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம். ஈயினுடைய உருவத்திலோ, எறும்பினுடைய ரூபத்திலோ, புழுவினுள்ளோ  பாபா சுலபமாக சஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே.

அணிமா சித்தியை அடிமையாகக் கொண்டவருக்கு ஓர் ஈயாக மாறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வானத்தில் பறக்க முடிந்தவருக்கு  மரப்பலகை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?


Thursday 22 August 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

எவர் சகல உலகங்களின் நன்மைக்காக பாடுபடுகிறாரோ, எவர் பிரம்மதிலேயே சதா லயித்திருக்கிராரோ , அவரைப் பிரேமை நிரம்பிய மனத்தால் எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்போமாக!

யாரைப் பற்றிய நினைவே நம்மை ஜனன மரணச் சுழலிலிருந்து விடுவிப்பதற்கு போதுமானதோ, அந்த நினைவே ஆன்மீக பயிற்சிகளில் சிறந்த பயிற்சியாகும். இப்பயிற்சிக்கு ஒரு பைசாவும் செலவு இல்லை.

சொற்பப் பயிற்சியால் பெரும்பலன் அனாயசமாகக் கைக்கு வருகிறது. ஆகவே, உடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கும்போதே சதா இம்முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.

இதர தேவதைகள் அனைத்தும் மாயை; குருவே சாசுவதமான ஒரே தேவன். அவரிடம் விசுவாசம் செலுத்தினால், நம்முடைய தலைஎழுத்தையே மாற்றி விடுவார்.

எங்கே தூய நேர்மையான குரு சேவை இருக்கிறதோ, அங்கே சம்சார பந்தம் நிர்மூலமாகிவிடுகிறது. நியாயம், மீமாம்சை, போன்ற சாஸ்திரங்களைப் படித்துவிட்டு ஒரு தலை முடியை இரண்டாகப் பிளக்கும் விதண்டாவாதங்கள் செய்யவோ புத்திபூர்வமான பயிற்சிகளோ தேவையே இல்லை.

சத்குரு நாவாயைச் செலுத்தும்போது ஆதிபௌதிகம், ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம் ஆகிய இன்னல்களிலிருந்து விசுவாசமுள்ள பக்தர்கள் விடுவிக்கப் படுகிறார்கள்.

கடலைக் கடப்பதற்கு கப்பலின் தளபதியின்மீது விசுவாசம் வைக்க வேண்டும்; அதுபோலவே, சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு குருவின் மீது விசுவாசம் வைக்க வேண்டும்.

ஐக்கிய பக்தியை அடைந்தவர்களுக்குக் கைத்தலத்தில் இருப்பதை சுலபமாக அறிவது போன்று, குரு பரஞானத்தை அளிக்கிறார். தம்முடைய லீலையால், ஆனந்தத்தை லக்ஷணமாக  உடைய மோக்ஷத்தை அளிக்கிறார்.

எந்த சத்குருவின் தரிசனம் ஹிருதயத்தின் முடிச்சுக்களை அவிழ்க்கமுடிய்மோ, புலனடக்கம் கிடைக்கச் செய்யுமோ, முன்ஜன்மங்களில் சேர்த்த பாவமூட்டைகளையும் இந்த


Friday 16 August 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

"நீ எனக்கு என்ன கொண்டுவந்தாய்?" என்று கேட்டு அவனுக்கு  ஞாபகம் ஊட்டுவதற்கு பாபா முயன்றார். "ஒன்றுமில்லை" என்று அவன் பதில் சொன்னவுடன்,

"வேறு யாராவது உன்மூலம் எனக்கு ஏதாவது கொடுததுனுப்பினார்களா?"  என்று கேட்டு பாபா அவனுக்கு மறைமுகமாக  ஞாபகமூட்டினார். "இல்லை" என்று பையன் சொன்னவுடன் சமர்த்த  சாயி அவனை நேரிடையாகவே கேட்டார்.

