ஷீர்டி சாயி சத்சரிதம்
நேராக அபோலோ பந்தருக்கு சென்று ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி, கடல்மேல் எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அவ்வளவு தூரம் சென்று, படத்தை நீரில் மூழ்கடித்தார்.
அவர் அத்தோடு நிற்கவில்லை. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விநியோகம் செய்திருந்த படங்களையும் கேட்டுத் திரும்பவாங்கி, பாந்த்ராவில் முன்பு செய்த வழிமுறையிலேயே கடலில் மூழ்கடித்தார்.
மைத்துனர் அவர்களிடம் சொன்னார், 'அப்துல் பாபா கடுங்கோபம் அடைந்தார். அந்தப் புகைப்படங்களை வைத்திருப்பவர்கள் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்த ஆகவேண்டும்.' இவ்வாறு அவர்களை வேண்டிக்கொண்டார்.
என்னிடமும், என் சகோதரர் மற்றும் சகோதரியிடமும் கொடுத்திருந்த படங்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டார். இவ்வாறாக, எல்லாப் புகைப்படங்களையும் (ஆறு) கையகப்படுத்தினார்.
எல்லாப் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு கோபம் நிரம்பியவராய் பாந்த்ராவில் பூமியும் கடலும் சந்திக்கும் பிரதேசத்திற்கு சென்றார்.
ஒரு மீனவரை கூப்பிட்டு அவரிடம் எல்லாப் பிரதிகளையும் ஒப்படைத்துக் கடல்நீரில் மூழ்கடிக்கச் செய்தார்.
நான் அப்பொழுது வியாதியால் பீடிக்கப்பட்டு நிலையில் அவருடைய இல்லத்தில் தங்கியிருந்தேன். ஆகவே, அவர் எனக்கு அதுபோலவே அறிவுரை கூறினார். 'இந்தப் படங்களால் சங்கடங்கள் விளையும். -
'அதனால், நீர் அவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துக் கடலில் மூழ்கடித்தால்தான் உம்முடைய வியாதி நிவாரணம் அடையும். இதை நிர்த்தாரணமாக அறிவீராக.
ஆகவே, நான் என் உதவியாளரைக் கூப்பிட்டு அவருடைய கையில் சாவிகளைக் கொடுத்து என்னுடைய வீட்டிலிருந்த எல்லா ஞானிகளின் படங்களையும் எடுத்துவரச் செய்தேன். அவற்றைத் தீர்த்துக்கட்டுவதற்காக என் மைத்துனரிடம் ஒப்படைத்தேன்.
உடனே அவர் அவற்றைத் தம் தோட்டக்காரர் மூலமாக, சிம்பாயி கோயிலுக்கருகில் கடலில் மூழ்கடிக்கச் செய்தார்.
இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நான் உடல்நலம் பெற்று என்னுடைய வீட்டிற்குத் திரும்பிச் சென்றபோது மிகுந்த ஆச்சரியமடைந்தேன்.
நான் உங்களுக்கு அளித்த புடைச்சிற்பம், அப்பொழுதும் முன்பிருந்த மாதிரியே வீட்டுவாயிலை நோக்கியவாறு சுவரில் இருந்ததைக் கண்டு பெருவியப்படைந்தேன்.
எல்லாச் சிற்பங்களையும் உதவியாளர் கொண்டுவந்தாரே, இந்தச் சிற்பத்தைக் கொண்டுவர ஏன் தவறி விட்டார்? ஆகவே, நான் உடனே அதை எடுத்து ஓர் அலமாரியில் மறைத்துவைத்தேன்.