ஷீர்டி சாயி சத்சரிதம்
சொர்க்கத்தின் மஹிமையைத் துதிபாடுபவர் பலர் சொர்க்கத்திற்காகப் போராடுகின்றனர். அவர்கள் பூலோகத்தை மரணபீதி உள்ள இடம் என்று துச்சமாக மதிக்கின்றனர்.
அவர்களும் உருவமற்ற நிலையிலிருந்து உருவமுள்ள நிலைக்கு மாறியவர்கள்தாம். உருவநிலையிலிருந்து அருவநிலைக்குள் மறுபடியும் புகுவதற்கே மரணம் என்று பெயர்.
அதர்மம், அஞ்ஞானம், ஆசை, துவேஷம், இத்தியாயதிகள் மரணத்தின் பாசக்கயிறுகள், இவற்றை மிச்சம் மீதி இல்லாமல் தாண்டக்கூடியவனே சொர்க்கத்தின் உள்ளே நுழையமுடியும்.
சொர்க்கம், சொர்க்கம் என்றால் என்ன? ஆசைகளையும் ஏக்கங்களையும் துறப்பதும், வலிகளையும் துக்கங்களையும் கடந்த, பிரபஞ்சத்துடன் ஒன்றிய, ஆத்ம சொரூபத்திலேயே லயிப்பதுமே சொர்க்கம் அன்றோ?
வியாதிகளுக்கும் கவலைகளுக்கும் வலிகளுக்கும் இன்னல்களுக்கும் எங்கு இடமில்லையோ, யாருமே பசியாலும் தாக்கத்தாலும் முதுமைபற்றிய பயத்தாலும் எங்கு வருத்தப்படுவதில்லையோ, -
எவ்விடத்தில் மரணபயம் இல்லையோ, எவ்விடத்தில் விதிக்கப்பட்டது- விதிக்கப்படாதது என்னும் பேதத்திற்கு இடமில்லையோ, எவ்விடத்தில் ஜீவன்கள் நிர்ப்பயமாக உலவுகின்றனவோ, அவ்விடமே தெய்வீகமான சொர்க்கம் என்று அறிக.
பிரம்மதேவரிலிருந்து புல்பூண்டுகள் வரை நகரும் நகராப் பொருள்கள் அனைத்திலும் நிறைந்திருக்கும் தத்துவந்தான், நாம் இவ்வுலகத்தில் வாழும்போதும் மரணத்திற்குப்பின் மேலுலகத்திலும் எந்தவிதமான பேதமுமின்றி நம்மில் நிறைந்திருக்கிறது.
ஆனாலும், அஞ்ஞானத்தில் மூழ்கிய மனிதன் சம்சார பந்தத்திலிருந்து விடுபட்ட பின்பும், பலவிதமான உபாதிகள் அவனைப் பின்தொடர்வதால் இந்தத் தத்துவத்தை முழுமுதற்பொருளாகக் காண்பதில்லை.
'நான் அது இல்லை; அது நான் இல்லை; பர ப்ரம்மத்திலிருந்து நான் வேறுபட்டவன்' என்ற பேதபுத்தி எவனுக்கு இருக்கிறதோ அவன் எப்பொழுதுமே மரணத்தின் பிடியில் வாழ்கிறான்.
பிறப்பை இறப்பு தொடர்கிறது; மறுபடியும் பிறவி ஏற்படுகிறது. ஜனனமரணச் சக்கரம் அவனை முடிவேயில்லாமல் விரட்டுகிறது.
பெருமுயற்சி எடுத்துச் செய்யவேண்டியவையான யாகமும் தவமும் தானமும் அளிக்கக்கூடிய சொர்க்கத்தில், ஸ்ரீமன் நாராயணனை நினைப்பதற்கு வாய்ப்பில்லையெனில், அந்த சொர்க்கத்தினுள் புகுவதில் அர்த்தம் என்னவோ!
கேவலம் சுகபோகத்தை மட்டும் அளிக்கும் இடமாக இருந்தால் நமக்கு சொர்க்கம் வேண்டா. எங்கு கோவிந்த நாம சங்கீர்த்தனம் இல்லையோ அவ்விடத்தில் நமக்கென வேலை?