ஷீர்டி சாயி சத்சரிதம்
இந்த எளிய சாதகப்பறவை நிர்மலமான தண்ணீராகிய
ஆனந்தத்தையே நாடுகிறது. இந்த மாதவனுக்கு அதை
அளித்து உம்முடைய உறுதிமொழியை நிறைவேற்றுவீர்;
ஓ, உம்முடைய உறுதிமொழியை நிறைவேற்றுவீர்.
ஆரதி செய்கிறோமே ......(பல்லவி)
கோசாவி பாபாவிடம் கேட்டார், "என்னிடம் இரண்டு ரூபாய்தான் இருக்கிறது. நான் எப்படி ஜாம்நேருக்குச் சென்று, வீட்டிற்குப் போய்ச் சேர முடியும்?
பாபா சொன்னார், "நீர் தைரியமாகக் கிளம்பும். உம்முடைய தேவைகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்படும்". சாயி பாதங்களில் நம்பிக்கை வைத்து கோசாவி உடனே கிளம்பினார்.
பாபாவின் ஆக்ஞய்க்குத் தலைவணங்கி உதீ பிரசாதத்தை வாங்கிக்கொண்டு, காரியமே கண்ணாக பாபாவின் அனுமதியுடன் பாபகீர் உடனே புறப்பட்டார்.
இப்பொழுது இருப்பதுபோல் அப்பொழுது ஜாம்நேருக்கு இருப்புப்பாதைத் தொடர்பு கிடையாது. பிரயாணம் சுலபம் இல்லை. கோசாவியின் சித்தம் கலங்கியது.
ரயிலேறி ஜல்காங்வ் ரயில் நிலையத்தில் இறங்கி மீதி தூரத்தை நடந்தே கடக்க வேண்டும்.
ரயில் கட்டணம் ஒரு ரூபாய் பதினான்கு அணா; மிச்சம் இரண்டு அணாவை வைத்துக்கொண்டு மீதி தூரத்தை எவ்வாறு கடக்கமுடியும்?
இவ்விதமாகக் கலங்கிய கோசாவி, ஜல்காங்வ் ரயில் நிலையத்தில் இறங்கிப் பயணச் சீட்டைத் திருப்பிக்கொடுத்துவிட்டு வெளியே வந்தபோது, சிறிது தூரத்தில் ஒரு பியூன் தெரிந்தான்.
பியூன், "உங்களில் யார் ஷிர்டியிலிருந்து வரும் பாபுகீர் புவா என்று எனக்கு விவரம் சொல்லவேண்டும்" என்று வெளியே வரும் பிரயாணிகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
பியூன் தேடிக்கொண்டிருந்த நபர் தாமே என்று அறிந்த கோசாவி, முன்னுக்கு வந்து, "நான்தான் அது; உமக்கென்ன வேண்டும்?" என்று கேட்டார்.
பியூன் சொன்னான், "சாந்தோர்கர் உமக்காக என்னை அனுப்பியிருக்கிறார். வாருங்கள், சீக்கிரமாக குதிரைவண்டியில் ஏறுங்கள். அவர் உங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்."
புவா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஷிர்டியிலிருந்து நானாவுக்குச் செய்தி போயிருக்கும் போலிருக்கிறது. அதனால்தான், சரியான நேரத்திற்கு குதிரைவண்டி வந்திருக்கிறது. என்னுடைய பெரிய தொல்லை தீர்ந்தது.
மீசை, தாடி, கிருதாவெல்லாம் வைத்துக்கொண்டும் பளிச்சென்று முழுக்காற் சட்டை அணிந்துகொண்டும் பியூன், பார்ப்பதற்கு சாமர்த்தியசாலியாகத் தெரிந்தான். குதிரைவண்டியும் அழகாக காட்சியளித்தது.