valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 December 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


சாவடி ஊர்வலம் இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கவேண்டும். ஆனால், அப்பொழுதே மணி பத்து.  பாபா இன்னும் சாந்தமடைந்தாரில்லை. மக்கள் ஆங்காங்கே விழித்தகண் விழித்தவர்களாய் மௌனமாக நின்றுகொண்டிருந்தனர்.

அப்படியே இரவு மணி பதினொன்று ஆகியது. கொஞ்சங்கொஞ்சமாக பாபாவின் கோபம் தணிந்தது. ஒரு புதிய லங்கோட்டையும் கப்னியையும் அணிந்துகொண்டார்.

சாவடி ஊர்வலத்துக்கான மணி ஒலித்தது. ஆங்காங்கே மௌனமாக உட்கார்ந்திருந்த பக்தர்கள் பல்லக்கிற்கு மலர் அலங்காரம் செய்தனர். பாபாவின் அனுமதி பெற்றபின் பல்லக்கை முற்றத்திற்குக் கொண்டுவந்தனர்.

வெள்ளித்தடி , பதாகைகள், சவரி, அலங்காரக் குடை, கொடிகள் போன்ற அரசர்களுக்குரிய அலங்காரங்களுடனும் மரியாதைகளுடனும் ஒருநாள் விட்டு ஒருநாள் நடக்கும் சாவடி ஊர்வலம் கிளம்பியது.

ஊர்வலம் கிளம்பும்போது வாத்தியங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து பெருஞ்சத்தம் விளைவித்தன. அதையும் மீறி, மக்கள் சாயிநாதருக்கு 'ஜய ஜய' கோஷமிட்டனர். அதை யாரால் வர்ணிக்க முடியும்! எங்கும் ஆனந்தம் பொங்கிவழிந்தது.

பிறகு பாபா வேள்ளைவெளேரென்ற துணியொன்றை எடுத்துத் தலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டார். கிளம்புவதற்கு சுபமுஹூர்த்த வேளை என்று அறிவிப்பதுபோல், சிலீம், புகையிலை, ஜட்கா இவற்றைக் கையில் எடுத்துக்கொண்டார்.

சிலர் அலங்காரக் குடையையும் சிலர் சவரியையும் (சாமரத்தையும்) ஏந்தினர். மற்றும் சிலர் மயிற்பீலிகளை ஏந்தினர். சிலர் கருடாகி கொடியையும் சிலர் வாயில்காப்போரின் அதிகாரச் சின்னமான கோல்களையும் ஏந்தினர்.

இவ்வாறாக, பிறவிக் கடலின் எல்லையைக் கடப்பதற்கு விஜயதசமிநாள் சுபமான காலம் என்பதை பாபா குறிப்பால் உணர்த்தினார்.

ஆகவே, இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஷீர்டி மக்களுடன் பாபா ஒரு தசராவிற்குத்தான் (நவராத்திரிப் பண்டிகைக்குத்தான்) இருந்தார். அடுத்த விஜயதசமியை நல்ல முஹூர்த்தமாக கருதித் தம்முடைய தேகத்தை பூமிக்கு அர்ப்பணம் செய்தார்.

இதை குறிப்பால் உணர்த்தியோடல்லாமல், தம்முடைய செயலால் ஷீர்டி மக்களுக்கு நேரிடை அனுபவத்தையும் அளித்தார். 1916 ஆம் ஆண்டு துனியில் தம் ஆடைகளை எரித்ததுபோல், 1918  ஆம் ஆண்டு அதே நாளில் தம் தேகமெனும் சுத்தமான வஸ்திரத்தை யோகமெனும் அக்கினிக்குப் படையலாக அர்ப்பணம் செய்தார்.

1918  ஆம் ஆண்டின் விஜயதசமி நாளை ஒரு சுபதினமாகச் செய்து மெய்ப்பொருளோடு இரண்டறக் கலந்துவிட்டார்.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே, விஜயதசமி நாளை அவர் முன்னரே தேர்ந்தெடுத்துவிட்டார் என்பதன் நிரூபணமாக சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

ஒருசமயம், ஷீர்டி வாசி ராமச்சந்திர பாடீல் கோதே என்பவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் போலிருந்த நோயின் தாக்குதலை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருடைய நிலைமை அவ்வாறிருந்தது. 




Thursday 21 December 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


திடீரென்று பளபளவென்று மின்னலடித்துக் கடகடவென்று இடியிடிக்கும் கரிய மேகங்களை போன்று பரசுராம சொரூபமாக பாபா தோன்றினார்.

தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை அவிழ்த்தார். சரக்கென்று கப்னியைக் கழற்றினார். லங்கோட்டை அவிழ்த்தார். மூன்றையும் துனியின் தீயில் போட்டுவிட்டார்.

ஏற்கெனவே துனி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. துனிக்கு மேலும் ஆஹுதியாக (படையலாக) இந்த எரிபொருள்களும் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக ஜுவாலை ஆவேசத்துடன் உயரமாக எழுந்தது. தீயைக் கண்டு பக்தர்கள் மனம் கலங்கினர்.

ஈதைனைத்தும் கணப்பொழுதில் நடந்ததால், பாபாவின் கோபத்திற்குக் காரணம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை. சிலங்கன் சமயத்தில் அவருடைய தோற்றம் பெரும் பீதியை விளைவித்தது.

அக்கினியோ பிரகாசமான ஒளியுடன் பரவியது. பாபாவின் முகமோ அதைவிடப் பிரகாசமாக ஜொலித்தது. கண்ணைப் பறிக்கும் பிரகாசத்தைத் தாங்கமுடியாததால் அங்கிருந்தவர்கர்களின் கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன; முகத்தை வேறுதிசையில் திருப்பிக்கொண்டனர்.

ஞானியின் கைகளால் அளிக்கப்பட்ட உணவைப் புரிந்து அக்கினி நாராயணன் சந்தோஷமடைந்தார். பரசுராம சொரூபம் எடுத்த பாபாவோ, திகம்பரமாகக் (திசைகளையே ஆடையாக அணிந்து - அம்மணமாக ) காட்சியளித்தார். அந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் பாக்கியசாலிகள்!

கோபத்தால் அவருடைய கண்கள் சிவந்தன. கடுஞ்சினத்துடன் வெறித்துப் பார்த்துக்கொண்டு உறக்கக் கத்தினார், "ஓய்! இப்பொழுது நீங்களே முடிவுகட்டுங்கள்; நான் முஸ்லிமா ஹிந்துவா என்று!-

"இன்று பாருங்கள்; நான் ஹிந்துவா யவனனா (முஸ்லிமா) என்று. உங்கள் மனம் திருப்தியடையும் வரை பார்த்து நிர்த்தாரணம் செய்துகொள்ளுங்கள். சந்தேகத்தை விட்டொழியுங்கள்" என்று பாபா கர்ஜித்தார்.

அந்தக் காட்சியைப் பார்த்த மக்கள் பயத்தால் நடுங்கினர். பாபாவை எப்படி சாந்தப்படுத்துவது என்று தெரியாது விழித்தனர். கவலையுற்றனர்.

பாகோஜீ சிந்தே ஒரு குஷ்டரோகி; ஆயினும் பக்தர்களில் சிரேஷ்டர் (சிறந்தவர்). பாகோஜீ தைரியமேற்று பாபாவின் அருகில் சென்று அவருடைய இடுப்பில் ஒரு லங்கோட்டைச் சுற்றினார்.

பாகோஜீ கேட்டார், "என்ன பாபா இதெல்லாம்?  இன்று தசரா பண்டிகையில் சிலங்கன் (எல்லை தாண்டும்) நாள் ஆயிற்றே!" பாபா சட்காவால் பலமாக அடித்துக்கொண்டே சொன்னார், "இதுதான் என்னுடைய சிலங்கன்".

இவ்வாறு, துனியின் அருகில் பாபா திகம்பரமாக நின்றுகொண்டேயிருந்தார் . அன்று அவர் சாவடியில் உறங்கும் முறை நாள். 'சாவடி ஊர்வலம் எப்படி நடக்கப்போகிறது ' என்று அனைவரும் சஞ்சலமடைந்தனர். 




Thursday 14 December 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


1918 ஆம் ஆண்டு, தக்ஷிணாயன காலத்தில், வளர்பிறைப் பருவத்தில், விஜயதசமியன்று, பகல் நேரத்தில், பாபா தம் சரீரமாகிய ஆடையை உதறினார்.

அன்று மொஹர்ரம் மாதத்தில் 9 ஆவது தினம்; 'படுகொலை இரவு' நாள்.  அந்நாளில் பிற்பகல் 2:35  மணியளவில்  சாயிநாதர் தம்முடைய நிர்யாணத்திற்குத் தயாரானார்.

கௌதம புத்தரின் பிறந்த நாள் புத்த ஜெயந்தியாகக் கொண்டாடப்படுவதைப் போல், சாயியின் புண்ணிய திதியும் மஹாசமாதி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. விழா கொண்டாடுவதற்கு தேவர்களுக்குப் பிறந்தநாள் எப்படி முக்கியமோ, அப்படியே ஞானிகளுக்கு முக்தியடைந்த நாள் முக்கியமானது.

