valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 7 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா விரும்பினால் வழிப்போக்கர்களுக்கும் பணம் விநியோகம் செய்வார். கிருபா மூர்த்தியான சாயிநாதர் திக்கற்றவர்களையும் ஏழைஎளியவர்களையும் அன்புடன் நலன் விசாரித்து அவர்களுடைய தேவைகளை பூர்த்திசெய்து, துயர் துடைத்து விடை கொடுத்தனுப்புவார்.

அந்த கோஷ்டியில் ஓர் ஆடவரும் மூன்று பெண்டிரும் இருந்தனர். அதாவது , ஒரு மனிதர், அவர் மனைவி, மக்கள், மைத்துனி - ஆக மொத்தம் நால்வர் இருந்தனர். அவர்கள் மஹானை தரிசனம் செய்ய விரும்பினர்.

சாயி தரிசனம் செய்த பிறகு அந்த கோஷ்டி திருப்தியும் சந்தோஷமும் அடைந்தது. தினமும் சாயி சந்நிதியில் நியமமாக பஜனை செய்தனர்.

அவர்கள் ராமதாச மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மிகுந்த உற்சாகத்துடன் பஜனை செய்வார்கள். பாபாவும் தமக்குத் தோன்றியவாறு ஒரு ரூபாயோ அரை ரூபாயோ கொடுப்பார்.

சில நாள்களில் பாபா அவர்களுக்கு பர்பி கொடுப்பார்; சில நாள்களில் வெறுங்கையுடன் அனுப்பி விடுவார். ஆதியிலிருந்தே பாபாவின் செயல்பாடுகள் இப்படித்தானே இருந்தன; எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாதே!

பாபா பணத்தை வாரிவாரி வழங்கியதென்னவோ உண்மைதான்! அதில் உண்மையில்லாதது ஏதும் இல்லை. ஆனால், அவர் எல்லாருக்குமே கொடுப்பார் என்று சொல்ல முடியாது! அவருடைய மனோகதியை எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

பக்கீர்கள், பிச்சைக்காரர்கள், ஆண்டிகள், பரதேசிகள் - இவர்களனைவரும் பாபாவை நாடி வந்தவண்ணமாக இருந்தனர். பாபா பரம தயாளராக இருந்தாலும், அவர்கள் எல்லாருக்குமே தருமம் கொடுக்கவில்லை.

யாருக்கு லாபகாலம் வந்ததோ, அவரே பாபாவின் கையால் தொடப்பட்ட பணத்தைப் பெறும் பாக்கியத்தை அடைந்தார்.

இது சம்பந்தமாக ஒரு கதை கேட்டால் சந்தோஷமடைவீர்கள். ஆகவே, முதலில் அதைச் சொல்லிவிட்டுப் பிறகு தொடர்கிறேன்.

காலையில் சொற்ப ஆகாரம் உண்டபின் பாபா துனிக்கு அருகிலிருந்த கம்பத்தடியில் உட்காருவார். அந்நேரத்தில் அமனி என்னும் சிறு பெண்குழந்தை வருவாள்.

மூன்று பிராயம் நிரம்பிய இச் சிறுபெண், உடையேதும் அணியாமல் கையில் ஒரு சிறிய தகர டப்பாவை எடுத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு வந்துசேர்வாள். கூடவே தாய் ஜமலியும் வருவாள்.

அமனி, பாபாவின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு டப்பாவை அவரிடம் கொடுத்து, "பாபா, ரூப்பையா, ரூப்பையா" என்று அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சுவாள்.

பாபாவுக்குப் பொதுவாகக் குழைந்தைகளின் மீது அமோகமான அன்பு. புஷ்டியாகவும் அழகாகவும் இருந்த அமனியை நேசித்தார்; அவளை இறுக்க அணைத்துக்கொண்டு கொஞ்சுவார்; முத்தம் கொடுப்பார்.