"மகனே! நீ கிளம்பும்போது அன்னை எனக்காக அன்புடன் இனிப்புகள் கொடுத்தனுப்பவில்லை?" இவ்வாறு கேட்ட பிறகுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது!

பையன் வெட்கத்தால் குன்றிப் போனான். அதை எப்படி அவனால் மறக்க முடிந்தது! வெட்கத்தால் தலை குனிந்து பாபாவின் பாதங்களை தொட்டு மன்னிப்புகேட்டு வணங்கிவிட்டு ஓடினான்.

தான் தங்கி இருந்த இடத்திற்கு ஓடிச் சென்று பால்கோவாவை  எடுத்துக் கொண்டுவந்து பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தான். கைக்கு வந்து சேந்தவுடனே பாபா அதை வாயில் போட்டுக் கொண்டு அன்னையின் (ஸ்ரீமதி கட்) ஆசையை நிறைவேற்றினார்.

இவ்வாறு இம்மகா அனுபவரான சாயி, பக்தரின் விசுவாசத்தின்  ஆழத்திற் கேற்றவாறு அவருக்கு அனுபவங்களை கொடுத்து பக்தரின் அன்பையும் பக்தியையும் கௌரவிக்கிறார்.

இந்தக் கதைகளிலிருந்து வெளிவரும் மற்றொரு முக்கியமான பாடம், எல்லா உயிர்களிலும் நாம் இறைவனை காண வேண்டுறம் என்பதே. இதுதான் சகல சாஸ்திரங்களிலும்  சொல்லப் பட்டிருக்கிறது. இதுவே இங்கு நடைமுறைக்குக் கொண்டு வந்து காட்டப் பட்ட முடிவுமாகும்.

அடுத்த அத்தியாத்தை கேட்பதில், பாபா எவ்விதமாக வாழ்ந்தார். எங்கு, எந்த இடத்தில அவர் தூங்கினார் என்பன பற்றி தெரிந்து கொள்வீர்கள். கவனமாக கேளுங்கள்.

ஹேமாத் பந்த் சாயி பாதங்களில் சரணடைகிறேன். கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கதைகளை ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்; மேலும் சிந்திக்க வேண்டும்; அவ்விதம் செய்வது அவர்களுக்கு ஷேமத்தை அளிக்கும்.

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப் பட்டு, சாயி பக்தன் ஹேமாத் பந்தால் இயற்றப் பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரிதம்" என்னும் காவியத்தில் ஒன்பதாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத்குரு  சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்.


Thursday 8 August 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

அவர் கொண்டு வந்த தட்டில்தான் பரீத் இருந்தது; ஆகவே, அவருடைய மூட்டை முடிச்சுக்களில்  இன்னும் சில கத்தரிக்காய்கள் இன்னும் சில கத்தரிக்காய்கள் இருக்கலாம் என்று நினைத்தனர்.

ஸ்ரீமதி புரந்தரேவைக் கேட்டவுடன், காச்ர்யாவின் மீது பாபா கொண்ட திடீர் மோகத்தின் மர்மம் புலனாகிவிட்டது. பாபா ஏன் அதை அவ்வளவு விரும்பினார் என்பதும் எல்லாருக்கும் விளங்கி விட்டது.

ஒரு கத்தரிக்காயை சுட்டு, அன்று பரீத் செய்ததாகவும் இன்னொன்றை மறுநாள் காச்ர்யா செய்யலாம் என்று துண்டு துண்டாக நறுக்கி வைத்திருப்பதாகவும் ஸ்ரீமதி புரந்தரே விளக்கம் கூறினார்.

பின்னர், வாய்வார்த்தையாக எல்லாருக்கும் கத்தரிக்காய்களின் கதை ஆரம்பத்திலிருந்தே தெரிய வந்தது. சாயியின் எங்கும் நிறைந்த சக்தியை கண்டு எல்லாரும் ஆச்சரியமடைந்தனர்.

