ஷீர்டி சாயி சத்சரிதம்
"உமக்கும் எனக்கும் நடுவே பேதம் கற்பிக்கும் தேலி யின் சுவரை இடித்து நிரவிவிடுங்கள். ஒருவரையொருவர் சந்திக்க உதவும் வழி அகலமாகத் திறந்து கொள்ளும்".
பிறகு, அவர்கள் வீடு திரும்புவதற்கு பாபா அனுமதியளித்தார். ஆனால், இருண்ட வானத்தைப் பார்த்த மாதவராவ், "போகும் வழியில் இவர்கள் மழையில் மாட்டிக்கொள்வார்கள் போலிருக்கிறதே" என்று பாபாவிடம் சொன்னார்.
பாபா பதில் கூறினார், "இவர்கள் தைரியமாகக் கிளம்பட்டும். மழையைப் பார்த்து வழியில் பயப்படுவதற்கு ஏதும் இல்லை".
ஆகவே, இருவரும் பாபாவின் பாதங்களுக்கு வந்தனம் செய்துவிட்டுப் போய்க்குதிரை வண்டியில் உட்கார்ந்தனர். காற்றில் நீர்மூட்டம் அதிகரித்தது; வானத்தில் மின்னலடித்தது; கோதாவரி நதியின் பெருக்கம் அதிகமாகியது.
வானம் கடகடவென்று கர்ஜித்தது. நதியைப் படகினால் கிடைக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனாலும், காகாவுக்கு பாபா அளித்த உறுதிமொழியின் மீது முழு நம்பிக்கை இருந்தது.
நண்பருக்கோ, எப்படி சௌகரியமாகவும் பத்திரமாகவும் வீடு போய்ச் சேர்வது என்பதே பெருங்கவலை. வழியில் நேரக்கூடிய சங்கடங்களை கற்பனை செய்து, 'ஏன் இங்கு வந்தோம்' என்றெண்ணி வருத்தப்பட்டார்.
எப்படியோ அவர்கள் பத்திரமாகவும் சுகமாகவும் நதியைக் கடந்தபின் பம்பாய்க்கு ரயில் ஏறினர். அதன் பிறகே மேகங்கள் மழையைக் கொட்ட ஆரம்பித்தன. இருவரும் பயமேதுமின்றி பம்பாய் சென்றடைந்தனர்.
காகாவின் நண்பர் வீட்டிற்குத் திரும்பிக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்துவிட்டார். உள்ளே மாட்டிக்கொண்டிருந்த சிட்டுக்குருவி ஒன்று வேகமாகப் பறந்து வெளியே சென்றது. வீட்டினுள் இரண்டு சிட்டுக்குருவிகள் இறந்து கிடந்தன.
அன்னமும் பானமும் இல்லாததால் இறந்துபோன சிட்டுக்குருவிகளை பார்த்த அவர் மனமுடைந்து சோகமானார்.
"ஷிர்டிக்குப் போவதற்குமுன் ஜன்னலைத் திறந்துவைத்துவிட்டு போயிருந்தால், அவை காலனின் பிடியில் சிக்கியிருக்கமாட்டா. பாவம்! அதிருஷ்டக்கட்டைகளான இவ்விரண்டு சிட்டுக்குருவிகள் என் கைகளில் இறக்கும்படி ஆயிற்று.-
"பறந்துபோன சிட்டுக்குருவியைக் காலனிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே பாபா எங்களுக்கு இன்றே வீடு திரும்புவதற்கு அனுமதி அளித்தார் போலும்" என்று நினைத்தார்.
"இல்லையெனில் எப்படி உயிரோடிருக்கும்? ஆயுள் முடியும்போது இதுதானே கதி. ஒரு சிட்டுக்குருவியாவது பிழைத்ததே!"
------------------------------------------------------------------------------------------------------------------------
தேலி என்னும் மராட்டிச் சொல்லுக்கு வாணியர் என்று பொருள். பாபா இச்சொல்லையும் மளிகைகடைக்காரர் என்ற சொல்லையும் விரும்பத்தகாத மனித குணங்கள் என்னும் பொருள்பட உருவக பாஷையில் உபயோகப்படுத்தினார். எண்ணெயின் கொழகொழப்பும் பிசுபிசுப்பும் ஒட்டிக்கொள்ளும் தன்மையும் உலகியல் பிணைப்புகளுக்கு உருவகப்படுத்தப்பட்டன போலும்!