ஷீர்டி சாயி சத்சரிதம்
"பூரணமான சிரத்தையும், தைரியம் சேர்ந்த பொறுமையுமே உமையுடன் இணைந்த மகேசுவரன். அவர்களுடைய அருட்கரம் தலையில் படும்வரை உலகத்தையே ஆடையாக அணிந்தவனும் நம் ஹிருதயவாசியுமான ஆண்டவன் கண்ணுக்குப் புலப்படமாட்டான்.
"பொறுமையும் நிட்டையுள்ள விசுவாசமும் சிறந்த ஐசுவர்யங்களை அளிக்கும்" மேற்கொண்டது. அமோகமான வீரியம் கொண்ட வார்த்தைகளை உடையவரும் குருமார்களில் தலைசிறந்தவருமாகிய சாயிநாதரின் திருவாய்மொழியாகும்.
கண்ணுக்குத் தெரியும் இப் பிரபஞ்சம் ஓர் மாயை என்பதையும், பிரத்யக்ஷமாக அனுபவிக்கப்பட்டபோதிலும் கண்விழித்தவுடன் காணாமற்போகும் கனவைப் போன்றது என்பதையும் அவசியம் ஒத்துக்கொள்ளவேண்டும்.
நம்முடைய புத்திக்கு அவ்வளவு தூரந்தான் எட்டும்; அதற்குமேல் கேட்டது. நாம் ஆத்மாவை அறிந்துகொள்வதும் அவ்வளவே. உண்மை எது என்பதை புத்தியால் அறிந்துகொள்ளமுடியாது. அதை உணரும் சக்தி ஆத்மாவுக்குத்தான் உண்டு.
இருக்கிறது என்னும் குணாதிசயமோ, இல்லை என்னும் குணாதிசயமோ, இரண்டுமே இல்லாததும் லிங்க (ஆண்/பெண்) பேதம் இல்லாததையும் எந்த குணமும் இல்லாததும் எங்கும் நிறைந்ததும் ஒளியால் ஒளியினுள்ளும் பலவிதமாக வர்ணிக்கப்பட்டதும் - குரு ரூபத்தில் இருக்கிறது.
ஆத்மா எந்த குணாதியசம் இல்லாதது; மூப்பிற்கும் ஜனன மரணத்திற்கும் அப்பாற்பட்டது; புராணமானது; சாசுவதமானது; என்றும் அழிவில்லாதது;
நித்தியமானது; பிறக்காதது; புராதானமானது; விண்வெளியைப் போல் எங்கும் நிறைந்தது; ஆரம்பம் இல்லாதது; இடையறாதது; வளர்ச்சியோ மாறுதலோ இல்லாதது.
சொல்லுக்கு அப்பாற்பட்டதும் உருவமில்லாததும் ஆரம்பமில்லாததும் முடிவில்லாததும் அளக்கமுடியாததும் அழிவில்லாததும் வாசனையோ ருசியோ இல்லாததும் கறைபடாததுமான ஒன்றின் சொரூபத்தை யாரால் வர்ணிக்கமுடியும்?
இவ்வகையான நிர்குணமான ஆத்மாவை அஞ்ஞானத்தால் அறியமுடியாதபோது அஞ்ஞானத்தை ஞானத்தால் விலக்குங்கள். ஆத்மா சூனியம் என்று மட்டும் எப்பொழுதும் சொல்லிவிடாதீர்கள்.
ஸ்ரீசாயியின் சொந்தச் செல்வமான அந்தப் பரமஹம்ச நிலை எப்பேர்பட்டது! காலம் அதை ஒரு கணத்தில் திருடிக்கொண்டு போனபிறகு அதை மறுபடியும் பார்க்கமுடியுமா?
மனைவி, மக்கள், செல்வம் ஆகியவற்றால் பந்தப்பட்ட சாதாரண இல்லற பக்தனை விட்டுவிடுங்கள். அனைத்தையும் துறந்த யோகிகளும் சாயிதரிசனத்திற்கு வந்து பாதகமலங்களில் மூழ்கினர்.
ஆசை, வினையாற்றல் ஆகிய இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுபட்டவரும், தேகம் குடும்பம் போன்ற உலகியல் பாசங்களிலிருந்து முழுமையாக விடுபட்டவருமாகிய பக்தர் தன்யராவார் (சகல பேறுகளையும் பெற்றவராவார்)