மற்றொரு சந்தர்ப்பத்தில், 1915 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஸ்ரீமதி தர்கத் ஒரு பால் கோவாவை பாபாவுக்குப் பிரேமையுடன் அனுப்பி வைத்தார்.

பாலாராம் மான்கர்  பரலோகவாசியாகிவிட்டார். மான்கரின் மகன் ஈமச் சடங்குகளை செய்ய ஷிர்டிக்குப் போகுமுன், தர்கட்  அவர்களிடம் விஷயத்தை சொல்வதற்காக வந்தான்.

தான் ஷீரடிக்கு போவதை தர்கத் அவர்களிடம் தெரிவிப்பதற்காக வந்தான்; ஸ்ரீமதி தர்கத் அவன் மூலமாக பாபாவுக்கு ஏதாவது தின் பண்டம் கொடுத்தனுப்ப வேண்டும் என்று விரும்பினார்.

வீடு முழுவதும் தேடியும் ஒரு பால்கோவா, அதுவும் ஏற்கெனவே நிவேதனம் செய்யப் பட்டது, அதைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை; பையனோ கிளம்புவதற்கு அவசரப் பட்டான்.

பையனோ  சாவுதீட்டில் இருந்தான்; வீட்டிலிருக்கும் ஒரே பால்கோவா (தூத் பேடா ) ஏற்கெனவே நிவேதனம் செய்யப் பட்டது; இருப்பினும் சாயிக்கு அர்ப்பணமாக அந்தப் பேடாவை  ஸ்ரீமதி தர்கட்  கொடுத்தனுப்பினார்.

"வேறு எதுவமே இல்லை; இந்தப் பால்கோவாவை எடுத்துக்கொண்டு போய்  அன்புடன் பாபாவுக்கு சமர்ப்பணம் செய். சாயி இதை விருப்பத்துடன் உண்பார்" என்றும் சொன்னார்.

கோவிந்த்ஜி (பாலாராம் மான்கரின்  மகன்) பால்கோவாவை எடுத்துக் கொண்டு போனான். ஆயினும், பாபாவை தரிசனம் செய்யச் சென்றபோது பால்கோவாவை தான் தங்கிய இடத்தில்  வைத்துவிட்டுச் சென்று விட்டான். பாபா பொறுமையாக இருந்தார்.

பிற்பகலில் மறுபடியும் சாயியின் தர்பாருக்கு வந்தான். இம்முறையும் பால்கோவாவை மறந்துவிட்டு வெறுங்கையுடன் மசூதிக்கு வந்தான்.


Thursday 1 August 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

"சில சமயம் நான் ஒரு நாய்; சில சமயம் நான் ஒரு பன்றி; சில சமயம் நான் ஒரு பசுமாடு; சில சமயம் ஒரு பூனை சில சமயம் ஓர் எறும்பு; ஓர் ஈ, ஒரு நீர் வாழ் பிராணி - பலவிதமான உருவங்களில் நான் இவ்வுலகில் உலவி வருகிறேன்.

"உயிருள்ள ஜந்துகள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே நான் விரும்பிகிறேன் என்று அறிந்துகொள்ளும். பேத புத்தியை விட்டுவிடும்; அதுவே என்னை வழிபடும் சிறந்த முறையாகும்."

இவை வெறும் வார்த்தைகளல்ல; தேவமிருமதமான திருவாய் மொழியாகும். இதைக் கேட்ட அம்மையார் உணர்ச்சிவசத்தால் திக்குமுக்காடிப் போனார்; தொண்டை அடைத்தது; ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

இவ்வம்மையாரின் அன்பார்ந்த பக்தியை விளக்கும் இன்னுமொரு இனிமையான காதலி உண்டு. சமர்த்த  சாயி, பக்தர்களுடன் ஐக்கியமானவர் என்பதற்கு அது நிரூபணமாக அமைந்திருக்கிறது.

ஒரு சமயம் புரந்தரே என்ற பெயர் கொண்ட சாயி பக்தரொருவர் மனைவி மக்களுடன் ஷ்ரிடிக்கு  கிளம்பினார். இவ்வம்மையார் (ஸ்ரீ மதி தர்கட் ) அவர் மூலமாக பாபாவுக்குச்  சில கத்தரிக்காய்களை அனுப்பினார்.

