ஷீர்டி சாயி சத்சரிதம்
"சாமா என் செல்லப்பிள்ளை. அவனுடைய முரட்டு பக்தியின் காரணமாகச் சில சமயங்களில் ஏடாகூடமாகப் பேசிவிடுகிறான். ஆயினும் பக்தனின் சங்கற்பத்தை நிறைவேற்றிவைப்பது ஞானியரின் விரதமன்றோ!"
ஆகவே, பன்னிரண்டு மாதங்களில் பாபா தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். பாபா ஆசீர்வதித்த மூன்றாவது மாதம் அப் பெண்மணி கருத்தரித்தார்.
பாக்யவசமாக அவருக்கு ஒரு புத்திரன் பிறந்தான். ஐந்து மாதக் குழந்தையை எடுத்துக்கொண்டு கணவரும் மனைவியும் தரிசனம் செய்ய ஷிர்டிக்கு வந்தனர்.
கணவரும் சாயி பாதங்களில் விழுந்து வணங்கினார். பெருமகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் பாதைகளில் ஐந்நூறு ரூபாயை சமர்ப்பணம் செய்தார்.
சிலகாலம் கழித்து அந்தப் பணத்தை உபயோகித்து, 'சியாமகர்ண' என்ற தம் செல்லக்குதிரையை கட்டுவதற்காக ஒரு குதிரைலாயத்தை பாபா கட்டினார்.
ஆகவே, இந்த சாயியை தியானம் செய்யுங்கள். சாயியை நினைவில் வையுங்கள். சாயியைப் பற்றி சிந்தனை செய்யுங்கள். வேறெங்கும் எதையும் தேடி அலையாதீர்கள். ஹேமாட் பந்துக்கு என்றென்றும் அவரே அடைக்கலம்.
தொப்புளிலேயே ஜவ்வாது வைத்துக்கொண்டிருப்பவன் வாசனை தேடித் தெருத்தெருவாக ஏன் அலையவேண்டும்? ஹேமாட் அகண்டமாக சாயிபாதங்களில் மூழ்கி எல்லையற்ற ஆனந்தத்தை அடைகிறான்.
மசூதியிலிருந்து சாவடிவரை பக்தர்கள் ஆனந்தமாக பாபாவை ஊர்வலம் அழைத்துவந்ததை விவரிக்கும் அடுத்த அத்தியாயம் இதைவிடச் சுவையானது.
அதுபோலவே, பாபாவின் ஹண்டியைப் பற்றிய கதையையும் பிரசாத விநியோக விவரைத்தையும் மற்றும் பல சுவையான கதைகளையும் அடுத்த அத்தியாயத்தில் கேளுங்கள். கதை கேட்பவர்களே! உங்களுக்கு மேலும் கேட்கவேண்டுமென்ற உற்சாகம் எழும்பும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட்பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'எங்கும் நிறைந்த சாயி - ஆசிகள் நிறைவேறுதல்' என்னும் முப்பத்தாறாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ ஸத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.