ஷீர்டி சாயி சத்சரிதம்
40 . உத்தியாபன (விரதங்களின் நிறைவு) விழா
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
இக் காவியத்தின் மூலமாகத் தம் பக்தர்களுக்கு உலகியல் விஷயங்களிலும் ஆன்மீக விஷயங்களிலும் போதனையளித்து வாழ்க்கையில் அடையவேண்டியதை அவர்களை அடையச் செய்து, தம்முடைய வேலையையும் நிறைவேற்றிக்கொண்ட சாயி பூஜிக்கத்தக்கவர் , பூஜிக்கத்தக்கவர்.
எவர், பேதம் பார்க்காது தம்முடைய கையை பக்தரின் தலைமேல் வைப்பதன் மூலமாக சக்தியைப் பாய்ச்சி, பக்தருக்குக் கிடைக்காத வஸ்துவும் (பொருளும்) கிடக்கைக்கும்படி செய்கிறாரோ, அவர் பூஜிக்கத்தக்கவர்.
'நீர்-நான்' என்ற பேதபாவமின்றி சாயிக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அனன்னியமாக எவர் சரணாகதி அடைகிறாரோ, அவரை சாயி அன்புடன் அணைத்துத் தம் இதயத்துள் தரிக்கிறார்.
கடலும் நதியும் பெயரளவில் வேறுபட்டவை. ஆனால், மழைக்காலத்தில் இரண்டும் ஒன்றாகிவிடும்போது எந்த வித்தியாசமும் இன்றிப் பார்ப்பதற்கு ஒரே உருவமாகிவிடுகின்றன.
அதே பாவத்தில் சத்குருநாதரிடம் பக்தர்கள் அனன்னியமாக சரணடையும்போது அவர்களுடைய பக்தியைக் கண்டு அவரும் தம்மையே அவர்களுக்கு கொடுத்துவிடுகிறார்.
ஜய ஜய தீனதயாளா! பக்தர்களை உத்தாரணம் செய்பவரே! அன்புக்கடலே பிரம்மாண்ட மண்டலங்கள் அனைத்திலும் வியாபித்திருப்பினும் , ஷிர்டியில் தனிமையில் வாழும் தெய்வமே ! ஜய ஜய!
ஞானியாகிய தேவரீர் கால்களைப் பரப்பிக்கொண்டவாறு, நடுவே ஏந்திரத்தை வைத்து, அச்சை ஆடவிடாமல் இறுக்கி, முதல் பிடி தானியத்தை இட்டு மாவு அரைக்க ஆரம்பித்தபோது என் சித்தம் வியப்படைந்தது!
அதுவே இந்தக் காவியத்தின் மூலம், அதுமாதிரியான நிகழ்ச்சிகளைத் தொகுத்து எழுதினால் மனத்தின் மலங்கள் அழியும் என்ற பலமான ஆர்வம் என் மனத்தே எழுந்தது.
ஹரியும் மிகுந்த மகிழ்ச்சியடைவார். தம்மைப் புகழ்ந்து பாடுவதைவிடப் பக்தர்களுடைய பெருமையும் குணாதிசியங்கள் பற்றியும் பாடுவதையே அவர் பெரிதும் விரும்புகிறார்.