ஒரு கத்தரிக்காயை பரீத் செய்தும் இன்னொன்றை காச்ர்யா செய்தும் பாபாவுக்கு திருப்தியாக உணவளிக்கும் படியாகப் புரந்தறேவின் மனைவியை வேண்டிக் கொண்டார்.

"அவ்வாறே செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஸ்ரீமதி புரந்தரே கத்தரிக்காய்களை
எடுத்துக் கொண்டு போனார். ஷீரடிக்கு போய்  பரீத் செய்து எடுத்துக் கொண்டு பாபாவுக்கு அளிப்பதற்காக மதிய உணவு நேரத்தில் ஹாரத்திக்கு பிறகு சென்றார்.

எப்பொழுதும் போல் நைவேத்தியத்தை ஒரு தட்டில் பாபாவுக்காக வைத்துவிட்டு தங்குமிடத்திற்கு சென்று விட்டார். எல்லாருடைய நைவேத்தியங்களையும் ஒன்று சேர்த்துக் கொண்டு பாபா சாப்பிட உட்கார்ந்தார்.

பாபா பரீதை ருசி பார்த்தபோது அங்கிருந்தவர்கள் எல்லாரும் பாபா அதை மிகவும் சுவைத்து உண்டார் என்று நினைத்தனர். காச்ர்யா சாப்பிட வேண்டுமென்று நினைத்தாரோ என்னவோ, "காச்சர்யா உடனே கொண்டு வா" என்று சொன்னார்.

உடனே ராதாகிருஷ்ணா பாயிக்கு, "பாபா காச்ர்யா சாப்பிட விரும்புகிறார்" என்று செய்தி அனுப்பப் பட்டது. பாபா சாப்பிட ஆரம்பிக்காமல் காச்ர்யாவுக்காக காத்துக் கொண்டிருந்தார். சுற்றி இருந்தவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அது கத்தரிக்காய் கிடைக்க கூடிய பருவம் அன்று. எப்படி காச்ர்யா செய்ய முடியும்? பரீத் நைவேத்தியம் கொண்டு வந்து வாய்த்த ஸ்ரீ மதி புரந்த்ரேவை உடனே வலை போட்டுத் தேடினர்.


Thursday 25 July 2013

ஷிர்டி சாயி சத்சரிதம் 

அவர் சாப்பாட்டுக் கூடத்தில் இருந்தார்; எல்லாருக்கும் உணவு பரிமாறி முடிக்கப்பட்டது. சாப்பிடப் போகும் தருணம். திடீரென்று அந்த மதிய நேரத்தில் பசியால் வாடிய நாய் ஒன்று அவ்வம்மையார் உட்கார்ந்திருந்த கதவருகில் வந்து நின்றது.

அம்மையார் உடனே ஒரு கால் சோள ரொட்டியைத் தம்முடைய தட்டிலிருந்து எடுத்து நாய்க்குப் போட்டார். அதே நேரத்தில், உடம்பெல்லாம் சேற்றுடன், பசியால் வாடிய பன்றியும் ஒன்று வந்தது. (அதற்கும் அவர் உணவளித்தார்).

ஈதனைத்தும் சுபாவமாகவே நடந்ததால், அவர் இச் சம்பவத்தை அறவே மறந்து போனார். ஆனால் பிற்பகல் நேரத்தில் பாபாவே இச் சம்பவத்தைக் கிளறினார்.

உணவுண்ட பிறகு, பிற்பகலில் அவ்வம்மையார் வழக்கம் போல் மசூதிக்கு வந்து, சிறிது தூரத்தில் அமர்ந்தபோது பாபா அவரிடம் அன்புடன் கூறினார்.

