ஷீர்டி சாயி சத்சரிதம்
"நான் வீடு வந்து சேர்ந்தவுடனே உதீயை நீருடன் கலந்து அருந்துவதற்கு கொடுத்தேன்; உடல் முழுவதும் பூசினேன். உடனே அவளுடைய உடல் முழுவதும் வியர்த்துகொட்டியாயது; நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தாள். -
"பின்னர், சூரியோதய நேரத்தில் தெம்பாகவும் நலமாகவும் எழுந்து உட்கார்ந்தாள். ஜூரமும் வீக்கங்களும் மறைந்துவிட்டன. உண்மையில் இது பாபாவின் அருட்சக்தியேயன்றி வேறெதுவுமில்லை."
இந்த நிலைமையைப் பார்த்தவனுடனே சாமாவுக்கு பாபா 'போனவுடனே திரும்பிவிடு' என்று சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. சாமாவின் மனம் ஆச்சரியத்தால் நிரம்பியது.
சாமா வருவதற்கு முன்பே வேலை முடிந்துவிட்டது. ஆகவே அவர் தேநீர் குடித்தவுடன் ஷீர்டி திரும்பினார். நேராக மசூதிக்குச் சென்று பாபாவின் பாதங்களை வணங்கினார்.
சாமா கேட்டார், "பாபா, இதென்ன விளையாட்டு? நீங்களே மனத்தில் கலவரத்தை உண்டுபண்ணுகிறீர். உம்முடைய இடத்தில் உட்கார்ந்தவாறே ஒரு சுழற்காற்றை கிளப்பிவிடுகிறீர். பிறகு, நீங்களே அதை நிச்சலமாக்குகிறீர்".
பாபா பதிலுரைத்தார், "இதோ பார், இதெல்லாம் மறைந்து வேலை செய்யும் கர்மவினைகளின் வானளாவிய ஓட்டம். நான் செய்பவனுமல்லேன், செய்ய வைப்பவனுமல்லேன் என்பதை உறுதியாக அறிந்துகொள். ஆனாலும், செய்யக்கூடிய சக்தி என் வாயிற்படியில் படுத்துக்கிடக்கிறது!
"விதியின் வலிமையால் என்னென்ன நிகழ்ச்சிகள் நேர்கின்றனவோ அவற்றிற்கு நான் சாட்சி மாத்திரமே. செயல்புரிபவனும் செயல்புரியவைப்பவனும் இறைவன் ஒருவனே; அவனொருவனே கிருபை செய்யக்கூடியவன்.-
"நான் தேவனுமல்லேன்; ஈசுவரனுமல்லேன். நான் 'அனல் ஹக்'குமல்லேன் (கடவுளுமல்லேன்) ; பரமேசுவரனுமல்லேன். நான் 'யாதே ஹக்' (இறைவனை எப்பொழுதும் மனத்தில் இருத்தியவன்) நான் அல்லாஹ்வின் மிகப் பணிவான அடிமை.-
"எவன் அகங்காரத்தை அழித்துவிட்டு நன்றி நிறைந்த மனத்துடன் அவர் மீது தன் பாரத்தை போடுகிறானோ, அவனுடைய படகு கரை சேர்ந்துவிடும்."
இப்பொழுது ஒரு இரானியரின் மகத்தான அனுபவத்தை கேளுங்கள். அவருடைய பெண் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாதிருந்தது. அவ்வப்பொழுது நினைவிழந்துவிடும்.
இப் பெண்குழந்தைக்கு மணிக்கொருமுறை காக்காய்வலிப்பு கண்டு, உடல் வில்லைபோல் வளைத்துக்கொள்ளும். உயிர் பிரிந்துவிட்டதுபோல் நினைவின்றிக் கிடப்பாள். இந்த வியாதிக்கு எந்த வைத்தியமும் பலனளிக்கவில்லை.
பின்னர், நண்பரொருவர் உதீயின் பிரபாவத்தைச் சொன்னார், "ராமாபானத்தை போன்று, குறி தவறாது விசித்திரமாகச் செயல்படும் வேறொரு மருந்து எங்கும் இல்லை. -