valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 21 December 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


திடீரென்று பளபளவென்று மின்னலடித்துக் கடகடவென்று இடியிடிக்கும் கரிய மேகங்களை போன்று பரசுராம சொரூபமாக பாபா தோன்றினார்.

தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை அவிழ்த்தார். சரக்கென்று கப்னியைக் கழற்றினார். லங்கோட்டை அவிழ்த்தார். மூன்றையும் துனியின் தீயில் போட்டுவிட்டார்.

ஏற்கெனவே துனி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. துனிக்கு மேலும் ஆஹுதியாக (படையலாக) இந்த எரிபொருள்களும் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக ஜுவாலை ஆவேசத்துடன் உயரமாக எழுந்தது. தீயைக் கண்டு பக்தர்கள் மனம் கலங்கினர்.

ஈதைனைத்தும் கணப்பொழுதில் நடந்ததால், பாபாவின் கோபத்திற்குக் காரணம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை. சிலங்கன் சமயத்தில் அவருடைய தோற்றம் பெரும் பீதியை விளைவித்தது.

அக்கினியோ பிரகாசமான ஒளியுடன் பரவியது. பாபாவின் முகமோ அதைவிடப் பிரகாசமாக ஜொலித்தது. கண்ணைப் பறிக்கும் பிரகாசத்தைத் தாங்கமுடியாததால் அங்கிருந்தவர்கர்களின் கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன; முகத்தை வேறுதிசையில் திருப்பிக்கொண்டனர்.

ஞானியின் கைகளால் அளிக்கப்பட்ட உணவைப் புரிந்து அக்கினி நாராயணன் சந்தோஷமடைந்தார். பரசுராம சொரூபம் எடுத்த பாபாவோ, திகம்பரமாகக் (திசைகளையே ஆடையாக அணிந்து - அம்மணமாக ) காட்சியளித்தார். அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பாக்கியசாலிகள்!

கோபத்தால் அவருடைய கண்கள் சிவந்தன. கடுஞ்சினத்துடன் வெறித்துப் பார்த்துக்கொண்டு உறக்கக் கத்தினார், "ஓய்! இப்பொழுது நீங்களே முடிவுகட்டுங்கள்; நான் முஸ்லிமா ஹிந்துவா என்று!-

"இன்று பாருங்கள்; நான் ஹிந்துவா யவனனா (முஸ்லிமா) என்று. உங்கள் மனம் திருப்தியடையும் வரை பார்த்து நிர்த்தாரணம் செய்துகொள்ளுங்கள். சந்தேகத்தை விட்டொழியுங்கள்" என்று பாபா கர்ஜித்தார்.

அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் பயத்தால் நடுங்கினர். பாபாவை எப்படி சாந்தப்படுத்துவது என்று தெரியாது விழித்தனர். கவலையுற்றனர்.

பாகோஜீ சிந்தே ஒரு குஷ்டரோகி; ஆயினும் பக்தர்களில் சிரேஷ்டர் (சிறந்தவர்). பாகோஜீ தைரியமேற்று பாபாவின் அருகில் சென்று அவருடைய இடுப்பில் ஒரு லங்கோட்டைச் சுற்றினார்.

பாகோஜீ கேட்டார், "என்ன பாபா இதெல்லாம்?  இன்று தசரா பண்டிகையில் சிலங்கன் (எல்லை தாண்டும்) நாள் ஆயிற்றே!" பாபா சட்காவால் பலமாக அடித்துக்கொண்டே சொன்னார், "இதுதான் என்னுடைய சிலங்கன்".

இவ்வாறு, துனியின் அருகில் பாபா திகம்பரமாக நின்றுகொண்டேயிருந்தார் . அன்று அவர் சாவடியில் உறங்கும் முறை நாள். 'சாவடி ஊர்வலம் எப்படி நடக்கப்போகிறது ' என்று அனைவரும் சஞ்சலமடைந்தனர்.