"அன்னையே, இன்று எனக்கு நீர் உணவளித்தீர்; என்னுடைய வயிறு தொண்டைவரை நிரம்பிவிட்டது. நான் பிராணனே போய்  விடும் போன்ற பசியால் மிக வாடினேன். நீர் எனக்கு உணவளித்துத் திருப்தி செய்துவிட்டீர்.

"இதைத்தான் நீர் எப்பொழுதுமே செய்ய வேண்டும். இதுவே உமக்கு சத்தியமான சேமத்தை அளிக்கும்.மசூதியில் அமர்ந்து கொண்டு நான் அசத்தியத்தை என்றுமே, எப்பொழுதுமே பேச மாட்டேன்.

"இந்தக் காருண்யம் உம்மிடம் எப்பொழுதும் இருக்கட்டும். முதலில் பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்து விட்டுப் பிறகு சாப்பிடும். இந்த ஆசாரத்தை வாழ் நாள் முழுவதும் கடைபிடிப்பீராக ".

அம்மையாருக்கு சாயி சொன்னது ஒன்றுமே விளங்கவில்லை. சாயி சொன்னதன் பொருள் என்ன? அவருடைய வார்த்தைகள் எப்பொழுதுமே அர்த்தபுஷ்டியில்லாமல் இருக்காதே! (இவ்வாறு அம்மையார் சிந்தித்தார்).

ஆகவே அவர் கேட்டார், "நான் எப்படி உங்களுக்கு உணவளித்திருக்க முடியும்? நானே மற்றவர்களை சார்ந்து காசு கொடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேனே?"

"எனக்கு மிகுந்த அன்புடன் அளிக்கப்பட்ட  சோள ரொட்டியைத் தின்று நான் உண்மையிலேயே பசியாறினேன்; இல்லை, இல்லை, அந்தத் திருப்தியில் நான் இன்னும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கிறேன்.

"நீர் சாப்பாட்டுக்கு  உட்கார்ந்தபோது திடீரென்று பசியால் வாடிய, வயிறு காய்ந்த நாயொன்றை வாயிலில் பார்த்தீர் அல்லவா ? நானும் அந்த நாயும் ஒன்றே என்று அறிவீராக!

"அவ்வாறே உடல் முழுவதும் சேறு பூசிக்கொண்ட பன்றியும் பசியால் வாடுவதைப் பார்த்தீர். அப் பன்றியும் நான்தான்!"

பாபாவின் திருவாய்மொழியைக் கேட்ட அவ்வம்மையார் மனத்துள்ளே  வியப்படைந்து போனார். எத்தனையோ நாய்களும் பன்றிகளும் பூனைகளும் சுற்றி அலைகின்றன. அவை எல்லாவற்றிலும் பாபா இருக்கிறார்? இது எப்படி சாத்தியம்? (என்று அம்மையார் நினைத்தார்)
 
 

Thursday 18 July 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

"பரிபூரணமாக சரணாகதியடைந்தவன் மேல் தயை காட்டுவீராக. இந்த வார்த்தைகளால் அவருடைய கருணையை மலரச் செய்து அவருடைய மன்னிப்புக்கும் அருளுக்கும், தீனனும்  தாசனுமான என் சார்பில் அபயவரம் வேண்டு".

பாந்த்ராவில் இது நடந்துகொண்டிருந்தபோது, 200 மைல்களுக்கு அப்பாலிருந்த ஷீரடிக்கு உடனே செய்தி வந்து விட்டது! பாபா அங்கு என்ன சொன்னார் என்று கேளுங்கள்.

ஸாயி மகாராஜருக்கு நடந்ததும் நடப்பதும் நடக்கப் போவதும் இடம் காலம் என்னும் எந்தத் தடைகளுமின்றி எல்லாமே தெரிந்திருந்தன என்பதற்கு இதுவே பிரத்யக்ஷமான நிரூபணம்.

பையன் (மகன்) ஷீரடியில் இருந்தாலும், அவன் பாபாவுக்கு வணக்கம் செலுத்துவதற்கு அதே நாளில் அதே நேரத்தில் சென்ற பொது, என்ன நடந்தது என்பதைக் கேளுங்கள்; கதை கேட்பவர்களே!

