பிறகு, அதே இடத்தில் கிராம எல்லைச் சுவருக்கருகில் வேப்பமரத்தடியில், கடப்பாரைகளாலும் மண்வெட்டிகளையும் கொண்டு வெட்டுமேல் வெட்டாக ஒரு செங்கல் தளம் தெரியும் வரை, தோண்டினார்கள்.
செங்கல் தளத்தை எடுத்த பிறகு, கீழே ஒரு நிலவரை இருப்பதை பார்த்தனர். நான்கு உலோக விளக்குகள் உள்ளே எரிந்துகொண்டிருந்தன. நிலவறையின் வாயில் மாவு அரைக்கும் எந்திரக் கல்லால் மூடப்பட்டிருந்தது.
நிலவரை சுண்ணாம்புகாரையால் தளம் போடப் பட்டிருந்தது. ஒரு மரத்தாலான ஆசனமும் அழகான ஜபமாலையும் கோமுகப் பையும் அங்கு இருந்தன. அப்பொழுது கண்டோபா தெரிவித்தார். "இவ்விளவல் பன்னிரண்டு வருடங்கள் இவ்விடத்தில் தவம் மேற்கொண்டான். "
கூடியிருந்த மக்கள் பிரமித்துப் போனார்கள். இளவலைத் துருவித்துருவிக் கேள்விகள் கேட்டார்கள். குறும்பு பிடித்த பையனோ வேறுவிதமான கதை ஒன்று சொன்னான்.
"இது என் குருவின் ஸ்தானம். எனக்கு மிகப் பவித்ரமான இடம். நான் சொல்வதை ஒருமுறை கேளுங்கள். அதை முன்பிருந்தவாறு மூடிவிட்டு பாதுகாத்து வாருங்கள்".
இவ்வாறு பாபா உரைத்தார் என்று அப்பொழுது நேரில் இருந்தவர்கள் சொன்னார்கள். ஏன் என்னுடைய நா வளைந்து, 'பாபா வேறுவிதமான திருப்பம் கொடுத்தார்' என்று சொல்லியது.
என்னை பார்த்து நானே ஆச்சரியப் படுகிறேன். நான் பாபாவின் நடத்தையைப் பற்றி ஏன் அவ்வாறு நினைக்க வேண்டும்? இது பாபாவின் உள்ளார்ந்த நகைச் சுவை உணர்வால்தான் என்று எனக்கு இப்பொழுது புரிந்துவிட்டது.
பாபாவுக்கு நகைச்சுவையில் பிரியம் அதிகம். அந்த நிலவரை அவருடையதாகவே இருக்கலாம்; அது அவருக்கு குருவின் உறைவிடம் என்று சொல்வதில் தவறென்ன இருக்கிறது? அதனுடைய பெருமை குறைந்துவிடுமா என்ன?
பாபா வினுடைய ஆணைப்படி செங்கற்க லெல்லாம் பழையபடியே அடுக்கப் பட்டு நிலவறை அவருடைய குருஸ்தானமாக மூடி மெழுகப் பட்டது.
அரச மரம் எப்படியோ, அத்திமரம் எப்படியோ, அப்படியே பாபாவிற்கு அந்த வேப்ப மரமும் உயர்வானது, புனிதமானது. அந்த வேப்ப மரத்தை அவர் நேசித்தார்; பயமும் பாசமும் கலந்த மரியாதை செலுத்தினார்.
மகால்சாபதியும் மற்ற பழைய குடிமக்களும் இவ்விடத்தை பாபாவின் குரு சமாதியடைந்த இடமாகவே கருதி வந்தனம் செய்து வருகிறார்கள்.
பாபா இந்த சமாதியனருகில் பன்னிரண்டு ஆண்டுகள் மௌனத்திலும் தியானத்திலும் கழித்தார் என்பது கிராம ஜனங்களுக்கு நன்கு தெரிந்ததே.