அன்று (15 .10 .1918 ) மதியம் 12 : 30  மணி கடியாரத்தில் அடித்தபோது தசமி திதி கழிந்து ஏகாதசி திதி ஆரம்பமாகிவிட்டது. ஆகவே, பாபா முக்தியடைந்த திதி ஏகாதசியே.

ஆயினும், அன்று உதயகாலத்தில் தசமி திதியாக இருந்ததால், விஜயதசமியே பாபா முக்தியடைந்த திதியாகக் கொள்ளப்படுகிறது. உற்சவமும் விஜயதசமியன்றே கொண்டாடப்படுகிறது.

அந்தச் செவ்வாய்க் கிழமை, முஸ்லீம்களுக்குப் 'படுகொலை இரவு' நாள்; மிகப் பிரசித்தமான நாள். அந்த நாளில், சாயி, ஜோதியை ஜோதியுடன் (தம்முடைய ஆத்மஜோதியைப் பரஞ்சோதியுடன் ) கலந்துவிட்டார்.

விஜயதசமி, வங்காள தேசத்தில் துர்க்கா பூஜை முடியும் நாள். விஜயதசமி வடநாட்டிலும் எல்லாருக்கும் பண்டிகை நன்னாள்.

1916 ஆம் ஆண்டு (இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு) இதே விஜயதசமி நாளன்று. சாயங்கால நேரத்தில், பிரதோஷ காலத்தில், பின்னர் நடக்கப்போவதை சூசகமாகத் தெரிவித்தார் பாபா.

அந்த அபூர்வமான லீலையை எவ்வாறு செய்தார் என்பதை இப்பொழுது சொல்கிறேன்; கேட்பவர்கள் வியப்படைவீர்கள். மேலும் , எல்லாரும் சமர்த்த சாயியின், திட்டமிட்டுச் செயலாற்றும் சாமார்த்தியத்தையும் அறிந்துகொள்வீர்கள்.

1916 ஆம் ஆண்டு நவராத்திரிப் பண்டிகை சமயத்தில், சிலாங்கண் நாளன்று, சாயங்கால வேளையில், அவருடைய வழக்கமான சுற்றுலாவை முடித்தபின் ஓர் அற்புதமான லீலை பாபாவிடமிருந்து வெளிப்பட்டது. 




Thursday 7 December 2023

ஷீர்டி சாயி சத்சரிதம்


42 . மஹாசமாதி (முதற் பகுதி)


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குரு மஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ஓம் ஸ்ரீ சத்குருவே போற்றி! கொடைவள்ளலே! புண்ணிய நதி கோதாவரியின் கரையில் வசிப்பவரே! உருவமேற்ற பிரம்மமே! கோவணம் அணிந்தவரே!  ஞானிகளில் தலைசிறந்தவரே! உம்மை வணங்குகிறேன்.

ஞானியாக அவதாரம் செய்த சாயியே பிறவிக் கடலைக் கடக்க வழிகாட்டுவார்; பாதங்களால் தீனர்களுக்கு அடைக்கலம் அளிப்பவர்; பக்தர்களின் நிஜமான கற்பக விருட்சம்.

கடந்த அத்தியாயத்தில், அவருடைய புடைச்சிற்பம் தண்ணீரில் மூழ்கடிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்ட அற்புதமான லீலை விவரிக்கப்பட்டது.

அதுபோலவே, பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி அவருக்குத் தெளிவாக அறிவுரை வழங்கி, ஞானேச்வரி பாராயணத்தை தொடர்வதற்கு அருள் செய்து, அவருடைய ஆசையை பூர்த்திபண்ணிய விவரமும் சொல்லப்பட்டது.

சாராம்சம் என்னவெனில், குருவின் கிருபை உதித்தவுடன் உலகவாழ்வுபற்றிய பயமாகிய புதிர் விடுபடுகிறது; மோட்சத்தின் கதவுகள் திறந்துகொள்கின்றன. துன்பமெல்லாம் இன்பமாகிறது!

எந்நேரமும் சத்குருவின் பாதங்களை நினைத்துக்கொண்டிருப்பதால் வாழ்க்கையில் தடங்கல்கள் எல்லாம் விலகுகின்றன; வாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன; மரணத்திற்கு மரணம் ஏற்படுகிறது!

ஆகவே, கதைகேட்பவர்கள் அவர்களுடைய நன்மை கருதி சமர்த்தரின் கதைகளைக் கேட்கவேண்டும். கேட்பவர்களை அவை மிகப் புனிதர்களாக ஆக்கும்.

இந்த அத்தியாயத்தில், சாயியின் இயல்பைத் பாப்போம். அவர் கடுமையான இதயம் படைத்தவரா; மென்மையானவரா?

இதுவரை நீங்கள் ஒருமுகப்பட்ட மனத்துடன் சாயியின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கேட்டீர்கள். இப்பொழுது, அவர் உடலை உகுத்த சரித்திரத்தைக் கவனமாக கேளுங்கள்.

பாபாவுடன் சமகாலத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் சுகத்தை அனுபவித்த ஷீர்டி மக்கள் எல்லாப் பேறுகளையும் பெற்றவர்கள்; எல்லாப் பேறுகளையும் பெற்றவர்கள்! 




Thursday 30 November 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"'தங்களுடைய அருள் மலரும்வரை போதியைப் படிப்பது வீண் செயல். புரிந்துகொள்வது படிப்பதைவிடக் கடினம். இதை நான் மனந்திறந்து சொல்லுகிறேன்.'-

"பாபா சொன்னார், "போதி படிக்கும்போது நீர் அவரசரப்படுகிறீர். இப்பொழுது என்னருகில் உட்கார்ந்துகொண்டு நான் பார்க்குமாறு வாசியும்.'-

"நான் கேட்டேன், 'நான் என்ன வாசிக்கவேண்டும்?' பாபா என்னை, 'அத்யாத்மம் (தன்னையறியும் வித்தை) வாசியும்' என்று ஆணையிட்டார். நான் போதியைக் கொண்டுவரப் போனேன். உடனே, கண்விழித்துவிட்டேன்".

தேவ் நன்கு விழித்துக்கொண்டார். தம்முடைய கனவை ஞாபகப்படுத்திக்கொண்ட பிறகு அவருடைய மனத்தில் என்னென்னெ எண்ணங்கள் ஓடியிருக்கும் என்பதைக் கதைகேட்பவர்களே கற்பனை செய்து பார்க்கலாம்.

அவ்வளவு நாள்கள் கடந்த பிறகு, தேவ் ஆணையை நிறைவேற்றுகிறாரா என்றும், தினமும் தவறாது போதி படிக்கிறாரா என்றும், யார் கவலைப்படப்போகிறார்?

தேவ் விதிமுறைகளின்படி செயல்பட்டு தினமும் அப்பியாசம் செய்கிறாரா? படிப்பதில் தவறு ஏதாவது நேர்ந்தால் அதற்குக் காரணம் என்ன? - இவற்றையெல்லாம் யார் மேற்பார்வை செய்வார்?

வாசிப்பவர் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பதிலும், எங்கு விசேஷமான ஈடுபாடு காட்டவேண்டும் என்பதிலும், இன்னும் பிற விஷயங்களிலும், சாயிமாதாவைத் தவிர வேறு யார் பிரத்யக்ஷமாக (கண்கூடாக) அக்கறை காட்டுவார்?

இதுவே சமர்த்த சாயியின் லீலை, எண்ணற்ற பக்தர்கள் இவ்வாறு ஆத்மானந்தக் கொண்டாட்டத்தை அனுபவித்ததை நான் என் கண்களால் கண்டிருக்கிறேன்.

கதை கேட்பவர்கள் குழுவே! நாம் அனைவரும் குருவின் பொற்கமலப் பாதங்களில் சரணடைவோமாக! அடுத்த அத்தியாயத்தின் நவீனத்தைத் தகுந்த காலத்தில் கேட்பீர்கள்.

ஸ்ரீ சமர்த்தரை நினைவில் வைத்துக்கொண்டு சத்பாவத்துடன் அவருடைய பாதங்களில் ஹேமாட் நமஸ்காரம் செய்கிறேன். பக்தியுடனும் விசுவாசத்துடனும் அவரை சரணடைகிறேன். அதுவே பிறவித் துன்பங்கள் அனைத்திலும் விடுதலை அளிக்கும்.

சாயியே ஹேமாடின் சுயநல நாட்டமெல்லாம். சாயியே ஹேமாட்டுக்கு ஆன்மீக லாபத்தை அளிப்பவர். வாழ்க்கையில் அடையவேண்டிய பேறுகளை அடையவைப்பவர் சாயியே. ஹேமாடின் உறுதியான நம்பிக்கை இதுவே.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'கருணையும் அருள்மழையும்' என்னும் நாற்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும். 




Thursday 23 November 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"வெளியே சாதாரணனைப் போல் கோபத்தின் சிறுமை; உள்ளே பரமானந்தத்தின் பெருமை; இதுவே சாயி. அவருடைய லீலையின் மகிமையைப் பாடுவதற்கு மகத்தான தெய்வபலம் வேண்டும்.-

"தம்முடைய ஆன்மீக முன்னேற்றத்தில் உண்மையான நாட்டம் வைத்திருப்பவர். ஒரு ஞானியின் வசைமொழிகளையும் சாபங்களையும் பூமழை எனக் கருதி ஏற்றுக்கொள்வார். தமக்கு நன்மை நடக்கிறதென்பதைச் சட்டென்று புரிந்துகொள்கிறார் அல்லரோ!" (139 - 152 தேவ் அவர்களின் கூற்று)

கர்ணகடூரமானதும் ஆபாசமானதுமான வசைமொழியைக் கேட்டபோதிலும் தேவ் மனம் கலங்கவில்லை. அவருடைய அந்தரங்கம் பிரேமையினால் பொங்கியது. பூக்களால் பாபா தம்மை அடித்தது போல் உணர்ந்தார்.

