பகவந்த்ராவ் ஷிர்சாகர் என்று ஒருவர். அவருக்குத் தந்தை தலைசிறந்த விட்டல் பக்தர்; அடிக்கடி பண்டர்பூருக்குச் செல்வார்.
அவருடைய (பகவந்த்ராவ் ஷிர்சாகர்) வீட்டில் நித்திய பூஜைக்கு ஒரு விட்டல் சிலை இருந்தது. ஆனால், தந்தையின் மறைவுக்கு பிறகு, பூஜை படையல் எல்லாம் நின்றுவிட்டன. இறந்துபோன முன்னோர்களுக்காக வருடாந்திரமாக செய்யப்படும் சிராத்தம் - திதி இவையும் மறைந்துபோயின.
பண்டரிபுரத்திற்கு ஆண்டுதோறும் போவதைப் பற்றிய பேச்சே எழவில்லை. பவகவந்த் ராவ் ஷீரடிக்கு வந்தபோது, பாபா அவருக்குத் தந்தையை ஞாபகப்படுத்திக்கொண்டு சொன்னார், "அவர் என் நண்பர் .-
"இவர் (பகவந்த்ராவ்) அந் நண்பருக்கு மகனானதால், இவரை நான் ஷீரடிக்கு இழுத்து வந்தேன். இவர் இறைவனுக்கேதும் படையல் செய்வதை நிறுத்திவிட்டார். என்னையும் பட்டினி போட்டுவிட்டார் -
"இவர் விட்டலையே பட்டினி போட்டு விட்டார். ஆகவே, நான் இவரை ஷீரடிக்கு அழைத்து வந்தேன். இப்பொழுது நான் இவருக்கு அனைத்தையும் ஞாபகபடுத்தி, நித்திய பூஜை செய்யவைக்கிறேன். "
ஒரு சந்தர்பத்தில் புண்ணியகாலம் எதுவென்று தெரிந்துகொண்டு, தாஸ காணு பிரயாகையில் (திரிவேணி சங்கமம்) ஸ்நானம் செய்ய விரும்பி, பாபாவிடம் அனுமதிபெற வந்தார்.
"பிரயாகையில் ஸ்நானம் செய்வதற்காக அவ்வளவு தூரம் செல்லவேண்டா. ஷிர்டியே நமது பிரயாகை" என்று பாபா பதிலளித்தார். "மனத்தில் அசைக்க முடியாத விசுவாசம் இருக்கட்டும்".
என்னே அற்புதங்களில் அற்புதம்! தாஸ கணு பாபாவின் பாதங்களை தொட்டபோது, இரு கட்டைவிரல்களிலிருந்தும் நீர் சொட்டியது. இரட்டை நதிகளான கங்கையிலிருந்தும் யமுனையிலிருந்தும் புனித நீர் (பாபாவின் பாதங்கள் வழியாக ) வெளிவந்து சொட்டியது.
இந்த அற்புதத்தைப் பார்த்தவுடன் தாஸ கணுவுக்கு உணர்ச்சி வசத்தால் தொண்டை அடைத்தது. பாபாவின் உபகாரம் எவ்வளவு மகத்தானது. நன்றியுணர்வாலும் சந்தோஷத்தாலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
இதயத்துள் பொங்கி வழிந்த அன்பு அவரைக் கவிபாட வைத்தது. பாபாவினுடைய எல்லையற்ற சக்தியையும் புரிந்துகொள்ளமுடியாத லீலைகளையும் செய்யுள் வடிவில் பாடிய பிறகுதான் பொங்கிய மனம் திருப்தியடைந்தது.
தாஸ கணுவின் செய்யுள்கள் கவர்ச்சி மிகுந்தவை. கேட்பவர்களின் ஆவலைத் திருப்திசெய்யும் வகையிலும் ஏற்கனவே தெரிவித்தவாறும் இந்தச் சரியான சமயத்தில் அந்த பயபக்தி யூட்டுகிற பாட்டை இங்கே தருகிறேன்.