valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 17 May 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"தம்முடைய பாரத்தை என்மேல் போட்டுவிட்டு என்னுடன் ஒருவர் ஒன்றிவிட்டால், அவருடைய உலக சம்பந்தமான சகல விவகாரங்களுக்கும் நான் சூத்திரதாரியாகிறேன்".

கதை கேட்பவர்களே, இப்பொழுது பாபாவின் லீலையை மேற்கொண்டு கேளுங்கள். திரிசூலம் எதற்காக வரையச் சொன்னார் என்ற சம்பந்தம் அப்பொழுது விளங்கும்.

மேகா வாடாவுக்குத் திரும்பிவந்து, சுவரில் பாபவின் படத்திற்கு அருகில் திரிசூலம் வரைய ஆரம்பித்தார். திரிசூலம் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டது.

அடுத்த நாளே புனேயில் இருந்து ஒரு ராமதாச பக்தர் மசூதிக்கு வந்தார். அவர் பாபாவுக்குப் பிரேமையுடன் நமஸ்காரம் செய்துவிட்டு ஒரு சிவலிங்கத்தை பாபாவுக்கு அர்ப்பணம் செய்தார்.

அச்சமயத்தில் மேகாவும் அங்கு வந்து பாபாவின்முன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். பாபா சொன்னார், "இதோ பாரும், சங்கரர் வந்துவிட்டார். அவரை நீர் நன்கு கவனித்துக்கொள்ளும்".

திரிசூலம் பற்றிய காட்சி கிடைத்த மறுநாளே சற்றும் எதிர்பாராமல் சிவலிங்கம் இவ்விதமாக கிடைக்கிறதே! மேகா சிவலிங்கத்தையே பார்த்துக்கொண்டு சிறிது நேரம் மெய்மறந்து நின்றார். உணர்ச்சி வசத்தால் தொண்டை அடைத்தது.

காகாசாஹேப் தீக்ஷிதர்க்கு ஏற்பட்ட அபூர்வமான சிவலிங்க தரிசன அனுபவத்தையும் கதை கேட்பவர்கள் பயபக்தியுடன் கேட்கவேண்டும்.  சாயி பாதங்களின்மீது விசுவாசம் பெருகும்.

மேகா சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு மசூதியில் இருந்து வெளிவந்தபோது, தீக்ஷிதர், வாடாவில் ஸ்நானத்தை முடித்தபின் நாமஸ்மரணத்தில் மூழ்கியிருந்தார்.

மேல்துண்டால் தலையை மூடிக்கொண்டு ஒரு பாறையின் மேல் நின்றுகொண்டு உடம்பை உலர்ந்த துணியால் துடைத்துக்கொண்டே, சாயி நாமஸ்மரணம் (சாயி நாமத்தை நினைத்தல்) பண்ணிக் கொண்டிருந்தார்.

தலையை போர்த்தியவாறு சாயி நாமஸ்மரணம் செய்யும் நித்திய நியமத்தை அனுசரித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு சிவலிங்க தரிசனம் கிடைத்தது.

"சாயி நாமஸ்மரணம் செய்யும்போது இன்று மட்டும் என்ன எனக்கு சிவலிங்க தரிசனம் கிடைக்கிறது? தீக்ஷிதர் இவ்வாறு வியந்துகொண்டு இருந்தபோதே, மேகா மகிழ்ச்சி பொங்கப் பக்கத்தில் நிற்பதைக் கண்டார்.

மேகா கூவினார், "காகா, இங்கே பாருங்கள்! பாபா எனக்களித்த சிவலிங்கத்தைப் பாருங்கள்". காகா சிவலிங்கத்தின் விசேஷமான வடிவமைப்பை கண்டு வியப்படைந்தார்.

வடிவத்திலும் பரிமாணத்திலும் மேலிருந்த ரேகைகளாலும் அவருக்குச் சற்றுமுன் காட்சியில் தோன்றிய லிங்கத்தை போலவே அச்சாக மேகா வைத்திருந்த லிங்கம் இருந்ததை பார்த்து காகா மகிழ்ச்சியடைந்தார்.

பின்னர், மேகா தமது கைகளால் சுவரில் திரிசூலம் வரையும் வேலையை முடித்தவுடன் திரிசூலத்தின் சன்னிதியிலேயே சிவலிங்கத்தை ஸ்தாபனம் செய்யவைத்தார் பாபா.