பசுவின், பால் நிறைந்த முலைக்காம்புகளிலிருந்து பாக்கியவானுக்குத்தான் பால் கிடைக்கும். மடியிலே ஒட்டிகொண்டிருப்பினும், உன்னிக்கு அசுத்தமான ரத்தம்தான் கிடைக்கும்.

தவளைக்குத் தாமரைக்கொடி அண்டைவீட்டுக்காரன். ஆயினும், மஹா பாக்யசாலியான வண்டு எங்கிருந்தோ வந்து தாமரைமலரிலுள்ள மகரந்தத்தை சுவைக்கிறது. அதிருஷ்டக்கட்டையான தவளைக்கு கிடைப்பதோ சேரும் சகதியும்தான்.

அவ்வாறே, பாக்யவான்களாகிய நீங்களும்! "நானும் நீங்களும் சந்தித்துவிட்டோம். மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதைக் கேளுங்கள்; சந்தேகங்களை நிவிர்த்தி செய்துகொள்ளுங்கள்." இது சாயியின் திருவாய்மொழி.

"பாபா 'வாசி' என்று சொல்லாமல் நான் ஞானேச்வரியைத் திறக்கப்போவதில்லை என்ற என் முரட்டுப் பிடிவாதமும் எப்படி பாபாவால் நிறைவேற்றப்பட்டது என்பதைக் கவனியுங்கள். -

"ஒரு தாயார் தம் குழந்தையின் ஆசைகளை நிறைவேற்றிச் செல்லங்கொடுப்பதைப் போன்ற இனிமையான அனுபவத்தைப் பெற்ற காதை இது. பக்தியை நிலைபெறச் செய்யும் காதை இது." (தேவ்)

தேவ் மேலும் சொன்னார், "'வாசி' என்று சொன்னதோடு மட்டும் நிறுத்திவிடவில்லை. (இந்துக்களின் பஞ்சாங்கத்தின்படி) அந்த ஆண்டு முடிவதற்குள்ளாகவே என்னுடைய கனவில்  தோன்றி, என்னை நலன் விசாரித்து ஆச்சரியமடையச் செய்தார். விவரம் கேளுங்கள்.-

"அன்று வியாழக் கிழமை; 1914 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி, விடியற்காலை நேரத்தில் சாயி என் கனவில் தோன்றி எனக்கு அருள் செய்தார்.-

"சமர்த்த சாயி என் கனவில் தோன்றினார். வாடாவின் மாடியில் அவர் அமர்ந்திருந்தார். அவர் என்னை விசாரித்தார், 'போதி உமக்குப் புரிகிறதா?' நான், 'இல்லை' என்று பதிலளித்தேன்.-

"அதிலிருந்து இரண்டாவது கேள்வி எழுந்தது, 'அது எப்பொழுது புரியப்போகிறது?' என் கண்களில் நீர் நிறைந்தது. நான் என்ன பதில் சொன்னேனென்று கேளுங்கள்.-

 


 

Thursday 16 November 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"இவ்வாறாக , 'போதியை வாசியும்' என்ற சாயியின் திருவாய்மொழி என்னுள்ளே இருந்த முடிச்சை அவிழ்த்தது. மிகுந்த ஆனந்தமுடையவனாக ஆனேன் .-

"அந்த ஆக்ஞயைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டு அன்றிலிருந்து ஞானேச்வரியை தினமும் தவறாமல் வாசிக்க ஆரம்பித்தேன். படிக்கும்போது விவரணமும் செய்தேன்.-

"நான் வாஞ்சையுடன் எதிர்பார்த்த ஆக்கினை எனக்கு கிடைத்தது. விரதமேற்றுக்கொண்டதன் விளைவாக என் இதயத்தில் எழுந்த தாபம் தணிந்தது. இப்பொழுதிலிருந்து என்னால் ஞானேச்வரியை நியமம் தவறாது படிக்கமுடியும்.-

"இப்பொழுது நான் குருவின் ஆணையைத் தரித்துக்கொண்டிருப்பதால், ஞானேச்வரரே எனக்கு இன்முகம் காட்டுவார். இன்றுவரை நடந்தது கடந்ததாக இருக்கட்டும்; இனிமேல் நான் நியமத்துடன் தவறாது படிக்கவேண்டும்.-

"எனக்கு என்னுடைய மனமே சாட்சி. மேலும் சாயியின் ஆணையே எனக்குப் பிரமாணம். அந்த ஆணையின் பலத்தால் என்னுடைய போதி பாராயணம் நிர்விக்கினமாக (தடங்கலின்றி) நடக்கும். -

"பாபா! நான் வேறெதிலும் நாட்டமின்றி உங்களுடைய பாதங்களை நமஸ்கரித்து சரணடைகிறேன். இந்தக் குழந்தையை உங்களுடைய அரவணைப்பில் ஏற்றுக்கொண்டு அதைப் போதி படிக்கவைப்பீராக !-

"கந்தல் துணி ' என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று இப்பொழுது புரிந்துவிட்டது. நான் பாலக்ராமை விசாரித்ததுதான் கந்தல் துணி. அந்தக் கந்தல் துணியைத்தான் பாபாவுக்குப் பிடிக்கவில்லை; அவரைக் கடுங்கோபத்தில் ஆழ்த்தியதும் அதுவே.-

"உபாசனையில் உங்களை எப்படி வழிநடத்தினார்? பிரம்ம சிந்தனையை எப்படிச் சொல்லிக்கொடுத்தார்? என்றெல்லாம் நான் பாலக்ராமைக் கேட்டது பாபாவுக்குப் பிடிக்கவில்லை. -

"எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தெளிவாகப் பதில் சொல்வதற்கு பாபா தயாராகக் காத்திருக்கும்போது, நான் தனிப்பட்டமுறையில் இந்தக் கேள்விகளை பாலக்ராமை எதற்காகக் கேட்கவேண்டும்? அதனால் விளைந்ததுதான் இந்தத் துன்புறுத்தலெல்லாம் !-

"ஆயினும் 'துன்புறுத்தினார்' என்று சொல்வது தகாத வார்த்தை. பக்தர்களிடம் பிரேமையால் பொங்கிவழிபவரும், தாயன்பு காட்டுபவருமான சாயி, பக்தர்களைத் துன்புறுத்துவத்தைக் கனவிலும் நினைக்கமாட்டார். 'துன்புறுத்து' என்னும் வினைச்சொல் அவருக்குச் சற்றும் பொருந்தாது. -

"அவர் என்னைத் துன்புறுத்தவில்லை. 'உன்னுடைய மனத்தில் என்னென்ன தோன்றுகின்றனவோ அன்னன்ன விருப்பங்களை பூர்த்திபண்ணுபவன் நானே. திருட்டுப் பொருள் வேலைக்கு உதவாது' என்ற பாடத்தை எனக்குப் புகட்டினார். -

"வெளிப்பார்வைக்குக் கோபங்கொண்டவர்போல் தோன்றினாலும், அகமுகமாக அவர் மகிழ்ச்சியாக இருந்தார். வெளிபார்வைக்குக் கடுஞ்சினத்தால் எரித்துவிடுபவர்போல் தோன்றினாலும், உள்ளுக்குள் அவர் திருப்தியாகவும் ஆனந்தமாகவும் இருந்தார். -

 


 

Thursday 9 November 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சுமார் அரைநாழிகை (12 நிமிடங்கள்) கழிந்த பிறகு தேவ் மறுபடியும் பாபாவின் சமீபத்திற்கு வந்தார். வசைமழை அப்பொழுதும் பொழிந்து கொண்டிருந்தது. "நீர் எதற்காக மேலே வந்தீர்?" என்று பாபா கேட்டார்.

"வெளியே போம், வாடாவிற்குப் போய்ச்சேரும்!" இதைக் கேட்ட தேவ் பாபாவின் ஆணைக்குப் பணிந்து அவருடைய பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு வாடாவிற்குத் திரும்பினார்!

பிறகு அவர், நடந்ததையெல்லாம் எவ்வாறு நடந்ததோ அவ்வாறே ஜோக்கிடமும் பாலக்ராமிடமும், யதார்த்தமாகவும் முழுமையாகவும் விவரித்தார்.

பிறகு சுமார் ஒரு நாழிகைக்கு (24  நிமிடங்கள்) வசைமொழியும் சாபங்களும் தொடர்ந்து பொழிந்தன. நான்கு அல்லது ஐந்து மணி நேரம் கழிந்த பிறகு, பாபாவே பக்தர்களைத் தம்மிடம் அழைக்க ஆரம்பித்தார்.