பையன்  தாயுடன் உற்சாகமாக வந்து, பாபாவின் பாதங்களைப் பணிந்தபோது சாயீ தாயாரிடம் கூறியதைக் கேட்டு வியப்படைந்தான்.

"தாயே, இன்று என்னால் என்ன செய்ய முடிந்தது? தினமும் செய்வதுபோல் நான் இன்றும் பாந்த்ராவுக்கு சென்றேன். ஆனால், அங்கு சோறோ  கஞ்சியோ எதுவுமே உண்பதற்கோ குடிப்பதற்கோ இல்லை. நான் பட்டிநியாகத் திரும்பிவர நேரிட்டது!-

"இந்த ருனானுபந்தத்தை பார். (பூர்வ ஜன்ம சம்பந்தமும் அதனால் விளையும் பந்தங்களும்). கதவு மூடியிருந்தாலும் நான் இஷ்டமாக உள்ளே நுழைந்துவிட்டேன்; யார் என்னைத் தடுக்க முடியும்?-

"முதலாளி வீட்டில் இல்லை. என்னுடைய குடலைப் பசி பிடுங்கியது. உடனே அந்த நண்பகல் நேரத்தில் ஒருபிடி அன்னங்கூட  இல்லாமல் திரும்பிவிட்டேன்!-

இந்த வாரதைகளைக் கேட்டவுடனே, அனேகமாக தந்தை நிவேதனம் செய்ய மறந்துவிட்டிருப்பார் என்று மகன் யூகித்து விட்டான்.

"என்னை வீட்டிற்கு திரும்பி போக அனுமதியுங்கள்!" என்று பாபாவை வேண்டினான். பாபா அறவே மறுத்துவிட்டார்! அதற்குப் பதிலாகப் பையனை அங்கேயே பூஜை செய்ய அனுமதித்தார்.

மகன் அன்றைய தினமே ஷிர்டியிலிருந்து விவரமான கடிதம் அனுப்பினான். அதைப் படித்த தந்தை மனமுருகிப் போனார்.

பாந்த்ராவிலிருந்து எழுதப் பட்ட கடிதமும் ஷீரடிக்கு  வந்து சேர்ந்தது! பயின் ஆச்சரியமடைந்தான். அவனுடைய விழிகளிலிருந்து கண்ணீர் தரை தாரையாக பெருகிக் கன்னங்களில் வழிந்தோடியது.

சாயியினுடைய இந்த அற்புதமான லீலையைப் பாருங்கள்! அன்பு ஏன் இதயத்தில் பொங்கி எழாது? இந்த சம்பவத்தால் உருகாத  கல்மனமும் உண்டோ?

இந்தப் பையனின் அன்பான தாயார்தான், ஒரு சமயம் ஷிர்டியிலிருந்த பொது பாபாவால் அனுக்ரஹிக்கப் பட்டார். இப்பொழுது அந்த நூதனமான காதையைக் கேளுங்கள்!


Thursday 11 July 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

"பாபா! நான் செய்யும் பூஜை என் மகன் செய்யும் பூஜையைப் போலவே அமையட்டும். என்னுடைய கைகளில் பூஜை ஓர் இயந்திரகதியான அப்பியாசமாக இல்லாமல் பூஜை செய்யும்போது என்னுடைய இதயத்தில் தூய அன்பு பொங்கி வழியட்டும்".

பூஜை செய்வதற்குகந்த விடியற்காலை நேரத்தில் தினமும் இப் பிரார்த்தனையுடன் பூஜையை ஆரம்பித்துக் கடைசியாக நிவேதனம் செய்து முடித்தார்.

நைவேத்தியமாக கற்கண்டை சமர்ப்பித்தார். தடங்கல் ஏதுமில்லாமல் பூஜை நடந்து கொண்டிருந்தது; ஒருநாள் இந்த நித்திய நிவேதனத்திற்கு தடங்கலேற்பட்டது.

