valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 21 October 2021

 ஷீர்டி சாய் சத்சரிதம்

அவருக்கு இன்னொரு சுவாரசியமான அனுபவமும் உண்டு; கேட்பதற்குகந்தது. பல மாதங்களாக அவருக்கு ஒரு குதிகாலில் வலி இருந்தது.

ஷீர்டி செல்வதற்கு முன் பல மாதங்களாக இந்த வியாதியை அனுபவித்து வந்தார். ஷீர்டி சென்று வந்த பிறகு இந்தப் பாதிப்பு குறைந்தது; சில நாள்களில் அடியோடு மறைந்தது.


இதே மாதிரியான நிகழ்ச்சியொன்றில், ஞானியின் சக்தியைச் சோதிக்க முயன்ற ஒருவர் தம்முடைய விருப்பத்திற்கு மாறாக, ஞானியின் பாதங்களில் பணிய வேண்டி நேர்ந்தது. அந்தக் காதையை இப்பொழுது கேளுங்கள்.

மேலும், அவருடைய விருப்பத்திற்கு மாறாகவும் ஏற்கெனவே செய்திருந்த திடமான தீர்மானத்திற்கு நேரெதிராகவும் தக்ஷிணை கொடுக்கவேண்டுமென்று மோகங்கொண்டு தக்ஷிணை கொடுத்த காதையைக் கேளுங்கள்.

டக்கர் தரம்சீ ஜெடாபாயி என்னும் பெயர் கொண்ட, பம்பாய் நகரத்தில் வாழ்ந்த, சட்ட சம்பந்தமான ஆலோசகர் ஒருவருக்குப் பூர்வபுண்ணிய பலத்தால் சாயிதரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது.

அவர் காகா மஹாஜனியின் எஜமானர். ஒருவருக்கொருவர் நல்ல பரிச்சயம் இருந்தது. ஆகவே, அவர் நேரிடையாக ஷிர்டிக்குச் சென்று பாபாவை பிரத்யக்ஷமாகப் பேட்டி காணவேண்டுமென்று நினைத்தார்.

காகா மஹாஜனி, டக்கர் ஜீயின் நிறுவனத்தில் நிர்வாக குமாஸ்தாவாக உத்தியோகம் செய்துவந்தார். தம்முடைய விடுப்பு அனைத்தையும் அடிக்கடி ஷீர்டி சென்று வருவற்காகவே உபயோகித்தார்.

ஷிர்டிக்குப் போனால் நேரத்தோடு திரும்பி வருவாரா என்ன! எட்டு நாள்கள் அங்கே தங்கிவிட்டு வருவார். கேட்டால், பாபா அனுமதியளிக்கவில்லை என்று காரணம் சொல்லுவார்! "இதுவும் ஒரு வேலை செய்யும் ரீதியா?" என்று நினைத்து எஜமானர் எரிச்சலைடைவது வழக்கம்.

"இதென்ன ஞானிகளின் நடைமுறை! இந்த அனாவசியமான தடபுடலெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லை!" இந்த சாயி விவகாரத்தை ஒரு மாதிரியாக முடிவுகட்ட வேண்டுமென்று தீர்மானித்து, ஹோலிப் பண்டிகை விடுமுறையின்போது ஷிர்டிக்கு கிளம்பினார்.

'தான்' என்று அஹங்காரத்தாலும் பணத்திமிராலும் நிரம்பிய அந்த சேட், "ஞானிகளும் நம்மைப்போன்ற மனிதர்கள்தாமே; அவர்களை நாம் எதற்காக வாங்கவேண்டும்?" என நினைத்தார்.

மெத்தப்படித்த பண்டிதர்களையும் சாஸ்திர விற்பன்னர்களையும் மண்டியிடவைத்த சாயியின் ஆன்மீக, தார்மீக சக்தியின் முன்பாகக் கேவலம் தரம்சீயின் தீர்மானம் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக்க போகிறது?

ஆயினும், அவர் நினைத்தார், "குருட்டு நம்பிக்கை நன்றன்று; ஆகவே நானே உண்மையைக் கண்டுபிடித்துக்கொள்கிறேன்". இவ்வாறு மனத்துள் தீர்மானம் செய்துகொண்டு அவர் ஷிர்டிக்குப் போக ஆயத்தங்கள் செய்தார்.