மற்றவர்களுடன் சேர்ந்து தேவும் பொய் மசூதியில் அமர்ந்தார். ஸ்ரீ சாயி சொன்னார், "முதியவரின் ஜீவன் கலங்கியிருக்கலாம் .-

"கேவலம் கந்தல் துணி என்ன பெரிய விஷயம்? ஆயினும், நான் வசைமாரி பொழிந்து அவருடைய மனத்தைப் புண்படுத்திவிட்டேன். ஆனால், அவர் அதைத் திருடிவிட்டார். அவ்வாறிருக்க நான் வேறென்ன செய்யமுடியும்? என்னால் அதைச் சொல்லாமல் இருக்கமுடியவில்லை.

"ஆனால், அல்லா அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரும் இவரைச் சீர் செய்து ஆசியளிப்பார்." பிறகு, மன்னிக்கும் குணமே உருவான சாயி கேட்டார், "பாவூ, நீர் தக்ஷிணை கொடுப்பீரா?"

தேவ் கேட்டார், "எவ்வளவு கொண்டுவர வேண்டும்?" "பன்னிரண்டு கொண்டுவரும், சீக்கிரம்" என்று பாபா சொன்னார். ஆனால், தேவ் பாக்கெட்டில் பார்த்தபோது, ஒரு நோட்டுதான் இருந்தது; அதை உடைத்துச் சில்லறையாக மாற்றமுடியவில்லை.

தேவ் நிலைமையை பாபாவிடம் சொன்னார். "இருக்கட்டும், எனக்கு வேண்டா. இன்று காலையில் நீர் இரண்டு தடவை தக்ஷிணை கொடுத்தீர். எனக்கு அது ஞாபகமில்லாமல் போய்விட்டது" என்று பாபா சொன்னார்.

இருந்தபோதிலும், தேவ் தேவையான பணத்தைத் தேடிகொண்டுவது பாபாவிடம் அளித்தார். அவருடைய பாதங்களுக்கு வந்தனம் செய்தார்.

"இப்பொழுதெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறீர்?" என்று பாபா தேவைக் கேட்டார். "ஒன்றும் இல்லை" என்று தேவ் பதிலளித்தார். உடனே, பாபா தேவுக்கு ஆணையிட்டார், "நியாயமாகப் போதி வாசித்துக்கொண்டிரும்.-

"நீர் பொய் வாடாவில் உட்கார்ந்துகொண்டு நித்திய நியமமாகப் பொதியை வாசியும். வாசிக்கும் சங்கதிகளை எல்லோருக்கும் பாவத்துடன் எடுத்துச் சொல்லும்.

"உமக்குத் தங்கச்சரிகை போட்ட அழகான சால்வையை அளிக்க நான் இங்கு உட்கார்ந்திருக்கும்போது, நீர் ஏன் கந்தல் துணிகளைத் திருடச் சொல்கிறீர்?" ஏன் இந்தத் திருட்டு வேளையில் இறங்குகிறீர்?"

 


 

Thursday 2 November 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

இந்த சந்தர்ப்பத்தில் தேவ் கேட்டார், "இங்கே கந்தல் துணி ஏதாவது இருக்கிறதா என்ன?" பாபா இருக்கையிலிருந்து எழுந்தவாறே சொன்னார், "நீர் அதைத் தேடும். உம்முடைய திருட்டுப்புத்தி கெடுதலானது.-

"குறும்புத்தனமான குழந்தை ஏதாவது அதை எடுத்திருக்கலாம். பாரும் பாரும்; இங்கேதான் எங்காவது இருக்கும்". இதைக் கேட்ட தேவ் மேலும் தேட ஆரம்பித்தார்; ஆனால், அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

சாயி புருவங்களைச் சுருக்கிக்கொண்டு இங்குமங்கும் பார்த்துவிட்டு, தேவை முறைத்துப் பார்த்துச் சத்தம் போட்டார். அவர் ஏசியதாவது,-

"நீர் ஒரு பித்தலாட்டக்காரன். உம்மைத் தவிர வேறு யார் இந்த நேரத்தில் கந்தல் துணியைத் திருட இங்கு வருவான்? நான் உம்மை, உம்மைதான், திருடனென்று கொள்கிறேன்.-

"இவ்வாறு இங்கு நீர் வந்தது திருடுவதற்காகவா? தலைமயிர் கறுப்பிலிருந்து வெளுப்பாக மாறியும் உம்முடைய கெட்ட பழக்கத்தை நீர் லவலேசமும் (சிறிதளவும்) கைவிடவில்லை. -

"நான் உம்மைக் கோடரியால் வெட்டுவேன்; கண்டந்துண்டமாக வெட்டிப் போடுவேன்; உயிரைப் பறிப்பேன்! நீர் என்னுடைய கைகளிலிருந்து எங்கே தப்பிச்ச செல்ல முடியும்? நீர் எங்கே சென்றாலும் அங்கே வந்து உம்மைக் கொல்வேன்!-

"உம்முடைய இல்லத்திலிருந்து நெடுந்தூரம் கடந்து ஷிர்டிக்கு வந்தது திருடுவதற்காகவா? உம்முடைய பணத்தை வாபஸ் வாங்கிக்கொள்ளும். என்னுடைய கந்தல் துணியைத் திருப்பிக் கொடும்."

சாயி கோபத்தால் முகம் சிவந்து கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்தார். வசைமொழியும் சாபங்களும் கொட்டுமழையாகப் பொழிந்தன. பாபா கோபத்தாலேயே பாலாசாஹேப் தேவை எரித்துவிடுவார்போல் தோன்றியது.

சாயிநாதரின் கோபத்தை தேவ் வியப்பும் ஆச்சரியமும் நிரம்பியவராய் பயம் கலந்த மரியாதையுடன் பார்த்தார்; செய்வதறியாது திகைத்து நின்றார்.

அப்பொழுது பாபாவின் அண்மையில் தேவ் மட்டும் இருந்தார். அடி கிடைக்கும் போலிருந்தது; அல்லது பாபா விசுவரூப தரிசனம் காட்டுகிறாரோ! அந்த எண்ணமே அவருக்கு ஆனந்தத்தை அளித்தது.

"சட்காவை எடுத்து பலமாக அடிக்கப்போகிறாரோ? நான் தனியாக இவரிடத்தில் மாட்டிக்கொண்டேனே! சரி, அவர் இஷ்டப்படி எதுவும் செய்யட்டும்.-

"ஆயினும் இது என்ன கந்தைத் துணி விடுகதை?" அதை மாத்திரம் தேவால் புரிந்துகொள்ள இயலவில்லை. அதே சமயம், "போம், இங்கிருந்து போய்விடும்!" என்று பாபா சொன்னவுடன் அவர் படிகளை நோக்கி நடந்தார்.

"கந்தல் துணி' என்ற வார்த்தையின் ரகசியமான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் சாமர்த்தியம் எனக்கு இல்லை. ஆயினும், சாயியின் கிருபையால் அதைத் தெரிந்துகொண்டபின் கேட்பவர்களுக்குச் சொல்லுவேன்."

 


 

Thursday 26 October 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


தேவ் பதில் கூறினார், "இங்கே, நான் இங்கேதான் இருக்கின்றேன் பாபா".பாபா அவரை வினவினார், "ஏன் எனக்கு ஏழு ரூபாய்தான் கொடுத்தீர்?"

தேவ் சொன்னார், "நான் இருப்பது ரூபாய் கொடுத்தேன் பாபா." பாபா கேட்டார், "இது யாருடைய பணம்?" தேவ் சொன்னார், "பாபா, இது தங்களுடைய பணம். " பாபா கேட்டார், "அப்படியானால் நீர் ஏன் நழுவப்பார்க்கிறீர்?-

"வாரும், இங்கு வந்து என்னருகில் அமைதியான மனத்துடன் உட்காரும்". தேவ் பாபாவின் ஆணைக்கு அடிபணிந்தார்.

நித்திய நியமத்தின்படி ஹாரதி நடந்து முடிந்தது. கூடியிருந்தவர்கள் அவரவர் இல்லங்களுக்கு திரும்பினர். தேவ், பாலக்ராமைச் சந்தித்து முன்பு கேட்ட கேள்வியையே திரும்பவும் கேட்டார்.

அவரிடம் பூர்வ விருத்தாந்தத்தைச் சொல்லும்படி கேட்டார். பாலக்ராமும் பழைய நிகழ்ச்சியை ஆதியோடந்தமாக விவரித்தார். தேவ் அவரை மேலும் வினவினார். "பாபா எப்படி உங்களை உபாசனை மார்க்கத்தில் வழிகாட்டினார்?-

"பிரம்ம சிந்தனை எப்படிச் செய்வது என்று சொல்லிக்கொடுத்தாரா? என்னுடைய ஆர்வத்தைப் பூர்த்திபண்ணுங்கள் !" தேவ் மிகப் பணிவாகப் பிரார்த்தனை செய்தார்.

பாலகிராம் தேவின் ஆர்வத்தைப் பூர்த்திபண்ணுவதற்காகப் பேச ஆரம்பித்தபோது பாபாவே பாலா சாஹேப் தேவைக் கூப்பிட்டனுப்பினார்.

சாயி பேரன்புடையவர் அல்லரோ! தேவை அழைத்து வருவதற்காக சந்த்ரூவை அனுப்பினார். ஒருகணமும் தாமதியாது. தேவ் பாபாவைக் காண்பதற்கு வந்தார்.

அப்பொழுது மாலை நான்கு மணி ஆகியிருந்தது. சாயி மசூதியின் கைப்பிடிச்சுவரை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு சாய்ந்து நின்று கொண்டிருந்தததை தேவ் கண்டார்.

