ஷீர்டி சாயி சத்சரிதம்
சூரியனை கிரஹணம் பிடித்திருக்கிறது என்றும், அது கண்ணக்குத் தெரியாமல் போய்விட்டது என்றும் மக்கள் சொல்லுகின்றனர். ஆனால், அது வெறும் பார்வையின் குணதோஷமே, ஞானியரின் மரணமும் அப்படியே.
ஞானிகளுக்கு உடல் என்பது கேவலம் ஒரு உபாதி.அவர்களுக்கு ஏது பிறவிப்பிணி? பழவினையால் ஏதேனும் பந்தம் இருப்பினும் அதை அவர்கள் அறியமாட்டார்கள்.
உருவமற்ற நிலையில் இருந்தபோது அடியவர்களின் பக்தியால் நிரம்பி வழிந்ததாலும், பக்தர்கள் பூர்வஜென்மங்களில் சம்பாதித்த புண்ணியத்தால், அவர் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொண்டார். பக்தர்களுக்கு கைதூக்கி வாழ்த்துக் கூறுவதற்காகவே ஷிர்டியில் காணப்பட்டார்.
'பக்தர்களுக்காகத் தோன்றிய காரியம் முடிவடைந்தது; ஆகவே, அவர் உடலை உதிர்த்துவிட்டார். ' என்று சொல்லப்படுகிறது. இந்த வார்த்தைகளை யார் நம்புவர்? யோகிகளுக்கு போவதும் வருவதும் உண்டோ?
இச்சாமரண சக்தி (விரும்பியபோது உயிர் பிறக்கும் சக்தி) படைத்த சமர்த்த சாயி, தேகத்தை யோகாக்கினியில் எரித்துவிட்டு மூலப்பிரகிருதியுடன் கலந்துவிட்டார். ஆயினும், பக்தர்களுடைய இதயத்தில் என்றும் வாசம் செய்கிறார்.
எவருடைய நாமத்தை நினைத்தால் ஜனனமரண எண்ணமே ஓடி மறைந்துவிடுகிறதோ, அவருக்கு மரண அவஸ்தை ஏது? முதலிலிருந்த தோன்றா நிலைக்கு அவர் திரும்பிவிட்டார் என்றே அறிதல் வேண்டும்.
பௌதிக நிலையிலிருந்து தாவி, தோன்றாநிலையில் பாபா கலந்தார். அந்த நேரத்தில், தம்மிலேயே மூழ்கிய நிலையை அனுபவித்துக்கொண்டிருந்தபோதிலும் , பக்தர்களை விழிப்புடன் இருக்கச் செய்தார்.
எந்த உருவம் தெய்வீக உயிரோட்டத்துடன் இயங்கியதோ, அந்த உருவம் பக்தர்களுடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அந்த தேகம் மறைந்து போயிற்று என்று எப்படிச் சொல்ல முடியும்? மனம் அந்த வார்த்தைகளை ஏற்க மறுக்கிறது.
ஆதியும் அந்தமுமில்லாத இந்த சாயி பிரளய (ஊழிக்) காலத்திலும் இருப்பார். ஜனனமரண அபாயத்தில் என்றுமே மாட்டிக்கொள்ளமாட்டார்.
மஹராஜ் ஞானேச்வர் எங்கே போனார்? மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தரிசனம் தந்தார் அல்லரோ! ஞானி ஏகநாதர் அவரை சந்தித்தார். அந்த உபகாரத்துக்கு உலகம் அவருக்கு கடைமைப் பட்டிருக்கிறது.
கிருபாசனமுத்திரமான ஏகநாதர் பைடனின் ஜோதியாக எவ்வாறு பிரகாசித்தாரோ, அவ்வாறே துகாராம் மஹராஜ் தெஹூவிலும், நரசிம்ம சரஸ்வதி ஆலந்தியிலும் பிரகாசித்தனர்.-
பரளியில் சமர்த்த ராமதாசர்; அக்கல்கோட்டில் அக்கல்கோட் மஹாராஜ்; ஹுமானாபாத்தில் மாணிக்கப் பிரபு; அவ்வாறே ஷிர்டியில் இந்த சாயி.
மனம் எப்படியோ அப்படியே பாவம். பாவம் எப்படியோ அப்படியே என்றும் அனுபவம். புகழ் பெட்ரா சித்திகளை உடையவருக்கு மரண நிலை ஏது?