ஷீர்டி சாயி சத்சரிதம்
ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் இந்தப் பிரசங்கம் நடந்து, அவருடைய தூக்கத்தை பாழ்படுத்தியது. இந்த இன்னலை அவரால் தாங்கவும் முடியவில்லை.
இந்த மனிதர் மேற்சொன்ன இன்னலால் வதைபட்டார்; விடுபட வழி தெரியவில்லை. ஆகவே, நிவாரணம் பெற என்ன செய்யலாம் என்று தம் நண்பர் ஒருவரை ஆலோசனை கேட்டார். (நண்பர் சாயிபக்தர்)
"என்னைப் பொறுத்தவரை மஹாநுபாவரான சாயி மஹாராஜைத் தவிர வேறெந்த நிவாரணமும் தெரியவில்லை. முழுமையான விசுவாசத்துடனும் பக்தியுடனும் நீர் உதீயை ஏற்றுக்கொண்டால், அது தன்னுடைய சக்தியைத் தானே வெளிப்படுத்தும்."
எப்படி எப்படி சாயி பக்தர் சொன்னாரோ, அப்படி அப்படியே அவரும் செய்தார். அவருடைய அனுபவமும் அவ்வாறே இருந்தது. மறுபடியும் தந்தை கனவில் தோன்றவேயில்லை.
விதிவசத்தாலும் நற்செயலின் விளைவாகவும், ஆலோசனை கேட்ட நண்பர் ஒரு சாயிபக்தர். உதீயின் விசித்திரமான மஹிமையைப்பற்றி விவரித்துவிட்டுச் சிறிதளவு அவருக்கு அளிக்கவும் செய்தார்.
சாயிபக்தர் சொன்னார், "படுக்கப்போவதற்குமுன் சிறிது உதீயை நெற்றியில் பூசிக்கொள்ளவும், மீதியை ஒரு பொட்டலமாக தலையணையின் அருகில் வைத்துக்கொள்ளவும். ஸ்ரீசாயியை மனத்தில் வைக்கவும்.-
"பக்திபாவத்துடன் உதீயை அணுகவும். பிறகு அது விளைவிக்கும் அற்புதத்தை பார்க்கலாம். அது உடனே உம்மை இந்த இன்னலிலிருந்து விடுவிக்கும். உதீயினுடைய இயல்பான குணம் இதுவே."
மேற்சொன்ன செயல்முறையை அனுசரித்து, அன்றிரவு அவர் நிம்மதியாகத் தூங்கினார். கெட்ட கனவின் சாயலும் கிட்ட நெருங்கவில்லை; அவர் மிக்க ஆனந்தமடைந்தார்.
அந்த ஆனந்தத்தை யாரால் விவரிக்க முடியும்! அவர் உதீ பொட்டலத்தை தலையணையின் அருகிலேயே எப்பொழுதும் வைத்துக்கொண்டார். எப்பொழுதும் பாபாவின் நினைவாகவே இருந்தார்.
பின்னர், பாபாவின் நிழற்படம் ஒன்றை வாங்கி வியாழக்கிழமையன்று பூமாலை சமர்ப்பித்தார். படுக்கைக்கு மேலே சுவரில் அப்படத்தை மாட்டி பயபக்தியுடன் பூஜை செய்தார்.
தினமும் அப்படத்தை தரிசனம் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. தினமும் மானசீகமாக பூஜை செய்து ஒவ்வொரு வியாழனன்றும் பூமாலை சாத்தி வணங்கினர். அவரைப் பிடித்த பீடை ஒழிந்தது.
இந்த நியமநிஷ்டையைக் கடைபிடித்து எல்லா விருப்பங்களும் நிறைவேறப்பெற்றார். தூக்கமில்லாத இரவுகள், கெட்ட கனவுகள் பற்றியெல்லாம் மறந்தே போனார்.
இந்த சம்பவம் உதீயின் ஓர் உபயோகம். இன்னும் பெரிய அற்புதமான உபயோகமொன்றை விவரிக்கிறேன். மிக சங்கடமான சூழ்நிலையில் பிரயோகம் செய்யப்பட்டபோது, நினைத்ததை நிறைவேற்றிக் கொடுத்த சம்பவம் அது.