அங்கே சென்றவுடன் தேவ் வந்தனம் செய்தார். பாபா அவரை ஒரு கேள்வி கேட்டார், "நீர் யாரிடம், எங்கு, எதைப்பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருந்தீர்?"

தேவ் பதில் கூறினார், "நான் காகா தீக்ஷிதர் வாடா மாடியில் பாலக்ராமிடமிருந்து தங்களுடைய கீர்த்திபற்றிய சங்கதிகளை கேட்டுக்கொண்டிருந்தேன்".

"இருபத்தைந்து ரூபாய் கொண்டுவாரும்" என்று பாபா தேவுக்கு ஆணையிட்டார். உடனே தேவ் பணத்தைக் கொண்டுவந்து பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தார்.

பாபா கேட்டார், "எத்தனை கொண்டு வந்தீர்? தேவ் சொன்னார், "இருபத்தைந்து". "வாரும், வந்து என்னுடன் உட்காரும்" என்று பாபா அழைத்தார். தேவ் பாபாவுடன் மசூதிக்குள் சென்றார்.

பாபா கம்பத்தினருகில் அமர்ந்தார். மசூதியில் வேறு எவரும் இல்லை. பாபா சொன்னார், "நீர் எனக்குத் தெரியாமல் என்னுடைய கந்தல் துணியைத் திருடிவிட்டீர்".

"எனக்குக் கந்தல் துணியைப்பற்றி ஏதும் தெரியாது" என்று தேவ் உறுதியளித்தார். ஆகவே, சாயி அவரிடம் சொன்னார், "அப்படியானால் அது இவ்விடந்தான் எங்காவது இருக்கவேண்டும்".

 


 

Thursday 19 October 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"ஆகவே, சாயியே எனக்குப் பிரேமையையும் உணர்வையும் ஊட்டி 'வாசி' என்று அருள் பாலித்த பிறகுதான், மன உளைச்சல் ஏதுமின்றி மறுபடியும் ஞானேச்வரி வாசிக்க ஆரம்பிக்கவேண்டும் என்று நான் முடிவுசெய்துவிட்டேன்.-

"சாயி ஆணையிட்ட பிறகே, அவருடைய பாதங்களில் நிட்டை வைத்து நான் ஞானேச்வரி படிக்கப் போகிறேன். இவ்வாறு நிச்சயம் செய்தபின் நிம்மதியாக உட்கார்ந்துவிட்டேன். " (தேவின் கூற்று)

ஒரு மஹோதயப்பருவ நாளன்று குருபூஜை உற்சவத்தைக் காண்பதற்காகத் தாயார், சகோதரி, இன்னும் சிலருடன் தேவ் ஷிர்டிக்குச் சென்றார்.

அங்கு ஜோக், தேவ் அவர்களைக் கேட்டார், "நீர் ஏன் இப்பொழுதெல்லாம் தினமும் ஞானேச்வரி வாசிப்பதில்லை?" தேவ் அளித்த பதிலைக் கேளுங்கள்.

"ஞானேச்வரியின் மீது எனக்கு மிகுந்த பிரியம் உண்டு. ஆனால், அது எனக்கு சித்தியாகவில்லை. இந்த நிலையில், பாபா என்னை எப்பொழுது படிக்கச் சொல்கிறாரோ அப்பொழுதுதான் படிக்கப்போகிறேன்".

ஜோக் ஒரு யுக்தி சொல்லில்கொடுத்தார், "ஞானேச்வரி புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்து சாயி பாபாவின் கைகளில் கொடுங்கள். அவர் அதைத் திருப்பிக் கொடுத்த பிறகு நீங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம்." தேவ் பதிலளித்தார்.

"எனக்கு அதுமாதிரி யுக்திகள் தேவையில்லை. பாபா என் அந்தரங்கத்தை அறிவார். ஆயினும், அவர் ஏன் என்னை 'வாசி' என்று தெளிவாகச் சொல்லி என்னுடைய மனத்தின் ஏக்கத்தைப் பூர்த்தி செய்யவில்லை?"

பிறகு தேவ் சமர்த்தரை தரிசனம் செய்தபோது ஒரு ரூபாயை தக்ஷிணையாக அர்ப்பணம் செய்தார். "ஏன் ஒன்று? இருபது கொண்டுவாரும்" என்று பாபா அவரிடம் சொன்னார்.

ஆகவே, தேவ் இருபது ரூபாயைக் கொண்டுவந்து பாபாவிடம் அளித்தார். அன்று இரவு தேவ் பாலக்ராமைச் சந்தித்தார். முன்பு நடந்த நிகழ்ச்சியொன்றால், பாபாவின் கிருபையைப் பெற்ற விவரத்தைச் சொல்லும்படி அவரைக் கேட்டார்.

"நாளைக்கு ஆரத்தி முடிந்தபின் எல்லாவற்றையும் உங்களுக்கு விவரமாகச் சொல்கிறேன்" என்று சொல்லி பாலக்ராம், தேவ் அவர்களை ஆசுவாசப்படுத்தினார். தேவும் 'சரி' என்று சொல்லிவிட்டார்.

அடுத்த நாள் தரிசனத்திற்காக தேவ் மசூதிக்குச் சென்றபோது பாபா அவரிடம் மேலும் இருபது ரூபாய் கேட்டார். தேவும் மிகுந்த சந்தோஷத்துடன் கொடுத்தார்.

மசூதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், தேவ் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். பாபா கேட்டார், "எங்கே? இந்தக் கூட்டத்தின் ஒரு மூலையில் தேவ் எங்கே மறைந்து கொண்டிருக்கிறார்?"

 


 

Thursday 12 October 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ஆன்மீகப் பாதையில் நாட்டமிருந்தவர்கள் சாயியின்மேல் மிகுந்த பிரியம் வைத்திருந்தனர். அவர்களை எல்லாத் தடங்கல்களிலிருந்தும் விடுவித்து, ஆத்மானந்தம் பெறுவதற்கு அருள் செய்தார் சாயி.

இது சம்பந்தமாக சுவாரசியமான அனுபவம் ஒன்று உண்டு. பாலா சாஹேப் தேவின் ஆழ்ந்த விருப்பமொன்றைப் பூர்த்திசெய்து அவர் செய்துகொண்ட உறுதியொன்றை நிறைவேற்றி அருள் செய்தார் பாபா. அத்துடன் சேர்த்து அவருக்கு பக்தியையும் ஊட்டினார்.

பகல் நேரத்தில் பணி செய்து சம்பாதிப்பதைத் தவிர பிழைப்பதற்கு வேறு எந்த வழியும் இல்லாதிருந்தவர் தேவ். ஆனாலும், இரவு நேரத்தில் ஆன்மீக அப்பியாசங்கள் செய்வதில் தடைகள் ஏன் ஏற்படவேண்டும்?

தினமும் தவறாது ஞானேச்வரி வாசிக்கவேண்டுமென்று தேவ் பலகாலம் விரும்பினார். ஆனால், அதைக் கையில் எடுத்தாலே ஏதாவதொரு விக்கினம் வந்துகொண்டிருந்தது. விரும்பியவாறு செயல்பட இயலவில்லை.

தினமும் ஸ்ரீமத் பகவத் கீதையில் ஒரு அத்தியாயம் படிக்கவேண்டுமென்ற நியமத்தின்படி செயல்பட முடிந்தது. ஆனால், அதேபோல் ஞானேச்வரியையும் படிக்கமுயன்றபோது, பல விக்கினங்கள் எழுந்தன.

இதர கிரந்தங்களை (நூல்களைக்) கையிலெடுத்தால் நித்திய நியமமாகப் படிக்க இயன்றது. அவர் பெரிதும் விரும்பிய ஞானேச்வரியைப் பொறுத்தவரை இந்த நியமம் வழிக்கு வரவில்லை.

ஒருசமயம் தேவ் மூன்று மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஷிர்டிக்குச் சென்றார். அங்கிருந்து பௌண்டிலிருந்த தம் சொந்த வீட்டிற்கு சுகமாகவும் விச்ராந்தியாகவும் இருப்பதற்காகச் சென்றார்.

அங்கும் மற்ற வேலைகள் ஒழுங்காக நடந்தன. போதி வாசிப்பது போன்ற மற்ற நித்திய நியமங்கள் முறையாக நிறைவேறின. ஆனால், ஞானேச்வரிபற்றிய ஆழ்ந்த விருப்பம் நிறைவேறவில்லை. அதற்கு வேளை வரவில்லை!

ஞானேச்வரியைக் கையிலெடுத்தபோதெல்லாம்  பல குறுக்குச் சிந்தனைகளும் சந்தேகங்களும் உள்ளே எழுந்தன. மேலெழுந்தவாரியாகப் படிக்க இயன்றதே தவிர, மனம் கனிந்து பிடிக்கமுடியவில்லை.

மன ஏக்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட உறுதி சித்தியாகவில்லை. உண்மையில், ஒரு நாளைக்கு ஐந்து ஓவிகள்கூட நித்திய நியமமாக பிடிக்கமுடியவில்லை.

