காபர்தேவுக்கு வீடு திரும்பவும் தீட்சிதருக்கு அடிக்கல் நாடவும்; இருவருக்கும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி அனுமதி கிடைத்தது.
அந்த நாள் மற்றுமொரு காரணத்திற்காகவும் மகத்துவம் வாய்ந்தது. அந்நாளில்தான், பாபா இரவில் ஓய்வு பெறுவதற்கு முன்பு, அன்புடனும் பக்தியுடனும் சாவடியில் செய்யப்படும் ஹாரதி தொடங்கியது.
பிறகு, 1911 ஆம் ஆண்டில் சுபமான ராமனவமிப் பண்டிகையன்று வைதீக விதிகளின்படி எல்லாச் சடங்குகளுடன் கிருஹப் பிரவேசம் கொண்டாடப்பட்டது. (தீட்சிதரின் வாடா)
இதற்குப் பிற்பாடு ஏராளமான செலவில் புட்டி வாடா கட்டப்பட்டது. மகாசமாதியான பிறகு, பாபா இங்கு அடக்கம் செய்யப்பட்டார். அவ்வளவு பணமும் நன்கு செலவழிக்கப்பட்டது.
ஒரே ஒரு வாடா இருந்த இடத்தில் தற்போது மூன்று வாடாக்கள் (சத்திரங்கள்) இருக்கின்றன. ஆனால், ஆரம்ப காலத்தில் சாடே வாடாவே எல்லாருக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது.
சாடே வாடா இன்னுமொரு காரணத்தாலும் முக்கியமானது. ஆரம்ப காலத்தில் இவ்விடத்தில்தான், பாபா தம்முடைய உழைப்பாலேயே வளர்த்த அழகான பூந்தோட்டம் இருந்தது.
அந்தத் தோட்டதைப்பற்றிய சுருக்கமான விளக்கம் அடுத்த அத்தியாத்தில் அளிக்கப்படும். ஹெமாத் கதைகேட்பவர்களுடன் சேர்ந்து சாயியின் பாதங்களில் வணங்குகிறேன்.
வாமன் தாத்யா பானைகளைக் கொடுப்பார்; பாபா செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கரடுமுரடான செழிப்பில்லாத பூமியில் ஒரு பூந்தோட்டம் வளர்த்தார். இதன் பிறகு, பாபா திடீரென்று ஒருநாள் காணப்படவில்லை.
அதற்குப் பிறகு, அவர் ஒவுரங்காபாதிற்கு அருகில் சாந்த் பாடீலைச் சந்தித்தார். கல்யாணக் கோஷ்டியுடன் ஷீரடிக்கு திரும்பி வந்தார்.
திரும்பி வந்த பிறகு, அவர் தேவிதாசைச் சந்தித்தார்; ஜானகி தாசியும் சந்தித்தார். இம் முக்கூடல் ஷீரடியில் நடந்தது.
பாபா, மொஹித் தினுடன் மல்யுத்தம் செய்த நிகழ்ச்சி நடந்தது. இதன் பிறகு, பாபா மசூதியில் வசிக்க ஆரம்பித்தார். அவருக்கு டேங்லேவிடம் பிரியம் வளர்ந்தது. மற்ற பக்தர்களும் அவரைச் சுற்றிக் குழுமினர்.
இக் கதைகளெல்லாம் அடுத்த அத்தியாயத்தில் சொல்லப்படும். செவி மடுப்பவர்கள் கவனத்துடன் கேட்கலாம். ஹேமாட் இப்பொழுது சாயி பாதங்களில் ஒருமுகமான மனத்துடன் நமஸ்காரம் செய்கிறேன்.
எல்லோருக்கும் ஷேமம் உண்டாகட்டும்! 'சமர்த்த சாய் அவதரணம்' என்னும் நான்காவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாய் நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்!