ஷீர்டி சாயி சத்சரிதம்
மாட்டுக்கொட்டலில் இருந்த பாம்பு திருப்தியடைந்தது. யார் கண்ணிலும் படாமல் எங்கோ ஓடி மறைந்தது. யாருக்குமே பாம்பு எங்கே சென்றதென்று தெரியவில்லை. எல்லாரும் ஆச்சரியமடைந்தனர்.
பிறகு அவர்கள் மாட்டுக்கொட்டில் முழுவதும் தேடினர்; பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நெவாஸ்கர் ஒருவரைத் தவிர மற்றவரெல்லாம் நிம்மதி பெருமூச்சு விட்டனர். நெவாஸ்கருக்கு மட்டும் ஒரு மனக்குறை இருந்தது.
மனக்குறை என்னவென்றால், பாம்பு மாட்டுக்கொட்டிலில் நுழைவதைப்பார்த்தது போலவே வெளியே சென்றதையும் பார்க்கமுடியவில்லையே என்பதுதான்!
நெவாஸ்கருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். குழந்தைகள் எல்லாரும் இளம் பிராயத்தினர். அவ்வப்பொழுது குடும்பத்தினர் அனைவரும் நெவாஸாவிலிருந்து ஷிர்டிக்கு தரிசனம் செய்ய வந்தனர்.
நெவாஸ்கரின் இரண்டு மனைவிகளுக்கும் பாபா புடவைகளும் ரவிக்கைத் துணிகளும் வாங்கி கொடுத்து அவர்களை ஆசீர்வாதம் செய்வார். இவ்விதமாக வாழ்ந்த பாலாஜி நெவாஸ்கர் சிறந்த பக்தர்.
இந்த சத் சரித்திரத்தின் பாதை எளிமையானது; நேர்மையானது; இது படிக்கப்படும் இடமெல்லாம் துவாரகாமாயீ ! ஆகவே, சாயியும் அங்கு நிச்சயம் வாசம் செய்வார்.
அவ்வாறே அங்கும் கோதாவரிக்கரை இருக்கிறது. அருகில் ஷீர்டி கிராமமும் இருக்கிறது. அவ்விடத்திலேயே துனீயருகில் சாயி அமர்ந்திருக்கிறார். அவரை நினைப்பவர்களை சங்கடங்களிலிருந்து விடுவிக்கும் சாயி!
எங்கு சாயி சத் சரித்திரம் படிக்கப்படுகிறதோ, அங்கு சாயி எப்பொழுதும் பிரசன்னமாக இருக்கிறார். பக்தியுடனும் விசுவாசத்துடனும் மறுபடியும் மறுபடியும் படிக்கப்படும்போது அவர் சகல பாவங்களுடனும் அங்கு வாசம் செய்வார்.
ஆத்மானந்தத்தில் திளைக்கும் சாயியை மனதிற்கொண்டு அனுதினமும் அவருடைய நாமத்தை ஜபித்துவந்தால், இதர ஜெபங்கள், தவங்கள், தியானம், தாரணை போன்ற கஷ்டமான சாதனைகள் எதுவும் செய்யத் தேவையில்லை.
அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து நித்திய நியமமாக உதீயைப் பூசி, நீருடன் கலந்து அருந்துபவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும்.-
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அடைவர்; வாழ்க்கையில் நிறைவு பெறுவார். உலகியல் விஷயங்களிலும் ஆன்மீக விஷயங்களிலும் குஹ்யமாக மறைந்திருக்கும் அர்த்தங்கள் அவர்களுக்கு வெளிப்பாடாகும்.
உதீயின் சம்பந்தம் அவர்களுடைய பஞ்சமகா பாவங்களையும் அவற்றைச் சார்ந்த கிளைப்பாவங்களையும் ஒட்டுமொத்தமாக நிர்மூலாக்கிவிடும். உள்ளும் புறமும் தூய்மையடையும்.
விபூதி தரிப்பதின் மஹிமை பக்தர்களுக்கு நன்கு தெரிந்ததே! கதை கேட்பவர்களுடைய மங்களத்திற்காகவே விபூதி வர்ணனை இவ்வளவிற்கு நீண்டது.