ஷிர்டி சாயி சத்சரிதம்
செல்வத்தையோ புகழையோ சிறிதும் விரும்பாமல் பிச்சை எடுப்பதையே பிழைப்பாக ஏற்றுக்கொண்டு , புலன்கள் அனைத்தையும் உள்ளே இழுத்துக் கொண்ட யோக நிலையில் அவர் வாழ்நாளை கழித்தார்.
ஒரு யதி சந்நியாசியைப் போல உடை உடுத்திக்கொண்டு, தம்முடைய சட்காவை சந்யாசிகள் எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டிய தண்டமாக கொண்டார். 'அல்லா மாலிக்' என்னும் வார்த்தைகளே அவருடைய இடைவிடாத ஜபம்; பக்தர்களிடம் அவர் காட்டிய பிரீத்தி அகண்டம்.
மானிட உருவத்தில் அவதரித்த சாயியின் உருவ லக்ஷணங்கள் இவ்வாறே; பூர்வ ஜன்மத்தில் சம்பாதித்த புண்ணியத்தில்தான் இப்புதையல் நமது கைகளுக்கு எதிர்பாராமலேயே கிடைத்திருக்கிறது.
சாயி ஒரு சாதாரண மனிதரே என்று நினைப்பவர்கள் மந்தமதி படைத்தவர்கள்; துரதிர்ஷ்டசாலிகள். அவர்களுடைய விதி விசித்திரமானது! அரிதாகக் கிடைக்கும் இவ்வதிர்ஷ்டத்தை அவர்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும்?
சாயி ஆத்மபோததின் சுரங்கம்; பூரணமான ஆனந்தத்தை அனுபவிக்கும் விக்கிரஹம். சம்சார சாகரத்தை முழுமையாகவும் பாதுகாப்புடனும் கடப்பதற்கு அவரைச் சட்டென்று பற்றிக் கொள்வோமாக!
படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவிலிருந்து புல்பூண்டு வரை இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிலவியிருக்கும், அளவற்றதும் முடிவற்றதும் பின்னமில்லாததுமான முழு முதற்பொருளே பாபாவாக உருவெடுத்திருக்கிறது.
கலியுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து இரண்டாயிரம் ஆண்டுகள்; இதில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் கழிந்த பிறகு பாபா அவதாரம் செய்திருக்கிறார்.
பாபாவினுடைய பிறந்த தேதி தெரியாமல், இந்தக் காலத்தை எவ்வாறு நிர்ணயம் செய்யமுடியுமென்று கதை கேட்பவர்கள் இங்கு ஒரு சந்தேகத்தை எழுப்பலாம். ஆகவே, இப்பொழுது கவனமாகக் கேளுங்கள்.
புனிதமான ஷிர்டி கிராமவாசியாக இருக்க வேண்டுமென்று சங்கல்பம் செய்து கொண்டு ஒரு ஷேத்திர சந்நியாசியாக பாபா தமது கடைசி நாள் வரை 60 ஆண்டுகள் ஷீரடியில் வாழ்ந்தார்.
முதன்முதலாக, பாபா 16 வயது பாலகனாக ஷீரடியில் தோன்றினார்; அச்சமயத்தில் அங்கு 3 ஆண்டுகள் தங்கினார்.
பிறகு, அவர் ஷிர்டியிலிருந்து மறைந்து விட்டார்; மறுபடியும் தூர தேசமான நிஜாம் ராஜ்யத்தில் கண்டுபிடிக்கப் பட்டார். அதன்பிறகு அவர் கல்யாண கோஷ்டியுடன் ஷிரிடிக்கு வந்தார்; வந்தவர் ஷிர்டியிலேயே தங்கிவிட்டார்.
No comments:
Post a Comment