valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 29 March 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

போஜன நேரத்தில் யாருமே படுதாவை விலக்கமாட்டார்கள். ஆயினும் கீழேயிருக்கும் சபாமண்டபத்தில் வெறுமனே உட்கார்ந்திருக்க அவ்வம்மையாருக்கு பொறுமை இல்லை.

பாபாவுக்கு கிச்சடி சமர்ப்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் அவர் அகோலாவிலிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து ஷிர்டிக்கு வந்திருந்தார். இந்த அபரிதமான உற்சாகம் எப்படி அவரை சபாமண்டபத்தில் சும்மா உட்கார்ந்திருக்க விட்டுவைக்கும்?

ஆகவே, அவர் யார் சொன்னதையும் கேட்காமல் படுதாவைத் தம்முடைய கைகளாலேயே விலக்கிவிட்டு நைவேத்யத்துடன் உள்ளே புகுந்தார். அவருடைய ஏக்கமும் தணிந்தது.

பாபாவோ அங்கிருந்தோர் அனைவரையும் ஆச்சரியத்தில் முழுக்கினார். கிச்சடியின் மேல் பேரார்வம் காண்பித்து, மற்றப் பண்டங்களுக்கு முன்பாக அதை உண்ணவேண்டுமென்று விரும்பித் தம்முடைய இருகைகளையும் நீட்டித் தட்டை அவசரமாக வாங்கிக்கொண்டார்.

கிச்சடியைக் கண்டவுடன் மிகுந்த உற்சாகத்துடன் பிடிப்பிடியாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். அங்கிருந்த எல்லாரும் அவரை அன்புடன் பார்த்து அதியசயப்பட்டனர்.

பாபா காண்பித்த ஆர்வத்தைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர்.  ஆயினும் கிச்சடியின் கதையைக் கேட்டபின், பாபாவின் வழிமுறைகள் இவ்வுலக நடப்புக்கு அப்பாற்பட்டவை என்று அறிந்துகொண்டனர்.

மேற்கொண்டு சொல்லப்போகும் காதையைக் கேட்டால் உங்கள் மனம் பிரேமையால் பொங்கும். திடீரென்று கிளம்பி பாபாவுக்கு சேவை செய்யவந்த ஒரு குஜராத்தி பிராமணரின் கதை இது.

ஆரம்பத்தில் ராவ்பகதூர் சாடேவின் இல்லத்தில் வேலை செய்தவர் இவர். சாடேவுக்கு அந்தரங்க சுத்தமாகவும் விசுவாசத்துடனும் பணி செய்த பிறகு, சாயி பாதங்களில் அடைக்கலம் புகுந்தார்.

இதுவும் ஒரு சுவாரசியமான கதை. பக்தியும் பிரேமையும் நிரம்பிய வாழ்க்கையை நடத்துபவர்களின் ஏக்கங்களை ஸ்ரீஹரி எவ்வாறு தீர்த்துவைக்கிறார் என்பதைக் கேளுங்கள்.

மேகா என்பது இந்த பிராமணரின் பெயர். பூர்வஜென்ம சம்பந்தமே இவரை ஸாயியிடம் கொண்டுவந்து சேர்த்தது. இப்பொழுது கதையை விவரமாகக் கேளுங்கள்.

சாடே, கேடா ஜில்லாவில் உதவி மாவட்டாட்சியராக உத்தியோகம் பார்த்துவந்தார். அங்கேதான் எதிர்பாராமல் மேகாவைச் சந்திக்க நேர்ந்தது. சிவாலயத்தில் நித்திய பூஜை செய்வதற்காக அவரைப் பணியில் அமர்த்தினார்.

பின்னர் இந்த சாடே ஷிர்டிக்கு வந்தார்; பாக்கியம் பெற்றார். சாயி மஹாராஜின் அன்பையும் புனிதமான சங்கத்தையும் அனுபவித்தார். அவருடைய பாதங்களில் மனத்தைப் பறிகொடுத்துவிட்டார்.