ஷீர்டி சாயி சத்சரிதம்
சிலர் சேகண்டியைக் கையில் எடுத்துக்கொள்வர்; சிலர் சப்பளாக்கட்டையால் கைத்தலம் போடுவர். சிலர் மிருதங்கத்துடனும் வேறு சில கஞ்சிராவுடனும் பஜனையில் சேர்ந்துகொள்வர். இவ்வாறாக, பஜனை கோலாகலமான கூட்டிசையாக அமையும்.
சமர்த்த சாயி தம்முடைய காந்தசக்தியால் இரும்பு உலோகமான பக்தர்களை அவர்கள் அறியாதவாறு இழுத்தார்.
தீவட்டி ஏந்துபவர்கள் முற்றத்தில் தங்களுடைய தீவட்டிகளைத் தயார் செய்துகொள்வர். சிலர் பல்லக்கை அலங்கரிப்பதில் ஈடுபட்டிருப்பர். வாயிலில் வாயில்காப்போர் ஜெயகோஷமிட்டுக் கட்டியங்கூறுவர்.
மக்கள் கூடுமிடம் மாவிலைத் தோரணங்களாலும் உயர்ந்து பறக்கும் கொடிகளாலும் அலங்கரிக்கப்படும். சிறுவரும் சிறுமியரும் புத்தாடைகளையும் ஆபரணங்களையும் அணிந்துகொண்டு மகிழ்ச்சியுடன் ஜம்பமாக நடமாடுவர்.
மசூதியைச் சுற்றி வரிசைவரிசையாக தீபங்கள் ஏற்றிவைக்கப்படும். 'சியாமகர்ண' என்ற பெயர்கொண்ட அருமையான குதிரை பூரணமாகச் சிங்காரிக்கப்பட்டு வாயிலில் தயாராக நின்றுகொண்டிருக்கும்.
தாத்யா பாடீல் தம்முடைய நண்பர்களுடன் திடீரென்று வந்து, பாபாவுக்கு அருகில் அவருடன் கிளம்புவதற்குத் தயார் நிலையில் உட்கார்ந்துகொள்வார்.
பாபா தாம் கிளம்புவதற்குத் தயாராகிவிட்டாலும், தாத்யா பாடீல் வரும்வரை தாம் இருக்குமிடத்திலேயே உட்கார்ந்துகொண்டு காத்திருப்பார்.
தாத்யா பாடீல் பாபாவின் அக்குளுக்குக் கீழ் கைகொடுத்து எழுந்திருப்பதற்குக் கைலாகு கொடுத்த பிறகுதான், பாபா சாவடிக்குச் செல்வதற்கு கிளம்புவார்.
தாத்யா பாடீல் பாபாவை மாமாவென்று அழைத்தார். அவர்களுடைய பரஸ்பர பிரேமை அவ்வாறு இருந்தது. அவர்களிடையே நிலவிய நெருக்கமான உறவிற்கு ஈடினையே இல்லை.
உடலின் மேல் எப்பொழுதும் அணியும் கப்னி, அக்குளில் இடுக்கப்பட்ட சட்கா, கைகளில் புகையிலையும் சிலீமும், தோளின்மேல் ஒரு துணி.
பாபா இவ்வாறு தயாரானவுடன் தாத்யா பாடீல் அவருக்கு ஒரு ஜரிகைக்காரை போட்ட அழகான சால்வையை அணிவிப்பார்.
சுவரோரமாக விறகுகுச்சிகள் ஒரு கட்டாக இருக்கும். பாபா தமது வலக்கால் கட்டைவிரலால் அதை அப்பொழுதுக்குப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்.
உடனே தமது வலக்கையால் ஜுவாலையை அணைத்துவிடுவார். அதன் பிறகு சாவடிக்குப் போகக் கிளம்புவார்.
சாயி கிளம்பும்போது இன்னிசை வாத்தியங்கள் முழங்க ஆரம்பிக்கும். தீவட்டிகளும் சந்திரஜோதிவாணங்களும் நான்கு பக்கங்களிலும் ஏற்றப்படும்.