ஷீர்டி சாயி சத்சரிதம்
அகண்டமாக இச் சரித்திரம் படிக்கப்படும் வீடுகளில் திருமகள் நித்யவாஸம் செய்வாள். சப்தாஹமாகப் (ஏழு நாள்களுக்குள் ஒரு சுற்று படித்து முடித்தல்) படிப்பவர்களின் தரித்திரம் பறந்தோடும்.
இவ்வாறு நான் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டா. ஏனெனில், என் சோ உங்களுக்கு சமுசயங்களை (ஐயங்களை) விளைவிக்கலாம். என்னுடைய, வாய்மூலமாக சாயியே இதைச் சொல்கிறார். அஆக்வே, இது விஷயத்தில் அனாவசியமான கற்பனைகளையும் சந்தேகங்களையும் தூக்கியெறியுங்கள்.
சகலமான நற்குணங்களின் சுரங்கமும் பக்தர்களுக்கு கைவல்ய பதவியை (முக்தியை) அளிப்பவருமான சாயியின் கதையை பக்தர்கள் இப்பொழுது கேட்கவேண்டும். அவருடைய கதைகள் கலியுகத்தின் பாவங்களை அழிக்கும்.
ஓ, ஞானிகளின் சரித்திரங்களுக்குமுன், சொர்க்கத்தின் சுகங்கள் எம்மாத்திரம்? உடனுக்குடன் பலனளிக்கும் சுவாரசியமான இக் கதைகளைக் கேட்பதை விடுத்து, யார் அந்த சுகங்களை சீந்துவார்?
இன்பமும் துன்பமும் மனத்தின் விகாரங்கள், சத்சங்கம் நம்மை இந்த நிலைக்குமேல் இட்டுச்செல்கிறது. நம்முடைய மனத்தை சுகமோ துக்கமோ இல்லாத பிரபஞ்ச உணர்வுடன் சத்சங்கம் ஒன்றுசேர்க்கும்.
துறவி தனிமையில் காணும் சுகத்தையும் பக்தன் பக்தியில் காணும் சுகத்தையும் தேவலோகத்து இந்திரனோ பூலோகத்து சக்கரவர்த்தியோ யுகமுடிவுவரை முயன்றாலும் அடையமுடியாது.
பிராரப்த கர்மத்தினால் (முன்ஜன்ம வினைகள்) விளையும் சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்தே தீரவேண்டும். கர்மத்தை அனுசரித்தே புத்தியும் வேலை செய்யும்! ஆயினும் விதியால் நிர்ணயிக்கப்பட்டதையும் பக்தன் சுலபமாக தவிர்த்துவிடலாம்.
பிராரப்த கர்மத்தின் விளைவுகளிலிருந்து பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் விடுபடமுடியாது. அவசியம் நடந்தே தீரவேண்டிய நிகழ்ச்சிகளிலிருந்து தப்புவதற்கு வழியேதும் இல்லை.
துக்கங்கள் எவ்வாறு வேண்டப்படாதவையோ, அவ்வாறே சுகங்களும் எதிர்பார்க்கப்படாதவை! முன்ஜன்ம வினைகளால் ஒரு மனிதனுக்கு என்னென்ன நடக்கபோகின்றன என்பது ஞானிகளுக்கு முன்கூட்டியே தெரியும்!
அகண்டமாக அவருடைய நாமத்தை ஜபம் செய்வதே நமது விரதமும் தவமும் தானமும், அவ்வப்பொழுது ஷிர்டிக்கு பிரயாணம் செய்வதே நமது தீர்த்த யாத்திரை.
சாயி, சாயி என்று நாமஸ்மரணமும் செய்வதே நமது மந்திரமும் அனுஷ்டானமும் தியானமும் புரசரணமும். ஆகவே, அவரிடம் அனன்னியமாக சரணடையுங்கள்.
கள்ளங்கபடமற்ற பிரேமைகளுடன் ஒருமித்த மனத்துடனும் அவரைப் பூஜை செய்து பாருங்கள். அவர் செய்யும் விவரிக்கமுடியாத அற்புதங்களை மனத்துள்ளே அனுபவியுங்கள்.