valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 19 April 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

மாவாசிப்பாயி ஒரு தமாஷான பெண்மணி. இந்த வாய்ப்பைச் சிக்கென பற்றிக்கொண்டு சொன்னார், "ஓ, இந்த அண்ணா எவ்வளவு சபலபுத்தியுடையவன்! முதலில் என்னிடம் ஒரு முத்தம் கேட்கிறான்! -

"என்னை முத்தமிட விரும்புகிறாய், தலை நரைத்துப்போன உனக்கு வெட்கமாக இல்லை?" இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அண்ணா சிஞ்சணிகர் சண்டைக்கு கிளம்பினார்.

"வயோதிகனும் வலுவிழுந்தவனுமாகிய நான் அத்தகைய மூர்க்கனா, பைத்தியக்காரனா? நீயே வலிய வந்து என்னைச் சண்டைக்கு இழுக்கிறாய்; சண்டை போடவும் ஆர்வம் காட்டுகிறாய்!"

அவர்கள் இருவர் மீதும் அன்பும் பரிவும் கொண்ட பாபா, ஒரு சண்டை மூள்கிறதென்று தெரிந்து இருவரையும் சமரசப்படுத்த ஒரு சாமர்த்தியமான யுக்தியைக் கையாண்டார்.

ப்ரேமையுடன் அவர் கூறினார், "ஓய் அண்ணா, எதற்காக இந்த அவசியம் இல்லாத கூப்பாடு? தாயை முத்தமிடுதல் தவறென்ன என்று எனக்கு விளங்கவில்லையே".

சச்சரவு செய்தவர்கள் இருவருமே வெட்கித் தலை குனிந்தனர். ஏற்கெனவே பேசப்பட்ட கேலியும் கோபமான பதிலும் அசைவற்று நின்றன. நகைச்சுவையை அனுபவித்த சிரிப்பொலி எங்கும் பரவியது. குழுமியிருந்தவர்கள் அனைவருமே நகைச்சுவை ததும்பிய இந்த நிகழ்ச்சியை ரசித்தனர்.

இக் காதை ஒரு சாதாரண நிகழ்ச்சியாக தோன்றலாம். ஆயினும், ஒரு வாக்குவாதத்தை முடித்துவைக்கப் பலவிதமான யுக்திகள் இருக்கின்றன என்பதை இக்காதை வெளிப்படுத்துகிறது என்னும் காரணத்தால், புத்திக்கூர்மையுள்ள கதை கேட்பவர்கள் இதன் மதிப்பை உணர்வார்கள்.

சச்சரவு செய்தவர்களுக்கு ஒரு தாய்க்கும் மகனுக்கும் உரிய அன்பு இருந்திருந்தால், இவ்விதமான தண்டா எழுந்தே இருக்காது; கோபத்திற்கு எங்கே இடம்?

பிரம்படி வாங்கிக்கொண்டிருக்கும் பொழுது ஒருவர் மகிழ்ச்சியால் பூரித்துச் சிரிக்கலாம்; மென்மையான மலரால் அடிக்கப்படும் பொழுது கண்ணீர் பெருக்கலாம்! உள்ளுக்குள் ஏற்படும் அனுபவமே மனக்கிளர்ச்சி அலைகளாக வெளிப்படுகிறது. இந்த அனுபவம் எல்லாருக்கும் பொதுவன்றோ?

பாபாவினுடைய சகஜமான யுக்தி அற்புதமானது! அவருடைய வார்த்தைகள் சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமாக அமைந்ததால், கேட்டவர்கள் திருப்தியடைந்தது மட்டுமல்லாமல் போதனையையும் மின்னலெனப் புரிந்துகொண்டார்கள்.

பிறிதொரு சமயத்தில் இதேபோன்று பாபாவின் வயிறு உக்கிரமாக பிசைந்து விடப்பட்ட நேரத்தில், பாபாவின் சிறந்த பக்தர்களில் ஒருவர் சேவை அதீதமாக (மிகையாக) இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டு இரக்கம் கொண்டார்.

"அம்மையே, கொஞ்சம் தயவு காட்டுங்கள்! இவ்வளவு கடுமையாகவா உடலைப் பிடித்துவிடுவார்கள்? உங்களிடம் கொஞ்சம் கருணை இருக்கட்டும். பாபாவின் ரத்த நாளங்கள் வெடித்துவிடும் போலிருக்கிறதே!"

இந்த வார்த்தைகள் காதில் பட்டவுடனே பாபா தம்முடைய இருக்கையில் இருந்து சட்டென்று எழுந்தார். சட்காவைக் கையில் எடுத்து பூமியின் மேல் பலமாக அடித்தார்.