ஷீர்டி சாயி சத்சரிதம்
ரசம் ததும்பும் அக் காதை இதுவே. கதைகேட்பவர்கள் ஆதியிலிருந்தே கவனமாக இருக்கிறார்கள்; சொல்பவர் சாயி பாதங்களில் மூழ்கியிருக்கிறார்; சாயியின் சரித்திரமோ ஆழங்கான முடியாதது!
பரோபகாரமே உருவெடுத்துவந்த சாயி மற்றவர்களின் நன்மைக்காக கடுமையாக உழைத்தார். ஒருபோதும் விரோதபாவத்தையே அறியாத அவர் இடைவிடாது நற்செயல்களிலேயே ஈடுபட்டிருந்தார்.
மனித உடல் ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும், வேறுவிதமாக இருந்தாலும் கர்மபந்தத்திலிருந்து விடுபடமுடியாது. ஆகவே, குருபாதங்களில் பிரீதியுடன் மனத்தை உள்முகமாகச் செலுத்துங்கள்.
பின்னர், குருபாதங்களில் பிரேமையுடைய பக்தர்களின் யோக க்ஷேமத்தை , குரு சிரமமேதுமின்றி அளிக்கும் மிக உத்தமமான அனுபவத்தை அடையுங்கள்.
இது கேட்டாலும் கிடைக்காத நிலை; ஆயினும், குருவின் பெருமையைப் பாடுவதால் சுலபமாக கிடைக்கும். பெருமுயற்சிகள் செய்தும் அடையமுடியாத நிலை; குருகிருபையின் பலத்தால் தானாகவே உங்களிடம் வந்துசேரும்.
அவரை நுணுக்கமாகக் கவனிக்கவேண்டுமென்ற நோக்கத்தில் கர்வத்துடன் வந்தவர்கள், கர்வபங்கமடைந்து தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் சுகமாக வீடு திரும்பினர்.
இறையாண்மையால் ஸ்ரீஹரி பூரணமாக நிரம்பியிருப்பதுபோல , வெற்றி , செல்வம், கொடை, ஞானம், சாந்தி, பற்றற்ற நிலை ஆகிய ஆறுகுணங்களால் ஸ்ரீஸாயி பகவான் நிரம்பியிருந்தார்.
பிரபஞ்ச உணர்வால் நிரம்பிய சாயி , நாம் அர்ச்சனையோ பூஜையோ பஜனையோ செய்யாமலே நமக்கு தரிசனம் அளிப்பது நம்முடைய வானளாவிய பாக்கியமே!
பக்தியிருக்கும் இடத்தில் இறைவன் இருக்கிறன்றான் என்பது வழக்கு. ஆனால், நமக்கோ பக்தி குறைபடுகிறது. ஆயினும், சுபாவமாகவே (இயல்பாகவே) தீனர்களிடம் தயை காட்டும் சாயி, மஹானுபவர்.
கதைகேட்பவர்களே! அல்லீ முஹம்மது சொன்ன கதையை இப்பொழுது கேளுங்கள். சாயி லீலையின் வானளாவிய இயல்பையும் அவருடைய மஹாசக்தியையும் நன்கு அறிந்துகொள்வீர்கள். ( இதற்குமேல் அல்லீ முஹம்மது அவர்களின் கூற்று)
ஒருநாள் பம்பாய் நகரத்தில் சாலைவழியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு வியாபாரி அழகிய படங்களையும் புடைச்சிற்பங்களையும் (BAS - RELIEF ) விற்றுக்கொண்டிருந்ததை பார்த்தேன்.
ஞானிகள், மகந்துகள் , அவலியாக்கள் ஆகியோரின் பலவிதமான வண்ணப்படங்களைக் கண்ட நான், அவை யார் யாருடைய படங்கள் என்றறிய விரும்பினேன்.