ஷீர்டி சாயி சத்சரிதம்
"ஓ, பிராமணரென்ன, மாளிகையென்ன! ஜென்மம் பூராவும் ஒரு மரத்தடியில் கழித்தவர் அவர். திருடன் கொண்டுபோன செல்வமெல்லாம் எங்கிருந்து வந்தது?-
"ஆகவே, இந்த நிகழ்ச்சிகள் ஆரம்பகாலத்தில் உங்களுடைய வாழ்க்கையில் நடைபெற்றனவாகத்தான் இருக்கவேண்டும். இக் கதையை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில், நீங்கள் வந்தவுடனே பாபா கதையை ஆரம்பித்தார் என்று தோன்றுகிறது."
விருந்தாளிகள் உணர்ச்சிவசப்பட்டு தொண்டை அடைக்க கூறினார், "சாயி எல்லாம் அறிந்தவர்; பர ப்ரம்ம அவதாரம்; இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்டவர்; இறைவனோடு ஒன்றியவர்; பேதமேதுமில்லாதவர்; எங்கும் நிறைந்தவர்.-
"அவர் இப்பொழுது சொன்ன கதை எழுத்துக்கு எழுத்து எங்களுடையது. போஜனம் முடிந்த பிறகு உங்களுக்கு விஸ்தாரமாகச் சொல்கிறோம்.-
"பாபா சொன்ன அத்தனை நிகழ்ச்சிகளும் எங்கள் வாழ்வில் நடந்தவை. எங்களை முன்பின் பாராதவருக்கு இதெல்லாம் எப்படி தெரிந்தது? ஆகவே, இவையனைத்தும் அதிசயமே!"
உணவுண்ட பிறகு மாதவராவுடன் வெற்றிலைபாக்கு சுவைத்துக்கொண்டிருந்தபோது விவரணம் ஆரம்பித்தது.
ஒருவர் சொன்னார், "என்னுடைய ஆதி குடியிருப்பு சயகாத்ரி மலைத்தொடரில் இருக்கிறது. ஆனால், பிழைக்கும் வழி விஷயத்தில் சமுத்திரக்கரைக்குத் தொடர்பு இருந்திருக்கவேண்டும். -
"ஆகவே நான் ஏதாவது வேலை கிடைக்குமென்று நினைத்து கோவாவுக்குச் சென்றேன். காரியசித்தி ஆக்கவேண்டுமென்று நான் தத்தாத்திரேயரை அத்யந்தமான பபாயக்தியுடன் ஆராதனை செய்தேன்; நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டேன்.-
"நான் தத்தரின் பாதங்களில் விழுந்து வேண்டிக்கொண்டேன், 'இறைவா! என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக எனக்கொரு வேலை தேவைப்படுகிறது. கிருபை செய்து எனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுங்கள்.-
"இன்றிலிருந்து சொற்ப அவகாசத்திற்குள் என்னுடைய வேண்டுகோள் நிறைவேறினால்,முதல் மாதத்தில் எனக்கு என்ன கிடைக்கிறதோ அதை முழுவதுமாக உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்'-
"பாக்கியவசமாக தத்தர் என்னுடைய பிரார்த்தனையை சீக்கிரமாகவே நிறைவேற்றி வைத்தார். அப்பொழுதிலிருந்து நான் மாதம் பதினைந்து ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்தேன். -
"பிறகு, சாயி பாபா வர்ணனை செய்தவாறே எனக்குப் பதவி உயர்வுகள் பல கிடைத்தன. நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்ட விஷயத்தை எப்படியோ என் மனம் அடியோடு மறந்துவிட்டது. ஆகவே, அது இந்த ரீதியில் எனக்கு ஞாபகப்படுத்தப்பட்டது. -