ஒருநாள் அவருடைய மனம் அலுவலக் விஷயங்களில் மூழ்கியிருந்ததால் தர்கத் நிவேதனம் செய்வதற்கு மறந்துவிட்டார். பாபாவுக்கு நிவேதனம் ஏதும் செய்யப் படாமலேயே அனைவரும் அன்று உணவுண்டு விட்டனர்.

தர்கத் சாஹேப் ஒரு நெசவாலைக்கு முக்கிய அதிகாரி. ஆகவே, தினமும் காலை நேரத்திலேயே ஆலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது.

தினந்தோறும் பிற்பகலில் அலுவலகத்திலிருந்து திரும்பிவந்தபோது, சாப்பாட்டு  நேரத்தில், காலையில் நிவேதனம் செய்யப் பட்ட கற்கண்டு அவருக்குப் பிரசாதமாகப் பரிமாறப் பட்டது.

இதுவே தினசரி வழக்கமாக இருந்தது. ஒருநாள் காலையில் அவர் நிவேதனம் செய்ய மறந்துவிட்டதால், மதிய சாப்பாட்டு  நேரத்தில் பிரசாதம் இல்லை.

அவர் சாப்பிட உட்காரும்போது, சமையற்காரர் அவருடைய தட்டில் உண்ணும் பொருள்களை தூயனவாக்கும் வகையில், மீந்த கற்கண்டை அவருக்குப் பரிமாறுவார்.

ஆனால், அன்று எக்காரணத்தாலோ, அவர் பூஜையை அவசரமாக செய்யவே, நிவேதனம் செய்ய மறந்து விட்டார். அதனால், வழக்கத்திற்கு மாறாக அன்று பிரசாதம் பரிமாறப் படவில்லை.

சட்டென்று தர்கத் சாபிடாமல் எழுந்துவிட்டார். குற்ற உணர்ச்சியால் மனம் நொந்து பாபாவின் படத்திற்கு நமஸ்காரம் செய்துவிட்டு, விழிகளிலிருந்து நீர் வடியக் கூறினார்.

"பாபா! இது என்ன உம்முடைய மாயை? எப்படி என்னை மதிமயக்கம் அடையச் செய்தீர்? நீர் என்னைச் செய்ய வைத்தது பூஜையன்று, இயந்திர கதியான ஓர் அப்பியாசமே! அனால், இப்பொழுது முதலில் என்னை மன்னித்து விடுங்கள்! -

"இது வெறும் மனக்குழப்பம் அன்று, மகாபாவதைச் செய்து விட்டேன்; அனுதாபத்தினால் தவிக்கிறேன். இது என்னுடைய தவறு; முழக்க முழுக்க என்னுடைய தவறே; வெட்கங்கெட்டவன் நான். மஹாராஜரெ ! என்மீது கிருபை காட்டுவீராக."

படத்திலிருந்து சாயி பாதங்களுக்கு அவர் நமஸ்காரம் செய்தார். குற்ற உணர்ச்சியாலும் அனுதாபத்தாலும் உருகிய மனத்துடன் அவர் கூறினார், "தயை மிகுந்த மஹாராஜரெ ! என்னிண்டம் கருணை செலுத்துவீராக."

இவ்வாறு வேண்டிவிட்டு, வருத்தந் தோய்ந்ததும் செயலாற்ற முடியாததுமான மனநிலையில் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார். "பாபாவினுடைய  மன்னிப்பை வேண்டு; என்னால் ஒரு பெரிய பாவம் செய்யப் பட்டுவிட்டது!-



Thursday 4 July 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்


ஷிர்டி சாயி சத் சரிதம் 

ஒப்புயர்வற்ற பிரேமையுடையவராக இருந்ததால், பாபா சாஹேப் தமது இல்லத்தில் தினமும் காலை, மதியம், மாலை வழிபாட்டுக்காக பாபாவினுடைய  படத்தை ஒரு சந்தனமண்டபத்தில்  ஸ்தாபனம் செய்திருந்தார்.