"தினமும் ஐந்து ஓவிகளாவது (சுலோகங்களாவது) படிக்கவேண்டுமென்று மனத்தில் நிச்சயம் செய்துகொண்டேன். அந்த நியமத்தைக்கூட என்னால் ஆர்வத்துடன் கடைபிடிக்க இயலவில்லை. -

 


 

Thursday 5 October 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


என் மைத்துனரின் கண்ணில் பட்டால், உடனே அதை எடுத்துச் சென்று கடலில் ஜலசமாதி செய்துவிடுவார் என்று நான் உள்ளூர உணர்ந்தேன்.

அதை வீட்டில் வைத்திருப்பதில் பிரயோஜனம் ஏதுமில்லை. என் மைத்துனர் அதைப் பார்த்துவிட்டால் மூழ்கடித்துவிடுவார். பக்தரல்லாத எவரிடமும் அதை நிம்மதியான மனத்துடன் கொடுக்கவும் முடியாது.

நன்கு சிந்திக்காமல் யாருக்காவது கொடுத்து, அவர் அதை யோக்கியமாக வழிபடாமல் விட்டுவிட்டால், என் மனம் நிரந்தரமாக வேதனைபட்டுக்கொண்டிருக்கும். இதுவே என்னுடைய நீண்டநாள் கவலையாக இருந்தது.

ஆதலால், அது நன்கு பராமரிக்கப்படக்கூடிய ஒரு நல்ல இடத்தை நான் கண்டுபிடிக்கவேண்டும்.  விதிமுறைகளின்படி எவருடைய வீட்டில் அது நன்கு பரமாரிக்கப்படுமோ, அவருடைய கையில் சிற்பத்தை ஒப்படைக்கவேண்டும்.

நான் இவ்வாறு இருதலைக்கொள்ளி எறும்பாகத் தைத்துக்கொண்டிருந்தபோது பீர் மௌலானா (வேறொரு இஸ்லாமிய ஞானி) அவர்களின் தர்பாருக்குச் சென்று, அவர் சிஷ்யர் இஸ்மூ முஜாவரிடம் எல்லா விவரங்களையும் கலந்துரையாட வேண்டுமென்ற  நல்ல யுக்தியை சாயியே என் மனத்தில் எழும்படி செய்தார்.

உடனே நான் பீர் மௌலானாவின் தர்பாருக்குச் சென்று இஸ்மூ முஜாவரிடம் தனிமையில் எல்லா விவரங்களையும் தெரிவித்தேன்.

சிற்பம் உங்களிடம் பத்திரமாக இருக்கும் என்று நாங்கள்  இருவரும் சேர்ந்து தீர்மானம் செய்தோம். அன்றைய தினமே நாங்கள் இருவரும் மனத்தில் இவ்வாறு உறுதிசெய்து கொண்டோம்.

சாயியின் இந்தப் புடைச்சிற்பம் உங்களுடைய இல்லத்தில் இருக்கவேண்டும். நாங்களே அதை எடுத்துகொண்டுபோய் உங்களிடம் சேர்ப்பிக்கவேண்டும். அப்பொழுதுதான் அது தகுந்த இடத்தில இருக்கும்.

இவ்வாறு செய்யப்பட்ட நிச்சயத்தின் பிரகாரம், நாங்கள் உங்களிடம் பிரதிமையை பயபக்தியுடன் அளித்தோம். நீங்கள் சாப்பிடத் தயாராக இருந்த நிலைமையைப் பார்த்தால் நான் உடனே திரும்பிவிட்டேன்.

இவ்வளவு நீளமான காதையைக் கேட்பதற்கு அப்பொழுது உங்களுக்கு அவகாசம் (காலம்) இல்லை. ஆகவே, ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் சாவகாசமாச் சொல்லிக்கொள்ளலாம் என்ற உத்தேசத்தில் (நோக்கத்தில்) நான் திரும்பிவிட்டேன்.

இன்று சொல்லலாம், நாளை சொல்லலாம், என்று தள்ளிபோட்டுப் போட்டு, ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எதிர்பாராதவிதமாக, நாம் இருவரும் இன்று பரஸ்பரம் சந்தித்தோம்.

எனக்குப் பழைய காதலி ஞாபகம் வந்தது. நீங்களும் எனக்கு சொப்பன அற்புதத்தைச் சொன்னீர்கள். இரண்டுக்கும் உள்ள சம்பந்தம் அபூர்வமன்றோ! இது ஓர் அற்புதாமான லீலையன்றோ ! (அல்லீ முஹம்மது அவர்களின் கூற்று இங்கு முடிகிறது.)

கதைகேட்பவர்களே! இப்பொழுது, பிரேமை மிகுந்த பக்தர்களை சாயி எவ்வாறு அன்புடன் நடத்தினார் என்பதை விளக்கும் இன்னொமொரு காதையை நிலையான சித்தத்துடன் கேளுங்கள்.

 


 

Thursday 28 September 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


நேராக அபோலோ பந்தருக்கு சென்று ஒரு படகை வாடகைக்கு அமர்த்தி, கடல்மேல் எவ்வளவு தூரம் செல்லமுடியுமோ அவ்வளவு தூரம் சென்று, படத்தை நீரில் மூழ்கடித்தார்.

அவர் அத்தோடு நிற்கவில்லை. உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விநியோகம் செய்திருந்த படங்களையும் கேட்டுத் திரும்பவாங்கி, பாந்த்ராவில் முன்பு செய்த வழிமுறையிலேயே கடலில் மூழ்கடித்தார்.

மைத்துனர் அவர்களிடம் சொன்னார், 'அப்துல் பாபா கடுங்கோபம் அடைந்தார். அந்தப் புகைப்படங்களை வைத்திருப்பவர்கள் என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்த ஆகவேண்டும்.' இவ்வாறு அவர்களை வேண்டிக்கொண்டார்.

என்னிடமும், என் சகோதரர் மற்றும் சகோதரியிடமும் கொடுத்திருந்த படங்களையும் திரும்பப் பெற்றுக்கொண்டார். இவ்வாறாக, எல்லாப் புகைப்படங்களையும் (ஆறு) கையகப்படுத்தினார்.

எல்லாப் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டு கோபம் நிரம்பியவராய் பாந்த்ராவில் பூமியும் கடலும் சந்திக்கும் பிரதேசத்திற்கு சென்றார்.

ஒரு மீனவரை கூப்பிட்டு அவரிடம் எல்லாப் பிரதிகளையும் ஒப்படைத்துக் கடல்நீரில் மூழ்கடிக்கச் செய்தார்.

நான் அப்பொழுது வியாதியால் பீடிக்கப்பட்டு நிலையில் அவருடைய இல்லத்தில் தங்கியிருந்தேன். ஆகவே, அவர் எனக்கு அதுபோலவே அறிவுரை கூறினார். 'இந்தப் படங்களால் சங்கடங்கள் விளையும். -

'அதனால், நீர் அவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துக் கடலில் மூழ்கடித்தால்தான் உம்முடைய வியாதி நிவாரணம் அடையும். இதை நிர்த்தாரணமாக அறிவீராக.

ஆகவே, நான் என் உதவியாளரைக் கூப்பிட்டு அவருடைய கையில் சாவிகளைக் கொடுத்து என்னுடைய வீட்டிலிருந்த எல்லா ஞானிகளின் படங்களையும் எடுத்துவரச் செய்தேன். அவற்றைத் தீர்த்துக்கட்டுவதற்காக என் மைத்துனரிடம் ஒப்படைத்தேன்.

உடனே அவர் அவற்றைத் தம் தோட்டக்காரர் மூலமாக, சிம்பாயி கோயிலுக்கருகில் கடலில் மூழ்கடிக்கச் செய்தார்.

இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நான் உடல்நலம் பெற்று என்னுடைய வீட்டிற்குத் திரும்பிச் சென்றபோது மிகுந்த ஆச்சரியமடைந்தேன்.

நான் உங்களுக்கு அளித்த புடைச்சிற்பம், அப்பொழுதும் முன்பிருந்த மாதிரியே வீட்டுவாயிலை நோக்கியவாறு சுவரில் இருந்ததைக் கண்டு பெருவியப்படைந்தேன்.

எல்லாச் சிற்பங்களையும் உதவியாளர் கொண்டுவந்தாரே, இந்தச் சிற்பத்தைக் கொண்டுவர ஏன் தவறி விட்டார்? ஆகவே, நான் உடனே அதை எடுத்து ஓர் அலமாரியில் மறைத்துவைத்தேன். 




Thursday 21 September 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


அதிலிருந்து பெரியதும் அழகியதுமான பிரதியொன்றைத் தயார் செய்தார். அதை எடுத்துகொண்டுபோய் அப்துல் பாபாவைப் பேட்டி கண்டு, அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்கவேண்டுமென்று விரும்பினார். அவ்வாறு செய்தால் அப்துல் பாபா மகிழ்ச்சியடைவாரென்றும் உள்ளுக்குள் பிரேமையால் பொங்குவாரென்றும் எதிர்பார்த்தார்.

மேலும் சில பிரதிகளையும் எடுக்கவைத்து நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விநியோகம் செய்தார். எனக்கும் ஒரு பிரதி கொடுத்தார்! நான் அதைச் சுவரில் மாட்டினேன்.

நூர் முஹம்மது (மைத்துனர்) அப்துல் ரஹிமானின் தர்பார் கூடியிருந்தபோது, மிக அழகான அப் படத்தை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுக்காத தயார் நிலையில் இருந்தார்.

