ஷிர்டி சாயி சத்சரிதம்
இயற்கையாகவே மன்னிப்பளிப்பதில் மிகச் சிறந்தவர்களாகவும், எந்நிலையிலும் பதட்டப்படாத அமைதியுடனும் கபடமற்றும் பொறுமையுடனும் இந்த ஞானிகள் ஒப்பற்ற திருப்தியுடன் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரே பாபா.
மனித உருவில் காணப்பட்டாலும் பிரபஞ்சத்தில் உலவி வந்தாலும் அவர் நிர்குணமானவர்; நிர்விகாரமானவர்; சங்கம் தேவைப் படாதவர். அகமுகமாக முக்தியடைந்தவர்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே, "ஞானிகள் என்னுடைய ஆத்மா; ஞானிகள் என்னுடைய உயிருள்ள பிம்பங்கள்; அன்பும் கருணையும் உள்ள ஞானிகள் எல்லாரும் நானே" என்று கூறினார். -
"அவர்களை என்னுடைய பிம்பங்கள் என்று சொல்வதுகூடச் சரியாகாது; ஏனெனில், ஞானிகள் என்னுடைய நிச்சலமான, என்றும் மாறாத சொரூபங்கள். என் பக்தர்களின் சுமைகளை நான் ஞானிகளின் பொருட்டே சுமக்கிறேன். -
"வேறொன்று ஏதுமின்றி ஞானிகளை சரணடைந்த பக்தர்களின் பாதங்களை நான் வணங்குகிறேன்" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஞானிகளுடைய பெருமையை உத்தவருக்கு உபதேசம் செய்தார்.
எல்லா ஆவல்களிலும் திருப்திஅடைந்தவர். தன்னிறைவு பெற்றவர். யதேச்சையாக கிடைத்ததில் சந்தோஷமடைவார். சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்.
சொற்களால் விவரிக்க முடியாத அந்த சக்தியே கண்ணால் காணும்படியான ரூபத்தில் பூமிக்கு வந்தது. சச்சிதானந்தமே அவர், என்று அறிந்துகொள்வதுதான் முழுமையான ஞானம்.