valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 October 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஏற்கெனவே விவரிக்கப்பட்ட சிநேகிதர் செய்ததைப் போன்று ஐவரும் காகா மஹாஜனியுடன் ஷிர்டிக்குக் கிளம்பினார். அவரிடம் சொன்னார்,

"நீர் ஷிர்டிக்குப் போனால் அங்கேயே முகாம் போட்டுவிடுகிறீர்; ஆனால், இம்முறை அது சரிப்படாது. நீர் என்னுடன் திரும்பிவிட வேண்டும். இது நிச்சயம் என்று அறிவீராக."

காகா பதில் கூறினார், "இதோ பாரும், அது என்னுடைய கைகளில் இல்லை". இதைக் கேட்ட தரம்ஸீ, துணைக்கு இன்னொருவரையும் அழைத்துக்கொண்டார்.

"ஒரு வேளை காகா திரும்பிவர முடியாமற்போகலாம் துணையின்றிப் பயணம் செய்யக்கூடாது." சேட் இவ்வாறு நினைத்து இன்னொருவருரையும் அழைத்துக்கொண்டார். மூன்று பேராக ஷிர்டிக்கு கிளம்பினர்.

இம்மாதிரியாக எத்தனையோ விதமான மனிதர்கள் உண்டு. அவர்களையெல்லாம் தம்மிடம் இழுத்துவந்து அவர்களுடைய சந்தேகங்களையும் தவறான நம்பிக்கைகளையும் பாபா நிவர்த்தி செய்தார்.

அவர்கள் வீடு திரும்பித் தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வர்; அல்லது மற்றவரின் உதவி கொண்டு அதை எழுதியும் வைப்பர். இதெல்லாம் மக்களை நல்ல பாதையில் கொண்டுவருவதற்காகவே.

தாத்பரியம் (ஆழ்ந்த கருத்து) என்னவென்றால், இவ்வாறு சென்றவர்கள் தரிசன சுகத்தால் திருப்தியடைவார்கள். கிளம்பும்போது மனப்போக்கு எப்படி இருந்திருந்தாலும் சரி, கடைசியில் பரமானந்தம் அடைந்தனர்.

'விஷய ஆர்வத்தாலும் உட்புகுந்து நேரில் பார்க்க விரும்பிய ஆவலாலும் அவர்களாகவே ஷிர்டிக்குச் சென்றார்கள்' என்று நாம் சொல்லலாமே தவிர, உண்மை என்னவோ வேறுவிதமாக இருந்தது. அவர்கள் பாபாவின் காரியசாதனைக்காகவே ஷிர்டிக்குச் சென்றனர்.

அவர்களுக்கு அந்த உள்ளுணர்வைக் கொடுத்தவரே பாபாதான். அதன் பிறகே அவர்களால் வீட்டை விட்டுக் காலடி எடுத்துவைக்க முடிந்தது. அவர்களுடைய இயல்பான மனோபாவத்தை மேலும் கிளறிவிட்டு, அவர்களை ஆன்மீகப் பாதையில் திருப்பினார் பாபா!

பாபாவின் திட்டங்களை யாரால் அறிய முடியும்? அறிய முயன்றவர்கள் அவதிக்குள்ளானார்கள்! ஆனால், நீங்கள் அகங்காரத்தை விடுத்து, அவருடைய காலடியில் புரண்டால், அளவுகடந்த ஆனந்தம் அனுபவிப்பீர்கள்.

தேவர்கள், இருபிறப்பாளர்கள் (அந்தணர்), குரு, இவர்களைக் காணச் செல்லும்போது வெறுங்கையுடன் போகக்கூடாது. ஆகவே, காகா, போகும் வழியில் இரண்டு சேர் திராட்சை (சுமார் 560 கிராம் ) வாங்கி கொண்டார்.

திராட்சையில் விதையற்ற ஜாதியும் உண்டு . ஆனால், விதையுள்ள ஜாதிதான் அப்பொழுது கிடைத்தது. காகா அதையே வாங்கிக்கொண்டார்.

வழியெல்லாம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டே மூவர் கோஷ்டி ஷீர்டி போய்ச் சேர்ந்தது. மூவரும் ஒன்றாக பாபா தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்றனர்.