அப்துல் ரஹ்மான் பாபா தம்முடைய படத்தை பார்த்தவுடன் நூர் முஹம்மதின் உள்ளத்தை அறிந்து கடுங்கோபம் கொண்டார். அவரை அடிப்பதற்காக எழுந்தார்.

அவரை அவமரியாதையாகப் பேசியும் ஏசியும் விரட்டிவிட்டார். இதனால் நூர் முஹம்மதுவின் முகம் பரிதாபமாகச் சுண்டியது. அவர் பெருங்கவலையில் ஆழ்ந்தார்.

அவமானமும் பரிதாபமும் நிறைந்து அவருடைய மனம் குழம்பிச் சோர்ந்துபோயிற்று. 'பணம் வீணாகச் செலவானதுமல்லாமல் குருவருளுக்கு விக்கினம் வந்து சேர்ந்ததே!-

'குருவருள் பெற்ற நான் இன்று வீணாக அவருடைய கோபத்திற்கு ஆளாகிவிட்டேனே!' என்று சொல்லிக்கொண்டே விசனம் நிரம்பிய மனத்தினராய் படங்களைத் தூக்கியெறிய ஆரம்பித்தார்.

அவர் சொன்னார், 'ஞானிகளின் படங்களையும் சிற்பங்களையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது . எதற்காக இந்த வீண் முயற்ச்சி? அவற்றினால் நான் குருவின் பிரேமையை இழந்துவிட்டேன்!-

'எந்தப் படத்தால் குரு என்மேல் கோபமடைந்தாரோ, அந்தப் படம் எப்பொழுதுவாவது எனக்கு அபாயத்தை விளைவித்துவிடும். எனக்கு அப் படம் தேவையில்லை.-

'அதுவும் ஒருவகையான உருவவழிபாடுதானே! என் குருவுக்குப் பிடிக்காததும் அவரைக் கோபமடையச் செய்ததுமான படத்தால் எனக்கு என்ன உபயோகம்?-

'மிகுந்த பணச்செலவில் செய்யப்ட்டவையாக இருப்பினும், இப்பொழுது அவற்றைத் தண்ணீரில் மூழ்கடிப்பதைத் தவிர வேறு வழியில்லை' என்று என் மைத்துனர் நினைத்தார்.

ஆகவே, என் மைத்துனர் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அதைத் தண்ணீரில் மூழ்கடிப்பதற்காகத் துறைமுகத்திற்குச் சென்றார். விரும்பிக் கேட்டாலும், அப் படத்தை அவர் யாருக்கும் கொடுப்பதாக இல்லை. 




Thursday 14 September 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆகவே, அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன். அவையெல்லாவற்றிலும் ஒரு புடைச்சிற்பத்தின் அழகு என்னை மோகங்கொள்ளச் செய்தது. மேலும், அது என்னுடைய இஷ்டதேவதை?

ஆதியிலிருந்து எனக்கு சாயியின் மீது ஈர்ப்பு இருந்தது. அந்த மூர்த்தியை நேருக்குநேர் பார்த்தவுடனே, அதை உடனே வாங்கிவிடவேண்டுமென்ற உத்வேகம் எழுந்தது. உடனே அதற்குண்டான விலையைக் கொடுத்து வாங்கினேன்.

சிற்பத்தை வீட்டிற்கு கொண்டுவந்து சுவரில் மாட்டினேன். எனக்கு பாபாவின்மேல் மிகுந்த பிரேமை இருந்ததால் தினமும் அதை ஆனந்தமாக தரிசனம் செய்துவந்தேன்.

உங்களிடம் சிற்பத்தை அளித்த காலகட்டத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நான் ஆரோக்கியம் இழந்ததால் தினமும் அதை ஆனந்தமாக தரிசனம் செய்துவந்தேன்.

என்னுடைய மைத்துனருடைய பெயர் நூர் முஹம்மது பீர்பாய், என்னுடைய கால் வீங்கியிருந்தது; குணப்படுத்துவதற்காக அறுவை மருத்துவம் செய்யப்பட்டது.

இவ்வாறு, உடல்நலம் குன்றியிருந்த நிலையில் நான் மைத்துனரின் இல்லத்தில் மூன்று மாதங்கள் தங்கினேன். அந்த மூன்று மாதங்களில் என்னுடைய வீட்டில் யாரும் வசிக்கவில்லை.

இருந்தபோதிலும், புகழ்பெற்ற அப்துல் ரஹிமான் பாபா, மௌலானா சாப், முஹம்மது ஹுசேன், சாயி பாபா, தாஜுத்தீன் பாபா, ஆகியவர்களின் படங்கள் இடத்தைவிட்டு நகரவில்லை.

இவர்களுடையதும், இவர்களைப் போன்ற மற்ற ஞானிகளுடையதுமான அழகிய புகைப்படங்கள் என் வீட்டின் சுவர்களில் மாட்டப்பட்டிருந்தன. இவற்றையும் காலச்சக்கரம் விட்டுவைக்கவில்லை.

நான் இங்கு இந்த கதியில் இருந்தபோது படங்களை ஏன் ஏழரைச்சனி பிடிக்கவேண்டும்? உற்பத்தில் செய்யப்பட்ட எல்லாப் பொருள்களும் என்றாவது ஒருநாள் அழிந்துதான் போகவேண்டுமென்பதை நான் உணர்கிறேன்.

இருப்பினும், நிலைமை இவ்வாறு இருந்தபோது, சாயி மாத்திரம் எப்படி விடுபட்டார்? இதை விளக்க இன்றுவரை யாராலும் இயலவில்லை.

இதுபற்றிய காதையை ஆரம்பத்திலிருந்து கேட்டால் நீங்கள் பெரும் வியப்படைவீர்கள்! நகரும் நகராப் பொருள்களுடன் சாயி ஒன்றியிருப்பதையும் கற்பனைக்கு எட்டாத அவருடைய சூக்குமமான செயல் திறமையையும் அறிந்துகொள்வீர்கள்.

தாரியா என்ற செல்லப்பெயர் கொண்ட முஹம்மது ஹுசைன் என்பவரிடம் அப்துல் ரஹிமான் பாபா என்ற ஞானியின் சிறிய படம் ஒன்று இருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு அப் படத்தின் பிரதியொன்றை எனக்கு அவர் கொடுத்திருந்தார். அதை நான் என் மைத்துனருக்கு கொடுத்திருந்தேன். மைத்துனர், ஞானி அப்துல் ரஹிமானின் நெருங்கிய சிஷ்யர்.

அவரிடம் அது மேஜை இழுப்பறையில் எட்டு ஆண்டுகள் கிடந்தது. ஒருநாள் சகஜமாக மேஜை இழுப்பறையைத் திறந்தபோது எதிர்பாராதவிதமாக அதைக் கவனித்தார். அதை பம்பாயிலிருந்த, புகைப்படம் எடுப்பவர் ஒருவரின் கடைக்கு எடுத்துச் சென்றார். 




 

Thursday 31 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


ரசம் ததும்பும்  அக்  காதை இதுவே. கதைகேட்பவர்கள் ஆதியிலிருந்தே கவனமாக இருக்கிறார்கள்; சொல்பவர் சாயி பாதங்களில் மூழ்கியிருக்கிறார்; சாயியின் சரித்திரமோ ஆழங்கான முடியாதது!

பரோபகாரமே  உருவெடுத்துவந்த சாயி மற்றவர்களின் நன்மைக்காக கடுமையாக உழைத்தார். ஒருபோதும் விரோதபாவத்தையே அறியாத அவர் இடைவிடாது நற்செயல்களிலேயே ஈடுபட்டிருந்தார்.

மனித உடல் ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும், வேறுவிதமாக இருந்தாலும் கர்மபந்தத்திலிருந்து விடுபடமுடியாது. ஆகவே, குருபாதங்களில் பிரீதியுடன் மனத்தை உள்முகமாகச் செலுத்துங்கள்.

பின்னர், குருபாதங்களில் பிரேமையுடைய பக்தர்களின் யோக க்ஷேமத்தை , குரு சிரமமேதுமின்றி அளிக்கும் மிக உத்தமமான  அனுபவத்தை அடையுங்கள்.

இது கேட்டாலும் கிடைக்காத நிலை; ஆயினும், குருவின் பெருமையைப் பாடுவதால் சுலபமாக கிடைக்கும். பெருமுயற்சிகள் செய்தும்  அடையமுடியாத நிலை; குருகிருபையின் பலத்தால் தானாகவே உங்களிடம் வந்துசேரும்.

அவரை நுணுக்கமாகக் கவனிக்கவேண்டுமென்ற நோக்கத்தில் கர்வத்துடன் வந்தவர்கள், கர்வபங்கமடைந்து தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் சுகமாக வீடு திரும்பினர்.

இறையாண்மையால் ஸ்ரீஹரி பூரணமாக நிரம்பியிருப்பதுபோல , வெற்றி , செல்வம், கொடை, ஞானம், சாந்தி, பற்றற்ற நிலை ஆகிய ஆறுகுணங்களால் ஸ்ரீஸாயி பகவான் நிரம்பியிருந்தார்.

பிரபஞ்ச உணர்வால் நிரம்பிய சாயி , நாம் அர்ச்சனையோ பூஜையோ பஜனையோ செய்யாமலே நமக்கு தரிசனம் அளிப்பது நம்முடைய வானளாவிய பாக்கியமே!

