ஷீர்டி சாயி சத்சரிதம்
மஹாவிஷ்ணு ராமாவதாரத்தில் பொன்னாலான கணக்கற்ற பெண்ணுருவப் பிரதிமைகளை தானமாக கொடுத்தார். அதன் பலனைக் கிருஷ்ணாவதாரத்தில் பதினாறாயிரம் மடங்காக அனுபவித்தார்.
பக்தியும் ஞானமும் பற்றற்ற மனப்பான்மையும் இல்லாதவன் தீனன். அவனை முதலில் பற்றற்ற மனப்பான்மையில் நிலைநிறுத்திய பிறகே, ஞானத்தையும் பக்தியையும் அளிக்க வேண்டும்.
பாபா மக்களை தக்ஷிணை கொடுக்கவைத்தது, சிறிதளவாவது பற்றற்ற மனப்பான்மையை வளர்ப்பதற்காகவே. பின்னர் அவர்களை பக்திப் பாதையில் செலுத்தி ஞான பண்டிதர்களாகவும் ஆக்குகிறார்.
"நாம் ஏற்றுக்கொள்வதை போலப் பத்து மடங்காகத் திருப்பிக் கொடுத்துக் கொஞ்சம்கொஞ்சமாக ஞானமார்க்கத்தில் திருப்புவதைத் தவிர வேறென்ன நம்மால் செய்ய முடியும்?" (பாபா )
ஏற்கெனவே செய்துகூட தீர்மானத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத் தம்மிச்சையாகவே சேட்ஜி பாபாவின் கையில் பதினைந்து ரூபாய் தக்ஷிணை வைத்தார். அபூர்வமான செய்கை!
'நான் முன்பு பிதற்றியதெல்லாம் வியர்த்தம். நான் நேராக வந்ததே நல்ல செய்கை. என்னுடைய நேரிடையான அனுபவத்தின் மூலமாக சாதுக்கள் எவ்வகையானவர்கள் என்பதை எனக்கு நானே போதித்துக்கொண்டேன்.-
'சரியாகவும் திடமாகவும் சிந்தனை செய்யாது, இங்கு வரத் தேவையில்லை என்றும் வணக்கம் செலுத்தவேண்டா வேண்டும் நினைத்தேன். கடைசியில் அதை விருப்பப்பட்டே செய்தேன்! சாதுக்களின் செயல்கள் புரிந்துகொள்ள முடியாதவை!-
'எந்நேரமும் 'அல்லா மாலிக்' என்று உச்சாரணம் செய்துகொண்டிருப்பதவரால் சாதிக்க முடியாதது என்ன? ஆயினும், சாதுக்கள் செய்யும் அற்புதங்களைக் காணவே நான் விரும்பினேன். -
'ஓ, என் தீர்மானம் விருதாவாகப் போய்விட்டது. என் போன்ற ஒரு மனிதருக்கு நமஸ்காரம் செய்தேன். அவர் கேட்காமலேயே தக்ஷிணையும் கொடுத்தேன்.-
'என்னுடைய தற்புகழ்ச்சி அனைத்தும் வீண்! நானாகவே சாயியின் பாதங்களைப் பூஜிக்கும் பாவத்துடன் வணங்கினேன். இதைவிடப் பெரிய அற்புதம் உண்டோ?-
'சாயியின் திறமையை நான் எவ்வாறு விவரிப்பேன்? இவையனைத்திற்கும் காரணகர்த்தா அவரேயானாலும், வெளிப்பார்வைக்கு எதிலுமே சம்பந்தப்படாதவர்போல் காட்சியளிக்கிறார். இதைவிடப் பெரிய அதிசயம் என்ன இருக்க முடியும்?-
'ஒருவர் அவருக்கு வணக்கம் செலுத்தலாம், செலுத்தாமலும் இருக்கலாம்; தக்ஷிணை கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆயினும், தயாசாகரமும் ஆனந்த ஊற்றுமாகிய சாயி எவரையும் வெறுத்து ஒதுக்குவதில்லை.-
'பூஜை செய்யப்படுவதால் அவர் ஆனந்தமடையவில்லை, அவமதிப்பு செய்யப்படுவதால் துக்கப்படுவதில்லை. எங்கே ஆனந்தத்திற்கு இடமில்லையோ, அங்கே துக்கம் எவ்வாறு இடம்பிடிக்க முடியும்? இது பரிபூரணமாக இரட்டைச் சுழல்களிலிருந்து விடுபட்ட நிலையன்றோ!'
(141 லிருந்து 148 வரை 8 சுலோகங்கள் சேட்ஜியின் எண்ண ஓட்டம்)