ஷீர்டி சாயி சத்சரிதம்
பேச்சு இந்த ரீதியில் நடந்தது! தரம்ஸீ தாம் நிச்சயம் செய்துகொண்டுவந்ததை எல்லாம் விசிறியடித்துவிட்டு பாபாவின் பாதங்களில் தம்மிச்சையாகவே விழுந்தார். பிறகு, இருவரும் வாடாவிற்குத் திரும்பினர்.
மத்திய ஆரத்தி நடந்து முடிந்தது. இருவரும் வீடு திரும்பும் பயணத்திற்குத் தயார் செய்ய ஆரம்பித்தனர். பாபாவிடம் அனுமதி கேட்கும் நேரம் நெருங்கியது. இருவரும் மசூதிக்குச் சென்றனர்.
தரம்ஸீ அப்பொழுது காகாவிடம் சொன்னார், "நான் வீடு திரும்ப அனுமதி வேண்டப் போவதில்லை. அனுமதி உமக்குத்தான் வேண்டும். ஆகவே நீர்தான் அனுமதி கேட்கவேண்டும்." இதைக் கேள்வியுற்ற மாதராவ் சொன்னார், -
"காகா வீடு திரும்புவது என்பது நிச்சயமில்லை. ஒரு முழுவாரம் கழிந்தாலொழிய அவருக்கு அனுமதி கிடைக்காது. நீங்களே அனுமதி கேட்பதுதான் நல்லது!"
ஆகவே, மூவரும் மசூதிக்குச் சென்று அமர்ந்தபோது, அவர்களின் சார்பாக மாதவராவ் அனுமதி கேட்டார். ஆனால், பாபா ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார். அமைதியான மனத்துடன் கவனமாகக் கேளுங்கள்.
"சஞ்சல புத்தியுடைய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுடைய இல்லத்தில் தனமும் தானியங்களும் மற்றப் பொருள்களும் ஸம்ருத்தியாக (ஏராளமாக) நிரம்பிக் கிடந்தன. உடலிலும் மனத்திலும் வியாதியோ வெக்கையோ ஏதும் இல்லை. ஆயினும் அவன் உபாதைகளை தேடினான். -
"அவசியமில்லாமல் தலைமேல் பாரத்தை ஏற்றிக்கொண்டு இங்குமங்கும் அலைந்தான். அவன் மனத்தில் அமைதியில்லை. ஒரு நேரம் பாரத்தை இறக்கிக் கீழே வைப்பான்; உடனே அதைத் தூக்கிக்கொள்வான். அவனால் மனத்தைச் சலனமில்லாமல் செய்ய முடியவில்லை. -
"அவனுடைய அவஸ்தையைப் பார்த்து என் இதயம் கனிந்தது. நான் அவனிடம் சொன்னேன், 'உன்னுடைய மனத்தை நிலைபெறச்செய்து ஏதாவதொன்றில் நிறுத்து; அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்!-
"நீ அனாவசியமாக அலைகிறாய். உன்னுடைய மனத்தை ஏதாவது ஒன்றில் நிலைபெறச் செய்". இந்த வார்த்தைகள் தரம்ஸீயைத் தேள் போல் கொட்டின. அது தமக்காகச் சொல்லப்பட்ட அறிவுரையே என்று புரிந்துகொண்டார்.
எத்தனை வைபவங்கள் இருந்தபோதிலும், எக் காரணமும் இன்றிக் கவலையால் பீடிக்கப்பட்டவராகத் தமக்குத் தாமே இன்னல் தேடிக்கொண்டார்.
செல்வமும் சமூக கௌரமும் ஏராளமாக இருந்தும் மனத்தில் அமைதி இல்லை. துக்கங்களையும் இன்னல்களையும் கற்பனை செய்துகொண்டு கவலையில் மூக்கிவிடுவார்.
இந்தக் கதை சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்தவுடன் சேட்ஜி மிகுந்த வியப்படைந்தார். இதுதான் என்னுடைய மனோநிலை, என்றெண்ணி மிகுந்த பயபக்தியுடன் இக் கதையைக் கேட்டார்.
காகாவுக்கு அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்குமென்பது நடக்காத கதை. அதுவும் பிரயாசை இல்லாமலேயே கிடைத்ததுபற்றி தரம்ஸீ சந்தோஷமடைந்தார்.