பக்தியிருக்கும் இடத்தில் இறைவன் இருக்கிறன்றான் என்பது வழக்கு. ஆனால், நமக்கோ பக்தி குறைபடுகிறது.  ஆயினும், சுபாவமாகவே (இயல்பாகவே) தீனர்களிடம் தயை காட்டும் சாயி, மஹானுபவர்.

கதைகேட்பவர்களே! அல்லீ முஹம்மது சொன்ன கதையை இப்பொழுது கேளுங்கள். சாயி லீலையின் வானளாவிய இயல்பையும் அவருடைய மஹாசக்தியையும் நன்கு அறிந்துகொள்வீர்கள். ( இதற்குமேல் அல்லீ முஹம்மது அவர்களின் கூற்று)

ஒருநாள் பம்பாய் நகரத்தில் சாலைவழியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு வியாபாரி அழகிய படங்களையும் புடைச்சிற்பங்களையும்  (BAS - RELIEF ) விற்றுக்கொண்டிருந்ததை பார்த்தேன்.

ஞானிகள், மகந்துகள் , அவலியாக்கள் ஆகியோரின் பலவிதமான வண்ணப்படங்களைக் கண்ட நான், அவை யார் யாருடைய படங்கள் என்றறிய விரும்பினேன். 






Thursday 24 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


41 . கருணையும் அருள்மழையும்


ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி  ! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே  போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும்
என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீ சாயிநாதனை
பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!


மேலும் மேலும் கேட்பதற்கு தூண்டுகோல் ஏதும் தேவைப்படாத மஹிமை பெற்றது. சாயியின் சரித்திரம். வாஸ்தவமாக, கதைகேட்பவர்களே விட்ட இடத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு மேற்கொண்டு கேட்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

கேட்பவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மனமொன்றியும் கேட்கும்போது அவர்களைக் கவனமாகக் கேட்கும்படி வேண்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

குருவின் மஹிமையைப் பாடுவதாலும்  கேட்பதாலும் சித்தம் தூய்மையடைகிறது. நாம ஜபம் செய்துகொண்டே தியானம் செய்தால், ஆனந்தமளிக்கும் அவருடைய உருவம் வெளிப்படும்.

விரதங்களின் உத்தியாபன விழா சிறப்பாக நடந்தேறியதையும் என்னுடைய கனவு பலித்ததுபற்றியும் கடந்த அத்தியாயத்தில்  விரிவுரை கேட்டீர்கள்.

அதுபோலவே, பக்தனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகச் சற்றும் எதிர்பாராத விதத்தில், கடைசி நிமிடத்தில், களிமண்ணாலான புடைச்சிற்பம் வந்துசேர்ந்த கதையைக் கேளுங்கள்.

ஒரு ஹோலிப் பண்டிகை தினத்தில் என் கனவில் தோன்றி, "இன்று நான் சாப்பாட்டிற்கு வருவேன்"என்றுசொல்லி, என்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த விருப்பமொன்றை நிறைவேற்றினார்.

இந்தக்காதை முன்பே விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது.இன்று, அந்தப் பிரதையை சரியான நேரத்தில் எப்படி வந்துசேர்ந்ததென்ற அற்புதத்தை பயபக்தியுடன் கேளுங்கள்.

அல்லீ முஹம்மது அந்தக் காதையை முழுவதும் சொன்னபோது நான் பரம ஆச்சரியம் அடைந்தேன். யோசித்துப்பார்த்தால், அதுவும் பாபாவின் வினோதமான லீலைகளில் ஒன்றன்றோ!

ஹோலிப் பண்டிகை தினத்தன்று மதிய நேரத்தில் நாங்கள் சாப்பிடபோனபோது கடைசி நிமிடத்தில் வந்து, எங்களை மகிழ்வித்தவர்தான் அல்லீ முஹம்மது .

இது முன்னமேயே சொல்லப்பட்ட காதை. கதைகேட்பவர்களே! இப்பொழுது மேற்கொண்டு விவரங்களை சொல்கிறேன்; கவனமாகக் கேளுங்கள். சாயியின் சரித்திரம் புனிதமானது! 




Thursday 17 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

அழைக்காமலேயே வந்தார்! வேறு உருவத்தில் தோன்றினார்! தம் பக்தர்களைக் கடமைப்பட்டவர்களாகச் செய்தார்! ஒவ்வொரு படியிலும் பக்தர்களுக்கு உணர்வூட்டினார்.

ஹேமாட் சாயியை சரணைடைகிறேன். அடுத்த அத்தியாயத்தின் அரங்கேற்றத்தை அவருடைய விருப்பம்போல் ஏற்பாடு செய்வார். அடுத்த அத்தியாயமும் சென்ற அத்தியாயத்தை போலவே மலரும்.

சாயி சரணாகதியடைந்தவர்களை பாதுகாக்கிறார். சாயியின் இந்த வாக்குறுதிக்காகவே ஹேமாட் அவருடைய பாதங்களை பற்றிக்கொள்கிறேன்.  அவரும் உதைத்துத் தள்ளுவதில்லை!

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட , 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'உத்தியாபன விழா' என்னும் நாற்பதாவது அத்தியாயம் முற்றும்.


ஸ்ரீஸத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.


சுபம் உண்டாகட்டும்.






Thursday 10 August 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


பூஜையறையில் மற்ற தெய்வங்களுடன் இந்தச் சிற்பமும் வழிபடப்படுகிறது. இதுவே, சாயியின் அபூர்வமான லீலை;  சரித்திரம். பக்தர்களுக்கு ஒவ்வொரு சாயி வழிகாட்டுகிறார் அல்லரோ! 


அல்லீ முஹம்மதும் இஸ்மூ முஜாவரும் விவரம் சொல்வதற்காகச் செய்யவேண்டிய வருகையைத் தள்ளிபோட்டுக்கொண்டே போயினர். ஒன்பது ஆண்டுகள் கடந்த என்னால் அவர்களைச் சந்திக்கமுடியவில்லை. 


கர்மமும் தர்மமும் ஒன்றுசேர்ந்து, ஒருநாள் நாள்  இயல்பாகச் சாலையில் நாம் சென்றுகொண்டிருந்தபோது அல்லீ  முஹம்மது  அவர்களை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். 


சந்தித்தபோது, எனக்களிக்கப்பட்ட சாயியின் புடைச்சிற்பம் பற்றிய அற்புதத்தைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆர்வத்துடன் அவரைக் கேட்டேன், "இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் மௌனமாக இருந்தீர்கள்?-


"அன்று எப்படியோ, இன்றும் அப்படியே எதிர்பாராதவிதமாக சந்தித்திருக்கிறோம். இந்த நல்வாய்ப்பு நமக்கு சகஜமாக அமைந்திருக்கிறது. ஆகவே, சுவாரசியமான அந்த விருத்தாந்தந்தை முழுவதும் சொல்லுங்கள். -


"நீங்களும் ஒரு சாயி பக்தர் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆயினும், சற்றும் எதிர்பாராதவிதமாக அந்தக்  குறிப்பிட்ட  நாளில்  வருவதுதான்  சிறப்பு  என்று  நீக்கினால் எப்படி நிச்சயத்தீர்கள்?"


பிறகு, அல்லீ முஹம்மது முழு விருத்தாந்தத்தையும் சொன்னார், "ஆச்சரியம் நிரம்பியதும் மிக அற்புதமானதுமான சாயியின் லீலையை ஆதியோடந்தமாக சொல்கிறேன்; கேளுங்கள்.-


"இந்த லீலைக்கு என்ன அர்த்தம்? லீலை எதற்காகச் செய்யப்பட்டது? இதன்மூலம் பக்தர்கள் அறியவேண்டியது என்ன? அனைத்தும் சாயிக்கே வெளிச்சம்! -


"நம்மைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் லீலைகளை பரிமாறிக்கொள்ள வேண்டும்; வாயினால் பாடவேண்டும். இரண்டுமே நமக்கு நற்பேறுகளை அளிக்கும்".


மேற்கொண்டு வரும் கதை அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கப்படும். கேட்கும் மக்கட்கூட்டம் ஆனந்தமடையும். சாயியின் சரித்திரம் அமோகமாக நன்மையளிக்கும். 


சாயி, ஆனந்தம் நிறைந்த கனமேகம் . துவேஷமென்பதே  இல்லாதவர். அவரை எப்பொழுதும் இடைவிடாமல் தொழுபவர்கள் ஆனந்தமும் திருப்தியும் அடைவார்கள்; மனம் விருப்புவெறுப்புகளிலிருந்து விடுபடும். 


சாதகப்பறவை சுயநலத்திற்காக மேகத்தை நாடுகிறது. மேகமோ சகல சிருஷ்டிக்குமே மழையாகப் பொழிகிறது . பாலாசாஹேப் (தேவ்)  பாபாவை விருந்துக்கு அழைத்தார். பாபாவோ பக்தர் குழாமைத் தம்முடன் அழைத்துச் சென்றார். 


பந்தியாக  உட்கார்ந்து உத்தியாபன விழா கதையைக் கேட்டவர்களும் இந்த பக்தர் குழாமில் அடக்கம். சாயியின் சங்கம் என்னும்  விருந்தை அனுபவித்து  திருப்தியை ஏப்பம் விட்டு தெரிவிக்கின்றனர்.