அவருக்குப் புத்திரனும் பக்திமான்; சாயிக்கு நிவேதனம் செய்யாமல் சாப்பாட்டை தொட மாட்டான். ஆகவே, தர்கட்  மகாபுண்ணியசாலி.

ஒவ்வொரு நாளும் காலை வேளையில் ஸ்நானம் செய்துவிட்டு, உடலாலும் பேச்சாலும் உள்ளத்தாலும்  ஒன்றி, சாயிக்குப் பூஜை செய்துவிட்டுக் கடைசியாக நிவேதனம் செய்வான்.

இந்த நித்திய பூஜையைத் தவறாதும்  சலிக்காமலும் செய்து கொண்டு வந்தபோது, அவனுடைய முயற்சிகள் அனைத்தும் உன்னதமான பலன்களை அளித்தன; உயர்ந்த அனுபவமும் பெற்றான்.

சிறந்த சாயி பக்தையான அவன் அன்னை, ஷீரடிக்கு போக விரும்பினார். பயணத்தின்போது அன்னையுடன் மகனும் செல்லவேண்டும் என்று தந்தை நினைத்தார்.

அன்னை ஷிர்டிக்குச் சென்று சாயி தரிசனம் செய்து, அங்கே சில நாள்கள் தங்கி பாபாவுக்குப் பாதசேவை செய்ய வேண்டுமென்று விரும்பினார்.

தந்தையினுடைய விருப்பம் அவ்வாறு இருந்தபோதிலும், மகனுக்கு ஷிர்டி போவதில் இஷ்டமில்லை. அவனுடைய கவலையெல்லாம், தான் வீட்டில் இல்லாதபோது, யார் தினமும் தினமும் தவறாமல் பாபாவுக்குப் பூஜை செய்வார் என்பதே.

தகப்பனார் ஒரு பிரார்த்தனா (சிலைகள், சடங்குகள் ஏதும் இல்லாமல் பிரார்த்தனை மட்டும் செய்யும் சங்கத்தை சேர்ந்தவர்) சமாஜி. அவரைப் பூஜை செய்ய வைத்துத் தொந்தரவு செய்வது நியாயமா? அதுவே மகனுடைய சந்தேகம்.

எனினும், தன மனத்துள்ளே  மறைந்திருந்த ஆசையை அறிந்திருந்த மகன், ஷிர்டி போவதற்குத் தயாராக இருந்தான். அவன் தகப்பனாரை அன்புடன் என்ன வேண்டிக் கொண்டான் என்பதைக் கேளுங்கள்.

சாயிக்கு நிவேதனம் செய்யாமல் யாருமே இந்த வீட்டில் சாப்பிட மாட்டார்கள் என்று உறுதிமொழி அளிக்கப் படாவிட்டால், நான் நிச்சயமாக ஷீரடிக்கு போக முடியாது. 

தந்தைக்கு ஏற்கனவே மகனுடைய நித்திய விரதம் தெரிந்திருந்தது. "நீ போய்  வா. நான் தினமும் நிவேதனம் செய்கிறேன்; நீ இதை முழுமையாக நம்பலாம்" என்று அவர் கூறினார்.-

"சாயிக்கு நைவேத்தியம் படைக்காமல்  நாங்கள் யாருமே உணவருந்த மாட்டோம். என்னுடைய வார்த்தைகளை நம்பு, சந்தேகம் வேண்டா ; குழப்பம் ஏதுமின்றி நீ சென்று வா".

இவ்வாறு உறுதிமொழி பெற்றுக் கொண்டு பையன் ஷீரடிக்கு சென்றான். அடுத்த நாள் காலையில்  தர்கட்  அவர்களே பூஜை செய்தார்.

அன்று பூஜையை ஆரம்பிக்கும் முன்பே, பாபா சாஹேப் தர்கட்  சாயியின் படத்திற்கு நமஸ்காரம் செய்துவிட்டுப் பிரார்த்தனை செய்தார், -