ஷீர்டி சாயி சத்சரிதம்
விபூதியை பாபா எந்த உள்நோக்கத்தோடு அளித்தார்? இவ்வுலகில் கண்ணுக்குத் தெரியும் ஷிருஷ்டியெல்லாம் சாம்பல்தான் என்பதை அனைவரும் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே அவருடைய உள்ளக்கிடக்கை.
மனித உடலும் பஞ்சபூதங்களாலான ஒரு மரக்கட்டையே. சுகதுக்கங்களை அனுபவிப்பதற்காகவே வாழ்கிறது. அனுபவம் முடிந்தவுடன் பொத்தென்று கீழே வீழ்கிறது; சாம்பலாக்கப்படுகிறது. இதற்கு விதிவிலக்கே கிடையாது.
நீரும் நானும் இந்த நிலையில்தான் இருக்கிறோம். இதை உமக்கு ஞாபகப்படுத்தவும் இது விஷயமாக நீர் இரவுபகலாக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காகவுமே நான் இந்த விபூதியை அளிக்கிறேன்.
அகில உலகமும் மாயையால் நிரம்பியது. பிரம்மமே சத்யம்; பிரம்மாண்டம் நிலையற்றது. உதீயே இவ்வுண்மைக்கு அற்புதமான அடையாளம். இது நிச்சயம் என்றறிக.
மனைவி, மக்கள், மாமன், மருமகன் - இவர்கள் யாரும் யாருக்கும் சொந்தமில்லை. அம்மணமாக இவ்வுலகுக்கு வருகிறோம்; அம்மணமாகவே இவ்வுலகிலிருந்து வெளியேறுகிறோம். உதீயே இதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.
உதீயைப் பூசிக்கொள்வதால் ஆதிவியாதி (பிறவிப்பிணி) தொலைந்துபோகிறது. உதீயின் மிக உயர்ந்த தத்துவார்த்தம் என்னவென்றால், 'விவேகத்தால் விளைந்த பற்றற்ற நிலை'.
நம்மால் முடிந்த தக்ஷிணை கொடுத்துப் பிரவிருத்தி மார்க்கத்திலிருந்து (உலகியல் உழற்சியிலிருந்து) விடுபட முடிந்தால், கொஞ்சங்கொஞ்சமாக நிவிர்த்தி மார்க்கத்தின் (விடுதலையடையும் பாதையின் ) குறிகள் தெரிய ஆரம்பிக்கும்.
பற்றற்ற நிலை கைக்கு கிடைத்தாலும் விவேகம் இல்லாதுபோனால், அது பயனின்றிப் போகும். ஆகவே, உதீயை மரியாதையுடன் பெற்றுக்கொள்ளுங்கள்.
விவேகத்தையும் பற்றற்ற மனப்பான்மையையும் இணைப்பது விபூதியையும் தக்ஷிணையையும் இணைப்பது போலாகும். இவ்விணைப்பு ஏற்படவில்லையெனில், பிறவியென்னும் நதியின் அக்கரை சேர்வது இயலாத காரியம்.
பெரியவர்களும் சிறியவர்களும் பாபாவை தரிசனம் செய்ய வந்தனர். பாபாவின் பாதங்களில் விநயத்துடன் வணங்கிவிட்டு வீடு திரும்புமுன், பாபா அவர்களுக்கு விபூதி அளித்தார்.
மசூதியில் தினமும் இரவுபகலாக குன்றாது துனீ எரிந்துகொண்டிருந்தது. பாபா பிடிப்பிடியாக ரட்சையை எடுத்து பக்தர்கள் விடைபெறும்போது அளித்தார்.
பக்தர்களின் தலைமேல் கைவைத்து, அதே சமயம் நெற்றியில் கட்டை விரலால் ரட்சை இட்டு மங்கள வாழ்த்தும் கூறி, துனீயின் சாம்பல் பிரசாதமாக அளிக்கப்பட்டது.
சாம்பல், ரட்சை, விபூதி, உதீ இவை நான்கும் வெவ்வேறு சொற்களாக இருப்பினும் வஸ்து (பொருள்) ஒன்றே. பாபா குறைவேதுமின்றி அபரிதமாக தினமும் அளித்த பிரசாதம் இதுவே.
சம்சார வாழ்க்கையும் உதீயைப் போன்றதே. நாமும் விபூதியாகிவிடும் நாள் வரத்தான் செய்யும். இதுதான் உதீயின் மஹிமை. இதை ஒருநாளும் மறக்க வேண்டா.